நேற்றைக்கு முந்தின தினத்துக்கு முந்தின தினம் ஒரு பத்தியை எழுதினேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் நாயகன் தன் காதலியின் தகப்பனாரைப் பார்க்கப் போகிறான். இருவருக்கும் இடையில் மோதல். அவன் திரும்ப தன் வீட்டுக்கு வந்த பின்னர் அவளைக் குறித்து யோசிக்கிறான். நேற்றைக்கு முந்தின தினமும் நேற்றும் இதற்கு அடுத்தப் பகுதியை, அடுத்தடுத்தக் காட்சிகளைத்தாம் எழுத உத்தேசித்தேன். ஆனால் எழுத உட்கார்ந்ததும் முந்தின தினம் எழுதியதைத் திருத்தத் தோன்றியது. நான் எப்போதும் இதைச் செய்வதில்லை. விட்ட இடத்தில் இருந்து ஒரு பாம்பு சாலையைக் கடப்பதைப் போல எழுதிவிடுவேன். வேறு சில தினங்களிலோ எழுதியதையே மீளமீள திருத்தி எழுதிக் கொண்டிருப்பேன். இதற்கு ஒரு காரணம் என் உபமனத்தில் ஏனோ அப்பகுதி நிறைவற்ற ஒரு உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதே என நினைக்கிறேன். அதாவது மொழியிலோ உணர்விலோ தொனியிலோ கருத்திலோ ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தி வரவில்லை எனும் உணர்வு. இந்நாவல் கதைசொல்லியின் மனப்போக்கும், அகவுலகமும் சந்திக்கும் நெருக்கடியைக் குறித்தது என்பதால் அவரது தரப்பே முக்கியம். அவன் பார்வையை மட்டுமே நான் முன்வைக்கிறேன். அதேநேரம் நாயகியும் அவளது அப்பாவும் முழுமை பொருந்திய பாத்திரங்களாகவும் இதற்குள் வரவேண்டும். இச்சவாலையும் சமாளித்தாக வேண்டும்.
நேற்று எழுதும்போது இந்த இரு பாத்திரங்களின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு என்னால் சரியாகக் கொண்டு வர முடிந்தது எனத் தோன்றியது. அதுவும் நேற்று என்னால் தொடர்ந்து எழுத இயலவில்லை. வேலைப்பளு அதிகம். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் சில வார்த்தைகளை உள்ளிட்டேன். வாக்கியங்களை மாற்றி எழுதினேன்.
மாலை வீட்டுக்குப் போனால் கடும் களைப்பு. தூக்கம் கண்ணைச் சொருகிக் கொண்டு வருகிறது. தூங்கிவிட்டால் இரவுணவு தாமதமாகும். அதன்பிறகு உறங்குவதும் தாமதமாகும் என்பதால் முடிந்தளவுக்கு நேற்று மாலை உறங்குவதைத் தவிர்த்தேன். ஆனாலும் எப்படியோ ஒரு மணிநேரம் என்னை மறந்து உறங்கிவிட்டு எழுந்து இரவுணவை முடித்தேன். ஏனோ தூங்கத் தோன்றவில்லை. ஒருவித நிம்மதியின்மை.
சிறிது நேரம் யுடியூப் பார்த்தேன். அதன்பிறகு நாவலுக்குத் தன்னிச்சையாகச் சென்று ஏற்கனவே மீளெழுதிய பத்தியைத் திருத்தினேன். சில வார்த்தைகளை மாற்றத் தொடங்கி அப்படியே வர்ணனைக்குள் சென்றுவிட்டேன். நான் உருவாக்கி வைத்திருந்த சந்தர்ப்பத்தில் ஒருவித கடுமையான அழுத்தம் நாயகனுக்கு ஏற்படுகிறது. அவன் அப்போது என்ன செய்வான்? இதற்கு எனக்குச் சில புதிய பதில்கள் கிடைத்தன. ஏதோ என் மொழியே சட்டென இறகுகள் விடுபட்டுப் பறந்து எழுகிற உணர்வு. எழுத எழுத என்னால் நாயகனின் மனத்தில் என்ன தோன்றுகிறது எனத் தெளிவாகக் காண முடிந்தது. அவனது முரண்பாடுகளை வெளிக்கொணர முடிந்தது. அதையெல்லாம் சொல்வதற்கான செறிவான மொழியும் தானே தோன்றியது. சில பகுதிகளில் நாவலுக்கு மென்மையான எடையற்ற மொழியும் சில பகுதிகளில் கனத்த அடர்த்தியான மொழியும் அவசியம். அது சரியாக இடத்தில் அவ்வாறு தோன்றுவதும் முக்கியம். இதையெல்லாம் நான் எழுதவில்லை, என் உபமனமே சிந்தித்துச் செய்கிறது என்பதும் நேற்று எனக்குப் புலப்பட்டது. அதனால்தான் அது என்னை அடுத்த கட்டத்துக்குச் செல்லவிடாமல் தடுக்கிறது என்பதும் புரிந்தது.
இது எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதேநேரம் என் உபமனம் என் நாவலின் கதையையும், அதற்குத் தேவையான கற்பனையையும், தர்க்கத்தையும், மொழியையும் பரிசீலிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது, அதற்கு என்னிடம் பேசுவதற்கான சரியான நேரம், காலமும் அமைய வேண்டிக் காத்திருக்கிறது. எழுதுவது என்பது அதற்கான அவகாசத்தைத் தொடர்ந்து அளித்து அதை ஒரு சிறுதெய்வத்தைப் போல ப்ரீதி பண்ணுவதுதான். தெய்வத்தின் கண்கள் ஏதோ ஒரு கணத்தில் விழிக்கின்றன. அப்போது நம் கண்களும் ஒரே சமயத்தில் விழிக்கின்றன.
Comments