வைத்தியர் ஊரில் வந்த நாளில் இருந்தே சேகரித்த எண்ணற்ற நண்பர்களில் ஒருவனாக ஒருநாள் தேங்காய் நார், வர்ணம் இழந்து அவனது உடல் நிறம் ஒட்டிக் கொண்ட துவர்த்து, தேங்காய் எண்ணெய் வாசனையுடன் குளியல் தயாரிப்புடன் வாசல் படிக்கட்டி அமர்ந்து அவளை நோக்காமல் வைத்தியரிடமும், சில சமயம் அவளிடம் துணுக்குகளாய் பேசிக் கொண்டிருந்தான். வாக்கியங்களை முடிப்பதில் ஒருவித சோம்பல் அவனுக்கு. பாதியில் கைவிட்டு மற்றொன்றுக்கு தாவி அதிலும் சுவாரஸ்யம் இழந்து
அவளுக்கு நடந்து பழக மரக்கட்டைகளால் கைப்பிடி அமைக்க ஒரு புது யோசனையுடன் அன்று வைத்தியர் வந்திருந்தார். முன் தினம் சைக்கிள் ஓட்டும் பயிற்சி அவளது கால்களை வலுப்படுத்தும் என்று ஆற யோசித்து அப்பாவிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு அது ரொம்ப பிடித்திருப்பதாய் தலையாட்டினார். அவளது உடல்நலம் பற்றிய அலோசனைகளில் அதிகப்படியாய் வினோதமாக கற்பனாதிதமாக உள்ளவை கேட்டால்தான் அப்பா மிகவும் ஆர்வம் கொள்வார். சைக்கிள் ஓட்டுவதென்ன மரம் ஏறுவது இன்னும் அற்புதமான யோசனையாக அவருக்கு தோன்றியிருக்க கூடும். “பண்ணீருவோம் வைத்தியரே” என்று திரும்ப திரும்ப சொன்னார்.
அடுத்த நாளான அன்று வைத்தியர் சைக்கிளை தற்காலிகமாய் மறந்திருந்தார். “முதலில் பிடிச்சு நடந்து ”கொஞ்சம் பெலம் வரட்டும் ... என்ன சொல்றீங்க” கரகர என்ற குரலில் விக்கி விக்கி சிரித்தார். அப்படி சிரித்தால் அமோதிக்க வேண்டும் என்று பொருள். இல்லா விட்டால் விட்டு விட்டு பொறி தெறிக்கும் எந்திர சக்கரம் போல் சிரித்துக் கொண்டே இருப்பார்.
அப்பா “ஆமா ஆமா ... எனக்கு அவ நடந்து பாத்தா போதும்” என்றார். அப்போது தான் கார்த்திக் குறிக்கிட்டு “சைக்கிள வாடகைக்கு ... ம்ம்ம் பரவாயில்ல திரும்ப கொடுத்திரலாம் ... அப்போ செல்லப்ப ஆசாரியை ... ” என்று இழுத்தான்.
அவன் கவனமாய் அவளை பார்ப்பதை தவிர்த்தான். ஆனால் அவள் எழுந்து முட்டி ஊன்றி ஓரடி எடுத்து வைத்ததும் அவனது திரும்பி அமர்ந்த உடலில் ஒரு திடுக்கிடல், நடுக்கம், அக்கறை. “செல்லப்பன் கிறுப்பு பயலப்பா. நமக்க தங்கச்சி பிள்ளைக்கு கட்டிலு செய்ய ரெண்டு நாள் வந்தான். மூணா நாள் ஆளு மாயமாயிட்டான். கட்டிலு இன்னும் வீட்டில அரைகுறையா கிடக்கு, மூணு காலோட. எங்க தேடினாலும் தொட்டி ராஸ்கலு கையில கிடைக்க மாட்டேங்கான். வேலை சுத்தம் இல்லடே அவனுக்கு”.
“ஒரு காலுதானே ... வீட்டுப்பக்கத்துல ஐயப்பன் இருக்கான்லயா .. கின்னரன் கேட்டீங்களா அனுப்பட்டுமா ... மூட்டீருவான் சில்லறை கொடுத்தா போரும் சைக்கிள எடுத்து வைச்சிருக்கேன் ராமப்பன் கடையில இருந்து. திரும்ப விட்டிரலாம் தான். நீங்க சொன்னீங்கன்னு தான் எடுத்து வந்தேன்” கார்த்திக் பதற்றமாயிருக்கையில் ,மட்டுமே இப்படி பேசுவான் என்பதை கவனித்தாள்.
அப்பா குறுக்கிட்டார் “பிள்ளே திரும்பி நேரே இருக்கணும். எந்த பங்கமும் வராது. திரும்புங்க மது ஒரு குழந்தைதானே”. அவன் நெளிவது முதுகுப் பக்கம் தெரிந்தது. அவன் அவ்வாறு மதுவுக்கு முதுகு காட்டி அமர்வது அப்பாவை வெறுப்புற வைத்திருக்க வேண்டும்.
அவளிடம் பழக ஆரம்பித்த பின் கருணையின் அரண் கொண்டு அவன் தன்னை பாதுகாத்து கொண்டான். பின்னர் இப்படியான பதற்றம் அவள் அருகாமையில் அவனுக்கு ஏற்படவில்லை.
Comments