Skip to main content

மொழியாக்கத்தை மதிப்பிடுவது - ஆர். அபிலாஷ்

 பொதுவாக தமிழாக்கம் குறித்து தமிழில் கடந்த பத்தாண்டுகளாகவே ஒரு கருத்து நிலவுகிறது; அதைக் குறித்தே இங்கு சில கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன் - புத்தகத்தைத் தமிழில் படிக்கையில் அது கரடுமுரடாக இருந்தால் உடனே மோசமான மொழியாக்கம் என்று கடிகிறோம். மொழிபெயர்ப்பாளரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறோம். நான் எம்.டி.எம்மின் மொழிபெயர்ப்பை (“ரோஜாவின் பெயர்” நாவல்) இன்னும் படிக்கவில்லை. ஆகையால் இக்குறிப்பு அதைக் குறித்ததல்ல. ஆனால் விமலாதித்த மாமல்லன் பகிர்ந்திருந்த ஒப்பீட்டைப் பார்த்தேன். எம்.டி.எம் செய்யறிவைப் பயன்படுத்தி மொழியாக்கினாரா இல்லையா என்பது வேறொரு பிரச்சினை (அப்படிச் செய்தாலும் தப்பில்லை, கிரெடிட் கொடுத்தால் போதும் என்பது என் பார்வை; மேலும் அதை நிரூபிப்பதும் கடினம் என்பதால் இப்போது விவாதிக்க அவசியமில்லை.) அய்யனார் விஸ்வனாத் எழுதிய குறிப்பையும் படித்தேன்; குறிப்பாக அவர் ஜி. குப்புசாமியைக் குறித்து முன்பு எழுதியது. இந்த இரு பார்வைகளுடனும் எனக்கு உடன்பாடில்லை.


முதலில் வி.மா ஒப்பிட எடுத்துள்ள பத்திகளில் ஒரு வரியை மட்டும் எடுத்துக் காட்டி என் கருத்தைச் சொல்கிறேன்:
ஆங்கில வடிவம்: “An acute reply, Adso. In fact, I have worked out this proposition: equal thickness corresponds necessarily to equal power of vision.”
தமிழ் வடிவம்: “ஒரு கூரிய பதில், அட்ஸோ. உண்மையில், நான் இந்தக் கூற்றை உருவாக்கியிருக்கிறேன்: சமமான தடிமன் அவசியமாக சமமான பார்வை சக்திக்கு ஒத்திருக்கிறது.”

“ரோஜாவின் பெயர்” நாவலில் அட்ஸோவின் பார்வையில் காட்சிகள் விரிகின்றன. அட்ஸோ பேஸ்கர்வில்லைச் சேர்ந்த (துறவியான) சகோதரர் வில்லியமின் உதவியாளர். பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலிய மடாயலம் ஒன்றில் நிகழும் மரணங்களை வில்லியம் துப்பறிய அதைக் குறித்து அவர் அட்ஸோவிடம் நடத்தும் தத்துவ உரையாடலின் பகுதி இது (என் நினைவில் இருந்து கூறுகிறேன்.). வி-மாவே மொத்த ஆங்கிலப் பத்தியையும் தந்துள்ளார். அதைப் படிப்பவர்களுக்குப் புரியும் - ஆங்கிலத்திலேயே அது கடினமானதுதான். ஏனென்றால் விவாதம் கல்விப்புல தத்துவ மொழியில் உள்ளது. உலகைக் கடவுள் படைத்தார் எனில், அதற்குத் தூய்மையான, மாறாத தர்க்கம் உண்டெனில் அது என்னவெனத் தெரிந்து கொள்ளும் ஒருவரால் அதை வைத்து உலகின் போக்குகளை, உண்மையின் விதிகளை அறிந்துகொள்ளலாம், ஆனால் கடவுள் தன் எண்ணப்படி, அகவிழைவுபடி நம்மைப் படைத்திருக்கிறார் எனில் முடியாது. அதாவது முன்னறிக் கருத்துக்கள் உண்டா இல்லையா என்பதே விவாதத்தின் மையம். முன்னறிக் கருத்து இல்லையெனில் (இருட்டு ஆபத்தானது, அச்சமூட்டுவது என்பதை ஒருவர் யாரும் சொல்லாமலே எப்படி அறிகிறார்? குழந்தை எப்படி தாயின் முலைகளை அடையாளம் கண்டு பாலருந்துகிறது?) உயிர்களால் இவ்வுலகில் வாழவே இயலாது தானே? முன்னறி ஞானம் அறிவுக்கு முன்பே தோன்றியதா, அதற்கு ஒரு பொதுப்படையான தன்மை உண்டா இல்லையா? அது கடவுளால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது அதை நம்மால் கணிக்கவோ தெரிந்துகொள்ளவோ முடியாதா (இமானுவல் காண்ட் சொன்னதைப் போல)? இந்த விவாதங்களின் பின்னணியும் தத்துவப் பார்வையும் இன்றி நீங்கள் வில்லியம் வீவரின் ஆங்கில மொழியாக்கத்துக்குள்ளே பயணிக்க இயலாது. ஆங்கிலத்திலேயே இவ்வளவு அடர்த்தியுள்ளபோது எப்படிச் சுலபமாகத் தமிழாக்க இயலும்?

இரண்டு சாத்தியங்கள்: 1) வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்குவது. 2) சுதந்திரமாகவோ படைப்பூக்கமாகவோ மொழியாக்குவது (free or creative translation) (இன்னும் பல வகைமைகள் உண்டெனினும் ஒரு வசதிக்காக இருகூறாகப் பிரித்திருக்கிறேன்.)
தமிழில் ஐரோப்பிய, ஆங்கில மூலங்களில் இருந்து மொழியாக்கிய பு.பி, க.நா.சு போன்றவர்களும் வங்க, மலையாளத்தில் இருந்து மொழியாக்கியவர்களும் இரண்டாவது வகையைப் பின்பற்றினார்கள். அதாவது அவர்கள் வாசிப்புச் சரளத்தையும், தம் இலக்கியக் கொள்கைகளையும் முன்னிலைப்படுத்தினார்கள். ஆனால் தொழில்பூர்வ மொழிபெயர்ப்பாளர்கள் இதை ஏற்பதில்லை. அவர்கள் முதல் வகையையே பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். நீங்கள் ஏற்கனவே சிரமான நடையில் எழுதப்பட்ட படைப்பை இவ்வாறு மொழியாக்கினால் அதே நடையைத்தான் தமிழிலும் தர முடியும். அதாவது பாகற்காயை சமைத்தால் கசக்கத்தான் செய்யும். மாம்பழத்தை தயிருடன் சேர்த்து சமைத்தால் இனிக்கும். மொழியின், வாக்கிய அமைப்பின் அடிப்படையான குணத்தை, தொனியை நேர்மையான மொழியாக்கத்தில் மாற்ற முடியாது, கூடாது. வாசிப்பின் சுவை, வேகம், எளிமையை விட நேர்மையும், கூர்மையுமே மொழியாக்கத்தில் முக்கியம்.

முதலில், என்னுடைய அழகியலுக்கு வருகிறேன்: நான் தனிப்பட்ட முறையில் சற்றே சரளமான எளிமையான மொழியாக்கத்தை விரும்புகிறேன். ஏனென்றால் நான் அடிப்படையில் புனைவெழுத்தாளன். ஆகையால் நான் கதையாக்கத்தைப் பிரதானப்படுத்துகிறேன். எந்த புனைவெழுத்தாளரும் இதையே செய்வர். உ.தா., An acute reply, Adso. In fact, I have worked out this proposition: equal thickness corresponds necessarily to equal power of vision. என்பதை நான் கீழ்வருமாறு மொழிபெயர்ப்பேன்:
“துல்லியமான பதில் உன்னுடையது அட்ஸோ. சொல்லப்போனால், நான் இப்படியான முன்மொழிவுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்: ஒரு கண்ணாடியின் தடிமனும் உன் பார்வையின் துல்லியமும் சமமாக இருக்கும்.”
நான் இங்கே என்னவெல்லாம் மாற்றங்களைச் செய்திருக்கிறேன்? நான் வாக்கிய அமைப்பை, வினைச்சொற்களை மாற்றியிருக்கிறேன். தர்க்க, கல்விப்புல மொழியின் தொனியை நான் உரையாடல் மொழியின் தொனிக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இது ஓரளவுக்கு வாசிப்புத்தன்மையுடன் இருக்கும், ஆனால் இது துல்லியமான மொழியாக்கமாக இருக்காது. இதை ஒரு பதிப்பாளர் ஏற்பாரா, இது தொழில்ரீதியாக ஏற்கத்தக்கதா? பல நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் பதில் சொல்ல முடியும்.

நான் பல்வேறு தவறுகளை என் மொழியாக்கத்தில் முன்பு செய்திருக்கிறேன். சற்றே சுதந்திரமான மொழியாக்கத்தை நான் விரும்புகிறேன் - நான் மார்க்வெஸை மொழியாக்குகையில் சிக்கலான சொற்றொடரை எளிய தொடர்களாக உடைத்திருக்கிறேன். இன்னொருவர் அதைச் செய்ய மாட்டார். இதுவே அழகியலின் அரசியல். நான் மூலமொழியில் படிக்க வழியில்லாதபோது அல்லது புதியதாக ஒரு படைப்பாளியைப் படிக்கும்போது என் பாணியிலான மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்து வாங்க மாட்டேன். சற்றே கரடுமுரடாக இருந்தாலும் நான் நேர்மையான, கூர்மையான மொழிபெயர்ப்பையே வாங்குவேன். மூலமொழியில் எப்படி இருந்ததோ அதை நான் வாக்கிய அமைப்பு, தொனி, சொற்தேர்வில் உணரவும் அறியவும் விரும்புவேன். (என்னைப் போன்றவர்களின்) சுதந்திர மொழியாக்கம் அதைத் தராது. அதேநேரத்தில், ஏற்கனவே ஆங்கிலத்தில் நன்குப் படித்துப் பழகிய எழுத்தாளரை தமிழில் மொழியாக்கத்தில் படிக்கையில் நான் சுதந்திரமான மொழியாக்கத்தையே விரும்புவேன். ஆகையால், மொழியாக்கம் சரியானதா இல்லையா என்பதை அவரவருக்கான நிபந்தனைகளே தீர்மானிக்கின்றன, வாசிப்பின் ரசனை மட்டுமல்ல. இதற்கு நிரந்தரமான உருக்கில் வார்க்கப்பட்ட அலகுகள் இல்லை.
அதாவது என்னைப் போன்றமொழிபெயர்ப்பாளர்கள் உதிரிகள். (சாருவும் கூடத்தான்.) நாங்கள் எங்கள் ஆசைக்கு மொழிபெயர்ப்பு நூலாக வெளியிடுவோம். பெரும்போக்கு எங்களில் இருந்து வேறானது.

