Skip to main content

விழிப்பின் ஒத்திசைவு


 

நேற்றைக்கு முந்தின தினத்துக்கு முந்தின தினம் ஒரு பத்தியை எழுதினேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் நாயகன் தன் காதலியின் தகப்பனாரைப் பார்க்கப் போகிறான். இருவருக்கும் இடையில் மோதல். அவன் திரும்ப தன் வீட்டுக்கு வந்த பின்னர் அவளைக் குறித்து யோசிக்கிறான். நேற்றைக்கு முந்தின தினமும் நேற்றும் இதற்கு அடுத்தப் பகுதியை, அடுத்தடுத்தக் காட்சிகளைத்தாம் எழுத உத்தேசித்தேன். ஆனால் எழுத உட்கார்ந்ததும் முந்தின தினம் எழுதியதைத் திருத்தத் தோன்றியது. நான் எப்போதும் இதைச் செய்வதில்லை. விட்ட இடத்தில் இருந்து ஒரு பாம்பு சாலையைக் கடப்பதைப் போல எழுதிவிடுவேன். வேறு சில தினங்களிலோ எழுதியதையே மீளமீள திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். இதற்கு ஒரு காரணம் என் உபமனத்தில் ஏனோ அப்பகுதி நிறைவற்ற ஒரு உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதே என நினைக்கிறேன். அதாவது மொழியிலோ உணர்விலோ தொனியிலோ கருத்திலோ ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தி வரவில்லை எனும் உணர்வு. இந்நாவல் கதைசொல்லியின் மனப்போக்கும், அகவுலகமும் சந்திக்கும் நெருக்கடியைக் குறித்தது என்பதால் அவரது தரப்பே முக்கியம். அவன் பார்வையை மட்டுமே நான் முன்வைக்கிறேன். அதேநேரம் நாயகியும் அவளது அப்பாவும் முழுமை பொருந்திய பாத்திரங்களாகவும் இதற்குள் வரவேண்டும். இச்சவாலையும் சமாளித்தாக வேண்டும்.


நேற்று எழுதும்போது இந்த இரு பாத்திரங்களின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு என்னால் சரியாகக் கொண்டு வர முடிந்தது எனத் தோன்றியது. அதுவும் நேற்று என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகம். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் சில வார்த்தைகளை உள்ளிட்டேன். வாக்கியங்களை மாற்றி எழுதினேன்.
மாலை வீட்டுக்குப் போனால் கடும் களைப்பு. தூக்கம் கண்ணைச் சொருகிக் கொண்டு வருகிறது. தூங்கிவிட்டால் இரவுணவு தாமதமாகும். அதன்பிறகு உறங்குவதும் தாமதமாகும் என்பதால் முடிந்தளவுக்கு நேற்று மாலை உறங்குவதைத் தவிர்த்தேன். ஆனாலும் எப்படியோ ஒரு மணிநேரம் என்னை மறந்து உறங்கிவிட்டு எழுந்து இரவுணவை முடித்தேன். ஏனோ தூங்கத் தோன்றவில்லை. ஒருவித நிம்மதியின்மை.

சிறிது நேரம் யுடியூப் பார்த்தேன். அதன்பிறகு நாவலுக்குத் தன்னிச்சையாகச் சென்று ஏற்கனவே மீளெழுதிய பத்தியைத் திருத்தினேன். சில வார்த்தைகளை மாற்றத் தொடங்கி அப்படியே வர்ணனைக்குள் சென்றுவிட்டேன். நான் உருவாக்கி வைத்திருந்த சந்தர்ப்பத்தில் ஒருவித கடுமையான அழுத்தம் நாயகனுக்கு ஏற்படுகிறது. அவன் அப்போது என்ன செய்வான்? இதற்கு எனக்குச் சில புதிய பதில்கள் கிடைத்தன. ஏதோ என் மொழியே சட்டென இறகுகள் விடுபட்டுப் பறந்து எழுகிற உணர்வு. எழுத எழுத என்னால் நாயகனின் மனத்தில் என்ன தோன்றுகிறது எனத் தெளிவாகக் காண முடிந்தது. அவனது முரண்பாடுகளை வெளிக்கொணர முடிந்தது. அதையெல்லாம் சொல்வதற்கான செறிவான மொழியும் தானே தோன்றியது. சில பகுதிகளில் நாவலுக்கு மென்மையான எடையற்ற மொழியும் சில பகுதிகளில் கனத்த அடர்த்தியான மொழியும் அவசியம். அது சரியாக இடத்தில் அவ்வாறு தோன்றுவதும் முக்கியம். இதையெல்லாம் நான் எழுதவில்லை, என் உபமனமே சிந்தித்துச் செய்கிறது என்பதும் நேற்று எனக்குப் புலப்பட்டது. அதனால்தான் அது என்னை அடுத்த கட்டத்துக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது என்பதும் புரிந்தது.
இது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதேநேரம் என் உபமனம் என் நாவலின் கதையையும், அதற்குத் தேவையான கற்பனையையும், தர்க்கத்தையும், மொழியையும் பரிசீலிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது, அதற்கு என்னிடம் பேசுவதற்கான சரியான நேரம், காலமும் அமைய வேண்டிக் காத்திருக்கிறது. எழுதுவது என்பது அதற்கான அவகாசத்தைத் தொடர்ந்து அளித்து அதை ஒரு சிறுதெய்வத்தைப் போல ப்ரீதி பண்ணுவதுதான். தெய்வத்தின் கண்கள் ஏதோ ஒரு கணத்தில் விழிக்கின்றன. அப்போது நம் கண்களும் ஒரே சமயத்தில் விழிக்கின்றன.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...