Skip to main content

ராஜேஷ் குமார்

 


"சாய் வித் சித்ராவில்" வணிக நாவலாசிரியர் ராஜேஷ் குமாரின் நேர்முகத்தைப் பார்த்தேன். எனக்கு அவரது நாவல்கள் பிடிக்காது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். அவை வணிகப் படைப்புகள் எனபதால் அல்ல. லாஜிக் கன்னாபின்னாவென்று இருக்கும். அதைப் பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்காதபடி கதையை வேகமாக நகர்த்துவார் என்பதால். ஆனால் இந்த நேர்முகத்தைப் பார்த்தபோது அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. அவரிடம் ஒருவிதமான குழந்தைமை உள்ளது. எதையும் மிக மிக நேரடியாகப் புரிந்துகொள்கிறார். குழந்தைகளிடம் சாமியிடம் வேண்டினால் எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று சொன்னதும் நம்புமே ராஜேஷ் குமாரும் அம்மாதிரி யோசிக்கிறவரே. ஒரு கருத்தை, உணர்வு வெளிப்பாட்டை அதன் மறைமுகமான சாத்தியங்களைப் பரிசீலிப்பவரோ நேரடியாக வெளிப்படாவற்றைத் (unmanifested) தேடுகிறவரோ அல்லர் அவர். மொழி விளையாட்டுகளும் அவரிடம் அதிகம் இருக்காது. அதேநேரம் ரொம்பத் தீவிரமான உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கிறவரோ எழுதுகிறவரோ அல்லர். எளிய நேரடியான விதிமுறைகளின் படி ஆடப்படும் விளையாட்டுதான் அவரது நாவல்கள். அவ்விளையாட்டுதான் அவரது வாழ்க்கையும் என்று அவரது பதில்களைக் கேட்டபோது தோன்றியது.

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்கள் வட்டமேஜை விவாதத்தில் பேசிய வணிக எழுத்தாளர்கள் இப்படியானவர்கள் அல்லர் - அவர்களிடம் பேச்சு சாதுர்யமும் கருத்துக்களின் பின்வாசலைத் திறந்து பார்க்கும் உத்தேசமும் இருந்தது. ராஜேஷ் குமாருக்கு பின்வாசல் இருப்பது தெரிந்தாலும் முன்வாசலில் மட்டும்தான் நுழைவார்.

