Skip to main content

பல்லவிக்குப் பிறந்தநாள்

 இன்று பல்லவியின் பிறந்தநாள் - அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.


பல்லவி என் வாழ்வுக்குள் வந்தது ஒரு வரம் - என் வாழ்வின் கடும் அந்தகார இருளான பர்வத்தில் அவள் மிதக்கும் சுடராக வந்து சேர்ந்தாள். மெல்லமெல்ல வாழ்வு மீது எனக்கு பிடிப்பு அவர் அவளது அண்மை உதவியது. அதற்கு அவளது ஆளுமை ஒரு காரணம் - எனக்கு நேரெதிரான அணுகுமுறையைக் கொண்டவள். நான் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்தால் அவள் எல்லாவற்றிலும் தனக்குப் பிடித்ததை மட்டும் காண்பவள். நான் சோர்வடையும்போது சின்னச்சின்ன விசயங்களில் உற்சாகமாகக் கூடியவள்.

எனக்கு தனிப்பட்ட ரகசியங்கள் ஏதுமில்லை - எல்லாமே வெளிப்படைதான். இப்போது என் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைக் கூட பக்கத்தில் உள்ளவரிடம், என் எழுத்தைப் படிப்பவரிடம் சொல்லிவிடுவேன். ஆனாலும் என்னைக் கண்காணிப்பவர்களைப் பிடிக்காது. பல்லவியிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது அவள் என்னை முழுமையாக நம்புவாள் என்பது. நான் அவளிடம் இருட்டில் துலங்கும் மரத்தைக் காட்டி பார் யானை என்றால் அடுத்த கணம் நம்பிவிடுவாள். அதன்பிறகே அது யானையில்லை என்பதை வியப்புடன் ஏற்பாள். ஆகையால் பல்லவியிடம் நான் காட்டுவதுதான் அவளுக்கு 'நான்'. இந்த தேடித்துருவாத மனநிலை ஒரு கொடுப்பினை. எனக்கும் இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்பதால் இதில் ஒரு தனி ருசி உண்டு.

பல்லவியை நான் பேஸ்புக்கில் கண்டதற்கும் நேரில் பழகியதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அந்த ரௌடித்தனங்கள், அதிரடி, முரட்டுத்தனம் எல்லாம் ஒரு பாவனை என்று தெரிந்தபோது மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். இப்போதும் அவள் வாட்ஸாப்பில் அரசை விமர்சித்து எழுதும்போது அந்த முரட்டுத்தனம் எட்டிப்பார்க்கும் - நான் அவளை பயமுறுத்திப் பார்ப்பேன். ஜெயில், கும்பல் தாக்குதல் என எச்சரிப்பேன். அவளுக்கு அது புரியாது என்பதால் ஏற்கவே மாட்டாள். எப்படியாவது அவளை பயமுறுத்திப் பார்க்க வேண்டும் என்பது எனக்கு எப்போதும் ஒரு விளையாட்டுதான். நான் அதில் ஜெயித்ததே இல்லை. சிலநேரங்களில் நான் சொல்வது நிஜமாகவே பலித்துவிடுமோ எனப் பயந்திருக்கிறேன்.

பேஸ்புக் தன்னை அடிமைப்படுத்துவதால் அவள் தானாகவே அதிலிருந்து விலகி பல வருடங்களாக வாட்ஸாப்பில் மட்டும் ராஜ்ஜியம் ஆண்டுகொண்டிருக்கிறாள். ஆனால் அவள் பேஸ்புக்கில் இருந்து விலகிய ஆரம்ப நாட்களில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும்போது பல்லவியின் பல விசிறிகளைக் கண்டு "என்னடா இது உலகம், இவ்வளவு எழுதுறோம், ஆனால் என்னைவிட இவளுக்குத்தான் அதிக விசிறிகள் இருக்கிறார்களே" என தலையில் அடித்துக்கொண்டிருக்கிறேன். ஒருநாள் தமிழினி வசந்தகுமார் அண்ணாச்சியைப் பார்த்தேன். அவர் பல்லவியைப் பார்த்ததும் "பல்லவி தானே? ஹலோ. ஜீனோவைப் பற்றி நீங்க எழுதுவதை ரசித்துப் படிக்கிறேன்" என்றார். நான் நினைத்துக் கொண்டேன், "நான் இத்தனை ஆண்டுகளாக மாய்ந்து மாய்ந்து எழுதுறேன், அது நல்லா இருக்குன்னு ஒருமுறையாவது சொல்லியிருக்கிறாரா மனிசன்."

