முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறும்பட விமர்சனம்: அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்















அதிர்ஷ்டம் 5 km-இல் மிக நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு இயக்குனரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: ஸ்ரீராம் பத்மநாபன் (D.F.Tech). ஸ்ரீராமுக்கு ஒரு கதையை தொய்வில்லாமல் சொல்லத் தெரிகிறது. நடிக்க வைக்க முடிகிறது. காட்சிபூர்வ நுண்ணுணர்வு உள்ளது. முக்கியமாய் அவருக்கு ஒரு இயக்குனருக்கான அசலான தேடல் உள்ளது. எந்த பாசாங்கும் இல்லாமல் வாழ்க்கை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.


படத்தின் தலைப்பு ஒரு திகில் படத்தை எதிர்பார்க்கச் செய்யலாம். மிக இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இழை படம் முழுக்க ஓடினாலும் இது திகில் படம் அல்ல. வைதீஸ்வரன் எனும் ஒரு சராசரி மனிதன் சைக்கிள் ஓட்டியபடியே தன் வாழ்வை அசை போடுகிறான். வாழ்க்கையை மீள்நோக்க பயணம் எப்போதும் ஒரு சிறந்த படிமமாக பயன்படுவது. அவன் ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்க சென்று கொண்டிருக்கிறான். அந்த கடிதத்தின் நோக்கம் பிற்பாடு வருகிறது. முதலில் அவனைக் குறித்த அறிமுகம். தொடர்ந்து அதிர்ஷ்டத்தால் அலைகழிப்படுபவன். பெண்கள் விசயத்தில் ராசியே இல்லை. பள்ளியில் பக்கத்து இருக்கை பெண்ணில் இருந்து ஆசிரியை வரை துன்புறுத்துகிறார்கள். இப்போது மனைவியும். படிப்பிலும் ஒரு தற்குறியே. மளிகைக்கடையில் மூவாயிரத்துக்கு பொட்டலம் மடிக்கிற வேலை. சற்று உற்று கவனித்தால் இப்படியான தோல்வியுற்றவன்\உதவாக்கரையின் பாத்திரம் தமிழின் சமீப எதார்த்த சினிமாக்களில் பிரதானமாக கையாளப்பட்டிருப்பதை காணலாம். இந்த பாத்திரத்துக்கு புத்திஜீவித்தனம் பூசினால் கலைப்படம். மதிப்பீடுகளை கழற்றி விட்டால் பின்நவீனத்துவ பாத்திரம். இப்படி தட்டி ஈயம் பூசப்படாமல் ஸ்ரீராமின் வைதீஸ்வரன் நம் வரம்புக்குள்ளே நிற்கிறான்.


வைத்தீஸ்வரன் பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு கறிக்குழம்பு கொடுத்து 9 வரை தேறுகிறான். ஆனால் பத்தாவது வகுப்புக்கு என்று பார்த்த ஐயர் வாத்தியார் வருகிறார். தோல்வி. பிறகு சிரமப்பட்டு படித்து கல்லூரிக்கு சென்றால் வரலாறு பாடம் தான் கிடைக்கிறது. வைதீஸ்வரனின் மனைவி நடத்தை தவறுகிறாள். அவனை அவள் சுத்தமாக மதிப்பது வேறு இல்லை. இப்படி வாழ்க்கை முழுக்க பல விசயங்கள் அமைந்தும் அமையாமல் தவறுகிறது. வைதீஸ்வரனுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சில நொடிகள் முந்திப் போய் விடுகிறது. இதைக் குறிப்பிட அவன் சைக்கிளை இழுத்து இழுத்து மிதிக்க ஒரு பேருந்து முன்னேறிப் போய் விடுகிறது. இங்கு பேருந்து ஒரு உருவகம். சற்று பலவீனமாக இங்கு குறியீட்டுத்தன்மை உருவாக்கப்பட்டிருந்தாலும் பேருந்து முந்தி செல்வது முக்கியமானது. பலவீனமான ஒரு மத்தியவர்க்க மனதுக்கு மதிப்பீடுகள் தாம் அஸ்திவாரம். இதனாலே அவனுக்கு மனைவியின் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மனைவி பக்கத்து வீட்டுக்காரனுடன் பார்வையில் சல்லாபிக்கும் இடம் உக்கிரமாக உருவாக வேண்டியது. அவர்கள் இருவரையும் வைதீஸ்வரன் மீசை நறுக்கியபடி கண்ணாடியில் கவனிக்கிறான். நேரடியாக அல்ல. இக்காட்சியை வசனம் தவிர்த்து மிக கவித்துவமாக தயாரித்திருக்க முடியும். கண்ணாடி என்பது சினிமா மொழியில் மனதின் குறியீடு தானே. ஆனால் இந்த சாத்தியப்பாட்டை ஸ்ரீராம் இந்த தருணத்தில் உத்தேசித்திருப்பதே அபாரமானது.














