மலையாள இயக்குநர், திரைக்கதையாளர், நடிகர் ஶ்ரீனிவாசன் தன் இளமையில் நடந்த ஒரு சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன்பான நேர்முகத்தில் சொல்கிறார் ("நேரே சொவெ"). அவர் அப்போது சினிமாவுக்கு வரவில்லை. அந்த உத்தேசமும் திட்டமும் கூட இல்லை. தனக்குப் பார்ப்பதற்கு சினிமாவுக்கான லட்சணமும் இல்லையென்றே அப்போது நினைக்கிறார். ஒருநாள் அவரது நண்பர் அவரைப் பிடிவாதமாக கைரேகை ஜோசியரிடம் கூட்டிப் போகிறார். இந்த ஜோசியர் துணிகட்டி மறைத்த ஓரிடத்தில் தரையில் அமர்ந்து கை பார்க்கிறவர். அவர் ஶ்ரீனிவாசனின் கையைப் பார்த்துவிட்டு "இந்த ஆள் சினிமாவில் ஏதோ ஒரு துறையில் வேலை பார்த்து பெரும் புகழும் அங்கீகாரமும் பெறுவார்." என்கிறார். ஶ்ரீனிவாசனுக்கு நக்கல் புன்னகை அரும்புகிறது. அவர் தன் நண்பரை சிரிப்புடன் பார்க்க அவரோ அமைதியாக இருக்கிறார். ஜோசியர் தொடர்ந்து "இவர் இந்தியாவின் உச்சப்பொறுப்பில் இருக்கிறவரின் கையில் இருந்து விருதைப் பெறுவார்" என்கிறார். ஶ்ரீனிவாசன் இந்த நபர் பெரிய மோசடிக்காரர், இதெல்லாம் நடக்கிற கதையா என்று நினைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீனிவாசன் அந்த ஜோசியர் சொன்ன எல்லா சிறப்புகளையும் தகுதிகளையும் பெற்று விடுகிறார். ஆனால் ஜோசியர் சொன்னது என்பது அவர் நினைவிலேயே இல்லை. அவர் பகுத்தறிவாளர் என்பதால் தன் உழைப்பு, முன்னேற்றம் எனும் கணக்கிலேயே நினைக்கிறார். அவரது "சிந்தா விஷ்டயாய ஷ்யாமளா" எனும் திரைப்படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கிறது. அப்போது அவர் ஊரில் மகிழ்ச்சியாக காரில் சென்று கொண்டிருக்கும்போது மேற்சொன்ன துணியால் மறைக்கப்பட்ட ஜோசியக்காரரின் இடத்தைக் கடக்கிறார். அது சூனியமாக இருக்கிறது. அவருக்கு ஒரு கணம் எல்லா நினைவுகளும் மனதில் வந்து போகின்றன.
நேர்முகம் காண்பவர் அவரிடம் "நீங்கள் இதன்பிறகு ஜோசியத்திலும் கடவுளிலும் நம்பிக்கை கொண்டவராகிறீர்களா?" எனக் கேட்கிறார்.
"நான் என்றுமே கோயிலுக்குப் போனதில்லை என்பதால் அப்படி நடக்கவில்லை. நான் எப்போதுமே கடவுளை ஏற்பதில்லை. ஜோசியத்தையும்தான். கைபார்த்து துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் ஆயிரத்தில் ஒருவரே இருப்பார்கள். ஆனால் நம் வாழ்வில் ஒவ்வொன்றையும் இப்படி முன்கூட்டி தீர்மானிக்கிறார் யாரோ எனும் எண்ணம் எழுந்தது." என்கிறார்.
பொதுவாக எதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாததோ அதெல்லாம் வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும் வண்ணமும் சேர்க்கும்.
Comments