Skip to main content

வாசிக்காதவர்கள் எதை இழக்கிறார்கள்?


 

நாம் வாசித்துத் தெரிந்துகொள்கிற ஒன்றை ஏன் செய்யறிவைக் கொண்டு சுருக்கிப் படித்தோ காணொளியாகப் பார்த்துத் தெரிந்துகொண்டால் என்ன, அல்லது அதை ஒரு உரையாகக் கேட்டால் போதாதா எனும் கேள்வி இன்று அதிகம் வாசிக்காதவர்களிடம் உள்ளது. அது ஒரு சல்ஜாப்புதான் - வாசிப்பினால் என்ன பயன் என்பதே அடிப்படையான கேள்வி. வாசிப்பு வெறும் தகவலைத் தெரிந்து கொள்ளத்தான் என்றால் இன்று வாசிப்பே அவசியம் இல்லை. வாசிப்பு ரசனைக்காகத்தான் என்றால் இன்று வேறு ஊடகங்கள் வந்துவிட்டன; குறிப்பாக திறன்பேசிகள் பரவலாகிவிட்ட பின்னர் யுடியூபில் கதை கேட்பது, படம் பார்ப்பது, சமூகவலைதளங்களில் ரீல்கள் பார்ப்பது, மொபைல் விளையாட்டு என ரசனைக்கும் பொழுதுபோக்குக்கும் காட்சிப் பனுல்களே அதிகம் பயன்படுகின்றன. ஒருவர் ஒரு கதையைப் படிப்பதைவிட தரமான ஒரு படத்தைப் பார்ப்பதோ தகவல் செறிவான ஆவணத் தொகுப்பைப் பார்ப்பதோ பயனுள்ளதுதானே, அல்லது அதற்கு இது சமமானதுதானே என நினைக்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல - இங்குதான் அவர் முக்கியமான ஒரு வேறுபாட்டைக் காணத் தவறுகிறார். அதைப் பற்றியே இங்கு பேசப் போகிறேன்.
நீங்கள் ஒன்றைப் படிக்கையில் (அது இந்தக் குறிப்பாகக் கூட இருக்கலாம்) வெறுமனே தகவல்களை, கருத்துக்களை உள்வாங்குவதில்லை. நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி, ஆற்றலைச் செலுத்தி கருத்துக்களை, உணர்வுகளைத் தொகுத்தபடியே படிக்கிறீர்கள். எழுத்தாளரின் கருத்துடன், பார்வையுடன் சம்வாதம் செய்கிறீர்கள். மறுக்கிறீர்கள், ஏற்கிறீர்கள், அல்லது நிபந்தனைக்குட்பட்டு இரண்டையும் செய்கிறீர்கள்; எழுத்தில் ஒரு அனுபவத்தை அல்லது உணர்வைப் பற்றிப் படிக்கையில் அதை உங்கள் கற்பனையால் பெருக்குகிறீர்கள். அதை உங்களுடையதாக்கி மற்றொருவருடையதாகவும் தக்க வைத்தே அதனுடன் உறவாடுகிறீர்கள். ஒரு கூட்டைச் செப்பனிடும் பறவை கூட்டுக்குள்ளும் வெளியேவுமாகப் பறந்து காற்றில் மிதந்தபடி பணி செயவதைப் போல நீங்கள் படிக்கிறீர்கள் (இந்த உவமையைக் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கற்பனைப் பண்ணுவார்கள்.) ஆனால் காட்சி ஊடகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை - ஒரு கருத்தோ அல்லது உணர்வோ உங்கள் மீது திணிக்கப்படுகிறது; சிந்தனையோ பார்வையோ உங்கள் முன்வைக்கப்படும்போது உங்களுக்கு அதைக் குறித்துச் சிந்திக்கும், பரிசீலிக்கும் அவகாசம் அளிக்கப்படுவதில்லை; காட்சிகளும் இசையும் ஒலிகளும் உங்களை வேகமாகக் கடந்தபடியே உள்ளன. நீங்கள் அவற்றை ஒரு வெற்று மனத்துடன் பின் தொடர்ந்தாலே அக்காணொளியை ஏற்கவும் ரசிக்கவும் முடியும். அல்லது நீங்கள் ரிமோட்டைக் கொண்டு காட்சிகளை நிறுத்தி