காக்காய் பிடிப்பது இன்றொரு தொழிலாகவே உருவாகிவிட்டது என்றொரு நண்பர் என்னிடம் கவலைப்பட்டார். நான் அவரிடன் சொன்னேன், "நீங்க சொன்னது உண்மைதான், தந்திரமாக அழகாகப் பேசுவது, கேட்பவரின் மனநிலையைத் தேவை உணர்ந்து நாக்கை வளைத்துப் பேசுவது இன்னொரு பரவலான பண்பாடாக படித்தவர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், ஊழியர்கள், மத்தியில் பரவி வருகிறது. சமூக ஊடகத்தில் இது இன்னும் மோசமாக இருப்பதால் ஒருவரைப் பாராட்டினாலோ திட்டினாலோ கூட அது யாரையும் தொடுவதில்லை. அது சொல்லாகவே தோன்றி சட்டென உதிர்ந்துவிடுகிறது. ஆனால் இதைச் சரிசெய்ய என்னிடம் ஒரு திட்டம் உள்ளது."
"என்ன?"
"காக்காய் வரி?"
"காக்காய் வரியா?"
"ஆமாம். காக்காய் பிடிப்பவர்களால் எது உண்ம, பொய் என உணர முடியாதபடி குழப்பங்கள் நிலவி, கலாச்சார வெறுமையும் ஊழலும் வலுத்துவிட்டது. இன்னொரு பக்கம், நாட்டில் காக்காய்கள் உணவின்றி தவிக்கின்றன. செத்துப் போன எலிகளைக் கொத்துவதைத் தாண்டி அவற்றுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. ஆகையால் ஜீவகாருணய் நோக்கத்துடனும் இத்திட்டத்தைக் கொண்டு வரலாம். இதை நான் நிம்மி மாமியிடம் கோரிக்கையாகவே வைக்கிறேன்."
"என்ன பண்ணனுங்கிறீங்க?"
"காக்காய் பிடிப்பவர்களை ஆதாரத்துடன் ரிப்போர்ட் செய்யும் உரிமையைப் பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். அப்படி பிடிபடுகிறவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும். இப்படித் திரளும் மில்லியன் டாலர் நிதியை காக்காய்களுக்கு நாடு முழுக்க உணவளிக்கச் செலவிட வேண்டும்."
"நல்ல திட்டம்தான் நண்பரே. ஆனால் ஏற்கனவே ஏழைகளாக உள்ள தமிழ் எழுத்தாளர்கள் பாவம் என்னச் செய்வார்கள்?"
"அவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும்."
பி.கு: என்னதான் கைகால் பிடித்தல்தான் மருவி காக்காய் ஆகிவிட்டது என்று சொல்லப்பட்டாலும் காக்காய் எனும் பறவைதான் இச்சொலவடையை அழகானதாக்குகிறது.
Comments