Skip to main content

குறும்பட விமர்சனம்: அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்















அதிர்ஷ்டம் 5 km-இல் மிக நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு இயக்குனரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: ஸ்ரீராம் பத்மநாபன் (D.F.Tech). ஸ்ரீராமுக்கு ஒரு கதையை தொய்வில்லாமல் சொல்லத் தெரிகிறது. நடிக்க வைக்க முடிகிறது. காட்சிபூர்வ நுண்ணுணர்வு உள்ளது. முக்கியமாய் அவருக்கு ஒரு இயக்குனருக்கான அசலான தேடல் உள்ளது. எந்த பாசாங்கும் இல்லாமல் வாழ்க்கை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.


படத்தின் தலைப்பு ஒரு திகில் படத்தை எதிர்பார்க்கச் செய்யலாம். மிக இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இழை படம் முழுக்க ஓடினாலும் இது திகில் படம் அல்ல. வைதீஸ்வரன் எனும் ஒரு சராசரி மனிதன் சைக்கிள் ஓட்டியபடியே தன் வாழ்வை அசை போடுகிறான். வாழ்க்கையை மீள்நோக்க பயணம் எப்போதும் ஒரு சிறந்த படிமமாக பயன்படுவது. அவன் ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்க சென்று கொண்டிருக்கிறான். அந்த கடிதத்தின் நோக்கம் பிற்பாடு வருகிறது. முதலில் அவனைக் குறித்த அறிமுகம். தொடர்ந்து அதிர்ஷ்டத்தால் அலைகழிப்படுபவன். பெண்கள் விசயத்தில் ராசியே இல்லை. பள்ளியில் பக்கத்து இருக்கை பெண்ணில் இருந்து ஆசிரியை வரை துன்புறுத்துகிறார்கள். இப்போது மனைவியும். படிப்பிலும் ஒரு தற்குறியே. மளிகைக்கடையில் மூவாயிரத்துக்கு பொட்டலம் மடிக்கிற வேலை. சற்று உற்று கவனித்தால் இப்படியான தோல்வியுற்றவன்\உதவாக்கரையின் பாத்திரம் தமிழின் சமீப எதார்த்த சினிமாக்களில் பிரதானமாக கையாளப்பட்டிருப்பதை காணலாம். இந்த பாத்திரத்துக்கு புத்திஜீவித்தனம் பூசினால் கலைப்படம். மதிப்பீடுகளை கழற்றி விட்டால் பின்நவீனத்துவ பாத்திரம். இப்படி தட்டி ஈயம் பூசப்படாமல் ஸ்ரீராமின் வைதீஸ்வரன் நம் வரம்புக்குள்ளே நிற்கிறான்.


வைத்தீஸ்வரன் பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு கறிக்குழம்பு கொடுத்து 9 வரை தேறுகிறான். ஆனால் பத்தாவது வகுப்புக்கு என்று பார்த்த ஐயர் வாத்தியார் வருகிறார். தோல்வி. பிறகு சிரமப்பட்டு படித்து கல்லூரிக்கு சென்றால் வரலாறு பாடம் தான் கிடைக்கிறது. வைதீஸ்வரனின் மனைவி நடத்தை தவறுகிறாள். அவனை அவள் சுத்தமாக மதிப்பது வேறு இல்லை. இப்படி வாழ்க்கை முழுக்க பல விசயங்கள் அமைந்தும் அமையாமல் தவறுகிறது. வைதீஸ்வரனுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சில நொடிகள் முந்திப் போய் விடுகிறது. இதைக் குறிப்பிட அவன் சைக்கிளை இழுத்து இழுத்து மிதிக்க ஒரு பேருந்து முன்னேறிப் போய் விடுகிறது. இங்கு பேருந்து ஒரு உருவகம். சற்று பலவீனமாக இங்கு குறியீட்டுத்தன்மை உருவாக்கப்பட்டிருந்தாலும் பேருந்து முந்தி செல்வது முக்கியமானது. பலவீனமான ஒரு மத்தியவர்க்க மனதுக்கு மதிப்பீடுகள் தாம் அஸ்திவாரம். இதனாலே அவனுக்கு மனைவியின் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மனைவி பக்கத்து வீட்டுக்காரனுடன் பார்வையில் சல்லாபிக்கும் இடம் உக்கிரமாக உருவாக வேண்டியது. அவர்கள் இருவரையும் வைதீஸ்வரன் மீசை நறுக்கியபடி கண்ணாடியில் கவனிக்கிறான். நேரடியாக அல்ல. இக்காட்சியை வசனம் தவிர்த்து மிக கவித்துவமாக தயாரித்திருக்க முடியும். கண்ணாடி என்பது சினிமா மொழியில் மனதின் குறியீடு தானே. ஆனால் இந்த சாத்தியப்பாட்டை ஸ்ரீராம் இந்த தருணத்தில் உத்தேசித்திருப்பதே அபாரமானது.














