Skip to main content

அவமானப்படுத்தும் உரிமை

இன்று ஒரு செய்தி பார்த்தேன். உயர்நீதிமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.


கணவர் ஆண்மையற்றவர் என்று நீதிமன்றத்தில் மனைவி சொல்வது மானநஷ்டத்தை ஏற்படுத்தாதா?”


மும்பை உச்சநீதிமன்றம்: கணவர் ஆண்மையற்றவர் என்று நீதிமன்றத்தில் வெளியே சொன்னார் அதைக் குற்றமாகும். நீதிமன்றத்துக்குள் வழக்கை முன்னெடுக்கும் நோக்கில் தாராளமாகச் சொல்லலாம்


வாழ்க்கையே இப்படி வேடிக்கை விளையாட்டாகிவிட்டது. 2018இல் நாக்பூரில் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டால்தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக கணவர் தொடுத்த மானநட்ட வழக்கில் நீதிபதி எஸ்.எம் மொடாக்கி தீர்ப்பு இது.


சில கணவர்கள் இதே நீதிமன்றத்தில் தம் மனைவியரை நடத்தை கெட்டவர் எனக் கூறுகிறார்கள். நீதிமன்றத்துக்குள் நடப்பதால் இப்படியான உளவியல் வதைகளை புனிதமான விளையாட்டாக நீதிமன்றம் பார்க்கிறது


ஒரு மனைவி ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? மூன்று காரணங்கள்

  1. சீக்கிரமாக விவாகரத்து வாங்க இப்படியான பகீர் குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டும். இதுதான் பிரதான பிரச்சினை - ஒத்துப்போகவில்லை என்றால் அக்காரணத்தைக் கொண்டே ஒரு கட்சி விண்ணப்பித்து விவாகரத்து பெறும்படி வழிமுறை எளிதாக இருக்க வேண்டும். நமது நடைமுறை அதை அனுமதிப்பதில்லை. ஆகையால்என் கணவர் பயங்கரமான கொடூர மனம் படைத்தவர், கேவலமானவர்என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதி தாக்கல் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதிதான் ஆண்மையற்றவர் என்பது. மிகச்சாதாரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது இது. வக்கீல்களே தம் எதிர்க்கட்சி மீது சுமத்துவதற்கு இப்படியான பழிகளின் பட்டியல் ஒன்றை வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்
  2. எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தி மிரட்டிப் பின்வாங்க வைக்க சொல்ல ஆண்மையற்றவன், ஸ்திரிலோலன், பொம்பளைப் பொறுக்கி என்றெல்லாம் சொல்ல வேண்டும் (டொனால்ட் டிரம்ப் தன் டீலுக்கு ஒத்துவராத நாடுகளை மிரட்டுவதைப் போல).
  3. கணவரிடம் இருந்து ஜீவனாம்சமாக ஒரு பெரிய தொகையை வாங்குவதற்கு அவர் மீது பொய் வழக்குகள் போட வேண்டும். வரதட்சிணைக் கேட்டுத் துன்புறுத்துகிறார், உளவியல் வதை பண்ணுகிறார் என்பதெல்லாம் இதற்குள் வரும்


கணவர்கள் ஏன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்?

பொதுவாக விவாகரத்தை நாடுவோரில் பெண்களே மிகவும் அதிகம் என்பது புள்ளிவிபரம். ஆனால் ஆண்களும் நல்லவர்கள் அல்லர். ஆண்களும் விவாகரத்தை நாடும்போது தம் மனைவியரை மிக மோசமாகப் பாதிக்கும் குற்றச்சாட்டுகளையே வைப்பார்கள். அவர்களது மானத்தை, கற்பை குறிவைக்கும் பழிச்சொற்கள். இதற்கும் நம் சட்டங்களும், நீதிமன்ற நடைமுறையுமே காரணம்

