Skip to main content

சுதர்ஷன்

 


சுதர்ஷனின் மரணச் செய்தி கேட்டு என் மனம் உடைந்து விட்டது. அவனை என் பயணக் குறிப்புகளில் அங்கங்கே குறிப்பிட்டிருக்கிறேன். என்னை விரிவாக நேர்முகம் செய்து தன் செல்பேசியில் வைத்திருந்தான். எடிட் செய்து யுடியூபில் போடப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் அதைக் கடைசி வரைச் செய்யவே இல்லை. எனக்கு அதைக் குறித்து எந்த ஒரு வருத்தமும் இருக்கவில்லை. அது ஒரு நல்ல உரையாடல் அனுபவம் அவ்வளவுதான். அவனுக்கு சரியான கேள்வி கேட்டு பேச வைக்கத் தெரியும். அவனுடைய பேச்சில் எப்போதும் ஒரு களங்கமின்மை இருக்கும். நான் களைக்காமல் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்.
சுதர்ஷனை நான் ஆங்கில முதுகலை வகுப்பில்தான் சந்தித்தேன். நான் அவன் வகுப்புக்கு இலக்கியக் கோட்பாடு கற்பிக்கச் சென்றேன். கடைசி இருக்கையில் இருந்துகொண்டு அவ்வப்போது கைதூக்கி "இந்த இலக்கியத்தால் என்ன பயன்? இந்த கோட்பாடுகள் ஏன் இல்லாத ஒன்றைப் பற்றி இடைவிடாமல் பேசுகின்றன?" எனும் தொனியில் கேள்விகள் கேட்பான். எனக்குத்தான் கேள்வி கேட்பவர்களைப் பிடிக்குமே, சளைக்காமல் பதில் சொல்வேன். ஒருநாள் வகுப்பில் உள்மதிப்பீட்டுக்காக மாணவர்களை சாக்ரடீஸ் குறித்துப் பேசக் கேட்டிருந்தேன். சுதர்ஷன் அங்கு என்னைப் பகடி செய்து என் குரலையும் உடல்மொழியையும் மிமிக் செய்து பேசினான். மாணவர்களில் சிலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிலர் அமைதியாக இருந்து என்னை கவனித்தார்கள். நான் அவன் நன்றாக மிமிக் செய்ததாகச் சொல்லிவிட்டு அடுத்தடுத்த மாணவர்களைப் பேச வைத்தேன். அதன் பிறகு அவன் மிகுந்த சங்கடத்துடன் என்னை வகுப்பில் எதிர்கொண்டு பேச நான் அவனை உற்சாகப்படுத்தினேன். அப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. கிடைக்கும் அவகாசத்தில் எல்லாம் என்னுடன் சுற்றிக் கொண்டிருப்பான். எதையும் சீரியஸாகப் பேச மாட்டோம். சும்மா எதாவது ஒன்றைப் பற்றி அரட்டை. தேநீர் அருந்துவது. அவனுடைய நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். அவனுக்கு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டே நல்ல டைமிங்குடன் பேசி எல்லாரையும் சிரிக்க வைக்கும் பண்பு இருந்தது. பார்க்க ஒடிசலாக இருந்தாலும் அவன் ஒரு பஜ்ஜி பிரியன். பஜ்ஜியாகவே தின்று கொண்டிருப்பான். உடல்நலம் கெட்டதும் அதை நிறுத்திக் கொண்டான். நான் தினமும் வேலை முடிந்ததும் இரண்டு மணிநேரங்கள் எழுதுவேன். தேநீர்க் கடை, நூலகம் எங்காவது இருந்து மடிக்கணினியில் டைப் அடித்துக் கொண்டிருப்பேன். அதன்பிற்கு வீட்டுக்குக் கிளம்பும்போது அவனை அவன் நண்பர் குழாமுடன் வழியில் பார்ப்பேன். ஒரு சிறிய கொள்ளையர் கூட்டம் போல என்னைச் சூழ்ந்து கொள்வார்கள். என் சக்கரநாற்காலியிலே தேநீர்க் கடைக்குப் போவோம். அவன் பிறரைக் கலாய்ப்பதை தேநீர் அருந்திக் கொண்டே பார்த்துச் சிரிப்பேன். இது ஒரு வழக்கமாக இருந்தது.
என் பிறந்த நாளை மாணவர்கள் தாமாகவே பல்கலைக்கழக வளாகத்தில் வைத்துக் கொண்டாடியது சுதர்ஷனால்தான். அன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடனே சுற்றிவிட்டு என்னிடம் சொல்லாமல் அவன் நண்பர்களுடன் ஆச்சரியப்படுத்தினான்.
அவனுக்கும் எனக்கும் ஒரு பொதுப்பண்பு இருந்தது - அடுத்தவர் அந்தரங்கத்தை நோண்ட மாட்டோம், புறம் பேச மாட்டோம், மனிதர்களைப் பற்றி எதிர்மறையாகப் புலம்பக் கூட மாட்டோம். ஜாலியான உரையாடல் மட்டும்தான். ஆனால் அவன் முதுகலை இரண்டாம் வருடத்தை எட்டியபோது முகத்தில் ஒரு வாட்டம் தென்பட்டது. படிப்பு சார்ந்த வேலைகள் மிகுந்துவிட்டது, அந்த அழுத்தம் என்றான். நான் அதைச் சந்தேகிக்கவில்லை. அது இயல்புதானே அங்கு என்றுவிட்டேன். அவன் தன் நண்பர்களுடன் முன்பைப் போலச் சுற்றாமல் தனிமையில் இருப்பதைக் கண்டதும் கவலை கொண்டேன். திரும்பவும் இணைந்து கொள், தனிமை நல்லதல்ல என்று எவ்வளவோ சொன்னேன். அவன் சிரித்துவிட்டு கடந்தான். எனக்கு அடுத்தவர்களின் தனிபட்ட விவகாரங்களை விசாரிப்பதில் நம்பிக்கை இல்லை என்பதால் தவிர்த்துவிட்டேன்.
நான் வேலை மாற உத்தேசித்த நாட்களிலும் அவன் கூடவே இருந்தான். பல்கலையில் என் கடைசி நாளன்றும் இருந்தான். நான் எதாவது ஒரு ஆவணத்தில் ஒப்பம் பெறப் போவேன். அவன் கூடவே வந்துவிட்டு வெளியே நின்று கொள்வான். நான் வெளியே வந்ததும் எங்கிருந்தோ தோன்றுவான். உணவருந்துவோம், தேநீர் அருந்துவோம், அன்று இரவு நான் வீடு திரும்பும் வரை கூடவே இருந்தான். என்னுடைய தானியங்கி சக்கரநாற்காலியை அவனாகவே ஓட்டி வீட்டுக்குக் கொண்டு வந்தான். என்னுடன் துணையாக மைசூர் வரைக்கும் என் பைக்கில் வந்தான். அப்போது அவனுக்கு ஒரு இணைய வகுப்பு இருந்தது. அவன் சிலருக்கு ஆங்கிலம் கற்பித்து வந்தான். அதற்காக ஒரு தேநீர் கடையில் நிறுத்தினோம். தன் பாடமெடுக்கும் திறனைக் குறித்த என் எதிர்வினையைக் கேட்டான். பாராட்டினேன். சில அறிவுரைகளைக் கொடுத்தேன். தலையாட்டினான். என்னை சில கேள்விகளைக் கேட்டு நேர்முகம் எடுக்கவும் செய்தான். அதன்பிறகு இருட்டிவிட்டது. அவன் பல பேய்க்கதைகளாகச் சொல்லி என்னை மகிழ்வித்தான். ஒரு கதையை எனக்குச் சிறுகதையாக எழுதும் விருப்பம் கூட ஏற்பட்டது.
அதன்பிறகும் அவனை போனில் அழைத்துப் பேசுவேன். சோர்வாகப் பேசுவான். வேலை கிடைப்பது குறித்த வருத்தம் என நினைத்தேன். அவனால் என்னிடம் தன் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாத இடைவெளி இருந்தது. மனம் தெளிவாகும்போது அவனே சொல்வான் என நினைத்துக் கொண்டேன்.
இன்று அவன் மரணச் செய்தி வந்தபோது அவனது வருத்தங்களை எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொண்டு அவனைச் சரிசெய்திருக்கலாமே எனத் தோன்றியது. ஆனால் விபத்துகளை யாரால் எதிர்பார்க்க முடியும்? கூர்க்கிற்கு நண்பர்களுடன் பயணம் சென்ற அவன் அதிகாலையில் ஏன் ஏரியில் இறங்கிக் குளிக்கப் போனான்? நீச்சல் தெரியாதபோதும் ஏன் அவன் நீந்த முயன்றான்? தற்செயலாக ஒரு ஆர்வம் தோன்றி நீரின் ஆழத்தை நோக்கிச் சென்றானா? தெரியவில்லை. அப்போது அவன் மனநிலை மாறி அவன் திரும்ப கரைக்கு வந்திருக்கக் கூடாதா? நான் அங்கு இருந்திருந்தால் அவனிடம் புதிய ஊரில் ஏரியிலோ குளத்திலோ குளிப்பதன் ஆபத்தை எடுத்துரைத்திருப்பேனே. நான் ஏன் அங்கு இருக்கவில்லை என அபத்தமாக மனம் யோசித்தது. அவன் வேறெங்காவது படிக்கச் சென்றிருந்தால் இந்த விபத்து நடந்திராமல் இருந்திருக்குமா?
இன்று என் நண்பர்கள் பலரிடமும் பேசியபோது அவனைக் குறித்த பிரியமான நினைவுகளையே பகிர்ந்துகொண்டனர். எல்லாரிடமும் தன் மகிழ்ச்சியை, பிரியத்தை, வேடிக்கையான சுபாவத்தை, களங்கமற்ற கேள்விகளைக் கொண்டு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறான். அந்த வெளிச்சத்தை மட்டுமே அவர்களால் தம் நினைவில் மீட்டெடுக்க முடிகிறது. பேசி முடிந்ததும் அது இருளாகி விடுகிறது. அவன் இருந்திருந்தால் அந்த வெளிச்சம் தொடர்ந்திருக்கும், பலரிடமும் பரவியிருக்கும். என்னால் அதைத்தான் தாங்க முடியவில்லை.
அஞ்சலி என்ற சொல்லை அவன் விசயத்தில் பயன்படுத்த எனக்குத் துணிச்சல் இல்லை. அதனால் இது அஞ்சலிக் கட்டுரையும் இல்லை. எதாவது ஒரு ரூபத்தில் என்னிடம் திரும்ப வா என்று அவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...