Skip to main content

சட்டமும் அச்சமும்


மிகைல் பக்குனின் இயற்கைச் சட்டங்களைக் குறிப்பிடுகிறார் (“அதிகாரம் என்றால் என்ன?” கட்டுரை)

. 1) புவியீர்ப்பை யாரும் மறுப்பதில்லை. அதை நம்மை ஏற்க வைக்க காவல்துறையும் சிறைக் கொட்டடியும் தேவையில்லை

2) மனிதர்கள் பரஸ்பரம் சார்ந்திருக்கிறோம். நான் தனிமை விரும்பியாக இருந்தாலும் இன்னொரு மனிதரின் உதவியின்றி வாழ்வது கடினம்.

 3) அடிப்படையான தர்க்கவிதிகள் - 1+1 = 2 என்பது மாற்ற முடியாத விதி.

 4) சமூக உறவுகளிலும் வணிகம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளிலும் தேவையுள்ள ஒழுக்கம் - நான் இன்னொருவரை அடித்துத் துன்புறுத்துவது, அழிப்பது என் உரிமை என்று பெரும்பாலானோர் கூற மாட்டார்கள். அப்படி அவர் கூறினால் அவர் விரைவில் அழிந்து போவார். இதுவும் இயற்கை விதிதான். இயற்கையின் சட்டம்தான்.


மனிதர்களுக்கு இந்த இயற்கையான சட்டங்களும் விதிகளும் போதும். இவற்றுக்குள் நமது குடும்ப நல நீதிமன்றச் சட்டங்கள் வருவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். குடும்பத்தை உடைக்கும்போது அதை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறுவதை எடுத்துக் கொள்வோம் - கணவரின் சொத்தின், வருமானத்தின் சரி பாதியையோ ஒரு கணிசமான பகுதியையோ மனைவிக்கு கொடுத்துவிட வேண்டும். இதில் எந்த தர்க்கமும் இல்லை. திருமணத்திற்கு முன்பு சுயமாக உழைத்து வாழ்ந்த பெண்ணால் ஏன் அதையே திருமணத்திற்குப் பின்பு செய்ய முடியாது என்பதே இயற்கைச் சட்டம், அதன் தர்க்கம். ஆகையால் மக்கள் இதைச் சுலபத்தில் ஏற்பதில்லை. அவர்களைத் தண்டனையையும் காவல்துறையையும் காட்டி மிரட்டியே நீதிமன்றம் தன் தீர்ப்புக்குப் பணிய வைக்கிறது. குழந்தை இருவர் சேர்ந்து பெற்றுக் கொள்வது, ஆகையால் அது இருவருக்குமானது என்பது இயற்கைச் சட்டம், தர்க்கம். ‘ஆனால்அம்மாவாலே அதைச் சரியாக வளர்க்க முடியும், ஆகையால் அப்பாவிடம் வளரக் கூடாது என்பது இயற்கைக்கு மாறானச் சட்டம். இதையும் நீதிமன்றம் உருட்டியும் மிரட்டியுமே நடைமுறைப்படுத்துகிறது. இயற்கைச் சட்டங்களை மக்கள் எதிர்ப்பதோ அஞ்சுவதோ இல்லை. பசித்தால் சாப்பிட வேண்டும் என்பதை யாரும் எதிர்ப்பதோ அஞ்சுவதோ இல்லை. சமூகத்தில் பெரும்பாலானவர்கள் பரஸ்பரம் இணங்கியும் பொதுவிதிகளை ஏற்றுக்கொண்டுமே போகிறார்கள். அதை அவர்கள் அஞ்சுவதோ எதிர்ப்பதோ இல்லை. இது மனிதர்களுக்கு என்றில்லை, விலங்குகளுக்கும் பொருந்தும். நீதிமன்றம் உள்ளே வந்து இதைச் செய்யலாம், இது கூடாது எனும்போது மக்கள் இயற்கையாக உடன்பட மறுக்கிறார்கள் - அதனாலே எந்த தீர்ப்பையும் பொதுச்சமூக வாக்கெடுப்புக்கு விடுவதோ விவாதத்துக்கு உட்படுத்துவதோ இல்லை. அது மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் அப்பாலான ஆண்டவன் கட்டளை ஆகிறது. ஏனெனில் அது கடும் மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் உட்படத்தக்கதாக இயல்பிலேயே இருக்கிறது. சட்டம் அதனாலே தன் மீதான எதிர்ப்பை அது எழும் முன்பே தடுக்கிறது. மிகத்தூய்மையான முற்றதிகாரமாக அது இருக்கிறது. ஒரு அரசியல் கூட்டம் சேர்ந்து அப்பாவி மக்களைக் கொல்லுகிறது. அரசு அமைப்புகளாலும் நீதிமன்றத்தாலும் அக்கூட்டம் காப்பாற்றப்படுகிறது - ஆதாரம் போதவில்லை, சரியாக வழக்கு விசாரணை நடக்கவில்லை எனும் என்னென்னவோ காரணங்களால். இது மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சட்டம் எனும் தோரணை இதை ஏற்க வைக்கிறது. இது நீதி பிழைப்பதல்ல, இதுதான் சட்டத்தின் நீதி. கொலை என ஒன்றை சட்டம் வரையறுக்கும்போதே யாரைக் கொல்லலாம், கொல்லக் கூடாது, யாரெல்லாம் விசாரணைக்கு அப்பாலானவர்கள் என்பதையும் வரையறுக்கிறது, சில நேரடியானவை, சில மறைமுகமானவை, அத்துடன் அது கொலையை கொலையல்லாமல் மாற்றுகிறது. அது எதைக் குற்றமென்றாலும் அது குற்றமல்லாமலும் ஆகிறது. இது சமூகத்தின் பிரச்சினையோ நீதிபதியின், விசாரணை அமைப்பின் போதாமையோ குறையோ அல்ல. இதுவே அதன் இயல்பு