நீதிமன்றம் முதலில்இன்னும் நல்லா கட்டிப்புடிச்சு அடிச்சு கடிச்சு சண்டை போடுங்கஎனத் தூண்டும். அதற்கான அத்தனை நடைமுறைகளையும் நம் குடும்பநல நீதிமன்றங்கள் வைத்துள்ளன. “இன்னும் இன்னும்எனத் தூண்டிக்கொண்டே இருப்பார்கள். ரொம்ப பயங்கரமாக அடித்துக் கொள்ளாவிடில் வழக்கை முடிக்கவிடாத வண்ணம் நிலைமை உள்ளது - நீங்கள் சுமூகமாக முடித்தால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தைவிட அண்டர்டேக்கர் போல சண்டையிட்டால் கிடைக்கும் பணமே அதிகம் எனும்போது மக்கள் ஏன் செய்ய மாட்டார்கள்?


உலகின் மிகமோசமான கட்டப்பஞ்சாயத்து செட் அப் நம் குடும்பநல நீதிமன்றங்களே. ஆண்மையற்றவன் என்பதென்ன அவர் மனிதரே இல்லை, அவர் மனித வேடமணிந்த கரடி, முகமூடியும் சட்டைப் பேண்டும் அணிந்த கொரில்லா, காட்டில் இருந்துகொண்டு வந்து வேடமிட்டு எனக்கு கட்டிகொடுத்து ஏமாற்றிவிட்டார் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஆண்மையற்றவர் என்று அழைக்கப்படும் ஆணுக்கு அது மிகப்பெரிய அவமானம். நீதிமன்ற செய்தி என்பது சட்டரீதியான ஆவணம். நீதிமன்றத்தில் பொதுமக்கள் முன்னிலையிலே ஆண்மையின்மை விவாதம் நடக்கும். அந்த மனிதர் எந்தளவுக்கு கூனிக் குறுகிப் போவார். வாழ்நாளெல்லாம் அந்த அவமானத்தை சுமந்து திரிவார். கேவலம் ஒரு விவாகரத்துக்காக ஏன் ஒருவரை அவமதித்து ஒடுக்க வேண்டும்

 ஒரு ஐயம் - ஆண்மைக் குறைவு என்பதென்ன ஒரு சின்ன மருத்துவக் குறைபாடு. பெண்களுக்கு உறுப்பில் உலர்வு ஏற்படுவதைப் போல, கர்ப்பப் பையில் கட்டி வருவதைப் போல. இதைச் சரிபண்ண முடியும். என்னென்னமோ சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இதை ஒருகுறையாகக்காண்பதே மிகப் பிற்போக்கான அபத்தமான பழமையான சிந்தனையின் வெளிப்பாடுதான். தன் இணையருக்கு அவர் இது நேர்ந்தால் தனக்கு இழைக்கப்படும் அநீதி இது என நினைப்பது இன்னும் கொடூரமானது. சரிபண்ணவே முடியாவிடில் அது வேறு பிரச்சினை. எனக்குத் தெரிந்து அதிகமான உடல் எடை, ரத்தத் தமனிகளில் கொழுப்பு அதிகாவது, ரத்த சர்க்கரை அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளால் நரம்பணுக்கள் பலவீமாகி ஆண்களுக்குப் பரவலாக இப்பிரச்சினை வருகிறது. பெண்களுக்கு இது கருவுற முடியாமை, ஹார்மோனால் பிரச்சினை, மாதவிடாய் தாமதமாவது, வறட்சி, ஆர்வமின்மை என வெளிப்படுகிறது. இது ஒரு போதாமை அல்ல, உடல்நலப் பிரச்சினைதான். சிகிச்சையோ உணவுப் பழக்க மாற்றமோ இதைச் சரிபண்ணிவிடும். Erectile dysfunction கர்ப்பம் அடைய முடியாமல் போவதோ இவற்றை வைத்து விவாகரத்து கோருவது தலைவலிக்காகத் தூக்குமாட்டிக் கொள்வதைப் போன்றது.


