Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தேர்வுக் குழுவுக்குத் தேவை ஒரு தகுதித் தேர்வு

//தேசிய செயற்குழு, நிறுவப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, முறையாக அமைக்கப்பட்ட அந்தந்த மொழிவாரியான நடுவர் குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. பல தசாப்தங்களாக, இந்த செயல்முறைதான் இலக்கிய உலகில் அகாதமியின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்து வருகிறது. இந்தப் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதற்கும், நடுவர் குழுவின் செயல்முறையை ஒரு "தணிக்கைக்கு" (Audit) உட்படுத்துவதற்கும் அமைச்சகம் எடுத்துள்ள முடிவு முற்றிலும் தேவையற்றது மற்றும் முன்னுதாரணமற்றது.


சாகித்ய அகாதமி வரலாற்றில் இதுவரை எந்தவொரு காலக்கட்டத்திலும், நிபுணர் குழுக்களால் எடுக்கப்பட்ட இலக்கியத் தீர்ப்புகள் நிர்வாகத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை அல்ல; அது நிபுணத்துவம், சக படைப்பாளிகளின் மதிப்பீடு மற்றும் கல்விசார் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அறிவுசார் பயிற்சியாகும். இதனை அதிகாரத்துவ ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும், அகாதமியின் நோக்கத்தைச் சிதைப்பதற்கும் சமமாகும். - நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன்///

எனக்கு சு. வெங்கடேசனின் கருத்துடன் உடன்பாடுண்டு. சாகித்ய அகாடெமியின் தன்னாட்சியில் குறுக்கிடக் கூடாது. அதேநேரம் அகாடெமி முழுமையான தன்னாட்சியுடன் இருக்கிறதா? அதன் நிர்வாக அளவில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ளும் அனுபவம் எனக்கில்லை. நான் இங்கே சொல்வது கேள்விப்பட்டவை. நம் ஊரில் அதிகாரபூர்வமாக சொல்லப்படுகிறவற்றை விட கேள்விப்படுபவற்றிலே உண்மை அதிகம் என்பதால் அதை இங்கே பதிவு பண்ணுவது உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாக அகாடெமியின் விருதைத் தீர்மானிப்பது இறுதிக்கட்ட விருதுக்குழு. இவர்களுக்குத் தேவையான படைப்பாளரை முன்தீர்மானித்து அவரது நூலை எப்படியாவது இறுதிப் பட்டியலில் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதன்பிறகு வாதிட்டு மற்ற உறுப்பினர்களை ஏற்கச் செய்வது இவர்களின் திறமை. இத்திறமை எடுபட்டால் அவர் முன்வைக்கும் படைப்பாளிக்கு கிடைக்கிறது. இச்சூழலை இன்னும் மோசமாக்குவது ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே விருது பெற்ற ஒரு படைப்பாளி இந்த இறுதி விருதுக்குழுவுக்குள் வர வேண்டும் என விதிமுறை உள்ளது என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் (அல்லது பல நேரங்களில்) விருது பெற்ற படைப்பாளி தான் யாருக்கு மனதளவில் கடன்பட்டிருக்கிறோமோ அல்லது யாரால் பயன்பெற வேண்டுமோ அவருடைய பெயரை அடுத்த ஆண்டு பலமாகப் பரிந்துரைப்பார். சில நேரங்களில் அகாடெமியில் ஏற்கனவே அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவரை இறுதிப் பட்டியலில் கொண்டு வந்து விருது பெற வைத்துவிட்டால் அடுத்த முறை விருதுபெற்றவர் தனக்கு வாங்கித் தந்தவரின் நூலை இறுதிப் பட்டியலுக்குக் கொண்டு வந்து அதற்கு விருதளிக்க வலுவாகப் பரிந்துரைப்பார். இப்படி இது ஒரு விஷச்சூழலாக மாறுகிறது. ஊர்க்காரர்கள், சாதிக்காரர்கள், தன்னைப் பரிந்துரைத்தவர்கள், தனக்காக வேலை பார்த்தவர்கள், தனக்காக எதிர்காலத்தில் வேலை பார்க்கப் போகிறவர்கள், தன் பதிப்பகத்தைச் சேர்ந்தவர்கள் என விருதை வாங்கிக் கொடுக்கிறார்கள். அவர்கள் வந்ததும் இதே சேவையைத் தொடர்கிறார்கள். இயல்பாகவே இதனால் விருதின் மீதான மக்களின் நம்பிக்கை காலியாகிறது. எழுத்தாளர்களும் முந்தின ஆண்டு விருது பெற்றவர்களுக்கு தாம் நெருக்கமாக இருந்தால் மட்டுமே தம் வாய்ப்புப் பிரகாசமாகும் எனக் கருதுகிறார்கள். இது விருது பெற்றவர்களை ஒரு அதிகார வளையமாக்குகிறது. ஒரு ரகசியக் குழுமமாக அவர்கள் செயல்பட்டு ஒரு 'குடும்ப விருதாக' சாகித்ய அகாடெமியை மாற்றிவிடுகிறார்கள். இதனிடையே கட்சி செல்வாக்கும் செயல்படுகிறது என்கிறார்கள்.