நிறுத்திப் பார்த்து யோசித்து உரையாடிபடிப் ‘பார்க்க’ வேண்டும், ஒரு ஊடக / சினிமா வகுப்பில் மாணவர்கள் செய்வதைப் போல. ஆனால் அப்போது அதை ரசிக்கவோ சரளமாக உள்வாங்கவோ முடியாது. ஏனென்றால் காட்சி ஊடகம் வெளிமுகமானது. எழுத்து ஊடகம் உள்முகமானது. காட்சி ஊடகம் சர்வாதிகாரத்தன்மை கொண்டது (என்னதான் ஜனநாயகபூர்மானது, திரள்தன்மை கொண்டது என்று கூறப்பட்டாலும்), எழுத்து ஊடகம் ஜனநாயகபூர்வமானது, உங்கள் பங்கேற்பைக் கோருவது. வாசிக்கும்போது நீங்கள் உள்நபராக இருந்து எழுத்தாளருக்கு ஓரளவுக்கு ஈடாக அப்பனுவலை வளர்த்தெடுக்கிறீர்கள். காட்சி ஊடகத்தில் நீங்கள் ஒரு ‘வெளியாள்’ - தரப்படுவதை நுகரக் கூடியவர். அங்கு ஒரு கிளியைப் பார்க்கையில் அது இன்ன மாதிரி கிளி என்று துல்லியமாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் பார்த்த கிளியாகக் கற்பனை செய்ய முடியாது. அங்கு நீங்கள் கருத்துக்களைத் தொகுத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. நீங்கள் என்ன முடிவுக்கு வர வேண்டும் என்பதை காட்சி ஊடகம் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும். அதைப் பார்த்து முடித்தபின்னர் நீங்கள் அதை எதிர்த்தோ மறுத்தோ பேசலாம், ஆனால் அதைப் ‘பார்க்கையில்’ இயலாது.
இதன் விளைவுகள் என்ன?
எழுத்து ஊடகம் உங்கள் தர்க்கத் திறனை, தகவல்களை, கருத்துக்களைத் தொகுத்து வடிவமைக்கும் திறனை, கற்பனை செய்யும் திறனை வளர்க்கிறது.
அது உங்களைச் ‘சமமாக’ பாவிப்பதால் உங்கள் தன்னம்பிக்கை வளர்கிறது.
அது உங்களைத் திரளாக அல்லாமல் தனிமனிதராகப் பாவிப்பதால் உங்கள் சுயமரியாதை மேம்படுகிறது. அது உங்கள் கவனத்தை வளர்க்கிறது.
கற்பனைத் திறன் உங்களைக் கருணை மிக்கவராக்குகிறது. மற்றமையைப் புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் கற்றுத் தருகிறது. வாசிப்புக் குறையக் குறைய எதேச்சதிகாரம் வளர்வது இதனால்தான்.
இத்திறன்கள் உங்களுக்குப் பிறரிடம் உங்கள் மனத்தில் எழும் உணர்வுகளை, கருத்துக்களைத் தொகுத்து துல்லியமாகச் சொல்லவும், அவர்களை உங்கள் பார்வையை ஏற்க வைக்கவும் கற்றுத் தருகின்றன.
கற்பனைத் திறன், தர்க்க அறிவு, தனிமனித இயல்பு உங்களைத் தன்னம்பிக்கையும், ஜனநாயகப் பண்பும் கொண்டராக்குகிறது. நல்ல பிரஜையாக மாற்றுகிறது. சினிமா, டிவி உள்ளிட்ட காட்சி ஊடகம் இதற்கு நேரெதிராகச் செயல்படுகிறது - உங்களைச் சிந்திக்கவோ கற்பனைச் செய்யவோ இயலாதவராக்குகிறது; காட்டப்படுபவற்றை, சொல்லப்படுபவற்றை ஆராயாமல் ஏற்கிறவராக்குகிறது. நினைத்ததைச் சொல்லில் வடிக்கும் திறனற்றவராக்குகிறது. சுருக்கமாக மூளையில்லாத அடிமையாக்குகிறது. இதனால்தான் ஒரு வணிக நாவலைப் படிக்கிறவர் கூட வணிக சினிமா, டிவி தொடர் பார்க்கிறவரை விட அறிவும் கற்பனையும் மொழித்திறனும் மிக்கவராக இருக்கிறார்.
