4) வண்டியை ரெட்ரோ பிட் (இரு சக்கரங்களையும் ஷாப் அப்சர்வர்களையும் இணைத்து கியரை வலப்பக்கம் லிவராக மாற்றி வைத்துக்கொடுப்பது) செய்தபிறகுதான் நான் முதன்முதலாக கியர் மாற்றக் கற்றுக்கொண்டேன். அதுவே அந்த பட்டறையின் முகப்பில்தான் வண்டியில் அமர்ந்து முதல் கியருக்கு மாற்றி ஓட்டிப் பார்த்தேன். முதலில் ஸ்டால் ஆனது. ஆனால் தொடர்முயற்சியில் பத்து நிமிடங்களிலே முதல் கியர் வசப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கியர்களுக்கு மாற்றி ஓட்டுவது சிரமாக இருந்தது. முதலில் ஓட்டும்போது சில அடிப்படைகள் தெரியாததால் (எந்த வேகத்தில் கிளட்சைப் பிடித்து கியரை மாற்ற வேண்டும், ஏற்றத்தில் எந்த கியரில் வண்டியை எடுக்க வேண்டும், திடீரென எதிரில் வண்டி வந்தாலோ போக்குவரத்து நெரிசல் தோன்றினாலோ என்ன செய்வது) குழம்பிப் போனேன். என்னால் நிச்சயமாக வீட்டுக்கு வண்டியை எடுத்து வரமுடியாது எனத் தெரிய (அதாவது என அசட்டுத் தைரியம் வடிந்ததும்) அங்குள்ள ஒரு மெக்கானிக்கிடம் உதவி கேட்டேன். அவர் ஒரு சிறிய கட்டணத்துக்கு வண்டியை எடுத்து வந்துவிட்டார். இரு நாட்களுக்குப் பிறகு என் நண்பர் ஒருவர் வந்து கியர் மாற்றச் சொல்லித் தந்தார். முதல் கியரில் இருந்து இரண்டாவது கியரில் ஓட்டினேன். அவ்வப்போது ஸ்டால் ஆனது என்றாலும் தடுமாறாமல் இரண்டு முறைகள் என் வீட்டைச் சுற்றியுள்ள சில தெருக்களை அடைந்தேன். போகும்போது ஒரு பைக்கை உரசினேன், மற்றபடி யாரையும் இடிக்கவில்லை. ஆனால் மூன்றாவது கியருக்குப் போக முடியவில்லை. அதன்பிறகு நண்பர்களைச் சார்ந்து மட்டும் பைக் கற்றுக்கொள்ள முடியாது, முறையான பயிற்சியாளர் அவசியம் எனத் தோன்றியது. பைக் ஓட்டச் சொல்லித் தரும் பயிற்சியாளர்களை அழைத்தால் அவர்கள் பைக்கை அவர்களுடைய இடத்துக்கு எடுத்து வரச் சொன்னார்கள். நான் எடுத்து வருவேன் சார், ஆனால் வழியில் பல விபத்துகள் நடக்குமே எனச் சொன்னதற்கு அவர்கள் “விரைவில் தொடர்பு கொள்கிறோம்” என்று சொல்லி மாயமாகிவிட்டார்கள். கடைசியில் ‘ஹீல்ஸ் ஆன் வீல்ஸ்’ எனும் பயிற்சிப் பள்ளியினர் கேட்டதும் ஒப்புக்கொண்டனர்.
