Skip to main content

பா. கண்மணியின் “வீனஸ்”



பா. கண்மணியின் மொழி அழகானது. அவர் தான் வர்ணிக்கும் வீனஸ் அழகு நிலையத்தின் முடிதிருத்த நிபுணர்களின் லாவகத்துடன் தன் காட்சிகளை வர்ணிக்கிறார், இழையிழையாக சொற்களை எடுத்து நறுக்குகிறார், வடிவமைக்கிறார், வண்ணம் பூசுகிறார், ரொம்ப கற்பனாவாதமான ரசனையான சொற்றொடர்களுடன் நம்மைச் சொக்க வைக்கிறார். நுட்பமான புறவிவரணைகளாலும் நம் மனதை ஆட்கொள்கிறார். இந்நாவலின் கதைகூறல் முழுக்க புறவயமாக இருப்பதாலும், இதிலுள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் நேர்கோட்டில், முரணின்றி செயல்படுகிறவர்களாக இருப்பதாலும் நம்மால் இதை வேகமாக ரசித்துப் படித்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, கண்மணியின் மொழி எண்பதுகளில் பிரபலமாக விளங்கிய வணிக நாவலாசிரியர்களின் மொழியை நினைவுபடுத்துகிறது; சில இடங்களில் பாலகுமாரனைப் படிப்பதைப் போல இருக்கிறது; ஆனாலும் இன்னாரின் மொழியைத்தான் அவர் போலச்செய்கிறார் எனச் சொல்ல முடியவில்லை. அதேநேரம் ஏதோ ஒரு நிழல் நாம் படிக்கும்தோறும் பின்னாலே வருகிறது. ஆண்களிடம் இருந்து தனித்து நின்று சாதிக்க விரும்புகிற, அது சாத்தியப்படாதபோது சோர்வடையாமல் போராடுகிற இப்பெண் பாத்திரங்களும் ஏற்கனவே நாம் இத்தகைய வணிக நாவல்களில் சந்தித்தவர்களே. எனக்கு சிவசங்கரியின் பாத்திரங்கள் நினைவு வந்தார்கள். ஆனால் இவர்கள் முற்றிலும் வேறொரு வர்க்க நிலையில் சூழலில் இருப்பவர்கள். அதேநேரத்தில் இவர்கள் பல்வேறு தந்திரங்களையும் குழப்பங்களையும் கொண்ட முதிர்ச்சிக்கும் குழந்தைமைக்கும் நடுவில் நிற்கிற இன்றைய இளம்பெண்கள் அல்லர். மத்திய வயதினர். இன்றைய மனநிலைக்கும் பழைய மனநிலைக்கும் நடுவில் இருப்பவர்கள். கனவு காண்கிறவர்கள், உத்வேகத்துடன் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடுகிறவர்கள். தடுமாறும்போதும் ஒரு விசை அவர்களைச் செலுத்துகிறது. எந்தக் காரணம் கொண்டும் குடும்பத்துக்குள் நிம்மதியை நாடாதவர்கள். சிவசங்கரியின் நிழல் இருந்தாலும் அதன் மீது புதிய உடலொன்று பொருந்திக் கொள்கிறது. 


வீனஸின்கதைக்களம் எளிமையானது - “வீனஸ்அழகுநிலையத்தை நடத்தும் ரஞ்சனி, அவரது நிலையத்திற்கு வாடிக்கையாளராக வரும் நிஷா எனும் மாடல், சந்தியா எனும் மத்திய வயது, மணமான மேற்தட்டுப் பெண், திலோத்தமா எனும் டயட்டீஷியன், ப்ருத்வி எனும் உடற்பயிற்சியாளரின் தனிக்கதைகள் சற்றே பெரிய அத்தியாயங்களாக அவர்களுடைய பெயரையே தலைப்பாக வைத்து வருகின்றன. இவர்கள்வீனஸுடன்நேரடியாகவே தொடர்பு கொண்டவர்கள் என்பதாலே நாவலுக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது; ஆனால் இக்கதைகள் தனித்தனி சிக்கல்களாலத் தோன்றி வளர்ந்து கதையின் மையச்சிக்கலுடன் வந்து பொருந்துவதில்லை.  இந்த தனி அத்தியாயங்களிலும் கூட அரிதாகத்தான் ஒரு நெருக்கடியான சூழல் தோன்றி வருகிறது. கடைசி அத்தியாயத்தில் ரஞ்சனிக்கு முக்கியமான உதவியொன்றைப் பண்ணின வயதான உளவியல் டாக்டர் அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவளுடன் உடலுறவு கொள்ள சூழலை வியர்த்தமாக முயல்கிற இடத்தைச் சொல்லலாம். ஆனால் அங்கும் ரஞ்சனி சட்டென நெருக்கடியில் இருந்து விலகிக் கொள்கிறார். மற்ற அத்தியாயங்களில் சந்தியாவும் ப்ருத்வியும் வரும் இடங்களில் மீண்டும் இத்தகைய சூழல்கள் வருகையிலும் கதைசொல்லி அதற்கான இடத்தை உருவாக அனுமதிப்பதில்லை. நெருப்பு பற்றிக் கொண்டது ஊதி அணைத்து விடுகிறார். இது இந்நாவலின் முக்கியமான ஒரு பலவீனம்.


பாத்திரங்களை ஒரு கண்மூடித்தனமான முடிவெடுத்து சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்க விடும்போதே நாம் கதையின் கருப்பொருளைக் கண்டடைகிறோம். ஒரு விசாரணையை ஆரம்பிக்கிறோம். அத்தகையை விசாரணை இந்நாவலில் அழகைக் குறித்தும், வாழ்வின் எடையின்மையைக் குறித்தும் நிகழ்த்தியிருக்க இயலும். பா. கண்மணி ஏனோ அதைத் தவிர்த்து விடுகிறார். 


இந்நாவலின் வேறு இரு பிரச்சினைகள் இதில் பாத்திரங்களின் அகவுலகம் பெரிதாகக் காட்டப்படுவதில்லை என்பது. சில இடங்களில் அவர் நமக்கு இந்த அகவுலகைக் காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் - திலோத்தமாவுக்கும் அவளது அப்பாவுக்குமான உறவில் கசப்பு தோன்றி அது கனிவாக மாறும் பத்திகள், சந்தியாவின் கணவரின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களான தம்பதியரில் கணவர் சந்தியாவைக் காமுற்று நெருங்கும்போது அவள் அதை உள்ளூர ரசித்து இணங்க முன்வருவதும், பின்வாங்குவதுமான இடங்களைச் சொல்லலாம். நாவலின் ஓட்டத்தில் திடீரெனத் தோன்றும் இரு பத்திகளில் அகவுலகம் பற்றின விவரணையும் வருகிறது. ஆனால் அதை நோக்கி கண்மணி இன்னும் தீவிரமாகப் போயிருந்தால் நவீன அழகு உற்பத்தி குறித்து ஒரு விவாதத்தைத் திறந்திருக்க முடியும். 


திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதைப் போல கதையின் முடிவையும் எட்டாமல் அவர் பாதியிலே முடித்துவிடுகிறார். அதற்கும் நான் மேலே குறிப்பிட்டதைப் போல அவர் நெருக்கடியான இடங்களை நோக்கி கதையை நகர்த்தி உச்சத்தை நோக்கிக் கொண்டு போகாதது காரணமாக இருக்கலாம். 

இந்த சில குறைகளையும் மீறி இதன் தகவல் செறிவு, தளுக்கான மொழி நம்மை சுண்டி இழுக்கிறது. ஒரு இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...