Skip to main content

நாவலாசிரியரின் குறிப்புகள் - 15


 

திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களைப் பற்றி யாராவது புலம்புவது கேட்கும்போது எனக்கு அதில் தேநீர்க் கோப்பையில் நுரையளவுக்கே உண்மையிருக்கும் எனத் தோன்றும். நடிகர்கள், பொழுதுபோக்காளர்களுக்குத் தம் திறமையைக் காட்ட ஏராளமான தளங்கள் வந்துவிட்டன. ஆனால் எழுத்தாளர்களுக்கு மிகவும் குறைவும். அவர்கள் சிலநேரங்கள் வெளிச்சம் பெற வெகுஜன இதழ்களை எதிர்பார்த்திருப்பதாகத் தோன்றும். அது உண்மையல்ல - நான் இதுவரை வெகுஜன இதழ்களில் அதிகம் எழுதியதில்லை. இந்த வாய்ப்பின்மையால் நான் எதையும் இழக்கவும் இல்லை. சில ஆயிரங்கள் விற்கும் நடுநிலை இதழ்கள், இணைய இதழ்களிலேயே எழுதி நான் நிலைப்பெற்றேன். சமூக வலைதள கவனிப்புக்காக நான் என் எழுத்தில் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. துளிகூட சமரசம் பண்ணவில்லை. அதனால் என் வாசகர்கள் அமையாமல் போகவில்லை. நான் இவ்விசயத்தில் உதிரியும் அல்லன். பலர் என்னைப் போலவும் என்னைவிட பரவலாகவும் வெகுஜன தளங்களுக்குப் போகாமலே வாசகர்களைப் பெற்றிருக்கிறார்கள்.


வாசகர்களிடம் எப்போதுமே ஒருவித முட்டாள்தனமும் புத்திசாலித்தனமும் ஒருசேர இருக்கும். ரொம்பச் சாதாரணமான விசயங்களை மாய்ந்து மாய்ந்து ரசிப்பார்கள். ரொம்ப முக்கியமான விசயங்கள் மறைந்திருந்தாலும் கண்டறிந்து குறிப்பிடுவார்கள். ஆகையால் எழுத்தாளராக ஒருவர் 'உயிருடன்' இருக்கும்வரைக்கும் ஒரு படைப்பின் தீவிரத்தையும் சாத்தியத்தையும் பொறுத்து அதற்கான வாசகர்கள் தேடி வருவார்கள் என நம்புகிறேன். ஒன்று வேறெங்கும் இல்லாதபோது, அதற்கு ஒப்பாக மற்றொன்று இல்லாதபோது அதற்கென ஒரு தனி மதிப்பு உருவாகத்தான் செய்யும். இதைச் சாத்தியமாக்கும்படி தொடர்ந்து உழைப்பதும் செயல்படுவதுமே வாய்ப்புகளைப் பெறுவதைவிடக் கடினம் எனத் தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஒரு வணிக இதழில் அதற்கே உரிய அழகியலையும் டெம்பிளேட் தேவைகளையும் பொறுத்து கதையொன்றை எழுதிக் கொடுத்தால் பிரசுரிப்பார்கள். அதன்பிறகு அந்த டெம்பிளேட் எழுத்துக்கென்றே டெம்பிளேட் வாசகர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அங்குலம் கூடப் பிசகாத எந்திரத்தனமான வாசிப்பாக அது இருக்கும். அடுத்தடுத்து இம்மாதிரி பத்திரிகைகளுக்கு ஒருவர் எழுதிக் கொண்டே இருக்கலாம், அது ஒருவித உற்பத்தி என்பதால் பெரிய சவால்கள் இருக்காது. இதை நான் படைப்பூக்கமான எழுத்தென்று அழைக்க மாட்டேன். இது திட்டமிட்டுச் செய்யும் குறைந்த சவால் கொண்ட ஒரு உற்பத்திதான். கதை ஆரம்பிக்கும்போதே இப்படித்தான் எழுத முடியும், இப்படித்தான் முடியப் போகிறது என எழுத்தாளருக்குத் தெரிந்திருக்கும்

