Skip to main content

வாழ்க்கையின் நீட்சியான சினிமா

 



சேரனின் "மாயக்கண்ணாடி" படத்தைப் பற்றி நேற்று நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து தூண்டப்பட்டு உடனடியாக யுடியூபில் பார்த்தேன். ஒரு காலகட்டத்தின் அடிப்படையான பொருளியல், அறவியல் சிக்கல் என்றொன்று இருக்கும் - நடத்தை ஒழுக்கம், விழுமியங்களில் நம்பிக்கை ஆகியன இல்லாமல் போவது, பேராசை மனிதனை ஆட்கொள்வது, பிடிவாதமாக ஒரு உறவில் நிலைப்பதால் தோன்றும் துன்பமும் கடைசியில் அதுவே நம்மைக் காப்பாற்றுவது என. "மாயக்கண்னாடி" இவ்விசயங்களை எடுத்துப் பேசுவதால் மிக முக்கியமான படம்தான். அதை எப்படி இத்தனை நாட்களாகப் பார்க்காமல் இருந்தேனென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட "மகாநதியின்" இன்னொரு பரிமாணம் என்பதாக இப்படத்தைப் பார்க்கிறேன்.

அந்தப் படம் ஏன் சரியாகப் போகவில்லை எனப் புரிந்தது.

நகைச்சுவைப் படமாக ஆரம்பித்து துன்பியலாகி அப்படியே சமூக விழிப்புணர்வுப் படமாகிறது. இதனால் படம் பார்ப்பது போன்றே இல்லை, ஏதோ ராமாயணம், மகாபாரதம் போல இருக்கிறது. எதாவது ஒரு வகைமைக்குள் படத்தை நிறுத்தியிருக்கலாம்.

நாயகனுக்கு என்று உடனடியான தேவை (immediate want) இல்லை. அது அவனது அம்மா ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போதே வருகிறது. அப்படியொன்றை ஆரம்பத்திலேயே கொன்டு வந்திருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது துல்லியமான நேரடியான want அல்ல. எதற்கான, எப்போது எனும் கேள்விக்கு அது பதில் அளிப்பதில்லை. இதனால் படத்தின் முதல் 1 மணிநேரமும் இலக்கின்றி அலைகிறது. 'கிரிப்' இல்லை.

இதனாலே படத்தின் முடிவு நன்றாக இருந்தாலும் நாயகன் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைப் பாடம் தனியாக இருக்கிறது.

ஆனாலும் எனக்கு இந்தப் படத்தின் காதல் காட்சிகள் பிடித்திருந்தன - சுற்றுவதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுவது, பணமில்லாமல் ஷாப்பிங் போவது, போன் வாங்கியதும் இருவரும் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் எனக்கு பல நினைவுகளை மனதில் கொண்டு வந்தன. அதேபோல, சேரன் அணியும் சட்டை, கறுப்புக் கண்ணாடி, முடியை சிலுப்புவது, எதார்த்துக்கு வெளியே நிற்கும் அலட்சிய பாவம், திமிராக இருப்பதான பாவனைக்குப் பின்னால் இருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு எல்லாம் ஒரு சமூகத் தரப்பை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்தன. நான் என் கல்லூரிக் காலத்தில் இப்படி நிறைய பேர்களைப் பார்த்திருக்கிறேன்.

ஐ.டி வேலைகள், ரியல் எஸ்டேட் நமது பொருளாதார நிலையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தபின்னர், நன்மை, தீமை, அறம் குறித்த கேள்விகளை, நலிந்தவர்களின் கதைகளை, அவதிகளைப் பேசுவதை சினிமாவில் கடந்த இருபதாண்டுகளில் தவிர்த்து வருகிறோம். அதனிடத்தில் போலி சமூக நீதிப் படங்களை எடுத்துக் குவிக்கிறோம் - கொத்தனார் தன் கரண்டியை அவமதித்தவரை சட்டபோராட்டத்தால் முறியடிப்பது, பத்துப்பாத்திரம் தேய்க்கும் பெண் கூகிளில் பொறியியலாளராவது, கோழிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டு கோழிகள் கருகிச் சாக, அவற்றில் ஒன்று தப்பி வந்து சமூகத்தைக் கேள்வி கேட்டு கலகம் செய்வது இப்படி ஏராளமான கதைகள்; யார் மாட்டினாலும் பாதிக்கப்பட்டவராக்கி கண்ணீர் மல்க படமெடுக்கிறோம் - ஆனால் இன்றுதான் "மாயக்கண்ணாடி" வகையான படங்களை இன்னொரு கோணத்தில் நாம் எடுக்க வேண்டும். அவ்வளவு குழப்பங்களும் குற்றங்களும் மலிந்த காலம் இது; இமையத்தின் "வாழ்க வாழ்க" நாவலில் பணத்துக்காக அரசியல் கூட்டத்துக்குப் போவோர் பற்றின பகுதி வரும். இப்படி ஏராளமான சீரழிவுகள் மிகுந்த காலம் இது. சீமான், திருமுருகன் காந்தி, அண்ணாமலை மாதிரியானவர்கள் பிரமாதமான கதைக்கான கச்சாப்பொருள் அல்லவா! நேற்றுதான் இன்போஸிஸிலில் ஒரேயடியாக 500 பேர்களை வேலையை விட்டுத் தூக்கியிருக்கிறார்கள். அவர்கள் எங்கு போவார்கள்? என்ன ஆவார்கள்? திருப்பரங்குன்றம் சர்ச்சையிலேயே செமையான ஒற்றை வரி உள்ளது. நெஞ்சை நக்கும் லட்சியவாதம் இல்லாமல் இதில் ஈடுபடும் மத்திய வர்க்கத்தினருக்கு என்னவாகிறது என்பதே கதை இங்கு - ஏனோ நிகழுலகில் தோன்றும் சிக்கல்களை, நெருக்கடிகளைக் கதையாக்குவதில் இன்றைய இயக்குநர்களுக்கு தயக்கம் உள்ளது. அதனிடத்தில் போலியான சமூக நீதிக்கதைகள், மிகையான வன்முறையைக் கொண்டு நிரப்புகிறார்கள். மனதில் ஒட்டாத நூறு நூறுப் படங்கள்.