இதைச் சொல்ல எனக்கு இரு தகுதிகள் உள்ளன: 1) நான் தொடர்ச்சியாக மொழியாக்கியதில்லை என்றாலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் கவிதைகளையும் சிறுகதைகளையும் நாவல்களின் அத்தியாயங்களையும் ஓரளவுக்கு மொழியாகியிருக்கிறேன் (மொழியாக்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன, சிறுகதைகள் இன்னும் நூலாகவில்லை.) என் அனுபவத்தில் இருந்து நான் பெற்ற புரிதல் என் மொழியாக்க அழகியலை உருவாக்கியது. 2) மொழியாக்கம் குறித்து ஆய்வு செய்து Bridging Theory and Practice in Translation: Perspectives, Challenges, and Innovations எனும் நூலுக்காக ஒரு அத்தியாயத்தை அண்மையில் எழுதியளித்தேன். அதற்காக சில தமிழ் நாவல்களையும் அவற்றின் ஆங்கில மொழியாக்கங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தேன். ஆய்வு மற்றும் கோட்பாட்டுக் கட்டுரைகளைப் படித்தேன். மனித மொழியாக்கத்தை செய்யறிவு மொழியாக்கத்துடன் ஒப்பிட்டேன். அப்போது நான் வந்தடைந்த ‘முன்மொழிவு’ என்னவென்றால் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலச் சந்தைக்கு ஏற்ப தமிழ்ப்புனைவின் சொற்றொடர் அழகியலைச் சிதைக்கிறார்கள், தொனியை மாற்றுகிறார்கள். உ.தா., அனிருத்தன் வாசுதேவனோ, லக்‌ஷ்மி ஹோம்ஸ்டுரோமோ (பெருமாள் முருகனின், அசோகமித்திரனின்) அகவயமான கவித்துவமான தமிழ் மொழிநடையை புறவயமான மினிமலிஸ்டிக்கான ஆங்கில நடைக்கும், தொனிக்கும் மற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய வாசிப்பின் அழகியலும் அரசியலும் சந்தையின் எதிர்பார்ப்பும் அப்படி உள்ளன. இதே தமிழ்ப் பிரதிகளை செய்யறிவைக் கொண்டு மொழியாக்கும்போதும் இதே சிக்கல்கள் வருவதுடன் (அவை மனித மொழியாக்கத்தையே மாடலாகக் கொள்வதால்) கூடுதலான பிழைகளும் தோன்றுகின்றன. அதாவது செய்யறிவு (எந்திர மொழியாக்கம்) மனித மொழியாக்கத்துக்கும் பதிலி அல்ல. இரண்டிலும் பிரச்சினைகள் உள்ளன. மனித மொழியாக்கமே ஒப்பிடுகையில் மேலானது. அதற்கு ஒரு நல்ல உதாரணத்தைத் தருகிறேன்.

ஓரன் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை”. ஜி. குப்புசாமி எவ்வளவு அற்புதமான மொழிபெயர்ப்பாளர் எனப் புரிந்துகொள்ள அந்நாவல் எனக்கு உதவியது. நான் அதைப் படிக்கையில் அதன் மொழிநடை வழக்கமான பாமுக்கின் நடையில் இருந்து வேறுபட்டுள்ளதை உணர்ந்தேன். நான் ஆங்கில நூலை எடுத்து ஆரம்பத்தில் இருந்து படித்தேன். இரண்டு மொழியாக்கங்களையும் ஒப்பிட்டேன். அப்போது ஒன்று விளங்கியது - பாமுக் இந்நாவலுக்கென ஒரு பிரத்யேக தொனியை உருவாக்குகிறார். அது ஏற்படுத்தும் லயம் தனித்துவமானது. குப்புசாமி அதை அப்படியே உள்வாங்கி தமிழில் கொண்டு வருகிறார். இதை ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்திரத்தனமாகச் செய்ய முடியாது. இதை நிச்சயமாகச் செய்யறிவு செய்ய முடியாது. உள்ளுணர்வு இங்கு முக்கியமான செயலாற்றுகிறது. இதைக் கவனித்துப் படித்து உணர்ந்து இதயத்தில் இருந்து மொழியாக்கத்தின் வழியாக கடத்தினாலே சாத்தியம். மொழியாக்கத்திலேயே அதை நான் உணர்ந்து ஒப்பிட்டு சரிபார்த்திருக்கிறேன் என்றால் அவர் எவ்வளவு நன்றாக வேலை பார்த்திருக்கிறார் பாருங்கள். ஜி. குப்புசாமியைப் போன்றவர்களை நாம் கொண்டாட வேண்டும். அவர்கள் கலைஞர்கள். அவர்களைக் காலில் போட்டு மிதிக்கக் கூடாது.