அடுத்து, உடற்குறைபாடு எப்படிக் குற்றமாகும்? எதிர்க்கட்சி மீது அதை குற்றமாகச் சுமத்தி, அது தனக்கு நிகழ்ந்த அநீதியாகப் பாவிப்பது எப்படிச் சரியாகும்? அது இரு தரப்பினரையும் மீறி நிகழ்கிற ஒரு விபத்து. அதற்காக ஏன் ஒரு கட்சியைக் கூனிக்குறுகி நிற்க வைக்க வேண்டும்?


சரி அதற்காக விவாகரத்து கோருவதெனில் அதை ஏன் அம்பலப்படுத்த வேண்டும்? ‘எங்களிடையே உறவு சுமூகமாக இல்லைஎன்று சொல்லி விவாகரத்துப் பெறுவதை நீதிமன்றம் அனுமதிப்பதுதானே சரி? வெறும் சட்டரீதியான ஆவணப் பயனைத் தவிர இதனால் வேறென்ன பயனுள்ளது?


இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், இதற்கான விடை புலப்படும்:

 காலங்காலமாக நம் சமூகம் குடும்பத்தையும் தனிமனிதர்களையும் சதா கண்காணித்து விசாரித்து கட்டுப்படுத்தி வந்தது, ஆண், பெண்ணின் உடலையும் நடத்தையையும் மையப்படுத்தி அவர்களை விமர்சித்தும் மதிப்பும் வந்தது, குடும்பம் என்பது அதற்கான சால்ஜாப்பு மட்டும்தான். இன்று சமூகத்தின் இந்த கேடுகெட்ட பணியை நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. குடும்பநல நீதிமன்ற அமைப்பும் அதன் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் தனிநபர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக பிரதானமாக இயங்குவதாகத் தெரிந்தாலும் அவற்றின் அசலான நோக்கம் சமூகத்தில் தனிமனிதர்களை அவமதித்தும் மிரட்டியும் அவர்களது அந்தரங்கத்துக்குள் குறுக்கிட்டு விசாரித்து அரசுக்கும் அமைப்புகளுக்கும் இணங்கியவர்களாக அவர்களை மாற்றுவதே. வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் எந்த அந்தரங்கமும் அங்கு அதற்கு மேல் செல்லுபடியாகாது என நீதிமன்றம் கோருவது இதனாலே. இதே வாக்கியத்தை முன்பு பொதுச்சமூகமும் நம்மிடம் கூறியது: குடும்பச் சண்டைத் தெருவுக்கு வந்தால் யார் வேண்டுமானாலும் பஞ்சாயத்து பண்ணலாம், விசாரிக்கலாம், தலையிடலாம், தீர்ப்பு கூறலாம். நீ யார், இது நியாயமா என்றெல்லாம் கேட்க முடியாது. அங்கு தனிமனிதர் அழிக்கப்பட்டு அவர் பொதுமனிதர் ஆக்கப்படுகிறார். அங்கு நியாயம் என்பது வெளிநபர் குறுக்கிட்டுக் கட்டுப்படுத்துவதற்கான வெற்றுச் சொல் மட்டுமே. நீதிமன்றம் தன் இறுக்கமான கறுப்பு அங்கியிட்ட மொழியில் வெளிப்படுத்துவது பழைய சமூக விழுமியங்களையும் எதேச்சதிகார அக்கறைகளையுமே.