ரெண்டாயிரம் வரை தமிழ் சினிமா எதார்த்தத்துக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தது என "மாயக்கண்னாடியைப்" பார்த்தபோது தோன்றியது. அன்று தவறிழைப்பவன், குற்றம் புரிபவன் ஒன்று கொடூரமான வில்லன் அல்லது நாயகனேதான். இன்று அது அரூபமான சமூக அமைப்பு அல்லது யாராலும் அடையாளம் காண முடியாத ஒரு மற்றமை. இந்த மற்றமை நம்மிடம், நமக்குள் இல்லவே இல்லை, ஆனால் இருக்கிறது என குழப்பமாக படத்தை எடுப்பார்கள். நமது சாதி ஒழிப்புப் படங்களில் சமூகத்தை இரண்டாகப் பிளந்து தீமையான ஒரு பகுதியை எங்குமே இல்லை, படம் பார்ப்பவர்கள் எல்லாரும் பாதிக்கப்படுபவர்களே என தோற்றத்தை உண்டு பண்ணுவார்கள். அதாவது மற்றமையை ஒட்டுமொத்த சமூகமும் தனக்கு வெளியே காணும் வகையில் படத்தின் அமைப்பு இருக்கும். இந்த போலித்தனம்தான் இபடங்களின் விசை. முன்பு ஆதிக்கசாதியின் பிரதிந்தியாக ஒரு நாயகன் தோன்றி மாமன் மச்சானுடன் பங்காளிச் சண்டையிடுவான். சரி, தவறு எல்லாமே ஒரே இடத்தில்தான். அதில் ஒரு களங்கமின்மை இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நாயகன் பாதிக்கப்படுபவனாக, அப்பாவியாகவும், களங்கமற்றவனாகவும் இருப்பதால், அவனுக்கு எதிர்த்தரப்பாக உள்ளோரும் அவ்வாறே கல்மனம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். நாயகனிடம் சிறிது குற்றமோ வில்லனிடம் சிறிது நன்மையோ இருப்பதில்லை (பா. ரஞ்சத்தின் "அட்டக்கத்தி" மட்டுமே விதிவிலக்கு). பார்வையாளர்களால் கறுப்பு வெள்ளையாக உள்ள இந்த இரு தரப்பிடமும் தம்மை உணர முடியாது. ஆகையால் அவர்கள் தாமே பாதிக்கப்பட்டோர் என நம்ப ஆரம்பித்து தம்மையே ஏமாற்றி படத்தின் நோக்கத்தையும் அவமதிக்கிறார்கள். இந்த 'அவமதிப்பே' இன்று சினிமாவின் வெற்றியாகிறது. "மாயக்கண்ணாடியில்" நாயகன் குமார் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என உணர்த்தி விடுகிறார்கள். ஆனால் அதை இயக்குநர் அரசியலாக்கி லாபம் தேடுவதில்லை. அவன் தொடர்ந்து தோற்கும்போது இதற்கு "இச்சமூகம் தான் இதற்குக் காரணம்" என்று சாடுவதில்லை (படத்தின் வில்லனான கடத்தற்காரன் தான் அப்படிப் பேசுகிறான்). அவனே அவன் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். நாயகன் தன் பிரச்சினைகளுக்கு புறச்சமூகத்தைக் காரணமாக்கும்போது கதைக்குள் இருந்து நம் வெளியே வந்து பிரச்சாரத்துக்குள் நுழைகிறோம். இதுவே இன்றைய சமூக விமர்சனப் படங்களின் முக்கிய பிரச்சினை. அதில் நாயகனிடமோ கதைசொல்லியிடமோ நேர்மையில்லை. தப்பித்தல்வாதமும் சுரண்டல் மனப்பான்மையுமே இருக்கிறது.
இன்றைய சமூக சினிமா போலி டாஸ்மாக சரக்கு போல, போலி சாமியார் போல, போலி தமிழ் தேசியம் போல ஆகிவிட்டது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...