Skip to main content

ராஜேஷ் குமார்

 


"சாய் வித் சித்ராவில்" வணிக நாவலாசிரியர் ராஜேஷ் குமாரின் நேர்முகத்தைப் பார்த்தேன். எனக்கு அவரது நாவல்கள் பிடிக்காது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். அவை வணிகப் படைப்புகள் எனபதால் அல்ல. லாஜிக் கன்னாபின்னாவென்று இருக்கும். அதைப் பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்காதபடி கதையை வேகமாக நகர்த்துவார் என்பதால். ஆனால் இந்த நேர்முகத்தைப் பார்த்தபோது அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. அவரிடம் ஒருவிதமான குழந்தைமை உள்ளது. எதையும் மிக மிக நேரடியாகப் புரிந்துகொள்கிறார். குழந்தைகளிடம் சாமியிடம் வேண்டினால் எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று சொன்னதும் நம்புமே ராஜேஷ் குமாரும் அம்மாதிரி யோசிக்கிறவரே. ஒரு கருத்தை, உணர்வு வெளிப்பாட்டை அதன் மறைமுகமான சாத்தியங்களைப் பரிசீலிப்பவரோ நேரடியாக வெளிப்படாவற்றைத் (unmanifested) தேடுகிறவரோ அல்லர் அவர். மொழி விளையாட்டுகளும் அவரிடம் அதிகம் இருக்காது. அதேநேரம் ரொம்பத் தீவிரமான உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கிறவரோ எழுதுகிறவரோ அல்லர். எளிய நேரடியான விதிமுறைகளின் படி ஆடப்படும் விளையாட்டுதான் அவரது நாவல்கள். அவ்விளையாட்டுதான் அவரது வாழ்க்கையும் என்று அவரது பதில்களைக் கேட்டபோது தோன்றியது.

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்கள் வட்டமேஜை விவாதத்தில் பேசிய வணிக எழுத்தாளர்கள் இப்படியானவர்கள் அல்லர் - அவர்களிடம் பேச்சு சாதுர்யமும் கருத்துக்களின் பின்வாசலைத் திறந்து பார்க்கும் உத்தேசமும் இருந்தது. ராஜேஷ் குமாருக்கு பின்வாசல் இருப்பது தெரிந்தாலும் முன்வாசலில் மட்டும்தான் நுழைவார்.