ஆச்சரியமாக அந்நேர்முகம் குறித்து அவர் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து பேசும்போதும் அகத்தீமையைக் குறித்துப் பேசவில்லை. சமூகப் பிரச்சினைகள், துயரங்களைப் பேசுவதிலும் ஆர்வமுண்டு என்றாலும் அவை மனித மனத்தின் கீழ்மைகளின் எல்லைகளை எப்படி வெளிச்சமிடுகின்றன என்பதற்குள் அவரது சிந்தனையே போகாது. எழுத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான். அவர் தன் பெற்றோரைப் பற்றிப் பேசுவதிலும் ஒரு எட்டு வயதுக் குழந்தையின் அணுகுமுறையே உள்ளது. அவர் பேஸ்புக்கில் எழுதும் பதிவுகளுக்கு வரும் விருப்பக்குறிகளைக் குறித்து வியப்பாகப் பேசும்போதும் எனக்கு அங்கு ஒரு மிகச்சிறு குழந்தையே தெரிந்தது. குழந்தைகளால் மொழியின் நிழலைப் பார்க்க முடியாது. அவர்கள் மொழியின் நேரடிப் பொருளை மட்டுமே காண்பர்.
இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கையில் எனக்கு அவரது எழுத்து குறித்து இன்னொரு பரிமாணம் தென்பட்டது. அவரால் வேறெப்படியும் இருக்க முடியாது, வேறெப்படியும் எழுதவும் முடியாது. இப்படித்தான் இயலும். இதைப் படித்து ரசிக்கவும் லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் எனும்போது இது ஒரு மனநிலை மட்டுமல்ல பண்பாட்டு நிலையும்தான் எனத் தோன்றியது. அவர் தான் அதிகம் படிக்காத எளிய மக்களுக்காக (உ.தா சுமை தூக்கும் தொழிலாளர்கள்) எழுதுவதாகச் சொல்லும்போதே அண்மையில் ஒரு படித்த இளைஞரும் தன் நாவலை ரயில் பயணத்தின்போது படித்ததைத் தான் பார்த்ததாகவும் சொன்னார். இந்தப் பண்பாடு நம் சமூகத்தின் மையத்தில் எங்கோ இருக்கிறது. பொழுதுபோக்கையும் நம்மால் மிக நேரடியாகவே பார்க்க இயல்கிறது. ஒளியின் பாதையை நேரடியாகக் காண்போம், ஆனால் அது தோற்றுவிக்கும் நிழலை, அதன் மாற்று அர்த்தங்களை, அதன் கற்பனைச் சாத்தியங்களைப் பார்க்க மாட்டோம்.
ராஜேஷ் குமாருக்குத் தன் எழுத்து குறித்து இருந்த பெருமையும் என்னை வெகுவாக ஈர்த்தது. இதையும் நான் வேறெந்த வணிகப் படைப்பாளியிடமும் கண்டதில்லை. பாலகுமாரன் கூட எழுத்தைத் தன் சுயத்தின் வல்லமையாகவேதான் பார்க்கிறார்; அவருக்கு எழுத்தென்பது தான் மட்டும்தான், படைப்பாக்த் தன்னிலை அல்ல. வேறு சிலர் பேசும்போது தம் எழுத்துலச் சாதனைகளைப் பற்றிச் சொல்வார்கள். விருதுகள், பயணம் என்பது. இன்னும் சிலருக்கு எழுத்தென்பது தொழில் மட்டுமே. எவ்வளவு சம்பாதித்தோம், வீடு கட்டினோம், கார் வாங்கினோம் இப்படிப் பேசுவார்கள். இந்த நேர்முகத்தில் ராஜேஷ் குமார் எங்குமே தான் எழுதி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதைக் குறிப்பிடவில்லை. ராஜேஷ் குமாருக்குத் தன் நாவல்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பது, அதை வாசகர்கள் தம்மை மறந்து வாசித்திருப்பதுதான் முக்கியம். அதைக் குறித்தே சிலாகிக்கிறார். இது எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.
இந்நேர்முகத்தில் கலைஞர் ராஜேஷ் குமார் கின்னஸ் சாதனையை நெருங்குவதாக ஒரு செய்திக் கட்டுரையை ஹிந்து ஆங்கில நாளிதழில் படித்துவிட்டு அவருக்கு கலைமாமணி விருதைக் கொடுக்க பரிந்துரைத்ததாக சொல்லும் செய்தி சுவாரஸ்யமானது. கலைஞர் புத்திசாலித்தனமான அரசியல்வாதி. ஒரு கணத்தில் அவர் மனம் கணக்குப் போட்டிருக்கும் - இவருக்கு அரசின் சார்பில் விருது கிடைத்தபின் இவருக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அது அரசுக்கு பெருமை சேர்க்கும் என்று யோசித்திருப்பார். ஆனால் ராஜேஷ் குமார் இப்படியெல்லாம் யோசிக்கக் கூடியவர் அல்ல. அவருக்கு எல்லாமே நேர்ச்சிந்தனைதான். தன் எழுத்தை கலைஞர் அங்கீகரிக்கிறார், நல்ல மனிதர் என்று பெருமைப்படுகிறார். இதிலெல்லாம் ஒருவித க்யூட்னெஸ் உள்ளது.

அவர் தன் வாழ்க்கையின் பாதை எப்படியெல்லாம் மாறியது, அவருக்கு கிடைத்த திருப்புமுனைகளை வர்ணிக்கும் இடங்களை ரசித்தேன். ஒரு அரசு வேலைக்கான நேர்முகத்தின்போது சைக்கிளின் ஸ்டாண்டில் வைத்திருந்த அவரது சான்றிதழ் கோப்பு வரும் வழியில் கீழே விழுந்து தொலைந்து போகிறது. அது பின்னர் கிடைத்தாலும் அவகாசம் கடந்து விட்டதால் அரசு வேலையும் பறிபோகிறது. அப்போதும் அவர் தான் இன்னதெல்லாம் செய்து அந்நிலையைத் தவிர்த்திருக்கலாம் எனக் கணக்குப் போடவில்லை. நடந்துவிட்டது, அவ்வளவுதான் எனக் கடக்கிறார். இன்னொரு முறை அவருக்கு அரசு வேலை கிடைத்து மாறுதலாகி பண்ரூட்டி பக்கத்தில் பாலூர் எனும் குக்கிராமத்துக்குப் போகிறார். அங்கு அவரை தலைமை ஆசிரியர் ஏமாற்றி திரும்ப அனுப்புகிறார். அங்கு மலேரியா கொசு அதிகம் என அவர் சொன்னதை நம்பி இவர் தன் அம்மாவிடம் சொல்ல அம்மா "சீக்கிரம் வந்திருப்பா" என்கிறார். இவரும் வந்து விடுகிறார். தன்னை ஏன் ஏமாற்றினார் என யோசிப்பதில்லை.

மேலும், அவருக்கு சின்னச்சின்ன சம்பவங்களை நம்மை ஈர்க்கும் விதம் வர்ணிக்கத் தெரிகிறது.

நேர்முகத்துக்கு எட்டு பகுதிகள் என நினைக்கிறேன். முகத்தில் நீங்காப் புன்னகையுடன் ஒரேயடியாகப் பார்த்து முடித்தேன். ராஜேஷ் குமார் அவரது நாவல்களை விட சுவாரஸ்யமானவர்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...