Skip to main content

பா. கண்மணியின் “வீனஸ்”



பா. கண்மணியின் மொழி அழகானது. அவர் தான் வர்ணிக்கும் வீனஸ் அழகு நிலையத்தின் முடிதிருத்த நிபுணர்களின் லாவகத்துடன் தன் காட்சிகளை வர்ணிக்கிறார், இழையிழையாக சொற்களை எடுத்து நறுக்குகிறார், வடிவமைக்கிறார், வண்ணம் பூசுகிறார், ரொம்ப கற்பனாவாதமான ரசனையான சொற்றொடர்களுடன் நம்மைச் சொக்க வைக்கிறார். நுட்பமான புறவிவரணைகளாலும் நம் மனதை ஆட்கொள்கிறார். இந்நாவலின் கதைகூறல் முழுக்க புறவயமாக இருப்பதாலும், இதிலுள்ள பாத்திரங்கள் பெரும்பாலும் நேர்கோட்டில், முரணின்றி செயல்படுகிறவர்களாக இருப்பதாலும் நம்மால் இதை வேகமாக ரசித்துப் படித்துவிடக் கூடும். அது மட்டுமல்ல, கண்மணியின் மொழி எண்பதுகளில் பிரபலமாக விளங்கிய வணிக நாவலாசிரியர்களின் மொழியை நினைவுபடுத்துகிறது; சில இடங்களில் பாலகுமாரனைப் படிப்பதைப் போல இருக்கிறது; ஆனாலும் இன்னாரின் மொழியைத்தான் அவர் போலச்செய்கிறார் எனச் சொல்ல முடியவில்லை. அதேநேரம் ஏதோ ஒரு நிழல் நாம் படிக்கும்தோறும் பின்னாலே வருகிறது. ஆண்களிடம் இருந்து தனித்து நின்று சாதிக்க விரும்புகிற, அது சாத்தியப்படாதபோது சோர்வடையாமல் போராடுகிற இப்பெண் பாத்திரங்களும் ஏற்கனவே நாம் இத்தகைய வணிக நாவல்களில் சந்தித்தவர்களே. எனக்கு சிவசங்கரியின் பாத்திரங்கள் நினைவு வந்தார்கள். ஆனால் இவர்கள் முற்றிலும் வேறொரு வர்க்க நிலையில் சூழலில் இருப்பவர்கள். அதேநேரத்தில் இவர்கள் பல்வேறு தந்திரங்களையும் குழப்பங்களையும் கொண்ட முதிர்ச்சிக்கும் குழந்தைமைக்கும் நடுவில் நிற்கிற இன்றைய இளம்பெண்கள் அல்லர். மத்திய வயதினர். இன்றைய மனநிலைக்கும் பழைய மனநிலைக்கும் நடுவில் இருப்பவர்கள். கனவு காண்கிறவர்கள், உத்வேகத்துடன் ஒரு லட்சியத்தை நோக்கி ஓடுகிறவர்கள். தடுமாறும்போதும் ஒரு விசை அவர்களைச் செலுத்துகிறது. எந்தக் காரணம் கொண்டும் குடும்பத்துக்குள் நிம்மதியை நாடாதவர்கள். சிவசங்கரியின் நிழல் இருந்தாலும் அதன் மீது புதிய உடலொன்று பொருந்திக் கொள்கிறது. 