நான் தான் அவளை பேஸ்புக்கில் எழுதவிடாமல் தடுப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள் - அதற்கான ஆற்றல் எல்லாம் என்னிடம் இல்லை. ஒரு பெண் கவிஞர் திடீரென பல்லவியின் பெயர் நினைவுக்கு வந்து "ஏன் அவளை இருட்டில் வைத்திருக்கிறீர்கள்" என்று மெஸெஞ்சரில் தோன்றி என்னை பயங்கரமாகத் திட்டினார். நக்கீரன் கோபாலை வீரப்பன் என்று நினைத்து கைது செய்து விசாரிப்பதைப் போல இருந்தது அச்சம்பவம். நானெல்லாம் அந்தளவுக்கு பயங்கரமானவன் அல்லன் என்று அவருக்கு என்னால் புரியவைக்க முடியவில்லை. இப்படி திடீர்திடீரென பல்லவி ரசிகர்கள் என்மீது மெய்க்காவல் படையைப் போல தாக்குதல் தொடுப்பார்கள். இப்போது நான் அதை ரசித்து "ஆமாங்க நான் தாங்க அந்த ஆணாதிக்கவாதி, அந்த கொடுங்கோலன்" என்று ஏற்றுக்கொள்கிறேன். எத்தனையே விசயங்களை மணிக்கணக்காக நான் வற்புறுத்திச் சொல்லியும் கேட்காத அவள் பேஸ்புக்கை எனக்காக விட்டுவிலகியிருப்பாள் என்று நம்புகிறார்கள் பாருங்கள் வேடிக்கைப் பேர்வழிகள். "பேஸ்புக்கில் இருந்து வெளியேறு" என்று நான் அவளிடம் பத்து காரணங்களை அடுக்கி விளக்கினால் அவள் அதில் ஒன்றையும் காதில் வாங்காமல் "முடியாது" என்று சொல்வாள். அதேபோல "பேஸ்புக்கில் இரு" என்று பத்து காரணங்களை வலியுறுத்தினாலும் அதில் ஒன்றைக் கூடக் கேட்காமல் "முடியாது போ" என்று சொல்லிவிடுவாள். நான் இம்மாதிரி விபரீத முயற்சிகளில் இறங்குவதில்லை. எதற்கு? சுதந்திரம்தானே வாழ்க்கையின் அழகு.

எந்தளவுக்கு சுதந்திரமானவள் என்றால் ஊட்டி இலக்கிய விழாவில் மணிரத்னத்தை சந்தித்தபோது "ஏன் உங்கள் படங்களில் சேரி மக்களை எலைட் தன்மையுடன் காட்டுகிறீர்கள்? ஏன் அப்படி, ஏன் இப்படி?" என கடுமையான கேள்விகளை முன்வைத்தாள். அவர் ஆரம்பத்தில் சற்று கடுப்பானாலும் அவளது நேர்மை அவருக்குப் பிடித்துப் போனது. டி.எம் கிருஷ்ணாவிடம் பாடிக் காட்டியதும் இன்னொரு சாகசச் செயல். மோடியைச் சந்தித்திருந்தாலும் "உங்களுக்கு ஏன் ஆளத் தெரியவில்லை, உங்களுக்கு ஏன் இவ்வளவு மதவெறி?" என்று கேட்டிருப்பாள். பைக்கை முழுவேகத்தில் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கொண்டு கண்ணை மூடியயபடி சாலையில் கிளம்பினால் அதுதான் பல்லவியின் நடவடிக்கை. அந்த பைக்கை தடுக்காமல் எதிரே போகாமல் விட்டால் அது பாட்டுக்கு போய்விடும். அடிப்படையில் அவளுக்கு துர்நோக்கம், யாரையும் காயப்படுத்தும் உத்தேசம் இருக்காது என்பதால் யாரையாவது காயப்படுத்தினாலும் ஒன்று அவர்கள் காய்பபட மாட்டார்கள் அல்லது காயப்பட்டதாக அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

பல்லவி ஒரு நடமாடும் பிலிமாலயா, வண்ணத்திரை, பிஹைண்ட்வுட்ஸ். யாராவது ஒரு நடிகரின் பேட்டியைப் பார்த்தால் அவரது தாத்தா, பாட்டி, அவரது முன்னோடியான முதல் புரோட்டோ பாக்டீரியா வரை வரலாற்றுச் சித்திரத்தை வரைந்து காட்டி என்னை வதைப்பாள். படத்தையும் ஒவ்வொரு பத்து நிமிடமும் உறைய வைத்து பல கருத்துக்களைத் தெரிவிப்பாள். "இந்த படத்தில் அந்த காட்சியில் நாற்காலிக்குப் பின்னால் நிற்கிறாரே அவர் யார் தெரியுமா, அவரது தாத்தா தான் மெட்ராஸ் மாகாணத்தில் முதல் ஸ்டுடியோ கட்டியவரின் பேரன், அவருடைய அத்தையின் பாட்டிதான் அந்த படத்தில் ஒரு பாட்டில் துணை நடிகையாக வந்தவர். அவரது மகள் எந்த படத்தில் நடித்தார் தெரியுமா?" இது எந்தளவுக்குப் போகுமென்றால் திரையரங்கில் படம் ஓடும்போதும் அதை "பாஸ்" பண்ணுவதற்காக ரிமோட்டைத் தேடுவாள். அவள் திரைப்படத் தகவல்களால் என்னை வதைத்துவதைத்து நான் திரைப்படம் என்றாலே தலைதெறித்து ஓட ஆரம்பித்துவிட்டேன். உலகின் மிக மட்டமான படத்தைக் கூட அவளைப் போல ரசிக்க இன்னொருவரால் முடியாது.

பல்லவி இதேபோல நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழட்டும் என வாழ்த்துகிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...