5) பவன் என்பவர் என் வீட்டுக்கே வந்தார். தாம் மைதானங்களில் ஓட்டப் பயிற்சி அளிப்பதில்லை, சாலைகளே சரியான பயிற்சிக்களங்கள் என்றார். நான் வண்டியை வெளியே எடுத்து வழக்கம்போல முதல் கியரைப் போட்டு அவரையும் பின்னால் ஏற்றிக்கொண்டேன். இரண்டாவது கியருக்கு வந்தேன். தெருக்களைச் சுற்றினோம். அவர் எதிர்பாராதவிதமாக என்னைப் பிரதான சாலைக்குப் போகச் சொன்னார். நான் உலகின் அத்தனைக் கடவுள்களையும் அழைத்து வாகன ஓட்டிகளைக் காப்பாற்றக் கேட்டுக் கொண்டு பிரதான சாலையில் இறங்கினேன். பைக் ஓட்டுவது ஒருவிதத்தில் சுலபம்தான் எனத் தோன்றியது - பயிற்சியாளர் பின்னிருந்து கியரை மாற்ற அறிவுறுத்திக் கொண்டிருந்தார்: 15 கிலோமீட்டர் தாண்டியதும் கிளட்சைப் பிடித்து இரண்டாவது கியர், 25-30 கிலோமீட்டர் வந்ததும் மூன்றாவது கியர் இப்படி. வாகனங்கள் எனக்கு முன்னால் நின்றதும் வேகத்தைக் குறைத்தால் என் வண்டி ஸ்டால் ஆவது, அதிக கியரில் வேகம் குறைந்தால் வண்டி ஏதோ வயிற்றுப் போக்கு வந்த வயிற்றைப் போல கடமுடாவெனச் சத்தம் போடுவது (knocking), ஏற்றத்தில் வண்டி நின்றால் பின்னுக்கு உருள்வது எனப் புதுப்புதுப் பிரச்சினைகள் தலைகாட்டின. (பதற்றத்தில் என் சட்டை நனைந்துவிட்டதென்றாலும் தைரியமாக இருப்பதாக பாவனை செய்தேன்.) அவர் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு சொன்னார் (ஸ்டால் ஆனால் கவலைப்படாமல் வண்டியைக் கிளட்சைப் பிடித்து ஸ்டார்ட் செய்வது, சிலநேரங்களில் கியரைக் குறைத்து ஸ்டார்ட் செய்வது, ஏற்றத்தில் முதல் கியரை போடுவது, வேகத்தைக் குறைக்கையில் அப்படியே கியர்களையும் குறைப்பது இப்படி). ஆனால் அவரது அறிவுரைகளை நினைவில் வைத்து செயல்படுத்துவது வரவில்லை. அவர் பின்னிருந்து என்னை நிதானப்படுத்தினார். முக்கியமான விசயங்களை மட்டும் அவ்வபோது சொல்லிக் கொடுத்தாலும் நான் தவறுசெய்வதை அவர் பொருட்படுத்தவில்லை. இது என்னை அமைதியாக்கியது. நான்காவது கியர் வரைப் போனேன். புரியாத உச்சரிப்பில் பேசும் ஆங்கிலேயர்களுடன் தலையசைத்தபடி உரையாடுவதைப் போல போக்குவரத்தையும் சாலையையும் சமாளித்து வண்டியை ஓட்டி வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் அவர் சொன்னார், “உங்களுக்கு இன்னும் ஒரு நாள் பயிற்சி போதும். வெள்ளிக்கிழமை காலையில் வருகிறேன்.” அட, என்னாலே நம்ப முடியவில்லை. “என்னது ஒருநாளா?” “ஆமா. எத்தனையோ பேர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ள நான் சொல்கிறேன், நம்புங்க, உங்களுக்கு இன்னும் ஒருநாள் போதும்.” “ஒருநாளுக்குப் பின் நான் தினமும் சாலையில் ஓட்டலாமா?” “தாராளமா”. பல்லவி “இவரை நம்பி பின்னால் உட்கார்ந்தால் என் உயிருக்கு உத்தரவாதம் உண்டா?” என்று பலமுறைகள் கேட்டார். அவர் பாகிஸ்தான் யுத்தத்தின்போது நம் ராணுவ தளபதிகளைப் போல “ஒண்ணுமே இல்ல, தைரியமா ஏறிப் பாருங்க” என்றார். அவரது நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது - நான் முரட்டுத்தனமான தன்னம்பிக்கை கொண்டவன் என்பதால், அவர் அப்படிச் சொன்னது பிடித்திருந்தது. கொஞ்சம் மனம் வைத்தால் ராக்கெட்டையே ஓட்டலாம் என நம்புகிறவன் நான். ஆனால் பல்லவி சுலபத்தில் நம்பவில்லை. ரெண்டாவது நாள் பயிற்சியும் முடியட்டும் எனக் காத்திருந்தேன். ஆனால் அவர் சொன்ன நாளில் அதன்பிறகு வரவில்லை.
(தொடரும்)
Comments