உண்மையான உழைப்பும் சவாலும் நம்மிடம் நாம் நேர்மையாக இருந்து நம்மைத் தொந்தரவு செய்யும் ஒன்றை ஆழமாகப் பேசுவதற்கான உருவகம் / குறீயீட்டை நம் கதைமொழியின் அமைப்பிலோ அணியிலோ கண்டறிவது. காப்காவின் கதையுலகில் அதிகார வர்க்கத்தின் விசாரணை முறைமைகள் ஒருவிதமான ஆன்மீக அலைகழிப்புக்கான, அகப்பயணத்துக்கான குறியீடாக வருகின்றன. அவர் தன் அகவுலகின் இருண்மையைக் கண்டு திகைத்துப்போய் நிற்பதை, தொடர்ந்து தன் இருத்தலின் கனத்தைத் தோளில் சுமப்பதைப் பேச ஒரு குறியீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். அதற்காகவே தன் புனைவு மொழியை அவர் ஒரு குதிரையைப் போலச் செலுத்திக் கொண்டே இருக்கிறார். இதுவே உழைப்பு, படைப்பூக்கமான உழைப்பு. இப்படி உழைத்து ஒன்றைக் கண்டறிகிறவர் அவருக்கே உரித்த வாசகரையும் பெற்றுவிடுவார். இது தன்னியக்கமாகவே நடந்துவிடும். அவர் தேடிப் போய் பிடிக்க வேண்டியதில்லை


இது ஏன் மிக மிகக் கடினம் என்றால் இது ஒருவர் தன் அகத்தின் நிழல்வெளிக்குள் தேடிப் போகிற பின்னோக்கிய பயணம். அது அச்சத்தைக் கொண்டு வருகிறது. மொழியெனும் புரவியின் ஒவ்வொரு குளம்பொலியிலும் நாம் அஞ்சிப் பின்வாங்குகிறோம். நிச்சயமின்மையும் கவலைகளும் நம்மைச் சூழ்கின்றன. மேலும் நாம் அதிக நேரம் செலவழிக்கும் புறவுலகம் நம்மை நமது அகப்பயணங்களில் இருந்து வெளியேற்ற கடும் முயற்சிகளை மேற்கொள்கிறது. வேலை, வேலைக்கான தயாரிப்புகள், வேலையைக் குறித்த கவலைகள், உறவுகள், பயணம், உடல் பிரச்சினைகள், உடல் வலி, உடற்பசி, வயிற்றுப் பசி, பலவிதமான சமூகப்பசிகள், இல்லாதவை குறித்த எப்போதும் அரற்றுகிற மனம் ஆகியவற்றைக் கடந்தே மொழிக்குள் நாம் பயணிக்க வேண்டி உள்ளது. ஒரு மணற்காற்று சலனமற்றிருக்கும் ஒன்றை சில நாட்களில் மூடி மறைத்து விடுவதைப் போல வெளியுலகம் நம் படைப்பு மனதை, நம் அகப்பயணத்தின் தளவாடங்களை மூடி மறைத்துவிடும். எனக்கு தினமும் நாவலை எழுதும்போது நாம் இந்த உலகுக்குத் தேவையான முக்கியமான பணியை ஆற்றினாலும் அதை நாம் செய்வதை உலகம் விரும்பவில்லை என்று தோன்றும். அதை நோக்கிய பயிற்சிகள், அதற்கான அறிவு, ஆலோசனைகள், வழிகாட்டும் கட்டமைப்புகள் எங்குமே இல்லை. ஆனால் நீங்கள் ஒரு தயிர்சாதம் கிண்ட வேண்டும் என நினைத்தால் அதற்கான உபகரணங்களை உங்கள் கையே கண்டடைந்து விடும். பாத்திரம், கரண்டி, வேகவைத்த சாதம், தயிர், தாளிப்பு, எண்ணெய், அடுப்பு. நம் உடல் இப்பணிக்கு ஈடுகொடுத்தால் பணி தானே நடந்து முடியும். நீங்கள் உங்கள் மீசையைக் கத்தரிக்க நினைத்தால் அதற்கும் தோதான உபகரணங்களும் சூழலும் கிடைக்கும். இதை ஹைடெக்கர் கைக்கு உதவியான சூழல் (“ready-to-hand” (Zuhandenheit)) என்றார். ஆனால் அகவயமான தேடல்களுக்கு எதிரான அசைவுகளும் கட்டமைப்புகளுமே இவ்வுலகில் அதிகம். தோதானவை எங்குமே இல்லை. நீங்கள் எங்கே எப்படிப் போவது எனத் திகைத்து நில்லாமல் அப்பயணத்தை ஆரம்பிக்கவே முடியாது. இதற்கான உழைப்பே உலகில் மிகப்பெரியது. இலக்கியப் புகழ், கவனம், கூட்டம், பயணம் ஆகியவற்றைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்ய முடியும். ஆனால் இதை அவ்வாறு ஒருங்கிணைக்க இயலாது