வெளியில் இருந்து பார்க்கையில் தேர்வாகும் படைப்பாளிகளை நாம் விமர்சிக்க முடியாதபடிக்கு தேர்வு சரியாகவே இருக்கிறது. ஆனால் உள்ளுக்குள் இப்படியான அதிகார விளையாட்டு, பாகுபாடுகள் உள்ளன.

இதை எப்படிச் சரிசெய்வது?

முதலில் இந்த தேர்வுக் குழு அமைக்கும் முறைமை மாற்றப்பட வேண்டும். ஒருவர் அகாடெமி விருது பெற்று விட்டதாலே அவர் ஒரு சிறந்த தேர்வர் ஆக மாட்டார். அவர் ஒரு நல்ல படைப்பாளியாக இருப்பதாலே சிறந்த இலக்கியத்தைப் படித்தவரோ, உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவரோ, ஒரு படைப்பின் செயல்முறையை அறிவார்ந்து புரிந்துகொண்டவரோ அல்லர். இதையே நான் குழுவின் மீத உறுப்பினர்களான கல்வியாலர்களுக்கும் சொல்வேன். காமாசோமாவென இப்படி தேர்வுக்குழுவை அகாடெமி உருவாக்குவதை முதலில் நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக தேர்வர்களுக்கு ஒரு தகுதித் தேர்வு வைக்க வேண்டும்.
இத்தேர்வில் மாநில மொழி இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், விமர்சனக் கோட்பாடுகளில் இருந்து கேள்விகளைக் கேட்க வேண்டும்.
தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெறுவோர் தேர்வர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தேர்வர்களுக்கு நல்ல ஊதியம் அளிக்க வேண்டும்.
தேர்வு எழுதுவதற்கு அடிப்படைத் தகுதி படைப்பாளியாகவோ கல்வியாளரகவோ இருப்பது என வைக்கலாம்.

இப்படிச் செய்தாலே தேர்வில் ஒரு தொழில்முறைப் பொறுப்பு வரும்.
வாசிப்பும் அறிவும் படைத்த இளைஞர்கள் தேர்வுக்குழுவுக்குள் வருவார்கள்.
விருப்பத்தின், கடமையின் அடிப்படையில் அல்லாமல் ஒரு வேலையாக இதை எடுத்து செய்வார்கள்.

ஆம், அப்போதும் தம் நுண்ணுணர்வின், உள்ளுணர்வின், தர்க்க அறிவின்படி தான் ஒரு தேர்வர் ஒரு நூலைத் தேர்வு பண்ணுவார் என்றாலும் குறைந்தபட்சம் அவருக்கு ஒரு தகுதி இருக்கும் என நாம் நம்பலாம். முக்கியமாக இதன்வழியாக அதிகார வட்டத்துக்குள் இருந்து தொடர்ச்சியாக நபர்களைத் தேர்வுக்குழுவுக்குள் அனுப்புவது முடிவுக்கு வரும்.

இந்த முறைமைக்குள்ளும் ஊழல் தோன்றும். ஆனால் அதற்கு மெனெக்கெட வேண்டும். நம் எழுத்தாளர்கள் அந்தளவுக்குப் போக மாட்டார்கள். தேர்வு புறவயமாக இருக்கும். 20-30 வருடங்களுக்கு முன்பே எழுதுவதை நிறுத்தியவர்களுக்கு ஏதோ ஒரு புத்தகத்தின் பெயரில் வாழ்நாள் பரிசாக விருதளிப்பது, நட்புக்காக, சாதிக்காக, தொடர்புக்காக விருதளிப்பது, அரசும் வாசகர்களும் தொடர்ந்து அதிருப்தியடைவது, விருதை நிறுத்தி வைப்பது, விருது அறிவிப்பு லீக் செய்யப்படுவது எல்லாம் இருக்காது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...