Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காலச்சுழலில் நின்றபடி வாசகர்களுக்கு ஒரு சலாம்

வாசக எதிர்வினைகள் தனிமை மற்றும் சோர்விலிருந்து என்னை மீண்டும் மீண்டும் மீட்டெடுப்பது பற்றின பதிவு இது.

நேற்று போல் நான் என்றும் தன்மையை உணர்ந்தது இல்லை. எழுதின ஒரு கட்டுரைக்காக வசை பாடப்பட்டு சோர்ந்து போனேன். வசை எனக்கு புதிதல்ல. ஒருவித அதிர்சசி தான் சோர்வுக்கு காரணம். துதி பாடினவர் மிக அசட்டுத்தனமான தரப்புகளை முன்வைத்து பேசினார். நான் அறிவார்ந்தவராய் மதிக்கும், மிக்க பிரியம் கொண்ட நபர் அவர். அவரிடம் இருந்து வெளிப்பட்ட அசட்டுத்தனம் என்னை சற்று குழப்பி விட்டது. காரணம், அன்று அவர் தனிப்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தார். பதற்றமும் கோபமும் என் மீது திரும்பியது.

ஆனால் இந்த பதிவு அவரைப் பற்றியதல்ல. இந்த சம்பவத்துக்குப் பிறகு பன்மடங்கு அசட்டுத்தனத்துடன் நான் யோசித்தது பற்றி.

எழுத்தின் தனிமை



எழுத்துலகை ஒரு எதிரொலிக்கும் குகையுடன் ஒப்பிடுவோம். எழுத்தனுபவம் இப்படி விபரீதமாய் குகை சுவருடன் பேசுவதே. ஒரு அரூப வாசகன் கற்பனையில் இருந்தாலும் இது ஒரு செயற்கையான நிலைதான். வாசகர்கள் குகை வெளியே நின்று எதிரொலியை தங்களுக்கு ஏற்றபடி கேட்கிறார்கள். நான் இயல்பாகவே சற்று உள்ளொடுங்கியவன். இலக்கிய நண்பர்கள் கம்மி. எல்லாம் சேர்ந்து இந்த ஒன்றரை வருடம் அடிக்கடி ஒரு நூற்றாண்டாக கனக்கிறது.

அசட்டு எண்ணம்

ஒரு குழந்தை “என்னை எதுக்கு பெத்தே?” என்று கேட்பது போல் யோசித்தேன்: “இத்தனைக் காலமாய் (வெறும் ஒன்றரை வருடம், அட!) எழுதினதுக்கு மொத்தமாய் இப்படி திட்டு வாங்கினதுதான் வெகுமதியா?” மீண்டும் மீண்டும் இதையே நினைத்து இரவெல்லாம் கணினித் திரையை முறைத்தபடி கழித்தேன். அடுத்து, தெருவில் போகும்போது யாரோ முதுகுப் பக்கமாய் இழுத்து “யோவ் ...” என்று என் பிற கட்டுரைகள் மேல் மேலும் அசட்டுத்தனமாய் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுடன் தனிமையில் கத்திச் சண்டை. மேலும் மேலும் களைப்படைந்தேன். காலையில் செய்தி பார்த்து “எப்படி எல்லாம் ஊழல் அட்டூழ்யம் பண்ணுகிறார்கள்!” என்று டீ.விக் குரலை தொட்ர்ந்து சிந்தித்தால், அதே நபர் குறுக்கே தோன்றி ” நீ மட்டும் ரொம்ப ஒழுங்கோ. உன் கட்டுரையையே பாரேன் ...” என்று ஆரம்பித்தார்.

என் ”கோவை மாணவிகளின் ...” கட்டுரைக்கு என்றுமே அல்லாத படி இன்று வாசகர்களிடம் இருந்து அதிக பாராட்டுகள் வந்திருந்தன. தலையை பிய்த்தபடி அழும் குழந்தைக்கு பரிசுப் பொருட்கள் வருவது போல். இதன் காலப்பொருத்தம் வியப்படைய வைக்கிறது. ஏனெனில் இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்துள்ளது. பல சமயங்களில் என் படைப்புகளுக்கு எதிர் தரப்பில் இருந்து நீடித்த மவுனம் நிலவும். எழுதுவது யாருக்கும் பிடிக்கவில்லையோ என்று சோர்வுற்று, சற்று காலம் எழுத்துக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று தீர்மானித்தபடி இருக்கையில் பரிச்சயமற்ற ஒரு வாசகரிடம் இருந்து பாராட்டி மின்னஞ்சல் வரும். அந்த ஒரு குரலால் உத்வேகம் பெற்று அவரையே அரூப வாசகனாய் முன்னிறுத்தி அடுத்து எழுதுவேன். என் குறைவான எழுத்து வாழ்வில் வறட்சி கட்டங்களில் இப்படி பல முறை காலம் தூறலிட்டுள்ளது. இந்த அவசர நிலை ஆதரவாளர்கள் இன்றி இதோ இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். வாழ்வெனும் காஸினோ சுழல் மேஜையில் மீள மீள பந்து சரியான இலக்கை நோக்கி வருவது வெறும் எதேச்சைதானா? இதன் பின்னால் சிடுக்குகள் நிறைந்த காலத்தின் மூளை ஒன்று செயல்படுவதாக படுகிறது. ஆகாயத்தில் இருந்து நீண்டு வரும் காலத்தின் கரம் நம் சீட்டுக்கட்டுகளை கலைத்து விடுகிறது; பிறகு அதே மாயக்கரம் ஒரே ஒரு சீட்டை சரியான இடத்தில் திணித்து மறைகிறது. ஆட்டம் திசை மாறுகிறது; அல்லது மர்மமான அன்றாடத்தன்மையுடன் தொடர்கிறது.

சிறுபத்திரிகை கட்டத்தில் இருந்து இன்று வரை நமது சிறுபான்மை வாசிப்பு கலாச்சார சூழலில் முப்பது நாற்பது வருடங்களுக்கு மேலாய் பல படைப்பாளிகள் எப்படி நிலைத்து எழுதியுள்ளார்கள் என்று வியந்திருக்கிறேன். நம் புராணங்கள், காப்பியங்களில் வரும் கண்ணகி, சீதை, காந்தாரி போன்றவர்களா இவர்கள். இல்லை. அந்த மர்மத்தின் திட்டிவாசல் இதோ திறக்கிறது. எழுத்தாளனின் தனிமை ஒரு ஜன்னல். அது எதிர்பாராது திறக்கையில் மட்டுமே பல இதயங்கள் அங்கு திறந்தபடி காத்திருப்பது தெரிகிறது.




காலத்தின் மூளை குரூரத்துடனும் அபாரமான பிரியத்துடனும் புன்னகைக்கிறது. அதன் முன் சிறு கூச்சத்துடன், தொடர்ந்து எனக்கு ஆதரவளிக்கும் சிறு வாசக வட்டத்துக்கு ஒரு சலாம்!

Comments

Naveen Krishna said…
Hi Abilash,

Some way few persons in this world
and in their journey, in most of the circumstances they starve, stand thirst for some thing.
For them they cant able to tell or cry what they want.

Co-passenger like you with the ability to show some few drops to
quench their thirst.
So continue to show/give those few drops to thirsty persons like me,
irrespective of the barriers, irritation,+ve or -ve feedback from
various quarters.

Drawing of Dali's flowing clock is excellent match to the article.

Naveen Krishna
Baski.. said…
nice post abilash... and ur UYIRMAI story is very good.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...