Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ராஜேஷ் குமார்

 


"சாய் வித் சித்ராவில்" வணிக நாவலாசிரியர் ராஜேஷ் குமாரின் நேர்முகத்தைப் பார்த்தேன். எனக்கு அவரது நாவல்கள் பிடிக்காது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். அவை வணிகப் படைப்புகள் எனபதால் அல்ல. லாஜிக் கன்னாபின்னாவென்று இருக்கும். அதைப் பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்காதபடி கதையை வேகமாக நகர்த்துவார் என்பதால். ஆனால் இந்த நேர்முகத்தைப் பார்த்தபோது அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. அவரிடம் ஒருவிதமான குழந்தைமை உள்ளது. எதையும் மிக மிக நேரடியாகப் புரிந்துகொள்கிறார். குழந்தைகளிடம் சாமியிடம் வேண்டினால் எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று சொன்னதும் நம்புமே ராஜேஷ் குமாரும் அம்மாதிரி யோசிக்கிறவரே. ஒரு கருத்தை, உணர்வு வெளிப்பாட்டை அதன் மறைமுகமான சாத்தியங்களைப் பரிசீலிப்பவரோ நேரடியாக வெளிப்படாவற்றைத் (unmanifested) தேடுகிறவரோ அல்லர் அவர். மொழி விளையாட்டுகளும் அவரிடம் அதிகம் இருக்காது. அதேநேரம் ரொம்பத் தீவிரமான உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கிறவரோ எழுதுகிறவரோ அல்லர். எளிய நேரடியான விதிமுறைகளின் படி ஆடப்படும் விளையாட்டுதான் அவரது நாவல்கள். அவ்விளையாட்டுதான் அவரது வாழ்க்கையும் என்று அவரது பதில்களைக் கேட்டபோது தோன்றியது.

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்கள் வட்டமேஜை விவாதத்தில் பேசிய வணிக எழுத்தாளர்கள் இப்படியானவர்கள் அல்லர் - அவர்களிடம் பேச்சு சாதுர்யமும் கருத்துக்களின் பின்வாசலைத் திறந்து பார்க்கும் உத்தேசமும் இருந்தது. ராஜேஷ் குமாருக்கு பின்வாசல் இருப்பது தெரிந்தாலும் முன்வாசலில் மட்டும்தான் நுழைவார்.

ஆச்சரியமாக அந்நேர்முகம் குறித்து அவர் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து பேசும்போதும் அகத்தீமையைக் குறித்துப் பேசவில்லை. சமூகப் பிரச்சினைகள், துயரங்களைப் பேசுவதிலும் ஆர்வமுண்டு என்றாலும் அவை மனித மனத்தின் கீழ்மைகளின் எல்லைகளை எப்படி வெளிச்சமிடுகின்றன என்பதற்குள் அவரது சிந்தனையே போகாது. எழுத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான். அவர் தன் பெற்றோரைப் பற்றிப் பேசுவதிலும் ஒரு எட்டு வயதுக் குழந்தையின் அணுகுமுறையே உள்ளது. அவர் பேஸ்புக்கில் எழுதும் பதிவுகளுக்கு வரும் விருப்பக்குறிகளைக் குறித்து வியப்பாகப் பேசும்போதும் எனக்கு அங்கு ஒரு மிகச்சிறு குழந்தையே தெரிந்தது. குழந்தைகளால் மொழியின் நிழலைப் பார்க்க முடியாது. அவர்கள் மொழியின் நேரடிப் பொருளை மட்டுமே காண்பர்.
இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கையில் எனக்கு அவரது எழுத்து குறித்து இன்னொரு பரிமாணம் தென்பட்டது. அவரால் வேறெப்படியும் இருக்க முடியாது, வேறெப்படியும் எழுதவும் முடியாது. இப்படித்தான் இயலும். இதைப் படித்து ரசிக்கவும் லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் எனும்போது இது ஒரு மனநிலை மட்டுமல்ல பண்பாட்டு நிலையும்தான் எனத் தோன்றியது. அவர் தான் அதிகம் படிக்காத எளிய மக்களுக்காக (உ.தா சுமை தூக்கும் தொழிலாளர்கள்) எழுதுவதாகச் சொல்லும்போதே அண்மையில் ஒரு படித்த இளைஞரும் தன் நாவலை ரயில் பயணத்தின்போது படித்ததைத் தான் பார்த்ததாகவும் சொன்னார். இந்தப் பண்பாடு நம் சமூகத்தின் மையத்தில் எங்கோ இருக்கிறது. பொழுதுபோக்கையும் நம்மால் மிக நேரடியாகவே பார்க்க இயல்கிறது. ஒளியின் பாதையை நேரடியாகக் காண்போம், ஆனால் அது தோற்றுவிக்கும் நிழலை, அதன் மாற்று அர்த்தங்களை, அதன் கற்பனைச் சாத்தியங்களைப் பார்க்க மாட்டோம்.
ராஜேஷ் குமாருக்குத் தன் எழுத்து குறித்து இருந்த பெருமையும் என்னை வெகுவாக ஈர்த்தது. இதையும் நான் வேறெந்த வணிகப் படைப்பாளியிடமும் கண்டதில்லை. பாலகுமாரன் கூட எழுத்தைத் தன் சுயத்தின் வல்லமையாகவேதான் பார்க்கிறார்; அவருக்கு எழுத்தென்பது தான் மட்டும்தான், படைப்பாக்த் தன்னிலை அல்ல. வேறு சிலர் பேசும்போது தம் எழுத்துலச் சாதனைகளைப் பற்றிச் சொல்வார்கள். விருதுகள், பயணம் என்பது. இன்னும் சிலருக்கு எழுத்தென்பது தொழில் மட்டுமே. எவ்வளவு சம்பாதித்தோம், வீடு கட்டினோம், கார் வாங்கினோம் இப்படிப் பேசுவார்கள். இந்த நேர்முகத்தில் ராஜேஷ் குமார் எங்குமே தான் எழுதி எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதைக் குறிப்பிடவில்லை. ராஜேஷ் குமாருக்குத் தன் நாவல்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பது, அதை வாசகர்கள் தம்மை மறந்து வாசித்திருப்பதுதான் முக்கியம். அதைக் குறித்தே சிலாகிக்கிறார். இது எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.
இந்நேர்முகத்தில் கலைஞர் ராஜேஷ் குமார் கின்னஸ் சாதனையை நெருங்குவதாக ஒரு செய்திக் கட்டுரையை ஹிந்து ஆங்கில நாளிதழில் படித்துவிட்டு அவருக்கு கலைமாமணி விருதைக் கொடுக்க பரிந்துரைத்ததாக சொல்லும் செய்தி சுவாரஸ்யமானது. கலைஞர் புத்திசாலித்தனமான அரசியல்வாதி. ஒரு கணத்தில் அவர் மனம் கணக்குப் போட்டிருக்கும் - இவருக்கு அரசின் சார்பில் விருது கிடைத்தபின் இவருக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் அது அரசுக்கு பெருமை சேர்க்கும் என்று யோசித்திருப்பார். ஆனால் ராஜேஷ் குமார் இப்படியெல்லாம் யோசிக்கக் கூடியவர் அல்ல. அவருக்கு எல்லாமே நேர்ச்சிந்தனைதான். தன் எழுத்தை கலைஞர் அங்கீகரிக்கிறார், நல்ல மனிதர் என்று பெருமைப்படுகிறார். இதிலெல்லாம் ஒருவித க்யூட்னெஸ் உள்ளது.

