Skip to main content

அழகும் விசுவாசமும்


 

மிலன் குந்தேராவின் "89 சொற்கள்" (89 Words) எனும் கட்டுரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் தன் தன் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டபோது அனுபவித்த அவஸ்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். மொழிபெயர்ப்பாளர்கள் தம் இஷ்டத்துக்கு வாக்கிய அமைப்பை மாற்றுகிறார்கள். பெரிய வாக்கியங்களை உடைத்து சிறுசிறு வாக்கியங்களாக்குகிறார்கள். இங்கிலாந்தில் வெளியான அவரது நாவலின் மொழிபெயர்ப்பில் (Unbearable Lightness of Being) பாலியல் சொற்களை முடிந்தளவுக்கு மாற்றி இருக்கிறார்கள். Being என்றால் இருத்தல். இதன் தத்துவார்த்த, கல்விப்புல தொனி பிடிக்காமல் ஒருவர் Unbearable Lightness of Living என்று மாற்றுகிறார். இதனால் எப்படி பொருள் தலைகீழாக மாறுகிறது என குந்தேரே விளக்குகிறார்.

சிலர் அழகுப்படுத்தும் நோக்கில் புதிய சொல்லாடல்களைக் கொண்டு வருகிறார்கள் - ஒருவர் "அவள் வாழ்வில் 17 ஆண்டுகள் கடந்தன" என்பதை "அவள் வாழ்வில் 17 வசந்தங்கள் கடந்தன" என மொழியாக்குகிறார். இது அழகாகத்தான் உள்ளது. ஆனால் தொனி மாறுகிறது. வசந்தம் எனும் உருவகத்தைக் கொண்டு வர எழுத்தாளருக்கும் தெரியும்தான். அவர் அதைப் பயன்படுத்தாதது ஒரு எளிய நேரடி மொழியைப் பயன்படுத்தவும், அதன்வழியாகத் தன் வாழ்க்கைப் பார்வையை உணர்த்தவும்தான். மொழிபெயர்ப்பாளர் அதீத உரிமையெடுக்கும்போது அவர் எழுத்தாளரின் நோக்கங்களை உருமாற்றுகிறார். பிரஞ்சு போன்ற மொழிகளில் வெளியான தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் "எனக்கு செக் மொழி தெரியாது, அதனால் என் இதயத்தில் இருந்து மொழிபெயர்த்தேன்" என்று குந்தேராவிடம் சொல்லியிருக்கிறார். மொழியே தெரியாமல் எப்படி உணர்வுரீதியாக மட்டும் மொழிபெயர்ப்பார் என அவர் குழம்பிப் போய் பிறகே இரண்டாம் மொழி வழியான மொழியாக்கமென அறிந்துகொள்கிறார். இப்படியான பல விபத்துக்களைக் குறிப்பிடும் அவர் தான் வாழ்க்கையில் மிக அதிகமாகச் சிரமப்பட்டது மொழிபெயர்ப்புகளைப் படித்துதான் என்கிறார். கடைசியில் அவர் உதிர்க்கும் ஒரு அபிப்ராயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அழகான பெண்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள், விசுவாசமான பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என செக் மொழியில் ஒரு சொலவடை உள்ளது போலும். அதைச் சொல்லிவிட்டு அவர் மூலமொழிக்கு விசுவாசமான மொழிபெயர்ப்பே அழகானது என்று சொல்கிறார்.
என்னுடைய மொழிபெயர்ப்பு நம்பிக்கையும் இதன்பாற்பட்டதே. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் அல்லன். தமிழில் இருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் விருப்பத்தின்பால் மொழிபெயர்த்து வருபவன். எனக்கு இலக்கு மொழியில் ஒரு பனுவலை அழகாக்குவதற்காக வாக்கியங்களையோ சொற்களையோ நடையையோ மாற்றுவதில் உடன்பாடில்லை. அதற்கு நாமே சொந்தமாக அக்கதையையோ கவிதையையோ நம் மொழியில் எழுதிவிடலாமே. மொழிபெயர்ப்பைப் படித்தால் அது மொழிபெயர்ப்பு என்று நிச்சயமாகத் தோன்ற வேண்டும். சரளத்தன்மை மூலமொழியில் இருந்து மொழிபெயர்ப்பு மொழிக்கு வர வேண்டும். மொழிபெயர்ப்பாளரே அதை உருவாக்கக் கூடாது. அதனாலே எனக்கு மூலமொழி மீதான விசுவாசம் அதிகம். உணர்வுரீதியாக மூலமொழியில் சொல்லப்படும் விசயத்துடன் ஒன்றும்போது நாம் நம் மனநிலைக்கு ஏற்ப சொற்களையும் தீவிரத்தையும் சிறிது மாற்றலாம். ஆனால் இது வாக்கியத்தில் தெரியக் கூடாது, தொனியிலும் தாளலயத்திலும் மட்டுமே தென்பட வேண்டும். கடைசியாக, மொழிபெயர்ப்பில் ஒரு அரசியலும் உண்டு - நம்மால் உடன்பட முடியாத படைப்பை மொழிபெயர்க்கக் கூடாது. ஏனென்றால் அதிலுள்ள மொழியே அதன் அரசியல். நம் அரசியலுக்கு ஏற்ப படைப்பாளியின் அரசியலை மாற்றுவது (நம்மால் ஏற்க முடியாத சொற்களை, கருத்துக்களை மாற்றுவது, தவிர்ப்பது) ஒரு மோசடி. உ.தா., உங்களுக்கு ஜார்ஜ் பத்தாயின் பாலியல் பிடிக்காது, ஆனால் அவரது கதை பிடிக்குமென்று கூற முடியாது. அவரை பிடிக்குமென்றால் மொத்தமாகத்தான் பிடிக்கும். மொத்தமாகத்தான் மொழிபெயர்க்கவும் முடியும். இதில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அவமானப்பட ஒன்றுமே இல்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...