"If today it is rare to see literary adventures as daring as those of Joyce, Woolf, Rilke or Borges, it is not just down to the writers. For the culture in which we live does not favour, but rather discourages, the indefatigable efforts that produce works that require of the readers an intellectual concentration almost as great as that of their writers. Today’s readers require easy books that entertain them and this demand creates a pressure that becomes a powerful incentive to writers.”
- லோசா "பண்பாட்டின் மரணம்" குறித்த தன் கட்டுரையில் சொல்லக் கூடிய இவ்விசயம் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது - நான் இந்த அழுத்தத்தை கடந்த சில ஆண்டுகளாக மிக வெளிப்படையாகவே உணர்ந்து வருகிறேன்: எதையும் சுவாரஸ்யமாக, எளிமையாக, பரபரப்பாகவே எழுத வேண்டும் எனும் பதற்றம் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகப் புதிதாக எழுத வருவோரின் லட்சியம் வணிக எழுத்தாளர்களாகவோ நடுநிலை எழுத்தாளர்களாகவோ இருக்கிறார்கள். அதாவது அவர்கள் படிப்பது தீவிர இலக்கியமாக இருக்கும், ஆனால் எழுத உத்தேசிப்பது அதுவாக இருக்காது. அதிலும் யாரெல்லாம் தம் எழுத்தின் நுகர்வு மதிப்பை உணராதவராக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் சுலபத்தில் மொழிக்குள் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள். யாரெல்லாம் சமூக கவனத்திற்கு (அதாவது வாசகர்களின் மதிப்புக்கு) உள்ளாகிறார்களோ அவர்கள் எல்லாமே தம் கைகள் கட்டப்படுவதாக உணர்கிறார்கள். என்னதான் எழுத்துக்கு தமிழில் பண மதிப்பு இல்லையென்றாலும் இந்த நூதனமான பிரச்சினை மட்டுமே இருக்கிறது.
இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ள நாம் லோசா சொல்வதைப் போல இன்று பண்பாடு எப்படி புரிந்துகொள்ளப் படுகிறது என்று சிந்திக்க வேண்டும். பண்பாட்டை நாம் இன்று எளிய பொழுதுபோக்காக எல்லா தளங்களிலும் மாற்றிவிட்டோம். இந்தியச் சூழலை எடுத்துக் கொண்டால் ஒரு விளம்பரப் படம், ரீல்ஸ், குறும்படம், திரைப்படம், அரசியல்வாதியின் புரொமோஷன் வீடியோ (பொதுமக்களுடன் டீ குடிப்பது, ஜல்மூரி வாங்கித் தின்பது), மனிதர்கள் இடையிலான சம்பாஷணை, மேடையில் ஆற்றப்படும் உரைகள், பாராளுமன்ற விவாதங்கள், வகுப்பறைகள் எல்லாமே இன்று பொழுதுபோக்கையே இலக்காக்குகின்றன. பொழுதுபோக்காமல் தீவிரமானால் அது உடனடியாக அகற்றப்படுகிறது. நாம் ஏன் பொழுதுபோக்குக்காக இவ்வளவு தவிக்கிறோம் என்று மேற்கத்திய சூழலை வைத்து லோசா வினவுகிறார்.
எனக்கு இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் இன்று காலத்தை ரொம்பவே பயன்பாட்டு ரீதியாக (instrumental) காணத் தொடங்கியதுதான் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது காலத்தை நாம் முன்பு நம் வாழ்வின் காரணிகளில் ஒன்றாகக் கண்டோம். காலம் இருப்பதாலே நம்மால் நகர முடிகிறது, வாழ முடிகிறது, மரிக்க முடிகிறது. ஆகையாலே நாம் ஒருவர் காலமாகி விட்டதாக மரணத்தை உருவகப்படுத்தினோம். இங்கிருந்து நாம் இன்று காலமே ஒரு நுகர்வுப் பொருள்தான் எனும் இடத்துக்கு வந்துவிட்டோம். ஒவ்வொரு கணத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என நாம் நினைக்கத் தொடங்கியபோதே இது துவங்கிவிட்டது. காலத்தின் இடத்தில்தான் நாம் ஒவ்வொன்றையும் வைத்துப் பார்க்கிறோம் - ஒரு நட்பை, ஒரு காதலை, உணவை, வேலையை, அரசியலை, ஆன்மீகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என யோசிக்கிறோம். இயல்பாகவே நமக்கு காலத்திற்கு ஈடாகப் பணத்தை வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டு மட்டுமே காலத்துக்கு (உழைப்பு) ஈடாக இன்பத்தைத் தருவதாகக் கோருகிறது. ரூபாய் நோட்டு வாழும் அடிப்படைத் தகுதியைத் தருவதாகக் கோரிய போது அது காலத்தை ஈடுசெய்ய வில்லை. ஏனென்றால் வாழும் நிலைக்கான நிபந்தனைகள் காலத்தைப் போன்ற ஒரு காரணி மட்டும்தான். காலத்தை ஈடற்ற இன்பமாக நாம் கருதும்போது அது காரணியாக அல்லாமல் நுகர்வுப் பொருளாகிறது. இப்போது நாம் வாழ்க்கையையே நுகர்வாகப் பார்க்கிறோம். ஒருவர் கருத்தரிக்கிறார், ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. அதுவும் ஒரு பொழுதுபோக்குதான். அதனால் வாழ்கைக் கடினமாகிறதா, இன்பமாகிறதா என்பது இன்று மணமான இளைஞர்களிடையே ஒரு விவாதமாகிறது. வாழ்க்கையின் தீவிரம் இப்படி எல்லா நிலைகளிலும் மறுக்கப்பட்டு மேலோட்டமான போக்கு ஓங்குகிறது.
இந்த மாற்றத்தின் விளைவாகவே நாம் இலக்கியம் படைப்பதிலும் ஒருவித கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். ஒரு சமூகமாக, காலத்தை நாம் பார்க்கும் விதம் மாறாமல் இப்பிரச்சினைகள் சரியாகப் போவதில்லை. அதாவது காலத்தின் விசயத்தில் நாம் கொஞ்சம் பின்னுக்குப் போய் நவீனத்திற்கு முன்பு காலம் எப்படி இருந்தது, காலம் எப்படிப் பார்க்கப்பட்டது என்று வினவ வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும்!
Comments