அவளை கொல்ல முடிவு செய்கிறான். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தன் கொலை உத்தேசம் குறித்து கடிதம் எழுதுகிறான். அப்படி எழுதுவார்களா என்ற கேள்வி கூடாது. இது கலை சுதந்திரம் (poetic license). அடுத்து கொலை முயற்சி காட்சி மேலும் நுட்பமாக அமைந்துள்ளது. அவள் வழக்கம் போல் கணவனின் கையாகாத்தனத்தை வைது விட்டு தெனாவட்டாக குளியலறைக்கு நடக்கிறாள். பின்னால் கணவன் பதுங்கியபடி கையில் கத்தியுடன். குளியறை நுழையும் மனைவி சட்டென்று திரும்பி “போய் துண்டு எடுத்து வா” என்று ஆணையிடுகிறாள். உயிரை எடுப்பவனுக்கு ஒரு தனி அதிகாரம் வாய்த்து விடுகிறது. அவன் தன்னை சற்று மேலாகவே நினைத்துக் கொள்கிறான். ஆனால் நம்மாள் தொடர்ந்து அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து பழகியவர் ஆயிற்றே! அதிர்ச்சியில் “சரி” என்று கூனிக்குறுகி துண்டு எடுக்க திரும்புகிறான். கத்தி அப்போதும் அவன் கையில் மறைந்து உள்ளது. திரும்ப துண்டு மற்றும் கத்தியுடன் வரும்போது மனைவி மின்சாரம் தாக்கி இறந்து போகிறாள். இப்போது ஒரு பிரச்சனை. கொலை வாக்குமூலக்கடிதம் தபாலில் உள்ளது. இயற்கையான மரணம் ஒரு கொலைப்பழியாக அவன் மீது விழ உள்ளது. அவன் விரைய வேண்டும். 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெட்டி. அந்த கடிதத்தை கைப்பற்ற வேண்டும். மேற்கொண்டு வரும் காட்சி நம் கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் அல்ல, தன் வாழ்க்கையை துரத்தும் ஒருவனது அவலமே இங்கு கவனிக்க வேண்டியது. அதுவும் கையெட்டும் தூரத்தில் 5 k.m தொலைவில் வாழ்வின் ஜீவநாடி இருக்கிறது. நம் கற்பனையை அலாதியாக தூண்டக்கூடிய இடம் இது. ஒரு வலிமிக்க இருத்தலியல் தருணத்தை இது மீட்டி விடுகிறது.


கெ.ஜி வெங்கடேஷுக்கு தலைகலைந்த அசட்டு முகம் கொண்ட நாயகப்பாத்திரம் மிகத் தோதாக உள்ளது. கடைசியில் மிகையாக அதிர்ச்சி அடைவது தவிர நன்றாகவே நடித்துள்ளார். மனைவியின் பாத்திரத்தில் வரும் ஷர்மிளாவுக்கு டி.வி மெகாத்தொடரில் நல்ல எதிர்காலம் உள்ளது. வில்லத்தனத்துக்காக ஷர்மிளா பாத்திரத்தின் அமைப்பு சற்று மிகையாக காட்டப்பட்டுள்ளது. அவர் பக்கமும் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். இருவரையும் படக்கருவியின் பிரக்ஞையின்றி நடிக்க வைக்க இயக்குனர் மேலும் முயன்றிருக்க வேண்டும். இருவரது உடல்மொழிகளின் முரண் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.


ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. அதுவும் வாக்குமூலக் கடிதத்தை தபால் செய்து விட்டு கணவன் சிந்தனைவயப்பட்டு திரியும் போது மாலை வானம் ஒரு பின்னணி ஆகிறது. இந்த அந்தி இங்கு ரம்மியமான சூழல் அல்ல. வாழ்வின் இருள் துவங்கப்போவதை சொல்லும் படிமம் இது. ஸ்ரீராம் படைப்பூக்கம் உள்ள ஒரு நபர் என்பதை எளிதாக நிறுவி விடுகிறது இந்த காட்சிபூர்வ அவதானிப்பு. வசனத்தில் உள்ள கூர்மையான கசப்பான நகைச்சுவையையும் குறிப்பிட வேண்டும். இந்த நகைமுரணான வரியை பாருங்கள். எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று கூட கற்பு வேறு பிழைத்த மனைவி குறித்து வைத்தீஸ்வரன்: “படிப்பில அவள் படி தாண்டா பத்தினிங்க”. பெண்ணியவாதிகள் விரும்பாவிட்டாலும் வைத்தீஸ்வரனின் பார்வையில் இருந்து வெளிப்படும்போது இவ்வசனம் அதற்கான ஆற்றலைப் பெறுகிறது.


படத்தயாரிப்பு: கிங்ஸ்லி ஜோஸ் மற்றும் மேரி கிறிஸ்டினா. கெ ஜொஸ்

ஒளிப்பதிவு: அ.வசந்தகுமார் D.F Tech

இசை: முரளி

தொகுப்பு: ஜி. முரளி D.F Tech

சினிமா ஆர்வலர்கள் கட்டாயமாக தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வாங்கி பார்த்து விடுங்கள். ஸ்ரீராம் பத்மநாபனின் எண்: 9444810878.

கருத்துகள்

butterfly Surya இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த இளைஞர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது. உங்கள் கதை சொல்லும் பாணி அருமை.

பகிர்தலுக்கு நன்றி அபிலாஷ்.

நிச்சயம் பார்க்க வேண்டும்.

ஸ்ரீராம் பத்மநாபனுக்கும் அவர் டீமுக்கும் வாழ்த்துகள்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சூர்யா!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் விமர்சனத்தில் கலக்கீடீங்க போங்க. வாழ்த்துக்கள்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
சுந்தர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்க்கையில் எல்லாமே கையெட்டும் தொலைவில்தான் உள்ளன.தருணங்கள் அவற்றைத் தீர்மானிக்கின்றன.உங்கள் விமர்சனம் இக்குறும் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.சபாஷ் அபிலாஷ்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.