பா. கண்மணியின் மொழி அழகானது. அவர் தான் வர்ணிக்கும் வீனஸ் அழகு நிலையத்தின் முடிதிருத்த நிபுணர்களின் லாவகத்துடன் தன் காட்சிகளை வர்ணிக்கிறார், இழையிழையாக சொற்களை எடுத்து நறுக்குகிறார், வடிவமைக்கிறார், வண்ணம் பூசுகிறார், ரொம்ப கற்பனாவாதமான ரசனையான சொற்றொடர்களுடன் நம்மைச் சொக்க வைக்கிறார். நுட்பமான புறவிவரணைகளாலும் நம் மனதை ஆட்கொள்கிறார். இந்நாவலின் கதைகூறல் முழுக்க புறவயமாக இருப்பதாலும், இதிலுள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் நேர்கோட்டில், முரணின்றி செயல்படுகிறவர்களாக இருப்பதாலும் நம்மால் இதை வேகமாக ரசித்துப் படித்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, கண்மணியின் மொழி எண்பதுகளில் பிரபலமாக விளங்கிய வணிக நாவலாசிரியர்களின் மொழியை நினைவுபடுத்துகிறது; சில இடங்களில் பாலகுமாரனைப் படிப்பதைப் போல இருக்கிறது; ஆனாலும் இன்னாரின் மொழியைத்தான் அவர் போலச்செய்கிறார் எனச் சொல்ல முடியவில்லை. அதேநேரம் ஏதோ ஒரு நிழல் நாம் படிக்கும்தோறும் பின்னாலே வருகிறது. ஆண்களிடம் இருந்து தனித்து நின்று சாதிக்க விரும்புகிற, அது சாத்தியப்படாதபோது சோர்வடையாமல் போராடுகிற இப்பெண் பாத்திரங்களும் ஏற்கனவே நாம் இத்தகைய வணிக நாவல்களில் சந்தித்தவர்களே. எனக்கு சிவசங்கரியின் பாத்திரங்கள் நினைவு வந்தார்கள். ஆனால் இவர்கள் முற்றிலும் வேறொரு வர்க்க நிலையில் சூழலில் இருப்பவர்கள். அதேநேரத்தில் இவர்கள் பல்வேறு தந்திரங்களையும் குழப்பங்களையும் கொண்ட முதிர்ச்சிக்கும் குழந்தைமைக்கும் நடுவில் நிற்கிற இன்றைய இளம்பெண்கள் அல்லர். மத்திய வயதினர். இன்றைய மனநிலைக்கும் பழைய மனநிலைக்கும் நடுவில் இருப்பவர்கள். கனவு காண்கிறவர்கள், உத்வேகத்துடன் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடுகிறவர்கள். தடுமாறும்போதும் ஒரு விசை அவர்களைச் செலுத்துகிறது. எந்தக் காரணம் கொண்டும் குடும்பத்துக்குள் நிம்மதியை நாடாதவர்கள். சிவசங்கரியின் நிழல் இருந்தாலும் அதன் மீது புதிய உடலொன்று பொருந்திக் கொள்கிறது.
“வீனஸின்” கதைக்களம் எளிமையானது - “வீனஸ்” அழகுநிலையத்தை நடத்தும் ரஞ்சனி, அவரது நிலையத்திற்கு வாடிக்கையாளராக வரும் நிஷா எனும் மாடல், சந்தியா எனும் மத்திய வயது, மணமான மேற்தட்டுப் பெண், திலோத்தமா எனும் டயட்டீஷியன், ப்ருத்வி எனும் உடற்பயிற்சியாளரின் தனிக்கதைகள் சற்றே பெரிய அத்தியாயங்களாக அவர்களுடைய பெயரையே தலைப்பாக வைத்து வருகின்றன. இவர்கள் “வீனஸுடன்” நேரடியாகவே தொடர்பு கொண்டவர்கள் என்பதாலே நாவலுக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது; ஆனால் இக்கதைகள் தனித்தனி சிக்கல்களாலத் தோன்றி வளர்ந்து கதையின் மையச்சிக்கலுடன் வந்து பொருந்துவதில்லை. இந்த தனி அத்தியாயங்களிலும் கூட அரிதாகத்தான் ஒரு நெருக்கடியான சூழல் தோன்றி வருகிறது. கடைசி அத்தியாயத்தில் ரஞ்சனிக்கு முக்கியமான உதவியொன்றைப் பண்ணின வயதான உளவியல் டாக்டர் அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவளுடன் உடலுறவு கொள்ள சூழலை வியர்த்தமாக முயல்கிற இடத்தைச் சொல்லலாம். ஆனால் அங்கும் ரஞ்சனி சட்டென நெருக்கடியில் இருந்து விலகிக் கொள்கிறார். மற்ற அத்தியாயங்களில் சந்தியாவும் ப்ருத்வியும் வரும் இடங்களில் மீண்டும் இத்தகைய சூழல்கள் வருகையிலும் கதைசொல்லி அதற்கான இடத்தை உருவாக அனுமதிப்பதில்லை. நெருப்பு பற்றிக் கொண்டது ஊதி அணைத்து விடுகிறார். இது இந்நாவலின் முக்கியமான ஒரு பலவீனம்.
பாத்திரங்களை ஒரு கண்மூடித்தனமான முடிவெடுத்து சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்க விடும்போதே நாம் கதையின் கருப்பொருளைக் கண்டடைகிறோம். ஒரு விசாரணையை ஆரம்பிக்கிறோம். அத்தகையை விசாரணை இந்நாவலில் அழகைக் குறித்தும், வாழ்வின் எடையின்மையைக் குறித்தும் நிகழ்த்தியிருக்க இயலும். பா. கண்மணி ஏனோ அதைத் தவிர்த்து விடுகிறார்.
இந்நாவலின் வேறு இரு பிரச்சினைகள் இதில் பாத்திரங்களின் அகவுலகம் பெரிதாகக் காட்டப்படுவதில்லை என்பது. சில இடங்களில் அவர் நமக்கு இந்த அகவுலகைக் காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் - திலோத்தமாவுக்கும் அவளது அப்பாவுக்குமான உறவில் கசப்பு தோன்றி அது கனிவாக மாறும் பத்திகள், சந்தியாவின் கணவரின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களான தம்பதியரில் கணவர் சந்தியாவைக் காமுற்று நெருங்கும்போது அவள் அதை உள்ளூர ரசித்து இணங்க முன்வருவதும், பின்வாங்குவதுமான இடங்களைச் சொல்லலாம். நாவலின் ஓட்டத்தில் திடீரெனத் தோன்றும் இரு பத்திகளில் அகவுலகம் பற்றின விவரணையும் வருகிறது. ஆனால் அதை நோக்கி கண்மணி இன்னும் தீவிரமாகப் போயிருந்தால் நவீன அழகு உற்பத்தி குறித்து ஒரு விவாதத்தைத் திறந்திருக்க முடியும்.
திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதைப் போல கதையின் முடிவையும் எட்டாமல் அவர் பாதியிலே முடித்துவிடுகிறார். அதற்கும் நான் மேலே குறிப்பிட்டதைப் போல அவர் நெருக்கடியான இடங்களை நோக்கி கதையை நகர்த்தி உச்சத்தை நோக்கிக் கொண்டு போகாதது காரணமாக இருக்கலாம்.
இந்த சில குறைகளையும் மீறி இதன் தகவல் செறிவு, தளுக்கான மொழி நம்மை சுண்டி இழுக்கிறது. ஒரு இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்கள்.
Comments