விவாகரத்தின் போதே நீதிமன்றமும் சமூகமும் உள்ளே வருகிறது என நாம் நினைக்கிறோம். மாறாக, விவாகரத்தின் நிகழ்-சாத்தியமும் எச்சரிக்கைகளுமே குடும்பத்தைக் கட்டுப்படுத்தி செயல்பட வைக்கின்றன. அதாவது, குடும்பம் தோன்றி பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து நடக்கவில்லை. விவாகரத்து உள்ளதாலே, அதற்கான சாத்தியங்களை அரசும் நீதிமன்றமும் கச்சிதமாக தீட்டி வைத்து வழிமுறைகளைச் சிக்கலாக்கி வைத்துள்ளதாலே நவீன இந்தியக் குடும்பம் எனும் அமைப்பே தோன்றுகிறது. திருமண ஆவணத்தில் கையெழுத்திடும்போதே இன்னொரு கை மாயமாக விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திட்டு நம்மை நோக்கி கண்ணடிக்கிறது, விரல் சுட்டி எச்சரிக்கிறது. இரண்டு கையெழுத்துகளும் மாயமான கயிறால் கட்டப்பட்டுள்ளன. ஒன்று இல்லாவிடில் இன்னொன்றால் நிலைக்க முடியாது. திருமணம் சமூகத்தில் நிகழ்ந்து விவாகரத்து நீதிமன்றத்தில் முடிவதாக நாம் பாவிக்கிறோம். உண்மையில் திருமணமே அந்நீதிமன்றத்தில்தான் மறைமுகமாக துவங்குகிறது. கையெழுத்து, ஆவணம் என ஒவ்வொன்றும் முன்கூறாகத் தயாரிக்கப்படுகின்றது.


குடும்பத்தை இயல்பாக உடைய அனுமதித்தால் அங்குஉண்மையான குடும்பம்இருக்கும், ஆனால் சமூகத்தின் இறுக்கமான கண்ணியான குடும்பம் இருக்காது. குடும்பத்தை ஆவணபூர்வமாகச் சிக்கலாக்கி, விசாரணை மூலம் வதையாக்கி உடைக்கும்போதேஇன்றைய நவீன குடும்பம்ரிவர்ஸில் தோன்றுகிறது. சமூகத்தைச் சிறையாகவும், குடும்பத்தை கைதியின் அறையாகவும், கொட்டடியாகவும் உருவகித்துப் பாருங்கள். வெளியே செல்ல முடியாது எனும் பெரிய மதிற்சுவர் ஒவ்வொரு முறையும் உணர்த்தப்படுவதாலே அது சிறையாகிறது. (அல்லாவிடில் வாழ்விடம்தான்.) உடைந்தால் இத்தனைக் குறுக்கீடுகளும் அவமானங்களும் தண்டனைகளும் கிடைக்கும் எனும் எச்சரிக்கையே குடும்பத்தை அச்சுப்பிசகாத ஒரு எதேச்சதிகார அமைப்பாக உருவாக்கி வைக்கிறது.  


 நம் நீதிபதிகளும் சட்டங்களும் இன்னும் 19ஆம் நூற்றாண்டிலேயே இருக்கிறார்கள். அறிவியல்ரீதியாக எதையும் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் தம் மனதுக்குள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் ஏற்பதோ விரும்புவதோ இல்லை. அவர்கள் ஆளும் அரசின் மறைமுக ஒடுக்கும் கரமாக, சாட்டையாக, குண்டாந்தடியாக செயல்படுகிறார்கள். படிப்பறிவும் ஜனநாயக உணர்வுமற்ற பழைய சமூகத்தின் காவலர்களாக நீடிக்கிறார்கள். அவர்கள் இல்லாவிடில் குடும்பம் நிகழும், உருமாறும், ஒற்றை அடையாளமற்ற ஒன்றாக மாறும். அது சமூகத்தை, அரசை, மக்களின் மனநிலையை பாதிக்கும். அரசின் மீது கேள்விகள் எழுப்பப்படும், அதிகார மையங்கள் நெருக்கடிக்குள்ளாகும் (மிகைல் பக்குனின் சொல்வதைப் போல). அதை அனுமதிக்காமல் குடும்பத்தை சிறைக்கூடமாக நிலைக்க வைக்கவே குடும்பநல நீதிமன்றங்கள் அவசியமாகின்றன. ஆண்மையிழப்பு, சோரம் போதல், அவமதிப்பு எல்லாம் இதன் ஒரு பகுதியே.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...