முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாய் மட்டும் இல்லாவிட்டால்...


 

நேற்று பிரதமர் உரையாற்றும்போது ஜி.எஸ்.டியில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாகவும், அதனால் விலைவாசி குறைந்து மக்களால் அதிகமாகச் செலவழிக்க முடிந்து, பொருளாதாரம் வளரப் போகிறது (அதாவது, பொருளாதார வீக்கம் குறையப்போகிறது) என்றார். அதைக் கேட்கையில் அடடா என்றிருந்தாலும் ஐயய்யோ என்றும் இருந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் செய்வது இன்னொன்றாக இருக்குமென்பதே நம் அனுபவம். இன்று செய்தியில் ஜி.எஸ்.டி மாறுதலால் எந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறையும் என்று போட்டிருந்தார்கள். டி.வி. ஏஸி போன்ற மின்னணு சாதனங்கள், சைக்கிள், பேக்கரி ஐட்டங்கள், சேவ் போன்ற நொறுக்குத்தீனிகள், கண்ணாடி, மருந்துகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா போன்ற கல்விக்கான பயன்பாட்டுப் பொருட்கள். இதை அவர் இந்திய மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று அறிவித்திருக்கிறார். ஆனால் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு அவர் வரியைக் குறைக்கவில்லை. அதாவது அன்றாட உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. முக்கியமாக பெட்ரோல், டீஸல் மீதான ஜி.எஸ்.டியை வெகுவாக குறைத்து அதன்வழியாக அதன் விலையைக் குறைக்கவில்லை. சும்மா ஏ.ஸி, டிவி விலையைக் குறைப்பதால் மக்களின் அன்றாடத் தேவைகள் தீரவோ பிரச்சினைகள் தணியவோ போவதில்லை.

ஒருவர் இன்று மாதம் 10,000 சம்பாதித்தால் வாழவே முடியாது. நகரங்களில் 20,000 கூட ஒரு குடும்பத்துக்குப் போதவில்லை. காய்கறி, மளிகை சாமான்கள் விலையெல்லாம் எக்குத்தப்பாய் எகிறிக் கிடக்கின்றன. வீட்டு வாடகை லாக் டவுனுக்குப் பிறகு பெருமளவு அதிகரித்துவிட்டது. சம்பளம் பெரும்பாலும் உணவு, உறைவிடத்துக்கே போய்விடுவதாலே மக்களால் நுகர்வுப் பொருட்களை வாங்க முடியவில்லை. பெட்ரோல், டீஸல் விலையில் 30-40 ரூபாய் குறைந்தாலே மிகப்பெரிய மாற்றம் வரும். உணவுப் பொருட்களின் விலை குறையும். பொருளாதார வீக்கம் குறையும். இன்று 20% மேல் பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கிறது. அதனால் நியாயமாகவே விலையை 80 ரூபாயாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. கூடுதலாக ஜி.எஸ்.டியையும் குறைத்தால் 50 ரூபாய்க்கே கூட கொடுக்கலாம். அரசு தன் வருமானத்தையும் அம்பானிகளின் வருமானத்தையுமே பிரதானமாகக் கருதுவதாலே நம் பொருளாதாரம் வீங்கிவீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கிறது.
அடுத்து, நோட்டுப் புத்தகம், பேனாவின் ஜி.எஸ்.டியைக் குறைக்காமல் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மத்திய வர்க்க குடும்பங்களின் வருமானத்தில் பெரும்பகுதி கல்விக் கட்டணம் செலுத்துவதிலேயே போகிறது. அடுத்து, நிலத்தில் முதலீடு செய்வதிலும், வாடகையிலும் கட்டுப்பாடு அவசியம் - மக்கள் பணத்தை பங்குகளிலும் தங்கத்திலும் முதலீடு பண்ணுவதைத் தடுக்கும் நோக்கில் வரியை அதிகரித்த அரசு ரியல் ஏஸ்டேட்டைத்தான் நிஜத்தில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நிலத்தின் விலையை அரசே நிர்ணயிக்கும் என அறிவித்து, வங்கிகளும் தாம் அளித்த பணத்தின் வட்டியை சரிபாதியாகக் குறைக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். நிலத்தை, வீட்டை வாங்கி விற்பதில் ஒரு லாக் இன் பீரியட் கொண்டு வரலாம். பணம் நிலத்தில் முடங்காமல் இருந்தாலே வணிகம் வளரும். அதுவே வீடு வாங்குவதற்கான கடனில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றும். இதைச் செய்ய விருப்பம் இல்லாவிடில் அரசே மக்களுக்கான மலிவு விலை வீடுகளைப் பரவலாக எல்லா நகரங்களிலும் கட்டி விற்கலாம் (பழைய சோவிய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல).
பிரதமருக்கு இதைக் குறித்தெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜி.எஸ்.டியைக் குறைக்கும்படி பெருவணிகர்களின் லாபி போடும் அழுத்தத்திற்கு ஏற்ப சில பொருட்களுக்கு மட்டும் குறைத்திருக்கிறார்கள். (மருந்துகளின் ஜி.எஸ்.டியைக் குறைத்தது மட்டுமே பாராட்டத்தக்கது.) ஆகையால் இதைப் பெருவணிகர்களுக்கான தீபாவளிப் பரிசென்றே கூறலாம். இதனால் மக்களின் பாக்கெட்டில் பணமும் மிஞ்சாது, நுகர்வும் அதிகரிக்காது. அமித் ஷா கூட எடையைக் குறைத்துவிட்டார். ஆனால் பொருளாதாரத்தின் தொப்பை வீக்கம் குறையாது.
இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பார்கள். அது நம் பிரதமருக்குப் பொருந்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...