புரவியில் நான் கலந்து கொண்ட இரண்டாவது கூடுகை. கடந்த சனியும் ஞாயிறும் ஒசூரில் உள்ள தேன்கனிக்கோட்டையில் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்ட ஆசிரமத்தில் நடந்தது. கோடையின் வறட்சி என்னுடைய ஆற்றலையும் உலர வைத்தாலும் மிகுந்த உற்சாகமான இரு நாட்களாக அது அமைந்தது. நான் முதல் நாள் தாமதமாகப் போனதாலும், இரண்டாவது நாள் தாமதமாக எழுந்ததாலும் இரண்டு அமர்வுகளைத் தவற விட்டேன். நான் கலந்து கொண்ட அமர்வுகளில், குறிப்பாக சூழலியல், சிறார் இலக்கியம் ஆகியவற்றில், பலவற்றைக் கற்றுக் கொண்டேன். இம்மாதிரிச் சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் சூழலில் இருந்து நிறைய உத்வேகத்தை உறிஞ்சிக் கொள்ள, என் அகத்தின் மின்கலத்தை மின்னேற்ற உதவும். அதனால்தான் சிரமம் பார்க்காமல் போவது அவசியம் என நினைத்தேன். அவ்வாறே நடந்தது.
இன்னொரு விசயம் நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் என் நாவலில் நாயகனின் மனைவியின் பாத்திரம் வருகிறது. அவளது பின்னணியை, பாத்திர வார்ப்பை மாற்ற முடிவெடுத்தேன். அவ்வாறே கதையிலும் சில மாற்றங்கள் செய்தேன். இது கதைக்கு புதிய ஒரு பரிமாணத்தை அளித்தது. ஆனாலும் அதன்பிறகு அவளது பெயர் அவளது காலகட்டத்துக்குப் பொருத்தமாக இல்லையே என்று தோன்றியது. கூடுகையின் முதலாவது நாள் அரவிந்தன், பா.வெங்கடேசனுடன் அரட்டையடிக்கையில் இதைக் குறிப்பிட்டேன். எனக்கு எழுபதுகளின் பெயர் ஒன்று வேண்டும். பா.வெ ஒரு பெயரைப் பரிந்துரைத்தார். அது இனிமையாக இருந்தது. பொருந்துமா எனத் தெரியவில்லை என யோசித்துக் கொண்டு இரவு நேரப் பாட்டுக் கச்சேரிக்குப் போனேன். அங்கு வைக்கப்பட்டிருந்த படங்களைக் கண்டதும் ஒரு பெயர் மனத்தில் எழுந்து வந்தது. அன்றிரவே தூங்கச் செல்லும் முன் நாவலில் அவளது பெயரை எல்லா இடங்களிலும் மாற்றினேன்.
இப்படி ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றை, மறக்க முடியாத ஒன்றைத் தருகிறது.
Comments