Skip to main content

பிறந்தநாள் வாழ்த்துகள்


 

பல்லவிக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி சில சிந்தனைகள்.

அவளுடைய வருகை என் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளதை உணர்கிறேன். இந்த ஆண்டும் அவள் அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
நானும் அவளும் இருவேறான மனநிலைகளும், ஆளுமைகளும் கொண்டவர்கள் -
எனக்கு என் நாவல் எழுத்து ஒழுங்காக நடந்தால் மட்டும் போதும். அவளுக்கு பல சின்ன விசயங்கள் ஒழுங்காக நிகழ வேண்டும்.
எனக்கு இத்தெளிவு உள்ளதால் வேறெதைக் குறித்தும் கவலையில்லை. வயதாகிறதா? நல்லது. இன்னும் சில பத்தாண்டுகள் கடுமையாக தினமும் எழுத்தில் உழைத்தால் போதும். எழுதும் திட்டங்களை நிறைவேற்றி விட்டுச் செத்தால் போதும். இதற்கு அப்பால் யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பொருட்டில்லை. என் பணம், வேலை, சூழல் குறித்து அக்கறையில்லை. சுவற்றில் ஒரு ஆணியை அடித்து ஒரு படத்தைத் தொங்க விடுவோமே அதுதான் நான். என் ஆணி என் நாவல் எழுத்து. பல்லவி ஒரு பட்டம். அவளுக்கு எப்போதும் பறக்கிற ஒரு குதூகலமும், விழுந்துவிடுவோமே எனும் பயமும் உண்டு.
அவளுடைய அணுகுமுறையில் ஒரு அனுகூலம் பல்வேறு சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் இருக்குமென்பது.
எனக்கு நேரடி உலகில் அனைவருடனும் இணங்கிச் செல்ல முடியும். அதுவும் ஓரளவுக்குத்தான். ஒரு புன்னகை, சில சொற்களுடன் விலகிவிடுவேன். யார் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து சுத்தமாகக் கவலையில்லை. அவர்கள் என் உலகிலே இல்லை என நினைப்பேன். என் நாவலுடன், என் எழுத்துடன் சம்மந்தப்படாதவர்கள் என்னைப் பொறுத்தமட்டில் உயிருடனே இல்லாதவர்கள். அவர்கள் என் கண்ணிலே பட மாட்டார்கள். ஒன்று இலக்கியம் பேசு அல்லது நீ என் பார்வைப் புலத்திலேயேவில்லை எனச் சொல்வேன். அவள் அப்படி அல்லள். எல்லாருடனும் பேசுவாள். யாராவது கிடைத்தால் பேசியே கொன்று விடுவாள். யாராவது அவளைப் பேசிக் கொல்ல முன்வந்தால் ஆரத்தி எடுத்து வரவேற்பாள். இதனால் அவளது அக்கறை பெரிது. பெட்டிக்கடை வைத்திருக்கிறவர் யார், அவருடைய அக்காள் மகனுடைய சைக்கிளை வாங்கி ஓட்டிய சிறுமியின் தகப்பனார் பணிசெய்யும் இடத்தில் தினமும் முறைவாசல் செய்கிறவரின் குழந்தைதான் நம் வீட்டுக்கு முன்னால் விளையாடுகிறான் எனச் சொல்வாள்.
நான் சாலையில் பார்க்கும் மனிதரின் மனிதர் லேசாக விந்தி நடந்தார் பார்த்தாயா, மஞ்சள் வண்ணமடித்த வீட்டின் பால்கனியில் தொங்கும் ஊஞ்சலில் இருந்து ஒரு பூனை தாவி இறங்கியதும் அது தொடர்ந்து ஊடலாடியது பார்த்தாயா என்று பைக்கில் போகும்போது காணும் காட்சிகளைக் கவனித்துச் சொல்வேன். அவள் அந்த மனிதர் தன் கணக்கு வாத்தியாரை நினைவுபடுத்தியதாகச் சொல்வாள், எந்தப் பூனை நான் பார்க்கலியே, நாம் பூனை வளர்க்கலாமா எனக் கேட்பாள்.
நான் ஒரு பதிவையோ கட்டுரையையோ (ரெண்டுமே எனக்கு ஒன்றுதான் என்பது வேறு விசயம்) எழுதிவிட்டு படிப்பது உங்கள் பிரச்சினை எனப் போய் விடுவேன். அவள் ராணுவ தயாரிப்புடன் பதிவுகளைப் போட்டுவிட்டு ஏன் விருப்பக்குறி வரவில்லை, ஏன் ஜனங்கள் திரள்திரளாக பதாகைகளுடன் தன் வீட்டு முன்னால் வரவில்லை என யோசிப்பாள். கவலைப்படுவாள். என்னையும் கவலைப்படச் சொல்வாள். தன் பதிவுக்கு ஹா ஹா போட்டவர், இதயக்குறி இட்டவர் வேறு எப்போதெல்லாம் இத்தகைய மகத்தான செயல்களைப் புரிந்தார், தன்னை யாராவது கேலி செய்யும் பொருட்டு ஹாஹா என்கிறார்களா, இத்தகைய துரோகங்களை இதற்கு முன் எப்போதெல்லாம் செய்தார்கள் என பட்டியலை வைத்திருக்கிறாள். விருப்பக்குறிக்கெல்லாம் அர்த்தமில்லை என நம்புகிறவன் நான்.
