சர்வதேச கிரிக்கெட் அடிப்படையில் தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக நடத்தப்படுவது என்பதில் மறுப்பில்லை. ஆனாலும் கிரிக்கெட் ரசனையைக் கொண்டு நாம் கடந்த அரைநூற்றாண்டு காலமாகவே தேசவெறியைக் கடந்து செல்ல முயன்றுள்ளோம். சென்னையில் வசீம் அக்ரமின் பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் முறியடித்தபோது இந்திய ரசிகர்கள் கைத்தட்டி பாகிஸ்தானைப் பாராட்டியது ஒரு முக்கியமான நிகழ்வாக அதனாலே பார்க்கப்பட்டது. எதிரணியினர் பயணம் வரும்போது அவர்களை அதிகப்படியாக பார்வையாளர்கள் பரிகசிப்பதோ எதிர்ப்பதோ இனவாதமாகவும் விளையாட்டின் கௌரவத்துக்கு இழுக்காகப் பார்க்கப்படுவதும் அதனாலே. அதேநேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிராகப் போர் நடந்து முடிவுக்கு வந்தபின்னர் அவர்கள் மோதிக்கொள்ளும்போது அதை அப்போரின் தொடர்ச்சியாகப் பார்க்க வேண்டுமா? அது சரியா?
அது நிச்சயமாக அருவருப்பானது. போரே ஒரு அருவருப்பான நிகழ்வுதான். அது கொலைப்பாதகச் செயல்தான். நாம் போரில் எப்போதுமே நம் நாட்டவர் கொல்லப்படும்போது அதை இரங்கத்தக்கதாகவும் எதிர்நாட்டவர் கொல்லப்படும்போது அதைப் பாராட்டுக்குரியதாகவும் நினைக்கிறோம், ஆனால் எல்லையில் வாழும் நம் நாட்டவரின் மரணமே கூட நம் தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் குற்றம்தான் எனப் புரிந்துகொள்வதில்லை. இம்முறை ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை இந்தியா முறியடித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் - அதாவது பாஜகவின், அமித் ஷா மற்றும் அவரது மகனின் - அறிவுறுத்தலின்படி இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகாவுடன் கைக்குலுக்கவில்லை. இதை பாகிஸ்தான் பயிற்சியாளரும் கிரிக்கெட் வாரியமும் கண்டித்துள்ளது. இதை சாத்தியமாக்கிய ஆட்ட மேற்பார்வையாளரான (match referee) ஆன்டி பைக்கிராப்டை நீக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. சூரியகுமார் கைகுலுக்காதததுடன் கிரிக்கெட்டின் நல்லுணர்வை விட தேசநலன் முக்கியமானது என்று கூறியிருக்கிறார். ஆட்டத்தின் வெற்றியை பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் இந்திய ராணுவத்திற்கும் அர்பணித்திருக்கிறார். எனக்கு அப்போது ஒரு கேள்வி ஏற்பட்டது: நாட்டுக்கான ஒரு மறைமுகக் கலாச்சார 'தாக்குதலாக', குறியீட்டு யுத்தமாக, இப்போட்டி மாறுகிறது என அவர் தெரிவிக்கிறார். எனில் இப்போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்? இந்தியா இப்போரில் வென்றதாகப் பெருமைப்பட்டது. போட்டியில் தோற்றிருந்தால் நாம் பாகிஸ்தானிடம் குறியீட்டு யுத்தத்தில் அடிபணிந்ததாக ஆகிவிடுமா? நாம் தேசப்பற்று இல்லாமல் நடந்துகொண்டோம் என்றாகுமா? (மும்பை கிரிக்கெட் முன்னாள் அணித்தலைவரும், டிரிப்யூன் பத்தியாளருமான ஷிஷிர் ஹத்தங்காடியும் இதையேதான் கேட்கிறார்.) எனில் அதைச் சரிசெய்ய நாம் மீண்டும் அவர்களுடன் மோதியிருப்போமா? அடுத்து, பாகிஸ்தான் வென்று இதே போல குண்டு வீசப்பட்டு இந்தியாவால் கொல்லப்பட்ட எல்லையோர பாகிஸ்தானியருக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறோம் எனச் சொல்லியிருந்தால் இந்தியா அதைத் தாங்கியிருக்குமா? அது எந்தளவுக்கு அழுத்தத்தை, நெருக்கடியை வீரர்களுக்குக் கொண்டு வந்திருக்கும்? ஒருவேளை இதைக் கொண்டு நாம் மீண்டும் போர் தொடுத்திருப்போமா? இதிலெல்லாம் எதாவது லாஜிக் உள்ளதா?
அடுத்து இது விதிமுறை மீறல் ஆகாதா? என்னதான் இத்தொடரை ஐ.சி.சி நடத்தவில்லை என்றாலும் - ஐ.சி.சியின் நடுவர்களும் ஆட்ட மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்ட நிலையில் - இதை ஏற்க முடியுமா? இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வீரர் உஸ்மான் குவாஜா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு சொல்லை ஒரு போட்டியில் புலப்படுத்திட ஐ.சி.சி அவரைத் தண்டித்தது. 2014இல் இங்கிலாந்தின் மொயின் அலியும் இவ்வாறு தண்டிக்கப்பட்டார். ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு விதிமுறையா? இஸ்லாமியர் செய்தால் குற்றம், இந்து மதத்தவர் செய்தால் நியாயமா?
கிரிக்கெட்டை முன்பு அயலுறவு அமைச்சகத்தின், உள்துறை அமைச்சகத்தின் முடிவுப்படி நிறுத்திவைத்தார்கள். மோடியின் அரசியல் அதைவிட மோசமானது - அவர் இப்போட்டிகள் நடப்பதையும் அதைக்கொண்டு அரசியல் செய்தியைப் பிரகடனம் செய்வதையும் விரும்புகிறார். இவ்வாறு மதவெறுப்பை, கசப்பை கிரிக்கெட்டில் கலக்கிறார். அமெரிக்கா நல்லவேளை சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடர்களில் பரவலாக ஆடவில்லை. இல்லாவிட்டில் டிரம்பின் பைத்தியக்காரத்தனங்களையும் கிரிக்கெட்டில் பார்க்க வேண்டியிருக்கும்.
Comments