அவளை கொல்ல முடிவு செய்கிறான். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தன் கொலை உத்தேசம் குறித்து கடிதம் எழுதுகிறான். அப்படி எழுதுவார்களா என்ற கேள்வி கூடாது. இது கலை சுதந்திரம் (poetic license). அடுத்து கொலை முயற்சி காட்சி மேலும் நுட்பமாக அமைந்துள்ளது. அவள் வழக்கம் போல் கணவனின் கையாகாத்தனத்தை வைது விட்டு தெனாவட்டாக குளியலறைக்கு நடக்கிறாள். பின்னால் கணவன் பதுங்கியபடி கையில் கத்தியுடன். குளியறை நுழையும் மனைவி சட்டென்று திரும்பி “போய் துண்டு எடுத்து வா” என்று ஆணையிடுகிறாள். உயிரை எடுப்பவனுக்கு ஒரு தனி அதிகாரம் வாய்த்து விடுகிறது. அவன் தன்னை சற்று மேலாகவே நினைத்துக் கொள்கிறான். ஆனால் நம்மாள் தொடர்ந்து அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து பழகியவர் ஆயிற்றே! அதிர்ச்சியில் “சரி” என்று கூனிக்குறுகி துண்டு எடுக்க திரும்புகிறான். கத்தி அப்போதும் அவன் கையில் மறைந்து உள்ளது. திரும்ப துண்டு மற்றும் கத்தியுடன் வரும்போது மனைவி மின்சாரம் தாக்கி இறந்து போகிறாள். இப்போது ஒரு பிரச்சனை. கொலை வாக்குமூலக்கடிதம் தபாலில் உள்ளது. இயற்கையான மரணம் ஒரு கொலைப்பழியாக அவன் மீது விழ உள்ளது. அவன் விரைய வேண்டும். 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெட்டி. அந்த கடிதத்தை கைப்பற்ற வேண்டும். மேற்கொண்டு வரும் காட்சி நம் கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் அல்ல, தன் வாழ்க்கையை துரத்தும் ஒருவனது அவலமே இங்கு கவனிக்க வேண்டியது. அதுவும் கையெட்டும் தூரத்தில் 5 k.m தொலைவில் வாழ்வின் ஜீவநாடி இருக்கிறது. நம் கற்பனையை அலாதியாக தூண்டக்கூடிய இடம் இது. ஒரு வலிமிக்க இருத்தலியல் தருணத்தை இது மீட்டி விடுகிறது.


கெ.ஜி வெங்கடேஷுக்கு தலைகலைந்த அசட்டு முகம் கொண்ட நாயகப்பாத்திரம் மிகத் தோதாக உள்ளது. கடைசியில் மிகையாக அதிர்ச்சி அடைவது தவிர நன்றாகவே நடித்துள்ளார். மனைவியின் பாத்திரத்தில் வரும் ஷர்மிளாவுக்கு டி.வி மெகாத்தொடரில் நல்ல எதிர்காலம் உள்ளது. வில்லத்தனத்துக்காக ஷர்மிளா பாத்திரத்தின் அமைப்பு சற்று மிகையாக காட்டப்பட்டுள்ளது. அவர் பக்கமும் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். இருவரையும் படக்கருவியின் பிரக்ஞையின்றி நடிக்க வைக்க இயக்குனர் மேலும் முயன்றிருக்க வேண்டும். இருவரது உடல்மொழிகளின் முரண் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.


ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. அதுவும் வாக்குமூலக் கடிதத்தை தபால் செய்து விட்டு கணவன் சிந்தனைவயப்பட்டு திரியும் போது மாலை வானம் ஒரு பின்னணி ஆகிறது. இந்த அந்தி இங்கு ரம்மியமான சூழல் அல்ல. வாழ்வின் இருள் துவங்கப்போவதை சொல்லும் படிமம் இது. ஸ்ரீராம் படைப்பூக்கம் உள்ள ஒரு நபர் என்பதை எளிதாக நிறுவி விடுகிறது இந்த காட்சிபூர்வ அவதானிப்பு. வசனத்தில் உள்ள கூர்மையான கசப்பான நகைச்சுவையையும் குறிப்பிட வேண்டும். இந்த நகைமுரணான வரியை பாருங்கள். எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று கூட கற்பு வேறு பிழைத்த மனைவி குறித்து வைத்தீஸ்வரன்: “படிப்பில அவள் படி தாண்டா பத்தினிங்க”. பெண்ணியவாதிகள் விரும்பாவிட்டாலும் வைத்தீஸ்வரனின் பார்வையில் இருந்து வெளிப்படும்போது இவ்வசனம் அதற்கான ஆற்றலைப் பெறுகிறது.


படத்தயாரிப்பு: கிங்ஸ்லி ஜோஸ் மற்றும் மேரி கிறிஸ்டினா. கெ ஜொஸ்

ஒளிப்பதிவு: அ.வசந்தகுமார் D.F Tech

இசை: முரளி

தொகுப்பு: ஜி. முரளி D.F Tech

சினிமா ஆர்வலர்கள் கட்டாயமாக தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வாங்கி பார்த்து விடுங்கள். ஸ்ரீராம் பத்மநாபனின் எண்: 9444810878.

Comments

butterfly Surya said…
இந்த இளைஞர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது. உங்கள் கதை சொல்லும் பாணி அருமை.

பகிர்தலுக்கு நன்றி அபிலாஷ்.

நிச்சயம் பார்க்க வேண்டும்.

ஸ்ரீராம் பத்மநாபனுக்கும் அவர் டீமுக்கும் வாழ்த்துகள்.
நன்றி சூர்யா!
Unknown said…
உங்கள் விமர்சனத்தில் கலக்கீடீங்க போங்க. வாழ்த்துக்கள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எல்லாமே கையெட்டும் தொலைவில்தான் உள்ளன.தருணங்கள் அவற்றைத் தீர்மானிக்கின்றன.உங்கள் விமர்சனம் இக்குறும் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.சபாஷ் அபிலாஷ்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...