அண்மையில் பல்லவி ஒரு புது கன்வெர்ட்டாகவும் மாறிவருகிறாள். எங்கள் ஊரில் புதிதாக கிறித்துவத்துக்கு மதம் மாறினவர்கள் நெருப்பாக இருப்பார்கள். வழக்கமான கிறித்துவர்கள் அவர்கள் பாட்டுக்கு இருப்பார்கள் என்பதால் வார்த்தைக்கு ஒரு தரம் விவிலியச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்துவோரை, ஏசுவுக்கு நெருக்கமாகத் தாம் மட்டும் உள்ளதைக் காட்டுவோரை அப்படி கேலி செய்வோம். மதமாற்றத்துக்கு அடுத்தபடியாக டயட்டிலும் இத்தகையோரைக் காண முடியும். பல்லவி ஒரு பேலியோ புது கன்வர்ட். வரும் ஆண்டு அவள் பேலியோ ஆண்டவரை தனியே விட்டுவிட்டு கூலாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த ஆண்டு நடந்த ஒரு படுபயங்கர சம்பவம் அவள் ஒரு நாளைக்கு நூறு முறைகள் பேஸ்புக் செயலியை நிறுவல் நீக்கம் செய்வதும் நிறுவுவதுமாக இருந்ததைக் கண்ட நான் "உன் பேஸ்புக் போதைப் பழக்கத்தைக் குறைக்க நீ போனை குறிப்பிட்ட சில மணிநேரக்கள் பீரோவில் வைத்துப் பூட்டலாமே?" என்று கேட்டதில் துவங்கியது. நானே சாவியை எடுத்துத் திறந்து பார்த்து மீண்டும் மீண்டும் அதைச் செய்வேனே என்றாள். குடி போதையடிமைகளை விட மோசமாக இருக்கிறதே என்று நினைத்து "சரி சாவியை என்னிடம் கொடுத்து வை" என்றேன். அப்படியே செய்தாள். ஒருமணிநேரம் கழித்து அவள் என்னிடம் சாவியை வாங்கித் திறக்க முயன்றால் சாவி வேலை செய்யவில்லை. பலவிதமான சாவிகளை முயன்றாள். எதுவும் வேலை செய்யவில்லை. கடைசியில் யுடியூப் வீடியோ ஒன்றைப் பார்த்து முயன்று (உள்ளே ஒரு கம்பியை நுழைத்து கடுமையாக உங்கள் வலுவைக் காட்டித் திருப்புங்கள், உடையும் சத்தம் கடாமுடாவென வரும் வரைக்கும் திருகுங்கள் வகை வீடியோ) பூட்டுக்குள் சாவி உடைந்து சிக்கிக் கொண்டது. அடுத்து ஒரு வாரம் பூட்டு சரிசெய்பவரை அழைத்து மர மறுத்து விட்டாள். "இது என் மனவுறுதிக்கான பயிற்சி பார்". கடைசியாக ஒருநாள் பூட்டு சரிசெய்பவரை அழைத்து வந்து திறந்தேன். போனை எடுத்து சார்ஜ் போட்டேன். அவள் வந்ததும் அதைப் பிடுங்கி தனக்கு யாரெல்லாம் மிஸ்கால் கொடுத்துள்ளார்கள் எனப் பார்த்தாள். ஒன்றிண்டு பேர்தாம். அவர்களை அழைத்து அவள் பரவசமாகத் தனக்கு நடந்ததைச் சொல்வதைப் பார்க்க டிவியில் தேவ சாட்சியம் சொல்கிறவர்களைப் போலவே இருந்தது. கடைசியில் நடந்ததுதான் வேடிக்கை - அவள் ஆரம்பத்தில் திறக்க முயன்ற சாவியை வீட்டிலுள்ள வெவ்வேறு அலமாரிகளில் முயன்று பார்த்தேன். மற்றொரு அறையில் உள்ள அலமாரியில் அச்சாவி சரியாகப் பொருந்தியது. அதை அவள் எப்படி இந்த அலமாரியில் பொருத்தினாள், அதை வைத்து எப்படிப் பூட்டினாள் என்று புரியவில்லை. ஆனால் எப்படியோ இதெல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்படி வாழ்க்கையில் எதுவுமே நடக்காமல் போராடிக்கிறது என நினைக்கிறவர்கள் பல்லவியை அழைத்துச் சென்று வைத்துப் பார்க்கலாம். தினமும் எதாவது ஒரு சாகசம், திகைப்பு, பரபரப்பு நிச்சயம்.
ஒட்டுமொத்தமாக வரும் ஆண்டு பல்லவிக்கு மிகச்சிறப்பாக அமையட்டும். மேலும் பல பூட்டுக்கள் உடையட்டும், பலரை பேலியோ பக்கம் திருப்ப முயன்று அது தோல்வியாகட்டும், புதுப்புது இலக்குகளும் இலக்குகளை எட்டாத பல்லாயிரம் பயணங்களும் அமையட்டும் (எட்டிவிட்டால் அதிலென்ன ஜாலி)!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...