ஒரு படத்தில் ஜனகராஜ் வேற்றூரில் இருந்து வருவார். வந்த இடத்தில் மழை பெய்தால்என்ன கல்லா கொட்டுது?” என்பார். நாயைப் பார்த்தால்யானை வருதுஎன்பார். கேட்டால் என் ஊரில் இப்படித்தான் சொல்வோம் என்பார். அப்படிச் சொன்ன பின்னர் அவர் அடையாளப்படுத்தும் பொருட்களின், விசயங்களின் கதியை, விளைவை, அர்த்தத்தை அவரே தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவார். அவர் தனக்குச் சோறிடுவோரிடம்விஷத்தைக் கொட்டுங்கஎன்றால் அவர் கோவித்துக் கொள்ள முடியாது. அவர் மொழி, அவர் நியாயம். நீதியமைப்பும் அப்படித்தான் - அது ஒன்றை எடுத்து அதை எப்படிப் பார்க்க வேண்டும், எது சரி தவறு என வரையறுக்கிறது, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கி, அந்த மாயையை நம்பும்படி நம்மை வலியுறுத்துகிறது. அதன்பிறகு நாம் அதன் கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வருகிறோம். அது ஒரு கொலைகாரரை விடுவித்தால் அவர் கொலைகாரர் அல்லாமல் ஆகிறது, அவர் குற்றம் பண்ணியதைப் பார்த்தவர்கள் இருப்பார்கள், அவருக்கு அவர் கொலைகாரர், ஆனால் அவர்களுடைய மொழியில் இனிமேல் அவர் கொலைகாரர் எனக் கூற முடியாது, அந்த உரிமையை நீதிமன்றம் ஒரு கணத்தில் பறித்துவிடும். இது சமூகத்தில் அமைதியையும் நீதியையும் தோற்றுவிக்கிறது, அப்பாவிகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயத்துக்கான பாதையை உருவாக்கித் தருகிறது என சமூகநீதிக் காவலர்கள் சொல்லும்போது நாம் அதை மறுக்க முடியாது போகிறது. அவர்களும் கலாச்சாரரீதியாக அச்சத்தை உண்டாக்கி நம்மைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்பதால் தலையசைத்துக் கடந்து போகிறோம்


இயற்கையின் சட்டங்களுக்கு அப்பால் உலகைத் தோற்றுவிப்பதற்காக அரசும் அதிகார அமைப்புகளும் பிரயத்தனம் பண்ணுகின்றன. அவர்கள் சொல்வதை நாம் மறுப்பதற்கான வெளியை மறுப்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதை நாம் பிரிட்டீஷ்காரர்கள் காலத்துச் சட்டங்களைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் - வனங்களில் மக்கள் வாழ்வதைக் கட்டுப்படுத்துவது அன்றைய காலனிய ஆட்சியாளர்களின் வணிகத் தேவைக்கு அவசியப்பட்டது. அதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவது அவசியப்பட்டது, ஆயுதங்களைத் தயாரிப்பது, தரிப்பது, சண்டைக் கலையைப் பயில்வது இதையெல்லாம் கட்டுப்படுத்த தேவையேற்பட்டது. ஒவ்வொன்றுக்கும் சட்டம் கொண்டு வந்தார்கள். வரியை வசூலிக்கத் தேவையேற்பட்டது. வரி கொடுக்காமல் இருப்பது குற்றமாக்கப்பட்டது. இவை எவையுமே இயற்கைச் சட்டங்கள் அல்ல. இவற்றால்தாம் மக்கள் இன்று அளவுக்கு அதிகமான துன்பங்களை சுதந்திரத்துக்குப் பின்பு அனுபவித்து வருகிறார்கள். ஏனென்றால் இவை மக்களுக்காக உருவாக்கப்படவில்லை - மக்களையும் இந்நாட்டின் வளங்களையும் தமக்கு ஏற்றபடி உருவகித்துக் கட்டுப்படுத்தவே இவை செயற்கையாக உருவாக்கப்பட்டன. இயற்கையான மாற்றங்கள், வளர்ச்சி என இவை நியாயப்படுத்தப்பட்டன. இப்போது தாராவியில் உள்ள மக்களை அங்கிருந்து அகற்றி அந்த இடத்தைக் கையகப்படுத்தி பெரும் விலைக்கு விற்க அதானிக்கும் அதே சட்டமும் அதன் அச்சமுமே பயன்படப் போகிறது. வசிப்பிடம் வசிப்பவர்களுக்கானது - இது இயற்கை விதி. வசிப்பிடம் தனிமனித உரிமையெனிலும் அது அரசுக்கும் உரிமையானது, அரசால் யாருடைய இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பது சட்டம், செயற்கையான விதி. அரசும் சட்டமும் ஆதரவாக இணையும்போது அதானி இயற்கைக்கு அப்பாலான சக்தியாக உருவெடுக்கிறார். எளிமையாக யோசித்துப் பார்த்தால் அங்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் சட்டரீதியாக இதைச் சுலபத்தில் எதிர்க்க முடியாதபடி அரசு இதை ஆவணப்படுத்தினால் மக்களால் சமாளிக்க முடியாது. அரசின் இந்த அதிகாரமும் பலமும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, இயற்கைக்கு மாறான சட்டத்தை இயற்றும், விதிமுறைகளை உருவாக்கும் ஆற்றலில் இருந்து வருகிறது.


இயற்கையில் இருந்து எளிமையும், எளிமையில் இருந்து வாழ்க்கையும் தோன்றுகிறது. செயற்கையில் இருந்து சிக்கலும், சிக்கலில் இருந்து சட்டமும், சட்டத்தில் இருந்து அதிகாரமும் அதில் இருந்து மக்கள் சும்மா வாழமுடியாதபடியான தடைகளும் துயரமும் தோன்றுகின்றன. சட்டத்துக்கு உள்ளிருந்து அதிகாரத்தை எதிர்த்து வாழ்வது போர் செய்து போரை முடிப்பதை, அதற்காக முடிவற்ற போரில் ஈடுபவதைப் போலாகிறது. நீண்ட சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பாருங்கள்: அவர்கள் ஒன்று பொய் வழக்குகளில் சிக்கி கொட்டடிகளில் இறக்கிறார்கள் அல்லது நீண்ட காலம் வாழ்க்கையே வதையாகிட போராடி காலத்தை வீணடிக்கிறார்கள், செல்வத்தை குடும்பத்தை இழக்கிறார்கள். அதனாலே பொதுமக்கள் நீதிமன்றத்துக்குப் போகவே அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை முதலீடாக வைத்தே நீதிமன்றம் நடக்கிறது

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...