வைரமுத்துவிற்கு ஞானபீடம் வழங்குவதை விமர்சிக்கும் தகுதியை இன்று நவீன இலக்கியவாதிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் இழந்துவிட்டோம். ஏனென்றால் நவீனப் படைப்பாளிகளே ஒரு பக்கம் இலக்கிய லாபி ஊழலில் ஈடுபடுகிறார்கள். இன்னொரு பக்கம் (ஒன்றிய / மாநில) ஆளும் அரசின் நிலைய வித்துவான்களாக மாறுகிறார்கள். சரி நேரடியாக இப்படி இலக்கிய, அரசியல் லாபியிங் செய்யாதவர்களாகத் தேடி எடுத்து ஆதரிக்கலாம் என நினைத்தால் அவர்களும் இரவோடு இரவாக தலையில் துண்டு போட்டுக்கொண்டு மறைமுகமாக இத்தகைய குழுக்களில் போய் இணைந்து கொள்கிறார்கள். தமிழில் தலைசிறந்த படைப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஞானபீடம் கொடுங்களேன் எனப் பட்டியலிடலாம் எனப் பார்த்தால் அவர்கள் தமக்கான மறைமுக முகவர்களாக, விளம்பர மாடல்களாக நம்மை மாற்றி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. மனிதர்கள் பரஸ்பரம் பயன்படுத்தலாம், ஆனால் அதையே ஒரு தொழிலாக்கி, கம்பெனியாக்கி, பிராஞ்சைஸ் அளவுக்குக் கொண்டு போகக் கூடாது. இலக்கியத்தைப் "பயன்படுத்துவது" தப்பு. இலக்கியத்தை எழுதவும் பேசவும் நேசிக்கவும் அதன் மகத்துவத்தைப் பரப்பவும் வேண்டும். ஆனால் அதை எப்படிச் செய்வது என்ற தெரிய முடியாத அளவுக்கு இலக்கியத்தை ஆசிரமமாக்கி ஜக்கிவாசுதேவ் லெவலுக்கு எடுத்துப் போகிறோம். வைரமுத்துவை விட இவர்களால்தான் இலக்கியத்துக்கு ஆபத்து.
இலக்கியத்தை வைத்து ஊழல் செய்தால் என்ன நல்ல இலக்கியம் வளருமே என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தை வைத்து ஊழல் செய்தால் யாராலுமே நல்ல இலக்கியம் எழுத முடியாமல், சுதந்திரமாக எழுத முடியாமல் போகும் என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் இன்னொருவர் கழுத்தின் மீது கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலே இருப்பவர்கள் "என் தயவு உனக்குத் தேவைப்படும்" எனச் சொல்லாமலே உணர்த்துகிறார்கள். டிரம்பின் ஏவுகணைகள், டுரோன் தாக்குதல்களைப் போல நம் இலக்கிய அமைப்புகளை உருவாக்குவோர் விருது, பயணம் ஆகிய அனுகூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். இலக்கியம் எழுதுகிற நிம்மதியான சூழல் போய் எல்லாருமே பொய் சொல்லவும், ஜால்ரா போடவும், அரசுக்கு சதா இணங்கிப் போகவும், அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருக்கவும் முயல்கிற சூழல் இன்று ஏற்பட்டிருக்கிறது. சிலர் தம் கொள்கைக்கு இணக்கமான எம்.எல்.ஏ, எம்பிக்களின் கறுப்புப் பணத்தை இத்தகைய இலக்கிய அமைப்புகளின் பெயரில் நிலமாக வாங்கி முதலீடு செய்வதாகவும், அதன் மீது கேள்வி எழாதபடிக்கு நிகழ்ச்சி நடத்தி விருதுகள் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டேன். நம்மூரில் பிரசுரிக்கப்படுவனற்றை விட கேள்விப்படுபவையே உண்மையாக இருப்பதால் நம்பவே தோன்றுகிறது. ஒரு எழுத்தாளர் எம்.எல்.ஏ சீட் வாங்கிக் கொடுக்க பணம் வாங்கும் வேலையைச் செய்கிறார் என்றும் செய்தி பார்த்தேன். இத்தகையவர்கள் தாம் எழுத்தாளர்கள் எனும் பெயரில் நம் மத்தியில் இருக்கிறார்கள். நமக்கு என்ன தகுதி உள்ளது?
ஒரு எழுத்தாளரின் முன்னேற்றம் என்பது பணம், விருது, வெளிநாட்டுப் பயணம், நடிகர்களின் இலக்கியப் பரிந்துரை, அமைச்சர், முதல்வர் போன்றவர்களுடனான நெருக்கம், இளைஞர்களை மதத்தையும் இலக்கியத்தையும் கலந்து பேசி மூளைச்சலவை செய்து தம் அடிமையாக வைத்துக் கொள்வது, எல்லா இடங்களிலும் தனக்குக் கைகள் இருப்பதாகக் காட்டிக் கொள்வது அல்ல. இத்தகையோரின் தளபதிகளாக தம்மை மற்றவர்கள் காட்டிக் கொள்வதும் அல்ல.
