Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காலச்சுழலில் நின்றபடி வாசகர்களுக்கு ஒரு சலாம்

வாசக எதிர்வினைகள் தனிமை மற்றும் சோர்விலிருந்து என்னை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பது பற்றின பதிவு இது.

நேற்று போல் நான் என்றும் தன்மையை உணர்ந்தது இல்லை. எழுதின ஒரு கட்டுரைக்காக வசை பாடப்பட்டு சோர்ந்து போனேன். வசை எனக்கு புதிதல்ல. ஒருவித அதிர்சசி தான் சோர்வுக்கு காரணம். துதி பாடினவர் மிக அசட்டுத்தனமான தரப்புகளை முன்வைத்து பேசினார். நான் அறிவார்ந்தவராய் மதிக்கும், மிக்க பிரியம் கொண்ட நபர் அவர். அவரிடம் இருந்து வெளிப்பட்ட அசட்டுத்தனம் என்னை சற்று குழப்பி விட்டது. காரணம், அன்று அவர் தனிப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தார். பதற்றமும் கோபமும் என் மீது திரும்பியது.

ஆனால் இந்த பதிவு அவரைப் பற்றியதல்ல. இந்த சம்பவத்துக்குப் பிறகு பன்மடங்கு அசட்டுத்தனத்துடன் நான் யோசித்தது பற்றி.

எழுத்தின் தனிமை



எழுத்துலகை ஒரு எதிரொலிக்கும் குகையுடன் ஒப்பிடுவோம். எழுத்தனுபவம் இப்படி விபரீதமாய் குகை சுவருடன் பேசுவதே. ஒரு அரூப வாசகன் கற்பனையில் இருந்தாலும் இது ஒரு செயற்கையான நிலைதான். வாசகர்கள் குகை வெளியே நின்று எதிரொலியை தங்களுக்கு ஏற்றபடி கேட்கிறார்கள். நான் இயல்பாகவே சற்று உள்ளொடுங்கியவன். இலக்கிய நண்பர்கள் கம்மி. எல்லாம் சேர்ந்து இந்த ஒன்றரை வருடம் அடிக்கடி ஒரு நூற்றாண்டாக கனக்கிறது.

அசட்டு எண்ணம்

ஒரு குழந்தை “என்னை எதுக்கு பெத்தே?” என்று கேட்பது போல் யோசித்தேன்: “இத்தனைக் காலமாய் (வெறும் ஒன்றரை வருடம், அட!) எழுதினதுக்கு மொத்தமாய் இப்படி திட்டு வாங்கினதுதான் வெகுமதியா?” மீண்டும் மீண்டும் இதையே நினைத்து இரவெல்லாம் கணினித் திரையை முறைத்தபடி கழித்தேன். அடுத்து, தெருவில் போகும்போது யாரோ முதுகுப் பக்கமாய் இழுத்து “யோவ் ...” என்று என் பிற கட்டுரைகள் மேல் மேலும் அசட்டுத்தனமாய் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுடன் தனிமையில் கத்திச் சண்டை. மேலும் மேலும் களைப்படைந்தேன். காலையில் செய்தி பார்த்து “எப்படி எல்லாம் ஊழல் அட்டூழ்யம் பண்ணுகிறார்கள்!” என்று டீ.விக் குரலை தொட்ர்ந்து சிந்தித்தால், அதே நபர் குறுக்கே தோன்றி ” நீ மட்டும் ரொம்ப ஒழுங்கோ. உன் கட்டுரையையே பாரேன் ...” என்று ஆரம்பித்தார்.

என் ”கோவை மாணவிகளின் ...” கட்டுரைக்கு என்றுமே அல்லாத படி இன்று வாசகர்களிடம் இருந்து அதிக பாராட்டுகள் வந்திருந்தன. தலையை பிய்த்தபடி அழும் குழந்தைக்கு பரிசுப் பொருட்கள் வருவது போல். இதன் காலப்பொருத்தம் வியப்படைய வைக்கிறது. ஏனெனில் இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்துள்ளது. பல சமயங்களில் என் படைப்புகளுக்கு எதிர் தரப்பில் இருந்து நீடித்த மவுனம் நிலவும். எழுதுவது யாருக்கும் பிடிக்கவில்லையோ என்று சோர்வுற்று, சற்று காலம் எழுத்துக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று தீர்மானித்தபடி இருக்கையில் பரிச்சயமற்ற ஒரு வாசகரிடம் இருந்து பாராட்டி மின்னஞ்சல் வரும். அந்த ஒரு குரலால் உத்வேகம் பெற்று அவரையே அரூப வாசகனாய் முன்னிறுத்தி அடுத்து எழுதுவேன். என் குறைவான எழுத்து வாழ்வில் வறட்சி கட்டங்களில் இப்படி பல முறை காலம் தூறலிட்டுள்ளது. இந்த அவசர நிலை ஆதரவாளர்கள் இன்றி இதோ இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். வாழ்வெனும் காஸினோ சுழல் மேஜையில் மீள மீள பந்து சரியான இலக்கை நோக்கி வருவது வெறும் எதேச்சைதானா? இதன் பின்னால் சிடுக்குகள் நிறைந்த காலத்தின் மூளை ஒன்று செயல்படுவதாக படுகிறது. ஆகாயத்தில் இருந்து நீண்டு வரும் காலத்தின் கரம் நம் சீட்டுக்கட்டுகளை கலைத்து விடுகிறது; பிறகு அதே மாயக்கரம் ஒரே ஒரு சீட்டை சரியான இடத்தில் திணித்து மறைகிறது. ஆட்டம் திசை மாறுகிறது; அல்லது மர்மமான அன்றாடத்தன்மையுடன் தொடர்கிறது.

சிறுபத்திரிகை கட்டத்தில் இருந்து இன்று வரை நமது சிறுபான்மை வாசிப்பு கலாச்சார சூழலில் முப்பது நாற்பது வருடங்களுக்கு மேலாய் பல படைப்பாளிகள் எப்படி நிலைத்து எழுதியுள்ளார்கள் என்று வியந்திருக்கிறேன். நம் புராணங்கள், காப்பியங்களில் வரும் கண்ணகி, சீதை, காந்தாரி போன்றவர்களா இவர்கள். இல்லை. அந்த மர்மத்தின் திட்டிவாசல் இதோ திறக்கிறது. எழுத்தாளனின் தனிமை ஒரு ஜன்னல். அது எதிர்பாராது திறக்கையில் மட்டுமே பல இதயங்கள் அங்கு திறந்தபடி காத்திருப்பது தெரிகிறது.




காலத்தின் மூளை குரூரத்துடனும் அபாரமான பிரியத்துடனும் புன்னகைக்கிறது. அதன் முன் சிறு கூச்சத்துடன், தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் சிறு வாசக வட்டத்துக்கு ஒரு சலாம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...