Skip to main content

வாழ்க்கையின் நீட்சியான சினிமா

 



சேரனின் "மாயக்கண்ணாடி" படத்தைப் பற்றி நேற்று நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து தூண்டப்பட்டு உடனடியாக யுடியூபில் பார்த்தேன். ஒரு காலகட்டத்தின் அடிப்படையான பொருளியல், அறவியல் சிக்கல் என்றொன்று இருக்கும் - நடத்தை ஒழுக்கம், விழுமியங்களில் நம்பிக்கை ஆகியன இல்லாமல் போவது, பேராசை மனிதனை ஆட்கொள்வது, பிடிவாதமாக ஒரு உறவில் நிலைப்பதால் தோன்றும் துன்பமும் கடைசியில் அதுவே நம்மைக் காப்பாற்றுவது என. "மாயக்கண்னாடி" இவ்விசயங்களை எடுத்துப் பேசுவதால் மிக முக்கியமான படம்தான். அதை எப்படி இத்தனை நாட்களாகப் பார்க்காமல் இருந்தேனென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட "மகாநதியின்" இன்னொரு பரிமாணம் என்பதாக இப்படத்தைப் பார்க்கிறேன்.

அந்தப் படம் ஏன் சரியாகப் போகவில்லை எனப் புரிந்தது.

நகைச்சுவைப் படமாக ஆரம்பித்து துன்பியலாகி அப்படியே சமூக விழிப்புணர்வுப் படமாகிறது. இதனால் படம் பார்ப்பது போன்றே இல்லை, ஏதோ ராமாயணம், மகாபாரதம் போல இருக்கிறது. எதாவது ஒரு வகைமைக்குள் படத்தை நிறுத்தியிருக்கலாம்.

நாயகனுக்கு என்று உடனடியான தேவை (immediate want) இல்லை. அது அவனது அம்மா ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போதே வருகிறது. அப்படியொன்றை ஆரம்பத்திலேயே கொன்டு வந்திருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது துல்லியமான நேரடியான want அல்ல. எதற்கான, எப்போது எனும் கேள்விக்கு அது பதில் அளிப்பதில்லை. இதனால் படத்தின் முதல் 1 மணிநேரமும் இலக்கின்றி அலைகிறது. 'கிரிப்' இல்லை.

இதனாலே படத்தின் முடிவு நன்றாக இருந்தாலும் நாயகன் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம் தனியாக இருக்கிறது.

ஆனாலும் எனக்கு இந்தப் படத்தின் காதல் காட்சிகள் பிடித்திருந்தன - சுற்றுவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுவது, பணமில்லாமல் ஷாப்பிங் போவது, போன் வாங்கியதும் இருவரும் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் எனக்கு பல நினைவுகளை மனதில் கொண்டு வந்தன. அதேபோல, சேரன் அணியும் சட்டை, கறுப்புக் கண்ணாடி, முடியை சிலுப்புவது, எதார்த்துக்கு வெளியே நிற்கும் அலட்சிய பாவம், திமிராக இருப்பதான பாவனைக்குப் பின்னால் இருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு எல்லாம் ஒரு சமூகத் தரப்பை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்தன. நான் என் கல்லூரிக் காலத்தில் இப்படி நிறைய பேர்களைப் பார்த்திருக்கிறேன்.

ஐ.டி வேலைகள், ரியல் எஸ்டேட் நமது பொருளாதார நிலையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தபின்னர், நன்மை, தீமை, அறம் குறித்த கேள்விகளை, நலிந்தவர்களின் கதைகளை, அவதிகளைப் பேசுவதை சினிமாவில் கடந்த இருபதாண்டுகளில் தவிர்த்து வருகிறோம். அதனிடத்தில் போலி சமூக நீதிப் படங்களை எடுத்துக் குவிக்கிறோம் - கொத்தனார் தன் கரண்டியை அவமதித்தவரை சட்டபோராட்டத்தால் முறியடிப்பது, பத்துப்பாத்திரம் தேய்க்கும் பெண் கூகிளில் பொறியியலாளராவது, கோழிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு கோழிகள் கருகிச் சாக, அவற்றில் ஒன்று தப்பி வந்து சமூகத்தைக் கேள்வி கேட்டு கலகம் செய்வது இப்படி ஏராளமான கதைகள்; யார் மாட்டினாலும் பாதிக்கப்பட்டவராக்கி கண்ணீர் மல்க படமெடுக்கிறோம் - ஆனால் இன்றுதான் "மாயக்கண்ணாடி" வகையான படங்களை இன்னொரு கோணத்தில் நாம் எடுக்க வேண்டும். அவ்வளவு குழப்பங்களும் குற்றங்களும் மலிந்த காலம் இது; இமையத்தின் "வாழ்க வாழ்க" நாவலில் பணத்துக்காக அரசியல் கூட்டத்துக்குப் போவோர் பற்றின பகுதி வரும். இப்படி ஏராளமான சீரழிவுகள் மிகுந்த காலம் இது. சீமான், திருமுருகன் காந்தி, அண்ணாமலை மாதிரியானவர்கள் பிரமாதமான கதைக்கான கச்சாப்பொருள் அல்லவா! நேற்றுதான் இன்போஸிஸிலில் ஒரேயடியாக 500 பேர்களை வேலையை விட்டுத் தூக்கியிருக்கிறார்கள். அவர்கள் எங்கு போவார்கள்? என்ன ஆவார்கள்? திருப்பரங்குன்றம் சர்ச்சையிலேயே செமையான ஒற்றை வரி உள்ளது. நெஞ்சை நக்கும் லட்சியவாதம் இல்லாமல் இதில் ஈடுபடும் மத்திய வர்க்கத்தினருக்கு என்னவாகிறது என்பதே கதை இங்கு - ஏனோ நிகழுலகில் தோன்றும் சிக்கல்களை, நெருக்கடிகளைக் கதையாக்குவதில் இன்றைய இயக்குநர்களுக்கு தயக்கம் உள்ளது. அதனிடத்தில் போலியான சமூக நீதிக்கதைகள், மிகையான வன்முறையைக் கொண்டு நிரப்புகிறார்கள். மனதில் ஒட்டாத நூறு நூறுப் படங்கள்.

ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமா எதார்த்தத்துக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது என "மாயக்கண்னாடியைப்" பார்த்தபோது தோன்றியது. அன்று தவறிழைப்பவன், குற்றம் புரிபவன் ஒன்று கொடூரமான வில்லன் அல்லது நாயகனேதான். இன்று அது அரூபமான சமூக அமைப்பு அல்லது யாராலும் அடையாளம் காண முடியாத ஒரு மற்றமை. இந்த மற்றமை நம்மிடம், நமக்குள் இல்லவே இல்லை, ஆனால் இருக்கிறது என குழப்பமாக படத்தை எடுப்பார்கள். நமது சாதி ஒழிப்புப் படங்களில் சமூகத்தை இரண்டாகப் பிளந்து தீமையான ஒரு பகுதியை எங்குமே இல்லை, படம் பார்ப்பவர்கள் எல்லாரும் பாதிக்கப்படுபவர்களே என தோற்றத்தை உண்டு பண்ணுவார்கள். அதாவது மற்றமையை ஒட்டுமொத்த சமூகமும் தனக்கு வெளியே காணும் வகையில் படத்தின் அமைப்பு இருக்கும். இந்த போலித்தனம்தான் இபடங்களின் விசை. முன்பு ஆதிக்கசாதியின் பிரதிந்தியாக ஒரு நாயகன் தோன்றி மாமன் மச்சானுடன் பங்காளிச் சண்டையிடுவான். சரி, தவறு எல்லாமே ஒரே இடத்தில்தான். அதில் ஒரு களங்கமின்மை இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நாயகன் பாதிக்கப்படுபவனாக, அப்பாவியாகவும், களங்கமற்றவனாகவும் இருப்பதால், அவனுக்கு எதிர்த்தரப்பாக உள்ளோரும் அவ்வாறே கல்மனம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். நாயகனிடம் சிறிது குற்றமோ வில்லனிடம் சிறிது நன்மையோ இருப்பதில்லை (பா. ரஞ்சத்தின் "அட்டக்கத்தி" மட்டுமே விதிவிலக்கு). பார்வையாளர்களால் கறுப்பு வெள்ளையாக உள்ள இந்த இரு தரப்பிடமும் தம்மை உணர முடியாது. ஆகையால் அவர்கள் தாமே பாதிக்கப்பட்டோர் என நம்ப ஆரம்பித்து தம்மையே ஏமாற்றி படத்தின் நோக்கத்தையும் அவமதிக்கிறார்கள். இந்த 'அவமதிப்பே' இன்று சினிமாவின் வெற்றியாகிறது. "மாயக்கண்ணாடியில்" நாயகன் குமார் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என உணர்த்தி விடுகிறார்கள். ஆனால் அதை இயக்குநர் அரசியலாக்கி லாபம் தேடுவதில்லை. அவன் தொடர்ந்து தோற்கும்போது இதற்கு "இச்சமூகம் தான் இதற்குக் காரணம்" என்று சாடுவதில்லை (படத்தின் வில்லனான கடத்தற்காரன் தான் அப்படிப் பேசுகிறான்). அவனே அவன் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். நாயகன் தன் பிரச்சினைகளுக்கு புறச்சமூகத்தைக் காரணமாக்கும்போது கதைக்குள் இருந்து நம் வெளியே வந்து பிரச்சாரத்துக்குள் நுழைகிறோம். இதுவே இன்றைய சமூக விமர்சனப் படங்களின் முக்கிய பிரச்சினை. அதில் நாயகனிடமோ கதைசொல்லியிடமோ நேர்மையில்லை. தப்பித்தல்வாதமும் சுரண்டல் மனப்பான்மையுமே இருக்கிறது.
இன்றைய சமூக சினிமா போலி டாஸ்மாக சரக்கு போல, போலி சாமியார் போல, போலி தமிழ் தேசியம் போல ஆகிவிட்டது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...