நான் பொதுவாக யார் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தாலும் போய் விசாரிப்பேன். விந்தி நடப்பவர்கள், கை, தலை உடைந்து கட்டுப்போட்டவர்கள், சக்கர நாற்காலியில் வருவோர் என. இன்று காலை அப்படி ஒரு சக ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு கடந்த ஆண்டு ஒரு விபத்து நடந்திருக்கிறது - அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பட்ட காயங்களுக்கும் அவர் சொன்ன சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஏன் இப்படி நடநது, இது எப்படி சாத்தியம், அப்படித்தானே ஆகியிருக்க வேண்டும், இதைக் கேட்டீர்களா, ஏன் கேட்கவில்லை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே டுரோமாவில் இருந்தேன், இதற்கு மேல் மீண்டும் அவதிப்பட வேண்டாம் என விட்டுவிட்டேன் என்றார். ஆனால் என் மனம் அந்த டுரோமாவிடம் ஈர்க்கப்பட்டபடியே இருந்தது. எனக்கு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே மனதில் ஒரு சுவாரஸ்யமான கதை தோன்றியது. சொல்லபோனால் 60% கதையமைப்பும் மனத்தில் சில வினாடிகளில் கோபுரம் போல் எழுந்துவிட்டது. அதில் இன்னொரு அடுக்கைச் சேர்த்தால் சுவாரஸ்யமான ஆழமான கதையாகிவிடும். நான் அதை அடையும் வரை என் உபமனம் அதைச் சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை நான் எழுதாமல் போகலாம், எழுதலாம். ஆனால் எழுத்தாளராக இருப்பதன் அனுகூலம் எல்லா உரையாடல்களிலும் இரு கதையை, புதிய உலகைக் காண்பதுதான். இன்று மாலையில் அவரை மீண்டும் வெளியே எதிர்கொண்டபோது இதோ ஒரு கதாபாத்திரம் என்று தோன்றியது. கதாபாத்திரம் என்னைப் புன்னகையுடன் கடந்து சென்றது.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments