Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சட்டமும் அச்சமும்


மிகைல் பக்குனின் இயற்கைச் சட்டங்களைக் குறிப்பிடுகிறார் (“அதிகாரம் என்றால் என்ன?” கட்டுரை)

. 1) புவியீர்ப்பை யாரும் மறுப்பதில்லை. அதை நம்மை ஏற்க வைக்க காவல்துறையும் சிறைக் கொட்டடியும் தேவையில்லை

2) மனிதர்கள் பரஸ்பரம் சார்ந்திருக்கிறோம். நான் தனிமை விரும்பியாக இருந்தாலும் இன்னொரு மனிதரின் உதவியின்றி வாழ்வது கடினம்.

 3) அடிப்படையான தர்க்கவிதிகள் - 1+1 = 2 என்பது மாற்ற முடியாத விதி.

 4) சமூக உறவுகளிலும் வணிகம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளிலும் தேவையுள்ள ஒழுக்கம் - நான் இன்னொருவரை அடித்துத் துன்புறுத்துவது, அழிப்பது என் உரிமை என்று பெரும்பாலானோர் கூற மாட்டார்கள். அப்படி அவர் கூறினால் அவர் விரைவில் அழிந்து போவார். இதுவும் இயற்கை விதிதான். இயற்கையின் சட்டம்தான்.


மனிதர்களுக்கு இந்த இயற்கையான சட்டங்களும் விதிகளும் போதும். இவற்றுக்குள் நமது குடும்ப நல நீதிமன்றச் சட்டங்கள் வருவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். குடும்பத்தை உடைக்கும்போது அதை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறுவதை எடுத்துக் கொள்வோம் - கணவரின் சொத்தின், வருமானத்தின் சரி பாதியையோ ஒரு கணிசமான பகுதியையோ மனைவிக்கு கொடுத்துவிட வேண்டும். இதில் எந்த தர்க்கமும் இல்லை. திருமணத்திற்கு முன்பு சுயமாக உழைத்து வாழ்ந்த பெண்ணால் ஏன் அதையே திருமணத்திற்குப் பின்பு செய்ய முடியாது என்பதே இயற்கைச் சட்டம், அதன் தர்க்கம். ஆகையால் மக்கள் இதைச் சுலபத்தில் ஏற்பதில்லை. அவர்களைத் தண்டனையையும் காவல்துறையையும் காட்டி மிரட்டியே நீதிமன்றம் தன் தீர்ப்புக்குப் பணிய வைக்கிறது. குழந்தை இருவர் சேர்ந்து பெற்றுக் கொள்வது, ஆகையால் அது இருவருக்குமானது என்பது இயற்கைச் சட்டம், தர்க்கம். ‘ஆனால்அம்மாவாலே அதைச் சரியாக வளர்க்க முடியும், ஆகையால் அப்பாவிடம் வளரக் கூடாது என்பது இயற்கைக்கு மாறானச் சட்டம். இதையும் நீதிமன்றம் உருட்டியும் மிரட்டியுமே நடைமுறைப்படுத்துகிறது. இயற்கைச் சட்டங்களை மக்கள் எதிர்ப்பதோ அஞ்சுவதோ இல்லை. பசித்தால் சாப்பிட வேண்டும் என்பதை யாரும் எதிர்ப்பதோ அஞ்சுவதோ இல்லை. சமூகத்தில் பெரும்பாலானவர்கள் பரஸ்பரம் இணங்கியும் பொதுவிதிகளை ஏற்றுக்கொண்டுமே போகிறார்கள். அதை அவர்கள் அஞ்சுவதோ எதிர்ப்பதோ இல்லை. இது மனிதர்களுக்கு என்றில்லை, விலங்குகளுக்கும் பொருந்தும். நீதிமன்றம் உள்ளே வந்து இதைச் செய்யலாம், இது கூடாது எனும்போது மக்கள் இயற்கையாக உடன்பட மறுக்கிறார்கள் - அதனாலே எந்த தீர்ப்பையும் பொதுச்சமூக வாக்கெடுப்புக்கு விடுவதோ விவாதத்துக்கு உட்படுத்துவதோ இல்லை. அது மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் அப்பாலான ஆண்டவன் கட்டளை ஆகிறது. ஏனெனில் அது கடும் மறுப்புக்கும் எதிர்ப்புக்கும் உட்படத்தக்கதாக இயல்பிலேயே இருக்கிறது. சட்டம் அதனாலே தன் மீதான எதிர்ப்பை அது எழும் முன்பே தடுக்கிறது. மிகத்தூய்மையான முற்றதிகாரமாக அது இருக்கிறது. ஒரு அரசியல் கூட்டம் சேர்ந்து அப்பாவி மக்களைக் கொல்லுகிறது. அரசு அமைப்புகளாலும் நீதிமன்றத்தாலும் அக்கூட்டம் காப்பாற்றப்படுகிறது - ஆதாரம் போதவில்லை, சரியாக வழக்கு விசாரணை நடக்கவில்லை எனும் என்னென்னவோ காரணங்களால். இது மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சட்டம் எனும் தோரணை இதை ஏற்க வைக்கிறது. இது நீதி பிழைப்பதல்ல, இதுதான் சட்டத்தின் நீதி. கொலை என ஒன்றை சட்டம் வரையறுக்கும்போதே யாரைக் கொல்லலாம், கொல்லக் கூடாது, யாரெல்லாம் விசாரணைக்கு அப்பாலானவர்கள் என்பதையும் வரையறுக்கிறது, சில நேரடியானவை, சில மறைமுகமானவை, அத்துடன் அது கொலையை கொலையல்லாமல் மாற்றுகிறது. அது எதைக் குற்றமென்றாலும் அது குற்றமல்லாமலும் ஆகிறது. இது சமூகத்தின் பிரச்சினையோ நீதிபதியின், விசாரணை அமைப்பின் போதாமையோ குறையோ அல்ல. இதுவே அதன் இயல்பு


ஒரு படத்தில் ஜனகராஜ் வேற்றூரில் இருந்து வருவார். வந்த இடத்தில் மழை பெய்தால்என்ன கல்லா கொட்டுது?” என்பார். நாயைப் பார்த்தால்யானை வருதுஎன்பார். கேட்டால் என் ஊரில் இப்படித்தான் சொல்வோம் என்பார். அப்படிச் சொன்ன பின்னர் அவர் அடையாளப்படுத்தும் பொருட்களின், விசயங்களின் கதியை, விளைவை, அர்த்தத்தை அவரே தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவார். அவர் தனக்குச் சோறிடுவோரிடம்விஷத்தைக் கொட்டுங்கஎன்றால் அவர் கோவித்துக் கொள்ள முடியாது. அவர் மொழி, அவர் நியாயம். நீதியமைப்பும் அப்படித்தான் - அது ஒன்றை எடுத்து அதை எப்படிப் பார்க்க வேண்டும், எது சரி தவறு என வரையறுக்கிறது, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கி, அந்த மாயையை நம்பும்படி நம்மை வலியுறுத்துகிறது. அதன்பிறகு நாம் அதன் கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வருகிறோம். அது ஒரு கொலைகாரரை விடுவித்தால் அவர் கொலைகாரர் அல்லாமல் ஆகிறது, அவர் குற்றம் பண்ணியதைப் பார்த்தவர்கள் இருப்பார்கள், அவருக்கு அவர் கொலைகாரர், ஆனால் அவர்களுடைய மொழியில் இனிமேல் அவர் கொலைகாரர் எனக் கூற முடியாது, அந்த உரிமையை நீதிமன்றம் ஒரு கணத்தில் பறித்துவிடும். இது சமூகத்தில் அமைதியையும் நீதியையும் தோற்றுவிக்கிறது, அப்பாவிகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயத்துக்கான பாதையை உருவாக்கித் தருகிறது என சமூகநீதிக் காவலர்கள் சொல்லும்போது நாம் அதை மறுக்க முடியாது போகிறது. அவர்களும் கலாச்சாரரீதியாக அச்சத்தை உண்டாக்கி நம்மைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் என்பதால் தலையசைத்துக் கடந்து போகிறோம்


இயற்கையின் சட்டங்களுக்கு அப்பால் உலகைத் தோற்றுவிப்பதற்காக அரசும் அதிகார அமைப்புகளும் பிரயத்தனம் பண்ணுகின்றன. அவர்கள் சொல்வதை நாம் மறுப்பதற்கான வெளியை மறுப்பதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதை நாம் பிரிட்டீஷ்காரர்கள் காலத்துச் சட்டங்களைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் - வனங்களில் மக்கள் வாழ்வதைக் கட்டுப்படுத்துவது அன்றைய காலனிய ஆட்சியாளர்களின் வணிகத் தேவைக்கு அவசியப்பட்டது. அதற்காக ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவது அவசியப்பட்டது, ஆயுதங்களைத் தயாரிப்பது, தரிப்பது, சண்டைக் கலையைப் பயில்வது இதையெல்லாம் கட்டுப்படுத்த தேவையேற்பட்டது. ஒவ்வொன்றுக்கும் சட்டம் கொண்டு வந்தார்கள். வரியை வசூலிக்கத் தேவையேற்பட்டது. வரி கொடுக்காமல் இருப்பது குற்றமாக்கப்பட்டது. இவை எவையுமே இயற்கைச் சட்டங்கள் அல்ல. இவற்றால்தாம் மக்கள் இன்று அளவுக்கு அதிகமான துன்பங்களை சுதந்திரத்துக்குப் பின்பு அனுபவித்து வருகிறார்கள். ஏனென்றால் இவை மக்களுக்காக உருவாக்கப்படவில்லை - மக்களையும் இந்நாட்டின் வளங்களையும் தமக்கு ஏற்றபடி உருவகித்துக் கட்டுப்படுத்தவே இவை செயற்கையாக உருவாக்கப்பட்டன. இயற்கையான மாற்றங்கள், வளர்ச்சி என இவை நியாயப்படுத்தப்பட்டன. இப்போது தாராவியில் உள்ள மக்களை அங்கிருந்து அகற்றி அந்த இடத்தைக் கையகப்படுத்தி பெரும் விலைக்கு விற்க அதானிக்கும் அதே சட்டமும் அதன் அச்சமுமே பயன்படப் போகிறது. வசிப்பிடம் வசிப்பவர்களுக்கானது - இது இயற்கை விதி. வசிப்பிடம் தனிமனித உரிமையெனிலும் அது அரசுக்கும் உரிமையானது, அரசால் யாருடைய இடத்தையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பது சட்டம், செயற்கையான விதி. அரசும் சட்டமும் ஆதரவாக இணையும்போது அதானி இயற்கைக்கு அப்பாலான சக்தியாக உருவெடுக்கிறார். எளிமையாக யோசித்துப் பார்த்தால் அங்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் சட்டரீதியாக இதைச் சுலபத்தில் எதிர்க்க முடியாதபடி அரசு இதை ஆவணப்படுத்தினால் மக்களால் சமாளிக்க முடியாது. அரசின் இந்த அதிகாரமும் பலமும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத, இயற்கைக்கு மாறான சட்டத்தை இயற்றும், விதிமுறைகளை உருவாக்கும் ஆற்றலில் இருந்து வருகிறது.


இயற்கையில் இருந்து எளிமையும், எளிமையில் இருந்து வாழ்க்கையும் தோன்றுகிறது. செயற்கையில் இருந்து சிக்கலும், சிக்கலில் இருந்து சட்டமும், சட்டத்தில் இருந்து அதிகாரமும் அதில் இருந்து மக்கள் சும்மா வாழமுடியாதபடியான தடைகளும் துயரமும் தோன்றுகின்றன. சட்டத்துக்கு உள்ளிருந்து அதிகாரத்தை எதிர்த்து வாழ்வது போர் செய்து போரை முடிப்பதை, அதற்காக முடிவற்ற போரில் ஈடுபவதைப் போலாகிறது. நீண்ட சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பாருங்கள்: அவர்கள் ஒன்று பொய் வழக்குகளில் சிக்கி கொட்டடிகளில் இறக்கிறார்கள் அல்லது நீண்ட காலம் வாழ்க்கையே வதையாகிட போராடி காலத்தை வீணடிக்கிறார்கள், செல்வத்தை குடும்பத்தை இழக்கிறார்கள். அதனாலே பொதுமக்கள் நீதிமன்றத்துக்குப் போகவே அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை முதலீடாக வைத்தே நீதிமன்றம் நடக்கிறது

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்