Skip to main content

பிடிக்காதவற்றை விட்டு விடுங்கள்

இலக்கிய விமர்சனம் செய்வதில் எனக்கொரு கொள்கை உண்டு - பிடிக்காத நாவல்களைப் படிக்கக் கூடாது. கடிந்து எதிர்வினையாற்றக் கூடாது. தேறுமா என்பது முதல் பத்து பக்கங்களிலே தெரிந்து போகும். அப்படியே எடுத்து வைத்துவிடலாம். அதையும் மீறி இன்னொரு ஐம்பது பக்கங்கள் முயன்று பார்ப்போம் எனத் தோன்றினாலும் அதற்கு மேல் போகக்கூடாது. உலகில் நாம் வாசிப்பதற்கு கோடிக்கணக்கான நல்ல நூல்களும் ஆயிரக்கணக்கான சிறந்த நூல்களும் உள்ளபோது நீங்கள் இப்படித் தவிர்த்தாலும் கூட நட்டமில்லை. அப்படியே பிடிக்காத நூலை கடைசி வரை தம் கட்டிப் படித்தாலும் கடுங்கோபத்தில் எழுத்தாளரை ரத்தவெறியோடு தாக்கக்கூடாது. யாரும் மோசமான படைப்பை வேண்டுமென்றே எழுதுவதில்லை. சில நேரங்களில் அப்படி நிகழ்ந்துவிடும். எதிர்பார்த்தது எழுத்தில் அமைந்து வராது. சிலநேரங்களில் விளையாட்டுத்தனமாக துணிச்சலாக கவித்துவமாக எழுதுகிறோம் என கதையை கோட்டை விடுவோம். மொழி வன்மை இல்லாதவர்களுடைய எழுத்தில் வாக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருக்கும். சரியாக திருத்தாதபோது லாஜிக் மீறல்கள் வரும். ஒன்று அந்த எழுத்தாளருக்கு நாவலைச் செப்பனிட நேரமிருக்காது. அல்லது அனுபவமோ அறிவோ இருக்காது (வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார்.) பலரும் ஏதோ குண்டு வெடிப்பின் நடுவே காதலிக்கு முத்தம் கொடுப்பதைப் போலத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நேரமில்லை, வசதியில்லை, சிலருக்கு அமர்ந்து நிம்மதியாக எழுத இடம் கூட இல்லை. ஆயிரம் பிரச்சினைகள், அவதிகள் நடுவே ஒன்றை எழுதி பிரசுரிப்பார்கள். இவர்களில் 99.99% பேர்கள் முழுநேர எழுத்தாளர்கள் அல்ல. ஆகையால் இவர்கள் (இதில் நானும் அடக்கம்) தவறிழைத்தால் மன்னித்து விட்டுவிட வேண்டும். பிரமாதமாக வந்தால் பாராட்டிக் கொண்டாட வேண்டும்.
என்னுடைய அண்மை நாவலான நிழல் பொம்மையை (400 பக்கங்கள்) நான் இருபது நாட்களுக்குள் எழுதினேன் (சரியாகச் சொன்னால் 18 நாட்கள்.) காலையில் உட்கார்ந்தால் நள்ளிரவு மூன்று மணிவரை எழுதுவேன். ஏனென்றால் அந்த சிறு விடுமுறைக் காலம் முடிந்தால் நாவலில் கைவைக்கவே நேரமிருக்காது என்று அறிந்திருந்தேன். விடுமுறையில் வரும் ஜெயில் கைதி சில நாட்களுக்குள் தன் வெளியுலகை அனுபவித்துத் தீர்த்துவிட முயல்வதைப் போல. ஆனால் அத்துடன் நிற்கவில்லை. அதை மூன்று முறை திருத்தினேன். அதற்கு பல இரவுகள் தூங்காமல் இருக்க வேண்டி வந்தது. நான் அதைச் செய்வேன் - நான் அடிப்படையில் எழுத்தைப் பொறுத்தமட்டில் ஒரு கிறுக்கன். நான் எதையும் விட்டுக்கொடுப்பேன். ஆனால் கடந்த சில மாதங்களாக என் வேலை இரவு 12 மணிவரை நீள்வதால் இப்போது அந்த நாவலைத் திருத்தும் வேலை வந்திருந்தால் அதைச் செய்திருக்க மாட்டேன். அதாவது இரவெல்லாம் முழித்திருக்கத் தயாராக இருந்தாலும் முடியாத நிலை. என்னைப் போல பல படைப்பாளிகள் இருப்பார்கள். நாங்கள் அரசு வேலையை 9-5 செய்துவிட்டு குடையை