வாசகர்களும் இப்பயணத்தை எதிர்நோக்கியே காத்திருக்கிறார்கள் எனத் தோன்றும். எனக்கு கூட்ஸியின் "பீட்டர்ஸ்பெர்க்கின் நாயகன்" நாவலில் வரும் சில பிரேத உலக நடவடிக்கை வர்ணனைகளை, கனவு போலப் பேசப்படும் சம்பவங்களைப் படிக்கும்போது நான் அதற்காகவே காத்திருந்ததாகத் தோன்றியது. இது என்ன, எதற்காக வருகிறது என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆக வாசகர்களும் எழுத்தாளர்களும் எங்கு சந்திக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி வாசிக்கும் முன்னமே தெரிந்திருக்கிறது எனும் கேள்விகள் எனக்கு எழுந்தன. ஆக வாசகர்கள் என்பவர்கள் புத்தக விற்பனையின் எண்ணோ ராயல்டி தொகையோ அல்லர். அவர்களை நாம் இலக்கியக் கூட்டங்களிலோ நூல்களை ஒப்பமிட்டுக் கொடுக்கும் விற்பனைச் சந்திப்புகளிலோ நாம் பார்ப்பதில்லை. நமது படைப்பு வெளியாகும் இதழின் சர்க்குலேஷனிலும் அவர்கள் இல்லை. அவர்கள் நாம் ஒரு படைப்பை எழுதும் முன்னரே நம்முடன் இருக்கிறார்கள். நாம் ஒரு படைப்பை எழுதும் முன்னரே அது நம் மனதுக்குள் உருப்பெற்று வளர்ந்து நாம் அதை எழுதும் கணத்துக்காகக் காத்திருப்பதைப்போல அவர்களும் தம் மனதுக்குள் அப்படைப்பைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். வாசகர்கள் ஒரு புத்தகத்தைத் தேடுவதில்லை, இன்னதென்றே தெரியாத சில குறியீடுகளையும் தோற்றப்பாடுகளையும் அவற்றின் வழி தம் இருத்தலையுமே தேடுகிறார்கள்


உண்மையான திறமை ரசிக்கத்தக்க, நிஜமெனத் தோன்றத்தக்க ஒரு கதையை எழுதுவது அல்ல. நம் அகத்தினுள் புலப்படாத பிரதேசங்களில் அச்சமூட்டும் பயணமொன்றை மேற்கொண்டு அப்போது கிடைக்கும் திறப்புகளை மொழியில் குறியீடாகச் சித்தரிப்பதே அது. (அப்படிப் பார்க்கையில் கதைசொல்லி என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான சொல்லாடலாக இருக்கிறது.)  சில மொழிகளில் நாம் எழுதும் படைப்பு அதற்கான வாசகர்களைப் பெறாமல் இருக்கக் கூடும். உதாரணமாக, ப்ரூஸ்டின் "தொலைந்த காலத்தைத் தேடி" நாவலை எந்த மொழியிலும் எல்லாரும் படிக்கப் போவதில்லை. மொழிபெயர்ப்புகள் ஒருவேளை நம் மொழிக்கு அப்பால் வாசகர்களைக் கொணரலாம். ஆனால் அது பொருட்டும் அல்ல. ஒரு படைப்பு தோன்றும் முன்பே அதன் வாசகர் தாம் அதைப் படிக்குமுன்னே அதற்காகவே தாம் தோன்றியிருப்பதை அறிவர்.


நான் இதையெல்லாம் எழுதிக் கொண்டு போகும்போது எனக்கு வேடிக்கையாக ஒரு தெலுங்குப் படம் நினைவுக்கு வருகிறது - "மகதீரா": காதலர்கள் கடந்த பிறவியில் இருந்து இப்பிறவி வரையிலும் காதலின் நினைவிலே தோய்ந்திருப்பது, பரஸ்பரம் கண்டதுமே அவர்களுக்குத் தாம் ஏற்கனவே கண்டுள்ளதை உணர்வது, அந்த உணர்வில் இணைவது எல்லாம் நினைவுக்கு வருகின்றன. எழுத்தாள-வாசக உறவு அப்படியான ரொமாண்டிக்கான ஒன்றுதான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...