மீண்டும் சொல்கிறேன்: நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் படைப்பாளிகளுக்கு வெகு அருகில் வருபவர்கள். படைப்பு மனநிலையை தம் கற்பனையால் உணர்ந்து அவர்கள் மொழியில் செயல்பட வேண்டும். அது அசாதாரணமான பணி. சிலநேரங்களில் நமது மொழியாக்க அழகியலும் அரசியலும் நம்மை ஒருவிதமாக மொழிபெயர்க்க வைக்கும். அது நம் நிலைப்பாடு. இன்னொருவர் வேறுவிதமாகச் செய்யட்டும். பல மொழியாக்கங்கள் ஒரு படைப்புக்கு வரும்போதே அவ்வித்தியாசம் நமக்கு விளங்கும். சாட்ஜிபிடியும் குரோக்கும் வந்துவிட்டதால் நாம் மொழிபெயர்ப்பாளர்களை மலினப்படுத்தக் கூடாது. இன்று செய்யறிவைக் கொண்டு நடிகர்கள் இல்லாமலே காட்சிகளை உருவாக்குகிறார்கள். அதனால் நடிப்பு தேவையில்லாமல் ஆகுமா? இல்லை. (செய்யறிவே திருடித்தான் மொழியாக்கம் செய்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.)

பாப்லோ நெருடாவை எத்தனை பேர் தமிழாக்கியிருக்கிறார்கள்! திருக்குறளுக்கான மொழியாக்கத்திலும் உரையிலும் எத்தனை மாறுபாடுகள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளுக்கு ஐந்துக்கும் மேட்பட்ட ஆங்கில மொழியாக்கங்கள் வந்துள்ளன. நான் அவரது கவிதைகளை ஆங்கிலமாக்கி நூல் வடிவில் கொண்டு வந்தேன் (“KIsses at Daybreak”). அதை ஒரு ஆங்கிலக் கவிஞர் படித்துவிட்டு மொழிபெயர்ப்பு போலவே இல்லை, உணர்வுபூர்வமாக அசலாக உள்ளது என்றார். ஏனென்றால் நான் சொல்லுக்குச் சொல் மொழியாக்கவில்லை. நான் தொனியையும் உணர்வையும் பிரதானமாக்கி அவரது மொழியின் இசைத்தன்மையை என் மொழியாக்கத்தில் கொண்டு வர முயன்றேன். மொழியாக்கும்போது அதன் தாளம் எனக்குள் முழங்குவதை உணர்ந்தேன். அந்த உணர்வலைகள் என் நெஞ்சில் மோதுவதை அனுபவித்தேன். ஏனெனில் நான் அக்கவிதைகளை எனக்குள் ஆழமாக அனுபவிப்பதற்கான மொழியாக்கினேன். ஆனால் வேறு மொழிபெயர்ப்புகள் அப்படி இருக்காது. அவை நேரடியாகவோ மொழிபெயர்ப்பாளரின் புரிதலையும் அழகியலையும் பொறுத்தே உருவாகியிருக்கும். அவையும் முக்கியமே. ஒவ்வொரு மொழியாக்கமும் ஒரு படைப்பே. அவை பெரும் செல்வம்.

அதனால் நண்பர்களே, “எண்டெர் தெ டிராகனில்” புரூஸ் லீ கோதாவில் இறங்கிச் செய்வதைப் போல மொழிபெயர்ப்பாளர்களை ஹுவாங் ஹொங் எனக் குத்தக் கூடாது. தியானம் செய்யும் துறவிகள் தம் மனதுக்குள் உருத்திரளும் ஒற்றைச் சொல்லை எவ்வளவு கவனத்துடன், மரியாதையுடன் கையிலெடுத்து தொட்டுணர்வார்களோ அவ்வாறு மொழிபெயர்ப்பாளர்களை மதிப்பிட வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...