இலக்கியம் படைக்க துணிச்சலான, சுதந்திரமான, நேர்மையான மனநிலை வேண்டும். நான் எழுதுவது யாரையாவது புண்படுத்துமா, யாரையாவது இன்புற வைக்குமா, நான் எழுதுவதை வைத்தும், என் நடவடிக்கைகளை வைத்தும் முன்னேற முடியுமா என்று யோசிக்கும்போதே நாம் இலக்கியத்தில் இருந்து விலகிவிடுவோம். அத்தகையோர் கட்சியில் சேர்ந்து வேலை பார்த்து உருப்படியாகத் தம்மை முன்னேற்றலாம். கட்சியில் உள்ள கட்சிக்காரர்களை விட இலக்கியத்தில் உள்ள கட்சிக்காரர்கள் அதிகரித்து விட்டார்கள். நாம் இவ்வளவு சுலபத்தில் விலைபோகக் கூடியவர்கள் எனத் தெரிவதற்கு சில ஆண்டுகளே தேவையிருந்தன. பணம், அதிகாரம், புகழைக் காட்டியதும் அடிபணிந்து விட்டோம்.
அப்பட்டமாகவே ஒரு கட்சிக்காக சிலர் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கையில் இவர்கள் இத்தனைக் காலமும் எங்கு போயிருந்தார்கள் எனும் கேள்வி வருகிறது. கட்சி ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்காரர், வராவிட்டால் அரசியலற்ற தீவிர எழுத்தாளர். எழுத்தாளரையும் எழுத்தையும் பிரிக்கவே முடியாதபடி எழுத்தாளர்கள் தம் உடலை விற்பனைக்கு வைக்கிற காலத்தில் வாழ்கிறோம். ஒரு சக-எழுத்தாளராக எனக்கு இச்சூழல் மீது மிகுந்த கசப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் பணம், ஒரு பயணம், ஒரு விருது, ஒரு நடிகரின் அணுக்கம், அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் இதற்காக ஏன் இவ்வளவு ஏங்குகிறோம்? நமக்கான பணத்தை நாமே சம்பாதித்து நமக்கான பயணத்தை மேற்கொள்ளலாமே, நண்பர்களிடம், வாசகர்களிடம் பணம் வாங்கியும் போகலாம், நாமே வீடு கட்டிக் கொள்ளலாமே, அல்லது நேரடியாகக் கேட்கலாமே நேரடியாக ஒரு கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை வெல்லலாமே... ஏன் அதற்காக இலக்கியத்தைப் பணயம் வைக்க வேண்டும்?
இந்தச் சீரழிவுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் வைரமுத்துவுக்கு ஞானபீடம் கொடுத்தது ஒரு பெரிய சீரழிவாக நான் பார்க்கவில்லை. அவராவது அதை வாங்கி வைத்து விளம்பரம் பண்ணிவிட்டு தன் பாட்டுக்கு இருப்பார். இவர்களோ அதைக் கொண்டு இன்னும் பலரை மிரட்டி ஆள் சேனை அம்பு சேர்த்து ஊழல் செய்வார்கள்; கொஞ்சமாவது எழுதிக் கொண்டிருந்த இலக்கியத்தையும் விட்டுவிடுவார்கள்.
அகாடெமி விருதையும் அரசு ஒரேயடியாக அடுத்த பத்தாண்டுகளுக்கு நிறுத்தி வைத்தால் இலக்கியச் சூழல் மேம்பட்டு விடும் என நினைக்கிறேன். ஒரே ஒரு கனவு இல்லத் திட்டம் வந்ததும் எவ்வளவு லாபியிங், ஊழல், குழப்பங்கள். கட்சித் தலையீடு இருக்கிறது என்று சொல்லித்தானே ஒன்றிய அரசு கடந்த ஆண்டுக்கான அகாடெமி விருது அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறது? புக்கர், நோபல் பரிசுகளால் கூட உலக இலக்கியத்துக்கு பாதிப்பு வந்ததில்லை. ஆனால் நம்மூரில் விருதுகள் ஏற்படுத்திய சாதகங்களை விடப் பாதகங்களே அதிகம்.
ஞானபீடம் இல்லாமல் இருந்தாலே நம் எழுத்தாளர்கள் ஞானிகளாக இருப்பார்கள். பித்தளை பீடம் கிடைத்தாலே போணியாகிறவர்கள் ஞானபீடம் கிடைத்தால் என்னவாவார்கள்? இவர்கள் குடோனில் இருப்பதே நல்லது.
நம் ஆசான்களோடு ஒப்பிடுகையில் வைரமுத்துவால் இலக்கியத்துக்கு எந்த ஆபத்தும் வந்ததில்லை. அவர் பாட்டுக்கு தானுண்டு பாட்டுண்டு மீடூ உண்டு, ஸ்டாலின் விடு தூது, மோடி விடு தூது உண்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார். நம் இலக்கியவாதிகள் சின்ன அளவில் செய்வதை அவர் பெரிய அளவில் செய்பவர். அவரால் நமக்கு எந்தப் பாதகமும் இல்லை. அதனால் அவர் 'தீவிர இலக்கியவாதி' ஆகாதவரைக்கும் என் ஆதரவு அவருக்குத்தான்.
Comments