ஆச்சரியமாக அந்நேர்முகம் குறித்து அவர் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து பேசும்போதும் அகத்தீமையைக் குறித்துப் பேசவில்லை. சமூகப் பிரச்சினைகள், துயரங்களைப் பேசுவதிலும் ஆர்வமுண்டு என்றாலும் அவை மனித மனத்தின் கீழ்மைகளின் எல்லைகளை எப்படி வெளிச்சமிடுகின்றன என்பதற்குள் அவரது சிந்தனையே போகாது. எழுத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான். அவர் தன் பெற்றோரைப் பற்றிப் பேசுவதிலும் ஒரு எட்டு வயதுக் குழந்தையின் அணுகுமுறையே உள்ளது. அவர் பேஸ்புக்கில் எழுதும் பதிவுகளுக்கு வரும் விருப்பக்குறிகளைக் குறித்து வியப்பாகப் பேசும்போதும் எனக்கு அங்கு ஒரு மிகச்சிறு குழந்தையே தெரிந்தது. குழந்தைகளால் மொழியின் நிழலைப் பார்க்க முடியாது. அவர்கள் மொழியின் நேரடிப் பொருளை மட்டுமே காண்பர்.
இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கையில் எனக்கு அவரது எழுத்து குறித்து இன்னொரு பரிமாணம் தென்பட்டது. அவரால் வேறெப்படியும் இருக்க முடியாது, வேறெப்படியும் எழுதவும் முடியாது. இப்படித்தான் இயலும். இதைப் படித்து ரசிக்கவும் லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் எனும்போது இது ஒரு மனநிலை மட்டுமல்ல பண்பாட்டு நிலையும்தான் எனத் தோன்றியது. அவர் தான் அதிகம் படிக்காத எளிய மக்களுக்காக (உ.தா சுமை தூக்கும் தொழிலாளர்கள்) எழுதுவதாகச் சொல்லும்போதே அண்மையில் ஒரு படித்த இளைஞரும் தன் நாவலை ரயில் பயணத்தின்போது படித்ததைத் தான் பார்த்ததாகவும் சொன்னார். இந்தப் பண்பாடு நம் சமூகத்தின் மையத்தில் எங்கோ இருக்கிறது. பொழுதுபோக்கையும் நம்மால் மிக நேரடியாகவே பார்க்க இயல்கிறது. ஒளியின் பாதையை நேரடியாகக் காண்போம், ஆனால் அது தோற்றுவிக்கும் நிழலை, அதன் மாற்று அர்த்தங்களை, அதன் கற்பனைச் சாத்தியங்களைப் பார்க்க மாட்டோம்.
ராஜேஷ் குமாருக்குத் தன் எழுத்து குறித்து இருந்த பெருமையும் என்னை வெகுவாக ஈர்த்தது. இதையும் நான் வேறெந்த வணிகப் படைப்பாளியிடமும் கண்டதில்லை. பாலகுமாரன் கூட எழுத்தைத் தன் சுயத்தின் வல்லமையாகவேதான் பார்க்கிறார்; அவருக்கு எழுத்தென்பது தான் மட்டும்தான், படைப்பாக்த் தன்னிலை அல்ல. வேறு சிலர் பேசும்போது தம் எழுத்துலச் சாதனைகளைப் பற்றிச் சொல்வார்கள். விருதுகள், பயணம் என்பது. இன்னும் சிலருக்கு எழுத்தென்பது தொழில் மட்டுமே. எவ்வளவு சம்பாதித்தோம், வீடு கட்டினோம், கார் வாங்கினோம் இப்படிப் பேசுவார்கள். இந்த நேர்முகத்தில் ராஜேஷ் குமார் எங்குமே தான் எழுதி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதைக் குறிப்பிடவில்லை. ராஜேஷ் குமாருக்குத் தன் நாவல்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பது, அதை வாசகர்கள் தம்மை மறந்து வாசித்திருப்பதுதான் முக்கியம். அதைக் குறித்தே சிலாகிக்கிறார். இது எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.
இந்நேர்முகத்தில் கலைஞர் ராஜேஷ் குமார் கின்னஸ் சாதனையை நெருங்குவதாக ஒரு செய்திக் கட்டுரையை ஹிந்து ஆங்கில நாளிதழில் படித்துவிட்டு அவருக்கு கலைமாமணி விருதைக் கொடுக்க பரிந்துரைத்ததாக சொல்லும் செய்தி சுவாரஸ்யமானது. கலைஞர் புத்திசாலித்தனமான அரசியல்வாதி. ஒரு கணத்தில் அவர் மனம் கணக்குப் போட்டிருக்கும் - இவருக்கு அரசின் சார்பில் விருது கிடைத்தபின் இவருக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அது அரசுக்கு பெருமை சேர்க்கும் என்று யோசித்திருப்பார். ஆனால் ராஜேஷ் குமார் இப்படியெல்லாம் யோசிக்கக் கூடியவர் அல்ல. அவருக்கு எல்லாமே நேர்ச்சிந்தனைதான். தன் எழுத்தை கலைஞர் அங்கீகரிக்கிறார், நல்ல மனிதர் என்று பெருமைப்படுகிறார். இதிலெல்லாம் ஒருவித க்யூட்னெஸ் உள்ளது.

அவர் தன் வாழ்க்கையின் பாதை எப்படியெல்லாம் மாறியது, அவருக்கு கிடைத்த திருப்புமுனைகளை வர்ணிக்கும் இடங்களை ரசித்தேன். ஒரு அரசு வேலைக்கான நேர்முகத்தின்போது சைக்கிளின் ஸ்டாண்டில் வைத்திருந்த அவரது சான்றிதழ் கோப்பு வரும் வழியில் கீழே விழுந்து தொலைந்து போகிறது. அது பின்னர் கிடைத்தாலும் அவகாசம் கடந்து விட்டதால் அரசு வேலையும் பறிபோகிறது. அப்போதும் அவர் தான் இன்னதெல்லாம் செய்து அந்நிலையைத் தவிர்த்திருக்கலாம் எனக் கணக்குப் போடவில்லை. நடந்துவிட்டது, அவ்வளவுதான் எனக் கடக்கிறார். இன்னொரு முறை அவருக்கு அரசு வேலை கிடைத்து மாறுதலாகி பண்ரூட்டி பக்கத்தில் பாலூர் எனும் குக்கிராமத்துக்குப் போகிறார். அங்கு அவரை தலைமை ஆசிரியர் ஏமாற்றி திரும்ப அனுப்புகிறார். அங்கு மலேரியா கொசு அதிகம் என அவர் சொன்னதை நம்பி இவர் தன் அம்மாவிடம் சொல்ல அம்மா "சீக்கிரம் வந்திருப்பா" என்கிறார். இவரும் வந்து விடுகிறார். தன்னை ஏன் ஏமாற்றினார் என யோசிப்பதில்லை.

மேலும், அவருக்கு சின்னச்சின்ன சம்பவங்களை நம்மை ஈர்க்கும் விதம் வர்ணிக்கத் தெரிகிறது.

நேர்முகத்துக்கு எட்டு பகுதிகள் என நினைக்கிறேன். முகத்தில் நீங்காப் புன்னகையுடன் ஒரேயடியாகப் பார்த்து முடித்தேன். ராஜேஷ் குமார் அவரது நாவல்களை விட சுவாரஸ்யமானவர்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...