கக்கத்தில் இடுக்கி சமாதானமாக வீட்டுக்கு வந்து சாய்வு நாற்காலியில் படுத்து எழுதும் அவகாசமும் சொகுசும் இல்லாதவர்கள். அது நேரம் நிறைய இருந்த 80களின் பொற்காலம். இன்று புத்துலகில் எல்லாரும் கார்ப்பரேட் அடிமைகள்தாம். இவ்வளவு உழைத்தும் கூட நாளை நிர்கதியாகி விடுவோமோ என அஞ்சுகிறவர்கள். எங்களால் இவ்வளவுதான் எழுத முடியும். எங்களுக்கு இச்சமூகம் திரும்ப பணமாகத் தருவதில்லை. மற்ற மொழிகளில் நடப்பதைப் போல எழுதுவதற்கான நிதிநல்கைகள் கூட தமிழில் இல்லை. பதிப்பகங்களுக்கு லாபம் குறைவதால் அவர்கள் பிரதியை செம்மையாக்கம் செய்யும் ஆசிரியர்களையோ பிழைத்திருத்துநர்களையோ வேலைக்கு இருத்துவதில்லை. அப்படியே எழுத்துப் படியை லே அவுட் பண்ணி பிரசுரித்து விடுகிறார்கள். எழுத்தாளர்தான் பிழைதிருத்துநராகவும் செம்மையாக்குபவராகவும் இருக்க வேண்டும். என்னுடைய நாவலை நா. முருகேச பாண்டியன் அச்சுப்பிரதியில் சில ஆயிரம் எழுத்து, ஒற்றுப்பிழைகள் திருத்தி அனுப்பித் தந்தார். அத்திருத்தங்களை மென்பிரதியில் உள்ளிடவே எனக்கு சில வாரங்கள் ஆயிற்று. அடுத்து நான் சில முறைகள் படித்து மேலும் சில ஆயிரம் பிழைகளை நுணுகிப் பிடித்து திருத்தினேன். இதெல்லாம் முதுகொடிக்கிற வேலை.
இந்த உண்மையை நன்கு தெரிந்ததால்தான் நான் எவ்வளவு மோசமாக எழுதப்பட்ட நாவலையும் படித்து கொலைத்தாண்டவம் ஆடுவதில்லை. எழுதுவதே சாதனையாகும்போது நன்றாக எழுதுவது கொடுப்பினை அவ்வளவுதான். நாம் ஒரு சமூகமாக நாவலாசிரியர்களைப் பொருட்படுத்தி ஆதரிக்க வேண்டும். வாசகர்கள் சங்கமொன்றை உருவாக்கி பணம் திரட்டி ஒரு நூலாக்கத்துக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் தரமான நாவலையும் எதிர்பார்க்கலாம். நான் 300-400 ரூ கொடுத்தேன், எனக்கு ஏன் இவ்வளவு சுமாரான படைப்பைக் கொடுத்தீர்கள் என்று கேட்பது நியாயமல்ல. ஏனென்றால் அப்படி வாங்கியவர்களே சிலர்தான், பலர் அல்ல. வார இறுதி நாட்களில் ஒரு இலக்கிய கூட்டத்துக்குப் போகவே அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவர் தன் ஓய்வு நேரத்தை முழுக்க அள்ளிக்கொடுத்து பெரிய நூலொன்றை எழுதுகிறார். அதைச் சாடுவது நியாயமல்ல. இது திறமையோ, அக்கறையோ சம்மந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இந்த சூழல் சம்மந்தப்பட்டது. பணமும் நேரமும் உள்ள வாசகர்கள் இணைந்து அறக்கட்டளைகள் உருவாக்கினால் மட்டுமே இச்சூழலை மாற்ற முடியும். அதை கேரளாவில் செய்கிறார்கள். அறக்கட்டளைகளும் ஊடகங்களும் முதலாளிகளுமாக இணைந்து பல்வேறு விருதிகளை அறிவிக்கிறார்கள், வருடம் முழுக்க விழாக்களை நடத்துகிறார்கள். இங்கே நாம் ஈரோடு மகேஷ்களை மட்டும் ஊக்கப்படுத்துகிறோம். இதற்கிடையில் நாம் அதிக ஜி.எஸ்.டி நிதியை ஒன்றியத்துக்கு கட்டுகிறோம் எனப் பீற்றிக்கொள்ளவும் செய்கிறோம். (மேய்ப்பது எருமை, அதிலென்ன பெருமை?) இலக்கியத்தையோ கலையையோ மதிக்காமல் பணம், சொத்து, கேளிக்கை என வாழும் சமூகம் முன்னேறிய சமூகம் அல்ல, காட்டுமிராண்டி சமூகம். ஒழிய வேண்டிய சமூகம். சரி. அதை விடுங்கள்.
