6) நான் அடுத்த நாளே அவெஞ்சரை எடுத்துக்கொண்டு வேலைக்குப் போனேன். ஸ்டால் ஆகவில்லை என்றாலும் எந்த கியரில் எப்போது ஓட்டுவது என்பதில் குழப்பம் இருந்தது. எதற்கு ரிஸ்க் என்று இரண்டாவது கியருடனே நின்றுகொண்டேன். ஸ்கூட்டரைப் போல ஆக்ஸிலேட்டரைத் திருகவேண்டாம், கியர் மாற்றி தொட்டதும் வண்டி ஏதோ அலையில் விட்ட படகைப் போலப் பாய்கிறது என்பது பிடித்திருந்தது. பள்ளங்களோ வேகத்தடைகளோ எனக்குப் பொருட்டில்லை என்பதைப் போல அது மிதந்து போவதை ரசித்தேன். பிரேக்கை எந்த வேகத்தில் பிடித்தாலும் கிராமத்து எளிய மனைவியைப் போல நின்றது.
7) வண்டியின் அகலமும் நீளமும் அதிகம் என்பதால் நம் பிரதமர் குறள் ஒப்பிப்பதைப் போல ஆகிவிடக் கூடாதே எனப் பிரார்த்தித்தபடி முதல் சில நாட்கள் ஓட்டினேன். ஆனால் என் மனம் எவ்வளவு சீக்கிரம் அந்த வண்டியின் ஆகிருதிக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விட்டது. சாலையில் என் எதிரிலும் பக்கவாட்டிலும் உள்ள வாகனங்களை சுலபத்தில் கணிக்க முடிந்தது. கவனம் இழக்கும்போது மட்டுமே ஓரிரு முறைகள் உரிமையாளரற்று தேமேவென நின்றுகொண்டிருக்கும் சில பைக்குகளை “அவ்வை சண்முகியில்” சண்முகி முதலியாரை இடுப்பால் இடிப்பதைப் போல ‘உரசினேன்.’ நல்லவேளை எந்த விபத்தோ புகாரோ இல்லை.
8) பயிற்சியாளர் சொன்ன தினத்துக்கு வரவில்லை. தனக்கு வேலையிருப்பதால் இன்னொரு நாளுக்கு ஒத்திப் போட்டார். நான் “நினைச்சா ராக்கெட்டையே ஓட்டலாம், இதென்ன பிரமாதம்” என அவர் சொல்லித் தந்த வித்தைகளை மனத்தில் வைத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் ஓட்டினேன். உண்மையிலே தெரியாத மொழியில் தன்னம்பிக்கையுடன் கதைப்பதைப் போல சுலபமாகத் தான் இருந்தது. புராணக் கதைகளில் ஆற்றில் இறங்கியதும் நீர் பிளந்து வழிவிடுமே அப்படி என் வண்டி ஜம்மென்று சென்றது. ஐந்தாவது நாளே ஒசூர் போனேன். அது மட்டும் ஒரு வக்கீல்களிடம் கட்டண பேரம் பேசுவதைப் போல அதிரிபுதிரியாக இருந்தது.
9) ஒரு நீண்ட போக்குவரத்து தடை. வாகனங்கள் ஊர்ந்து செல்ல நான் கியரைப் பிடித்து பின்னாலே ஊர்ந்தேன். 15-20 நிமிடங்கள் இப்படியே ஊர்ந்தால் பைக் எந்திரம் சூடானது. கை வலித்தது. சில நேரங்களில் வாகனங்கள் நின்று நின்று நகர்ந்தன என்பதால் கிளட்சைப் பிடித்துவிடுவது, அரை கிளட்சியில் ஓட்டுவது சிரமாக இருந்தது. மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொள்ள உறுமியும் இருமியும் வெளியேற்றுவதைப் போல வண்டி திணறியது. முக்கால் மணிநேரத்தில் போக வேண்டிய இடத்துக்கு நான் போய்ச் சேர ரெண்டரை மணிநேரம் ஆனது. வார இறுதி நாட்களில் மாலையில் இப்படியான பயணங்கள் வதையாகிவிடும் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் இதற்கு அடுத்த நாளே பயன் கிடைத்தது.
