நான் பொதுவாக யார் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தாலும் போய் விசாரிப்பேன். விந்தி நடப்பவர்கள், கை, தலை உடைந்து கட்டுப்போட்டவர்கள், சக்கர நாற்காலியில் வருவோர் என. இன்று காலை அப்படி ஒரு சக ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு கடந்த ஆண்டு ஒரு விபத்து நடந்திருக்கிறது - அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பட்ட காயங்களுக்கும் அவர் சொன்ன சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏன் இப்படி நடநது, இது எப்படி சாத்தியம், அப்படித்தானே ஆகியிருக்க வேண்டும், இதைக் கேட்டீர்களா, ஏன் கேட்கவில்லை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே டுரோமாவில் இருந்தேன், இதற்கு மேல் மீண்டும் அவதிப்பட வேண்டாம் என விட்டுவிட்டேன் என்றார். ஆனால் என் மனம் அந்த டுரோமாவிடம் ஈர்க்கப்பட்டபடியே இருந்தது. எனக்கு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே மனதில் ஒரு சுவாரஸ்யமான கதை தோன்றியது. சொல்லபோனால் 60% கதையமைப்பும் மனத்தில் சில வினாடிகளில் கோபுரம் போல் எழுந்துவிட்டது. அதில் இன்னொரு அடுக்கைச் சேர்த்தால் சுவாரஸ்யமான ஆழமான கதையாகிவிடும். நான் அதை அடையும் வரை என் உபமனம் அதைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை நான் எழுதாமல் போகலாம், எழுதலாம். ஆனால் எழுத்தாளராக இருப்பதன் அனுகூலம் எல்லா உரையாடல்களிலும் இரு கதையை, புதிய உலகைக் காண்பதுதான். இன்று மாலையில் அவரை மீண்டும் வெளியே எதிர்கொண்டபோது இதோ ஒரு கதாபாத்திரம் என்று தோன்றியது. கதாபாத்திரம் என்னைப் புன்னகையுடன் கடந்து சென்றது.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments