தொகுதி மறுசீரமைப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போதே இதன் ஆபத்துக்களைப் பற்றி எழுதினேன். கடந்த ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதினார். அண்மையில் அவர் இந்த சீரமைப்பு மசோதாவை எரித்து முழக்கமிடும் காணொளியைக் கண்டேன். இந்தப் பார்வையுடன் முழுக்க உடன்படுகிறேன். இந்தியா ஒரு வட-இந்திய-சார்பு தேசியமாக அலுவல்ரிதியாக, வெளிப்படையாக மாறப் போகிறது. அதேநேரம் இன்று எதிர்ப்பு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்த்துதலாக மாறுவதால் நேரடியாக மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வருமா எனச் சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இது ஒரு தேர்தல் பிரச்சார வியூகம் மட்டுமே எனத் தோன்றுகிறது. இது எதிர்ப்பின் உண்மைத்தன்மையை கொன்றுவிடும்.
இப்படியான பிரச்சினைகளை மக்கள் தம்மிடம் இருந்தே ஒரு இயக்கமாகத் திரண்டு எதிர்க்கும்போதே (ரயில் மறிப்பு, விமான நிலைய முற்றுகை, மத்திய அரசு அலுவலக முற்றுகை) அதற்கு நல்ல பலனிருக்கும். இன்னும் சொல்லப்போனால் வேளண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் இதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். அது வென்றதற்கு முக்கிய காரணம் அதை கட்சிகள் நடத்தவில்லை என்பது. கட்சிகள் எதிர்ப்பை ஒரு நிகழ்த்துதலாக மாற்றுவதால் அதில் தொடர்ச்சியோ தியாகமோ மூர்க்கமோ இருப்பதில்லை. அதை மக்களும் ஒன்றிய அரசும் கடந்து போய்விடுவர். மக்களை ஒருங்கிணைத்து ஒரு தேசியத் தலைவர் நடத்துகிற நடைபயணங்கள் இதைவிட அதிக தாக்கம்த்தை ஏற்படுத்தும்.
அரசியலுக்கு ஊடகமே இன்று பெரிய பாதகமாகிறது - ஏனென்றால் என்னதான் சமூக ஊடகங்களில் மக்கள் பங்கேற்க முடிகிறது என்றாலும் அங்கு அவர்களுக்கு முழுமையான முகமை இல்லை. எதை வைரல் ஆக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உள்கட்டமைப்பு வசதியும் திட்டமிடலும் கட்சிகளிடம் வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு கட்சியும் பல லட்சங்களில் இருந்து கோடிகள் வரை டுரோல்களை, ஐடி விங் ஆட்களை வேலையில் வைத்துள்ளது. கட்சி நிர்வாகத்திடமே இன்று டிவி ஊடகங்களும் பத்திரிகைகளும் உள்ளன. இது மக்களுக்கும் ஊடகங்களுக்குமான அரசியல் இடைவெளியை தோற்றுவித்து விட்டது. விளைவாக மக்கள் (சமூகவலைதள, மரபான) ஊடகங்களைப் பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள். அரசியல் செய்திகளுக்கு இன்றும் தேர்தலைத் தீர்மானிக்கும் ஆற்றல் உண்டு என்றாலும் மக்களை அரசியல்படுத்தும் ஆற்றலை அவை இழந்துவிட்டன. ஒன்றில் இருந்து நாம் அந்நியமாகும்போது அதை கொஞ்சம் விலகி நின்று விளையாட்டாக அணுகுகிறோம். மரையை இழந்த திருகாணி சுழன்றுகொண்டே இருப்பதைப் போல.
தெருவிலும் திடல்களிலும் நடக்கும் அரசியல் போராட்டங்களும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு மேலாண்மையாகின்றன. அவையும் மக்களின் அந்நியமாதலை அதிகரிக்கின்றன. கட்சிகளும் தம்மால் மக்களிடம் போய்ச் சேர முடியும் எனும் நம்பிக்கையை இழக்கின்றன. முதல்வர்களும் அமைச்சர்களும் தொடர்ந்து கட்சி அனுதாபிகளைச் சந்திப்பது, அவர்களை நேர்முகமெடுத்து பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது இதன் விளைவுதான். இப்படி இன்றைய சூழல் மக்களுக்கும் அரசுக்கும் வெவ்வேறு அளவுகளில் பாதகமே.
எல்லா வெளிகளையும் அரசு கட்டுப்படுத்தும்போது மக்கள் தமக்கும் மக்களாட்சிக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளதாகவே, தாம் அதிகாரம் இழந்துவிட்டதாகவே என்றே உணர்வர். குறிப்பாக போராட்டத்திற்கென தனி வெளிகளை அரசு வரையறுக்கும்போது அது நாடக நிகழ்த்தல் அரங்க வெளியாகி விடுகிறது. கட்சிகள் முதற்படியாக கட்சித்தன்மையை, நிகழ்வு மேலாண்மைப் போக்குகளைக் கைவிடுவதும், அடுத்ததாக, தற்செயல்களை ஊக்குவிப்பதும் தற்செயலாக நிபந்தனையற்றுப் பொதுவெளிகளில் திரள்வதற்கு மக்களை அனுமதிப்பதுமே இனி வெற்றிகரமான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். இது தமக்கெதிராகவே திரும்பக் கூடும் என ஆளும் மாநிலக் கட்சிகள் அஞ்சாமல் பொதுவெளிகளை ஒன்றியத்துக்கு எதிராகப் பயன்படுத்தவும் தம்மையே சிலநேரங்களில் விமர்சிக்கவும் அனுமதிக்க வேண்டும். அதாவது எதிர்ப்பரசியலுக்கு மீண்டும் மக்களைப் பழக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் 'ஊடுருவினாலும்' கவலைப்படக் கூடாது. அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு கிளர்ச்சியின்போது நடந்ததைப் போல கால நிபந்தனைக்கு உட்பட்டு மக்கள் திரளவும் கலையவும் செய்யக்கூடாது. மக்கள் அதிகாரம் கட்டறுத்து விடப்பட்டால் அதை எதிர்க்கட்சியால் திசைதிருப்ப இயலாது. அதற்கு முதலில் ஆளும் அரசுகள் மக்களை அஞ்சாமல் இருக்க வேண்டும். பொது அமைதிக்கு ஊறு, சட்டம் ஒழுங்கு ஆகிய சொல்லாடல்களைக் கைவிட வேண்டும். காவலர்கள் மக்கள் கண்காணிப்பு, தலைவர்கள் பாதுகாப்பு ஆகிய (சோ கால்ட் சட்டம் ஒழுங்கு காவல்) பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு போதை மருந்து விற்பனையைத் தடுக்கும் பணிகளிலும் மக்கள் நன்மைக்கு நேரடியாகப் பயன்படும் பணிகளிலும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அல்லாவிடில் அந்நியமாதலின் விளைவாக மக்களாட்சி கருத்தியலே காணாமல் போய்விடும்.
தொகுதி மறுசீரமைப்பு எதிராக தென்னிந்தியா முழுக்க அத்தகைய 'தற்செயல் போராட்டங்களே' அவசியம். சில நேரங்களில் வேலையில்லாத கோபம், வாய்ப்புகள் இல்லாத கோபம், வறுமை, பொதுவான பல பிரச்சினைகள் மீதான கசப்பும் கூட ஒற்றைப் பிரச்சினைப் புள்ளி மீது திரளும். சில நேரங்களில் பெரும் கார்ப்பரேட்டுகளின் ஆதரவும் இதற்குக் கிடைக்கும். ஆனால் இயக்கத்தின் மையத்தில் உழைக்கும் மக்களும் இளைஞர்களுமே இருப்பார்கள். (நேப்பாள ஜென் ஸி போராட்டங்களின் போது நடந்ததைப் போல.) அப்போதே வலுவான மக்களாட்சி தோன்றும். போராட்டங்களுக்கும் அரசுக்கும் இடையே கட்சிகள் நிற்கக் கூடாது. இத்தகைய போராட்டங்களுக்கு நேரடியான தேர்தல் பலன்கள் ஒரு க்கு உடனடியாக இருக்காவிடினும் மக்களை மீண்டும் ஜனநாயகப்படுத்த அவை உதவும்.
Comments