"Decolonization of medical education: A global screening of instructional languages and mother tongue dependence" எனும் ஆய்வுக் கட்டுரையில் ஹமாத் உலகம் முழுக்க ஐரோப்பிய தேசங்கள் ஆங்கிலம் அல்லாத தத்தமது தாய்மொழியிலேயே மருத்துவக் கல்வியை வழங்குகின்றன என்கிறார். ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. உலகளவில் 2900 மருத்துவக் கல்லூரிகளில் 55.6% மேலானவற்றில் தாய்மொழியில் தான் கற்பிக்கிறார்கள், ஆங்கிலத்தில் அல்ல. இதனால் இவர்களுடைய மருத்துவ ஆய்வுத் தகுதியோ மருத்துவப் பணியாற்றும் திறனோ உலகளவிலான மதிப்போ இல்லாமல் ஆகிவிடவில்லை. ஆங்கிலம் தாய்மொழியாக அல்லாத 53 நாடுகளில் மட்டுமே ஆங்கில வழியில் மருத்துவம் கற்பிக்கப்படுகிறது. அதேநேத்தில் முன்னாள் காலனிய நாடுகள் (ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில்) மருத்துவக் கல்வியை பரவலாக ஆங்கிலத்தில் இன்றும் கற்பிக்கிறார்கள். இது ஒரு நடைமுறைத் தேவையாக அல்லாமல் பண்பாட்டுச் சிக்கலாகவோ உள்ளது. இந்தியாவைப் போன்ற முன்னாள் காலனிய நாடுகள் பின்-காலனிய தேசங்கள் ஆகும்போது மேற்கத்திய தேசங்களின் சாயலில் இருந்து விடுபட முடியாமல் திணறுவதுடன், உலகமயமாதலின் பிடியிலும் சிக்கியிருப்பதால் ஆங்கிலத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொள்கின்றன. இது இந்நாடுகளில் ஆங்கிலம் அறிந்த மேற்தட்டு, அறியாத கீழ்த்தட்டு எனும் பின்-காலனிய படிநிலையைத் தக்க வைக்கவும், ஆதிக்க கலாச்சாரத்தைத் தொடரவும் ஆளும் வர்க்கத்துக்கு உதவுகிறது. மெல்லமெல்ல இதிலிருந்து விடுபடுவது, எதிர்-காலனியமாக்கல் செய்வது வெகுமக்களுக்கு கல்வியை அணுக்கமாக்கும்.
மோடிக்கும், அமித் ஷாவுக்கும் இந்த உயரிய நோக்கம் உள்ளதாக நான் சொல்லவில்லை. அவர்கள் கடைசியில் இந்தி வழியாக மருத்துவம் கற்க வேண்டும் என்றே சொல்வார்கள், அதற்கே அதிகமாக நிதி வழங்குவார்கள். ஆனால் தாய்மொழி வழிக்கல்வி எனும் இந்த ஐடியா முக்கியமானது. தமிழ்நாட்டில் இருந்து ஒரிஜினலான ஆய்வுகள் நடக்கவும், ஆங்கிலப் பரிச்சயம் இல்லாத மக்களுக்கு மருத்துவத்தைப் புரிந்துகொள்ளவும், மருத்துவர்களுடன் அணுக்கமாக உணரவும் இது உதவும்.
Comments