Skip to main content

ஏன் 'சோம்பேறியாக' இருப்பது அவசியம்?


 

உடல் ஆரோக்கியம் என்பது காலையில் பூங்காவில் நடப்பதோ ஜிம்மில் எடை தூக்குவதோ டயட் இருப்பதோ அல்ல என்று இப்போதெல்லாம் தோன்றுகிறது. இளமையிலேயே மோசமாக உடல் பாதிக்கப்படுவோர், மரணமடைவோரைப் பார்க்கையில் இந்த எண்ணம் வலுப்படுகிறது. மன அழுத்தம், நெருக்கடியை, பதற்றத்தை மற்றொரு காரணமாக முன்வைக்கிறார்கள். ஆனால் இவை எங்கிருந்து வருகின்றன என யாரும் கேட்பதில்லை. வேலையில் இருந்து. ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட தரவொன்று இப்படிச் சொல்கிறது - ஒரு நாளை எட்டு மணிநேரம் உழைக்க வேண்டும் என்பது விதிமுறை. அதைத்தாண்டி நாம் போடும் ஒவ்வொரு மணிநேர உழைப்பும் (அவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் குவிவதால்) நம் வாழ்வில் இரண்டு ஆண்டுகளைக் காவு வாங்குகின்றன. உடல் உழைப்புக்கு ஒரு வரம்பு உண்டு. 10-16 மணிநேரங்கள் உடலுழைப்பில் ஈடுபட்டால் அதன் எதிர் விளைவு உடனடியாகத் தெரியும் என்பதால் யாரையும் அவ்வாறு வலியுறுத்த முடியாது. அத்தகைய உழைப்பாளிகளுக்கு சங்கமும் சட்டப்பாதுகாப்பும் உண்டு. ஆனால் மூளையுழைப்பிற்கு அத்தகைய வரைமுறைகள் இல்லை. இன்று 12-14 மணிநேரம் உழைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. வீட்டுக்காக, காருக்காக, குழந்தைகளின் படிப்புக்காக, வாடகை கொடுப்பதற்காக, சேமிப்புக்காக, வீட்டுச் செலவுகளை நடத்துவதற்காக, சமூக மதிப்பிற்காக, உயிர்வாழ்வதற்காக. நிறுவனங்களில் பணியாற்றுவோர் மட்டுமல்ல சுயதொழில் செய்வோருக்கும் இன்று இப்பிரச்சினை உண்டு. எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்குப் போதவில்லை. எனில் இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான்.

இந்த கார்டியன் இதழ் கட்டுரையைப் படியுங்கள் - அதிகமாக உழைக்காமல் மெத்தனமான வாழ்க்கையில் இருப்போரே அதிக ஆயுளுடன் இருக்கிறார்கள் எனச் சொல்கிறது (https://www.theguardian.com/.../live-long-lazy-britain...). 2007இல் 23,000 மேலான கிரேக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மதியத் தூக்கம் தூங்குவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 37% குறைவு எனத் தெரிய வந்தது.
நாம் அதிகமாக உழைக்கும்போது நம்மையே அறியாமல் நமது உடலும் மூளையும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. உடலைப் பொறுத்தமட்டில் அதிகமான உழைப்பு ஒருவித நெருக்கடியில் நிகழும்போது அது புத்துணர்வு ஊட்டப்படுவதில்லை, மாறாக ஒரு எதிரியிடம் இருந்து தப்பித்து ஓடுகிற உணர்வு அதற்கு ஏற்படுகிறது. தொடர்சசியாக தினமும் பல மணிநேரங்கள் எதிரியிடம் இருந்து ஓடிக்கொண்டிருக்கையில் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிற மனவுளைச்சல் வளர்வூக்கிகள் (ஸ்டிரெஸ் ஹார்மோன்கள்) தூண்டப்படுகின்றன. இதெல்லாம் நமக்கு நடப்பதை உணராமல் நாம் எந்திரத்தனமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் உடலுக்கும் ஒரு மனம் உண்டு (இது நம் 'மனம்' அல்ல). உடலின் மனதை உடலின் அணுக்களின் மனம் எனலாம். அவை நமக்குள் இருப்பது நாம் அவற்றை நன்றாக வைத்துக் கொள்வோம் என்றுதான். நீங்கள் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறீர்கள். அது ஒரு போர் நடக்கும் பகுதியில் இருக்கிறது. சதா இரவெல்லாம் குண்டு வெடிக்கும் சத்தம். நீங்கள் என்ன செய்வீர்கள். வேறு வீட்டுக்குப் பெயர்வீர்கள். தப்பித்து ஓடுவீர்கள். உடல் அணுக்களுக்கு தன்னழித்தல் பாங்கு உண்டு. அது தன்னை அழித்துவிட்டு மாய்ந்திட முயலும்போதே பல்வேறு வளர்சிதை மாற்ற உபாதைகளும் புற்றுநோயும் வருகின்றன என்பது என் புரிதல்.
உடலுக்குத் தேவை உழைப்பல்ல - உடல் தன்னியல்பில் ஓய்வையே அதிகமாக நாடுகிறது. உணவையும் பாதுகாப்பையும் தேடும் சூழல் மட்டுமே உடலை உழைக்கத் தூண்டும். நீங்கள் விலங்குகளை, பறவைகளைப் பாருங்கள். அவை இப்படி மணிக்கணக்காய் உழைப்பதில்லை. சிலமணிநேர உழைப்புக்குப் பின் பல மணிநேரங்கள் ஓய்வுதான். நான் என் வீட்டின் அருகிலுள்ள கட்டிடங்களின் கூரையிலும் மரக்கிளைகளிலும் தினமும் வருகிற குரங்குகளை கவனிக்கிறேன். அவை தூங்கிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கின்றன. ஏன் என்றால் அதிகமாக உழைக்க அதிகமான ஆற்றல் வேண்டும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தினால் அதனால் தசை வளரும் என நாம் நினைக்கலாம். அதற்கும் ஒரு வரையறை உண்டு. மன ஆற்றலுக்கும் அப்படித்தான். உழைப்புக்கு ஈடாக நம் உடலிலும் மூளையிலும் ஏற்படும் சேதாரங்களைச் சரி செய்ய நிறைய ஓய்வு அவசியம். அது 6-8 மணிநேர தூக்கத்தினால் மட்டுமே கிடைக்காது. முன்பு மனிதர்கள் இதைவிட அதிகமாக ஓய்வெடுத்தார்கள் என்பதே என் நம்பிக்கை. Witold Rybczynski எனும் பண்பாட்டு ஆய்வாளர் மத்திய கால ஐரோப்பாவில் மக்கள் மூன்றில் ஒரு மடங்கு காலத்தை ஓய்வில் செலவிட்டார்கள் என்கிறார். அன்று அதிகமான திருவிழாக்கள் இருந்தன. ஊரில் இருந்து நான் நகரத்திற்கு வந்ததும் கண்ட முதல் மாற்றமே அதிகமான உழைப்புதான். கிராமத்தில் உடலுழைப்பாளர்கள் கூட காலையில் சில மணிநேரங்கள், மதியத்திற்கு மேல் சில மணிநேரங்கள் என்றே வேலை செய்வார்கள். அதுவும் வாரத்திற்கு 6 நாட்களும் அல்ல. வேலையில்லாத நாட்கள் அதிகமாக இருக்கும். வேலையில்லாமல் வீட்டில் இருப்பது ஒரு அவமானமாக அங்கு இருந்ததில்லை. நகரத்தில்தான் வேலை நேரம் தன்மானமாக மாற்றப்படுகிறது - வேலையே பணம், பணமே சுயமரியாதை, சுயமரியாதையே சுதந்திரம் என்று ஆகிறது. ஆனால் நான் ஊரில் பார்த்த வாழ்க்கையில் பலரிடமும் நேரமும் தன் நேரத்தை தன் விருப்பப்படி செலவழிக்கும் சுதந்திரமும் இருந்தது. இவ்வளவு விலாவரியாக நான் அவர்கள் சமைத்துப் பார்த்ததில்லை - முன்னிரவு உணவில் காலைக்காக நீரை ஊற்றி வைப்பார்கள். இரவு மிக எளிய உணவு. மதியம் மட்டுமே எதாவது காய்கறிகளைச் சமைப்பார்கள். காலையிலும் மதியமும் உறங்குவார்கள். மாலையில் மட்டுமே அரட்டையடிப்பது, காலாற நடப்பது. இவ்விசயங்கள் தொண்ணூறுகளில் மாறத் தொடங்குவதைக் கண்டேன். இன்று கிராமமோ நகரமோ எங்கெல்லாம் நவீனம் புகுந்ததோ அங்கெல்லாம் நேரம் இருந்தாலும் நேரமில்லை. அரசு ஓய்வூதியம் பெறுகிற ஒரு சிறு சதவீதத்தினர் மட்டுமே இன்று ஓய்வின் மகத்துவத்தை அனுபவிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாழ்க்கை ஒரு கருத்தமைவாகவே உருவாக்கப்பட்டு விட்டது. அவர்களும் ஓய்வூதியம் போதவில்லை எனக் கருதும்போது தன்னழிவு வாழ்க்கைக்குள் வந்துவிடுவார்கள்.
அடுத்து தற்கொலை - இன்று மனவுளைச்சலால் அதிகமான மக்கள் தற்கொலை பண்ணுகிறார்கள். ஏன்? வலிதாங்காமல் மட்டுமல்ல. தற்கொலை என்பது நம் மனமும் உடலும் தன் 'வலி' பொறுக்காமால் தன்னை அழிக்கிற முயற்சிதானோ எனும் கேள்வி என்னிடம் உண்டு. மன அழுத்தம், மனச்சிதைவுக்கும் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்குமான தொடர்பு குறித்து இன்றுள்ள ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் மகிழ்ச்சியாக உள்ளபோது அவை நாம் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக் கருதுகின்றன. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவை எண்ணிக்கையில் குறைந்து உடலைத் தற்காலிக உறைவிடமாகக் கருதும் நுண்ணுயிர்கள் பெருகும்போதோ பல நோய்கள் தோன்றுகின்றன. உடல் அழியத் தொடங்குகிறது. ஏனென்றால் அவை நம்மை வெகு சீக்கிரம் பயன்படுத்தி அழித்துவிட்டுப் போகவே விரும்புகின்றன. இவை நம்மை அவ்வாறு அழிந்திடத் தூண்டுவதன் ஒரு வழி 'தற்கொலை' - இன்று இந்த கோணத்தில் ஆய்வுகள் ஆரம்பித்துள்ளன (https://www.mdpi.com/2673-5318/6/3/84). என்னதான் நேரடி வாழ்வின் தூண்டுதல்கள் மனிதரை தற்கொலையை நோக்கிச் செலுத்தினாலும் அதற்கு ஒரு தீவிரமான விசையை அளிப்பது இந்த நுண்ணுயிர்களாக இருக்கக் கூடும்.
நாம் என்றால் நமது உடலும் மனமும் - ஆனால் இன்று ஆய்வுகள் நமது அணுக்களுக்கு என்றே தனியான பிரக்ஞை உண்டா, நமது நுண்ணுயிர்கள் நமது வாழ்வை நாம் நடத்துவதற்கான முகமையைக் கட்டுப்படுத்துகின்றனவா எனும் கேள்விகளை எழுப்புகின்றன? ஒருவேளை நாம் உடலெனக் கருதுவது ஒரு வாடகை வீடோ? ஒருவேளை நாம் மனமெனக் கருதுவது பல்வேறு நுண்ணுயிர்களின், அணுக்களின் அக-விழைவுகளின் கூட்டிணைவு மட்டும்தானோ? நாம் அவற்றின் அகவிழைவுகளுடன் நமது அகவிழைவையும் இணைத்து மனமெனச் சிந்திக்கிறோமோ?
எனில் சமூகத்திற்காக, குடும்பத்திற்காக உழைக்காமல், சிந்திக்காமல் நாம் இவற்றுக்காக உழைக்கவும் சிந்திக்கவும் வேண்டுமோ? அவற்றுக்குப் பிடித்தாற்போல வாழ்ந்தால் நான் நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனில் ஏன் என்னால் அது இயல்வதில்லை? என் உடலும் மனமும் என்னுடையவை அல்ல, அவை ஒரு கூட்டுச் செயல்பாடு எனில் ஏன் அடுத்தவர்களுக்காக இவ்வளவு உழைக்கிறேன்? என் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் சமூகத்தில் இருந்தும் உறவுகளில் இருந்து வருவதாக நான் நினைப்பது ஒரு தோற்றம் மட்டும்தானோ? அசலான ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உள்ளிருந்து வருவதோ? உலகில் எல்லாரும் என்னை விட்டுப் போகும்போதும் என் உடல் மட்டும்தானே என்னை விட்டுவிடாமல் இருக்கிறது? எனில் நான் ஏன் பிறருக்காக இவ்வளவு கவலைப்படுகிறேன்?
நாம் சோம்பேறித்தனத்தை ஒரு சமூகக் கருத்தாக்கமாக மாற்றியதே பிரச்சினை என நினைக்கிறேன். ஒவ்வொரு தனிமனிதனும் தன் 'உடலுக்கு', தன்னைக் காப்பாற்றுவதற்கு எவ்வளவு உழைப்பு வேண்டும் எனச் சிந்திப்பதே சரியானது எனத் தோன்றுகிறது. ஆனால் அதை அனுமதிக்காதபடி நம் கலாச்சாரமும் பொருளாதாரமும் நம்மைப் பிடித்தாட்டுகின்றன. நம்மை அவை பயமுறுத்தி ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. சோம்பேறித்தனத்தை நற்பண்பாகப் பார்க்கையிலே மகிழ்ச்சியும் திருப்தியும் தோன்றும்.
குறிப்பு: நான் இங்கு குறிப்பிடுவது தன் விருப்பத்தின் பெயரில் மகிழ்ந்து செய்கிற உழைப்பை அல்ல. பணத்துக்கான, சமூக அங்கீகாரத்துக்கான உழைப்பை மட்டுமே.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...