நீங்கள் இந்த எழுத்தாளர்களை இயக்குநர்களுடன் ஒப்பிடுங்கள். ஒரு சிறிய கதை வரியை திரைக்கதையாக உருவாக்க அவர்களுக்கு தனி அணி உள்ளது. விவாதிக்க ஆட்கள் இருக்கிறார்கள். என்னிடம் எத்தனையோ முதல் படமெடுக்கப் போகும் இயக்குநர்கள் தம் கதையைக் குறிப்பிட்டு கருத்துக் கேட்கிறார்கள். நான் சாவகாசமாக வழிகாட்டுகிறேன். அப்போது எனக்கு எழும் கேள்வி ஏன் இதை அறிமுக நாவலாசிரியர்கள் செய்வதில்லை என்பது. ஏனென்றால் உதவி கேட்கும் பண்பாடே எழுத்தாளர்களுக்கு இல்லை. கேட்டால் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். அல்லது ஈகோ தடுக்கிறது. அல்லது குழப்பி விடுவார்கள் என அஞ்சுகிறோம். சினிமாவுக்கு உள்ள மவுசு காரணமாகவும் அணியாக இயங்குவதில் உள்ள பயிற்சி காரணமாகவும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் கேட்கிறார்கள். தயாரிப்பாளர் கிடைத்தால் அவர்களுக்கு எல்லா விசயங்களிலும் உதவுவதற்கு நிபுணர்கள் வருவார்கள். அவர்கள் இவர்களை திறம்பட ஒருங்கிணைத்தால் போதும். எல்லாருக்கும் சன்மானமும் உண்டு. ஒரு மோசமான படத்திற்குப் பின்னால் கூட இவ்வளவு பெரும் மனித ஆற்றல் முதலீடு செய்யப்படுகிறது. ஒரு நாவலாசிரியர் நாவலின் ஒற்றை வரி, கதாபாத்திர உலகம், கட்டமைப்பு ஆகியவற்றை திட்டமிடுவது, எழுதுவது, திருத்துவது என எல்லா வேலைகளையும் தன்னந்தனியாக செய்ய வேண்டும். அடித்தளம் இட்டு, செங்கல் வைத்து சுவரெழுப்பி வெள்ளையடித்து பால் காய்ச்சுவது வரை அவரே செய்கிறார். அதனால்தான் சினிமாவை விமர்சிக்கிற பாங்கில் நாவலை விமர்சிக்கக் கூடாது.
இலக்கிய ஆகிருதி, மிகை மதிப்பீடு என நான் நினைப்பதெல்லாம் மிகச்சிறிய வட்டத்துக்குள் நடப்பவையே. நெருங்கிப் போய் பார்த்தால் சம்மந்தப்பட்டவர் மிகவும் பலவீனர்களாக இருப்பார்கள். வருத்தம், போதாமை, மன அழுத்தம், தன்னிரக்கத்தின் முடிச்சே பாராட்டப்படும் எழுத்தாளர்கள் எனும்போது சொற்ப கவனம் பெறுவோர் எப்படி இருப்பர்? அவர்களைப் புண்படுத்தலாமா? பாராட்டாவிட்டால் பரவாயில்லை, திட்டாமல் இருக்கலாம்.
குறிப்பு: இதை நான் எனக்காக எழுதவில்லை. கடந்த சில ஆண்டுகளாக காணும் சில நாவலாசிரியர்களுக்கு வரும் கடும் விமர்சனங்களைப் பார்த்து எழுதுகிறேன். விமர்சிக்கையில் கொஞ்சம் கருணையும் குற்றவுணர்வும் வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...