வீனஸின்கதைக்களம் எளிமையானது - “வீனஸ்அழகுநிலையத்தை நடத்தும் ரஞ்சனி, அவரது நிலையத்திற்கு வாடிக்கையாளராக வரும் நிஷா எனும் மாடல், சந்தியா எனும் மத்திய வயது, மணமான மேற்தட்டுப் பெண், திலோத்தமா எனும் டயட்டீஷியன், ப்ருத்வி எனும் உடற்பயிற்சியாளரின் தனிக்கதைகள் சற்றே பெரிய அத்தியாயங்களாக அவர்களுடைய பெயரையே தலைப்பாக வைத்து வருகின்றன. இவர்கள்வீனஸுடன்நேரடியாகவே தொடர்பு கொண்டவர்கள் என்பதாலே நாவலுக்கு ஒரு வடிவம் கிடைக்கிறது; ஆனால் இக்கதைகள் தனித்தனி சிக்கல்களாலத் தோன்றி வளர்ந்து கதையின் மையச்சிக்கலுடன் வந்து பொருந்துவதில்லை.  இந்த தனி அத்தியாயங்களிலும் கூட அரிதாகத்தான் ஒரு நெருக்கடியான சூழல் தோன்றி வருகிறது. கடைசி அத்தியாயத்தில் ரஞ்சனிக்கு முக்கியமான உதவியொன்றைப் பண்ணின வயதான உளவியல் டாக்டர் அவளிடம் தன் காதலைத் தெரிவித்து அவளுடன் உடலுறவு கொள்ள சூழலை வியர்த்தமாக முயல்கிற இடத்தைச் சொல்லலாம். ஆனால் அங்கும் ரஞ்சனி சட்டென நெருக்கடியில் இருந்து விலகிக் கொள்கிறார். மற்ற அத்தியாயங்களில் சந்தியாவும் ப்ருத்வியும் வரும் இடங்களில் மீண்டும் இத்தகைய சூழல்கள் வருகையிலும் கதைசொல்லி அதற்கான இடத்தை உருவாக அனுமதிப்பதில்லை. நெருப்பு பற்றிக் கொண்டது ஊதி அணைத்து விடுகிறார். இது இந்நாவலின் முக்கியமான ஒரு பலவீனம்.


பாத்திரங்களை ஒரு கண்மூடித்தனமான முடிவெடுத்து சிக்கலை மேலும் மேலும் சிக்கலாக்க விடும்போதே நாம் கதையின் கருப்பொருளைக் கண்டடைகிறோம். ஒரு விசாரணையை ஆரம்பிக்கிறோம். அத்தகையை விசாரணை இந்நாவலில் அழகைக் குறித்தும், வாழ்வின் எடையின்மையைக் குறித்தும் நிகழ்த்தியிருக்க இயலும். பா. கண்மணி ஏனோ அதைத் தவிர்த்து விடுகிறார். 


இந்நாவலின் வேறு இரு பிரச்சினைகள் இதில் பாத்திரங்களின் அகவுலகம் பெரிதாகக் காட்டப்படுவதில்லை என்பது. சில இடங்களில் அவர் நமக்கு இந்த அகவுலகைக் காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் - திலோத்தமாவுக்கும் அவளது அப்பாவுக்குமான உறவில் கசப்பு தோன்றி அது கனிவாக மாறும் பத்திகள், சந்தியாவின் கணவரின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களான தம்பதியரில் கணவர் சந்தியாவைக் காமுற்று நெருங்கும்போது அவள் அதை உள்ளூர ரசித்து இணங்க முன்வருவதும், பின்வாங்குவதுமான இடங்களைச் சொல்லலாம். நாவலின் ஓட்டத்தில் திடீரெனத் தோன்றும் இரு பத்திகளில் அகவுலகம் பற்றின விவரணையும் வருகிறது. ஆனால் அதை நோக்கி கண்மணி இன்னும் தீவிரமாகப் போயிருந்தால் நவீன அழகு உற்பத்தி குறித்து ஒரு விவாதத்தைத் திறந்திருக்க முடியும். 


திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதைப் போல கதையின் முடிவையும் எட்டாமல் அவர் பாதியிலே முடித்துவிடுகிறார். அதற்கும் நான் மேலே குறிப்பிட்டதைப் போல அவர் நெருக்கடியான இடங்களை நோக்கி கதையை நகர்த்தி உச்சத்தை நோக்கிக் கொண்டு போகாதது காரணமாக இருக்கலாம். 

இந்த சில குறைகளையும் மீறி இதன் தகவல் செறிவு, தளுக்கான மொழி நம்மை சுண்டி இழுக்கிறது. ஒரு இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. படித்துப் பாருங்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...