10) அடுத்த நாள் நான் பெங்களூர் சாலையில் ஓட்டும்போது இதேபோல தவ்வித்தவ்விப் போகும் வாத்து பொம்மையைப் போல நகரும் போக்குவரத்தை எதிர்கொண்டேன். அப்போது எனக்குத் தன்னியல்பாகவே கிளட்சைப் பிடித்துப்பிடித்து விட வருவதும், கிளட்சை விடுவதற்கு முன்பான ‘உரசல் புள்ளியைத்’ (friction point) என் உடல் தெரிந்துகொண்டதையும் உணர்ந்தேன். நான் அவெஞ்சரை ஓட்ட ஆரம்பித்து ஆறாவது நாள் அது.
11) எட்டாவது நாள் அவெஞ்சரில் மைசூருக்குப் போனேன். போய் வர 330 கிலோமீட்டர் தூரம். முதன்முறை ஸ்கூட்டரிலும் இப்போது அவெஞ்சரிலும். முதன்முறை தேசிய நெடுஞ்சாலை 275இல் போனேன். அப்போது அதில் இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை எனத் தெரியாது. ரொம்ப நேரமாக நமக்குப் பக்கமாக ஏன் பைக்கோ ஸ்கூட்டரோ வரவில்லை என்று சந்தேகம் ஏற்பட்டபோது நான் பாதி வழியைக் கடந்திருந்தேன். சுங்கச் சாவடியில் எச்சரித்தார்கள். அதனால் திரும்ப வரும்போது பக்கச் சாலையை எடுத்துக் கொண்டேன். சுங்கச் சாலையில் போவது சுலபம் என்றாலும் வேகத்தை உணர முடியவில்லை. 90 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும்கூட ஏதோ வழுக்கிச் செல்வதைப் போலிருந்தது. ஆனால் திரும்ப வரும்போது பக்கச் சாலையில் பத்தடிக்கு ஒரு வேகத்தடையை வைத்திருந்தார்கள். டிராக்டர், பை, மாடுகள் எனக் குறுக்கே வந்தபடியே இருந்தன. மேம்பாலத்தின் கீழே திறப்புள்ள பகுதியில் எப்போது யார் புகுந்து எம்.ஜி.ஆர் தன் நாயகியை இடுப்பை வளைப்பதைப் போல வளைந்து வருவார்கள் எனத் தெரியாது. பிரேக்கைப் பிடித்து வேகத்தைக் குறைத்து வேகத்தடையில் ஏறி இறங்கி மீண்டும் வேகமெடுத்து மீண்டும் இடுப்பை வளைக்க வரும் வாகனக் கரங்களைச் சமாளித்து நழுவி முன்னே சென்று வேகத்தடை எனும் வழிமறிச்சான் சாமிகளை எதிர்கொண்டு அலுத்துவிட்டது. திரும்ப பெங்களூரில் நுழையும்போதும் போக்குவரத்து ஜெயலலிதா காலில் அடிக்கடி தலைவர்கள் விழுந்துகொண்டிருக்கும் பழைய அதிமுக பொதுக்கூட்ட மேடையில் புகுந்துவிட்டாற் போல இருந்தது. பெங்களூர் நகரத்தின் வினோதங்களில் ஒன்று நகராட்சி மிகவும் குறைவாகவே மின்சாரத்தைப் பயன்படுத்த நினைக்கிறது, இரவானால் பெரும்பாலான சாலைகளில் தெருவிளக்கை அணைத்துவிடுகிறது என்பது. இருட்டில் வாகனம் ஓட்டும்போது பவேரியா கொள்ளைக்காரர்களின் கிராமத்தில் கார்த்தியும் போலிசாரும் புகுந்து மாட்டிக்கொள்வார்களே அப்படியொரு திகில் உணர்வு வருகிறது. நல்ல குற்றிருட்டில் வாகனமோட்டினால் பதற்றம் குறைந்து அமைதியுண்டாகும் என பெங்களூர் நகராட்சி நம்புவதாக பெங்களூர்வாசி நண்பர் ஒருவர் சொன்னார். ஆனால் பயங்கர சத்தமும் வாகன ஓட்டிகளில் மரணக் கிணறு சாகசங்களையும் பார்த்துப் பழகிய எங்களுக்கு இருட்டையும் அமைதியையும் பார்த்தால் பயமாகிறது என்றேன். மேலும் பள்ளங்களையும் திடீரென வளைத்து சாலைக்கு வரும் வாகனங்களையும் ஹெட்லைட் ஒளியில் பார்க்க முடியவில்லை. அதனால் இம்முறை கனகபுரா-மலவள்ளி-பன்னூர்-மைசூர் சாலையில் பயணித்தேன்.
Comments