மிலன் குந்தேராவின் "89 சொற்கள்" (89 Words) எனும் கட்டுரை நூலின் முன்னுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் தன் தன் நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டபோது அனுபவித்த அவஸ்தைகளைக் குறிப்பிட்டிருந்தார். மொழிபெயர்ப்பாளர்கள் தம் இஷ்டத்துக்கு வாக்கிய அமைப்பை மாற்றுகிறார்கள். பெரிய வாக்கியங்களை உடைத்து சிறுசிறு வாக்கியங்களாக்குகிறார்கள். இங்கிலாந்தில் வெளியான அவரது நாவலின் மொழிபெயர்ப்பில் (Unbearable Lightness of Being) பாலியல் சொற்களை முடிந்தளவுக்கு மாற்றி இருக்கிறார்கள். Being என்றால் இருத்தல். இதன் தத்துவார்த்த, கல்விப்புல தொனி பிடிக்காமல் ஒருவர் Unbearable Lightness of Living என்று மாற்றுகிறார். இதனால் எப்படி பொருள் தலைகீழாக மாறுகிறது என குந்தேரே விளக்குகிறார்.
சிலர் அழகுப்படுத்தும் நோக்கில் புதிய சொல்லாடல்களைக் கொண்டு வருகிறார்கள் - ஒருவர் "அவள் வாழ்வில் 17 ஆண்டுகள் கடந்தன" என்பதை "அவள் வாழ்வில் 17 வசந்தங்கள் கடந்தன" என மொழியாக்குகிறார். இது அழகாகத்தான் உள்ளது. ஆனால் தொனி மாறுகிறது. வசந்தம் எனும் உருவகத்தைக் கொண்டு வர எழுத்தாளருக்கும் தெரியும்தான். அவர் அதைப் பயன்படுத்தாதது ஒரு எளிய நேரடி மொழியைப் பயன்படுத்தவும், அதன்வழியாகத் தன் வாழ்க்கைப் பார்வையை உணர்த்தவும்தான். மொழிபெயர்ப்பாளர் அதீத உரிமையெடுக்கும்போது அவர் எழுத்தாளரின் நோக்கங்களை உருமாற்றுகிறார். பிரஞ்சு போன்ற மொழிகளில் வெளியான தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் "எனக்கு செக் மொழி தெரியாது, அதனால் என் இதயத்தில் இருந்து மொழிபெயர்த்தேன்" என்று குந்தேராவிடம் சொல்லியிருக்கிறார். மொழியே தெரியாமல் எப்படி உணர்வுரீதியாக மட்டும் மொழிபெயர்ப்பார் என அவர் குழம்பிப் போய் பிறகே இரண்டாம் மொழி வழியான மொழியாக்கமென அறிந்துகொள்கிறார். இப்படியான பல விபத்துக்களைக் குறிப்பிடும் அவர் தான் வாழ்க்கையில் மிக அதிகமாகச் சிரமப்பட்டது மொழிபெயர்ப்புகளைப் படித்துதான் என்கிறார். கடைசியில் அவர் உதிர்க்கும் ஒரு அபிப்ராயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அழகான பெண்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள், விசுவாசமான பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என செக் மொழியில் ஒரு சொலவடை உள்ளது போலும். அதைச் சொல்லிவிட்டு அவர் மூலமொழிக்கு விசுவாசமான மொழிபெயர்ப்பே அழகானது என்று சொல்கிறார்.
என்னுடைய மொழிபெயர்ப்பு நம்பிக்கையும் இதன்பாற்பட்டதே. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் அல்லன். தமிழில் இருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் விருப்பத்தின்பால் மொழிபெயர்த்து வருபவன். எனக்கு இலக்கு மொழியில் ஒரு பனுவலை அழகாக்குவதற்காக வாக்கியங்களையோ சொற்களையோ நடையையோ மாற்றுவதில் உடன்பாடில்லை. அதற்கு நாமே சொந்தமாக அக்கதையையோ கவிதையையோ நம் மொழியில் எழுதிவிடலாமே. மொழிபெயர்ப்பைப் படித்தால் அது மொழிபெயர்ப்பு என்று நிச்சயமாகத் தோன்ற வேண்டும். சரளத்தன்மை மூலமொழியில் இருந்து மொழிபெயர்ப்பு மொழிக்கு வர வேண்டும். மொழிபெயர்ப்பாளரே அதை உருவாக்கக் கூடாது. அதனாலே எனக்கு மூலமொழி மீதான விசுவாசம் அதிகம். உணர்வுரீதியாக மூலமொழியில் சொல்லப்படும் விசயத்துடன் ஒன்றும்போது நாம் நம் மனநிலைக்கு ஏற்ப சொற்களையும் தீவிரத்தையும் சிறிது மாற்றலாம். ஆனால் இது வாக்கியத்தில் தெரியக் கூடாது, தொனியிலும் தாளலயத்திலும் மட்டுமே தென்பட வேண்டும். கடைசியாக, மொழிபெயர்ப்பில் ஒரு அரசியலும் உண்டு - நம்மால் உடன்பட முடியாத படைப்பை மொழிபெயர்க்கக் கூடாது. ஏனென்றால் அதிலுள்ள மொழியே அதன் அரசியல். நம் அரசியலுக்கு ஏற்ப படைப்பாளியின் அரசியலை மாற்றுவது (நம்மால் ஏற்க முடியாத சொற்களை, கருத்துக்களை மாற்றுவது, தவிர்ப்பது) ஒரு மோசடி. உ.தா., உங்களுக்கு ஜார்ஜ் பத்தாயின் பாலியல் பிடிக்காது, ஆனால் அவரது கதை பிடிக்குமென்று கூற முடியாது. அவரை பிடிக்குமென்றால் மொத்தமாகத்தான் பிடிக்கும். மொத்தமாகத்தான் மொழிபெயர்க்கவும் முடியும். இதில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அவமானப்பட ஒன்றுமே இல்லை.
Comments