அவர் தன் வாழ்க்கையின் பாதை எப்படியெல்லாம் மாறியது, அவருக்கு கிடைத்த திருப்புமுனைகளை வர்ணிக்கும் இடங்களை ரசித்தேன். ஒரு அரசு வேலைக்கான நேர்முகத்தின்போது சைக்கிளின் ஸ்டாண்டில் வைத்திருந்த அவரது சான்றிதழ் கோப்பு வரும் வழியில் கீழே விழுந்து தொலைந்து போகிறது. அது பின்னர் கிடைத்தாலும் அவகாசம் கடந்து விட்டதால் அரசு வேலையும் பறிபோகிறது. அப்போதும் அவர் தான் இன்னதெல்லாம் செய்து அந்நிலையைத் தவிர்த்திருக்கலாம் எனக் கணக்குப் போடவில்லை. நடந்துவிட்டது, அவ்வளவுதான் எனக் கடக்கிறார். இன்னொரு முறை அவருக்கு அரசு வேலை கிடைத்து மாறுதலாகி பண்ரூட்டி பக்கத்தில் பாலூர் எனும் குக்கிராமத்துக்குப் போகிறார். அங்கு அவரை தலைமை ஆசிரியர் ஏமாற்றி திரும்ப அனுப்புகிறார். அங்கு மலேரியா கொசு அதிகம் என அவர் சொன்னதை நம்பி இவர் தன் அம்மாவிடம் சொல்ல அம்மா "சீக்கிரம் வந்திருப்பா" என்கிறார். இவரும் வந்து விடுகிறார். தன்னை ஏன் ஏமாற்றினார் என யோசிப்பதில்லை.

மேலும், அவருக்கு சின்னச்சின்ன சம்பவங்களை நம்மை ஈர்க்கும் விதம் வர்ணிக்கத் தெரிகிறது.

நேர்முகத்துக்கு எட்டு பகுதிகள் என நினைக்கிறேன். முகத்தில் நீங்காப் புன்னகையுடன் ஒரேயடியாகப் பார்த்து முடித்தேன். ராஜேஷ் குமார் அவரது நாவல்களை விட சுவாரஸ்யமானவர்.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி

எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன . இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது . நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு , வம்பு , கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம் . அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் . ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர் , பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர் , அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள் , அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை . இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா ? இருந்தார்கள் , இருக்கிறார்கள் , இருப்பார்கள் . இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது , கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள் . குற்றங்கள் கூட அல்ல . ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள் , சினிமா தயாரிப்பாளர்கள் , மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் . பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....