இதனால்தான் காட்சி ஊடகத்தின் பெருக்கத்திற்குப் பிறகு தோன்றிய மாணவர்கள் சுயமாகச் சிந்தித்து, அலசி ஆராய்ந்து அதை மொழியில் வெளிப்படுத்தும் திறனற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். நீங்கள் இத்தகைய மாணவர்கள் எதையும் சில வினாடிகளுக்கு மேல் கவனிக்கும் திறனற்றவர்களாக இருப்பதை, தம் கருத்துக்களைத் துல்லியமாக வெளிப்படுத்தத் தெரியாதவர்களாக இருப்பதை, சிக்கலான கருத்தோட்டங்களில் ஈடுபட முடியாதவர்களாக உள்ளதைக் காணலாம். கல்வித்துறையில் இது மிகப்பெரிய நெருக்கடியாகப் பேசப்படுகிறது. யோசனைத் திறனேயற்ற ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. வளர்ந்தவர்களிடம் கூட இப்பிரச்சினை அதிகமாகி வருவதைப் பார்க்கிறோம். அவர்களைத் தொந்தரவு செய்யும் எதைக் குறிப்பிட்டாலும் கோபம் வருகிறது, ஆனால் பகுத்தறிந்து எதிர்வினையாற்றுவதில்லை - இதுதான் காட்சி ஊடகத்தின் பயிற்சி. அது மனிதர்களை வயதில் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் எளிய உணர்ச்சிகளால் நடத்தப்படுகிற சிறு குழந்தைகளாகி விடுகிறார்கள். இத்தகையோர் ஒரு மந்தை மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இவர்களை மிகப்பெரிய அழிவு சக்தியாக மாற்றவும், கட்டுப்படுத்திச் சுரண்டவும் முடியும்.
இதனால்தான் பாஸிஸ்டுகள் காட்சி ஊடகத்தின் பெரும் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இதனால்தான் காட்சி ஊடகத்தின் - சினிமா, சமூகவலைதளம் - எழுச்சிக் காலத்தில் பாசிசம் உச்சத்தில் இருக்கிறது. இக்காலம் வாசிப்பை ஒழிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்கிறது. ஜனநாயகத்துக்கு அவசியம் வாக்கு மட்டுமல்ல புத்தகமும்தான். 'பார்க்கிற', 'கேட்கிற' மக்களைவிட படிக்கிற மக்களையே எதேச்சதிகாரம் அஞ்சுகிறது (இந்தப் பின்னணியில் வால்டர் பெஞ்சமின் எழுதிய “The Work of Art in the Age of Mechanical Reproducibility” எனும் கட்டுரையும் டோனி மோரிஸனின் 1995 சார்டர் டே உரையும் வாசிக்க வேண்டியவை).
வாசிக்காமல் இருப்பது ஒரு தனிமனிதனாகவும், சமூக அங்கத்தினராகவும், அரசியல் உயிரியாகவும் நம்மைச் சீரழிக்கிறது. வாசிப்பு நம்மை மேம்படுத்தி உண்மையையும் அரசியல் முகமையையும் பெற்றுத் தருகிறது.
இதனால்தான் நாம் டிவி பார்க்கிற, சினிமா பார்க்கிற, உரை கேட்கிற, சமூகவலைதளமாடுகிற நேரத்தைக் குறைத்து புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்ட வேண்டும் என்கிறேன். அதுவரை வெறும் ‘எந்திரமாக’, அடிமையாக இருந்த நாம் மனிதராக மாறுவதை அப்போது உணர முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...