Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்தியர்களின் விதிக் கோட்பாடும் கிரிக்கெட்டின் DRS சர்ச்சையும்


இந்திய அணி வீரர்கள் ஏன் DRS தொழில்நுட்பத்தை தவிர்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் பெருங்குழப்பதை ஏற்படுத்துகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் டெஸ்டு தொடர் ஒன்றை இழந்தோம். அப்போது DRS பயன்படுத்தப்பட்ட போது பல எல்.பி.டபிள்யோ முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக போனதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் தரப்பில் இருந்து சொல்லப்படுகிற காரணம் இத்தொழில்நுட்பம் துல்லியமானது அல்ல, இதில் தவறுகள் நேரலாம் என்பது. மறுதரப்பில் இருந்து DRS தொழில்நுட்பம் பொதுவாக நடுவர்களின் மோசமான தவறுகளை குறைக்க உதவுகிறதே, சின்ன குறைகளுக்காக நாம் பெரிய பயன்களை விட்டுத் தர வேண்டுமா என்று ஒரு தர்க்கம் வைக்கப்படுகிறது.
DRSஐ ஆதரிக்கும் தரப்பினர் இருவகை. ஒன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி போன்று நடுவர்களின் படுமோசமான சொதப்பல்களை தவிர்க்க இது உதவும் என வலியுறுத்துபவர்கள். நடுவர்களும் தம் பங்குக்கு சில வேளை குச்சிகளுக்கு வெளியே விழும், மேலே எழும், மட்டை உள்விளிம்பில் படும் பந்துகளுக்கு எல்லாம் எல்.பி.டபிள்யோ கொடுக்கிறார்கள். இதை நேரடியாக சில நொடிகளுக்குள் அவசரமாக பார்க்கையில் நமக்கு புலப்படாது. ஆனால் டிவியில் மெதுவாக காட்சிகள் பெரிதுபடுத்தப்பட்டு திரும்பத் திரும்ப காட்டப்படுகையில் அசட்டுத் தவறுகளாக பார்வையாளர்களுக்கு நிச்சயம் படுகின்றன. சமீக காலத்தில் இதனால் கிரிக்கெட் வீரர்களை விட கடுமையான மீடியா கண்காணிப்புக்கும் கண்டனத்துக்கும் அதனாலான அழுத்தத்துக்கும் உள்ளாகுபவர்கள் நடுவர்களே. மேலும் ஒரு நடுவரின் உயரம் பொறுத்தும் எல்.பி.டபிள்யோ முடிவுகள் மாறுபடும். ஏனென்றால் பந்தின் உயரம் பார்க்கும் ஆளின் உயரத்தை பொறுத்து மாறுபட்டு தெரியும்.
இன்னொரு தரப்பினர் அறிவியலை விளையாட்டில் பயன்படுத்துவது அவசியம் என நம்புபவர்கள். இவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் அப்பழுக்கற்றது என நம்புபவர்கள். ஆனால் DRS தொழில்நுட்பம் உண்மையிலேயே முழுமையானதா, அது தவறு செய்யாதா? இந்த கேள்வி முக்கியம்.

இத்தொழில் நுட்பம் பெரும்பாலும் எல்.பி.டபிள்யு முடிவை சீர்தூக்கவே பயன்படுகிறது. நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய மட்டையாளனுக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. DRS மூன்று பகுதிகளைக் கொண்டது.
1)   ஸ்நின்னோ மீட்டர் – இது கேட்சின் போது பந்து நிஜமாகவே மட்டையை தொட்டதா என அறிய பயன்படுகிறது. மைக்ரோபோன் மூலம் மிக துல்லிய ஓசைகளை பெருக்கி பந்து மட்டை பக்கத்தில் வருவதில் இருந்து கடந்து செல்வது வரையிலான தொலைவில் ஏற்படும் ஓசையை கண்டறிந்து முடிவை சொல்லுகிறது. ஆனால் இது முழுமையாக ஏற்கத்தக்கது அல்ல. மிக நுண்மையான விளிம்பு படுதல்களை (edge) நாம் அறுதியிட்டு கூறவே முடியாது. பந்து தொடாதது கண்ணுக்கு உறுதியாக தெரியும் பட்சத்திலும் அவ்வேளையும் வேறாதவது ஓசை எழுந்தால் ஸ்நிக்கோ தவறாக கூறலாமில்லையா? ஆனால் அப்பட்டமான விளிம்பு படுதல்களை நடுவர் காணாமல் விடும் போதும் அல்லது ஓரளவு சந்தேகமுள்ள முடிவுகளை உறுதி செய்யவும் ஸ்னிக்கோ உதவலாம். கடந்த உலகக் கோப்பையில் ஆஸி-பாக் ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் பந்து மட்டை விளிம்பு பட்டும் நடுவர் கவனிக்காததால் வெளியேற மறுத்தார். “அம்பயர் சொல்லவில்லை என்றால் நான் வெளியேற மாட்டேன், எனக்கே நான் அவுட் என்று தெரிந்தாலும் கூட” என அவர் பிற்பாடு நியாயப்படுத்தக் கூட செய்தார். ஆனால் அந்த ஆட்டத்தில் DRS மூலம் இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டு அவர் உடனே வெளியேற்றப்பட்டார்.
2)   ஹாட்ஸ்பாட். இதுவும் பந்து மட்டை விளிம்பை உரசியதா என அறியத்தான்.
3)   ஹாக் ஐ. இது பந்தின் உயரத்தையும், அது எந்த திசையில் பயணிக்கும் என ஊகிக்கவும் பயன்படுகிறது. உண்மையில் இந்த திசை மற்றும் உயரத்தை கணிப்பது தான் நடுவர்களுக்கு மிகவும் சிரமம். இவ்விசயங்கள் அவர்கள் குச்சிக்கு நேரே நின்று பார்க்கும் போது ஒருவாறாகவும் பக்கவாட்டில் நிற்கும் பந்து வீச்சாளனுக்கு வேறு விதமாகவும் தெரியும். அதனால் தான் பந்து வெளியே போகிறது அல்லது ரொம்ப உயரத்தில் இருக்கிறது என நடுவர் அவுட் கொடுக்க மறுக்கும் போது வீச்சாளர்கள் ஏற்க தயங்குகிறார்கள்.

இவ்விசயத்தில் தொழில்நுட்பத்தை ஒன்றில் நாம் கேள்வியின்றி நம்பலாம்; ஏற்கலாம். அல்லது நம் ஊகத்தின் படி அது சரியாக உள்ளதா என ஆராயலாம். டி.வியில் ஒரு பார்வையாளன் பார்க்கிற போது ஹாக் ஐ பல சமயங்களில் அவனை ஆச்சரியப்படுத்துகிறது. வெளியே போவதாய் நாம் நினைக்கும் பந்துகள் உண்மையில் ஆப் குச்சியை தொடும் என்றோ, நடுக்குச்சியை தொடும் என நாம் நினைத்த பந்துகள் வெளியே போகும் என்றோ ஹாக் ஐ சொல்லக் கூடும். முக்கியமாக ஆப் அல்லது கால் குச்சியை பந்து லேசாக தொடுகிறது என ஹாக் ஐ சொல்லிற்று என்றால் நடுவர் மட்டையாளருக்கு அவுட் கொடுத்து விடுவார். இந்த தொழில்நுட்பத்தின் துல்லியம் உறுதியாகாத பட்சத்தில் இப்படியான மில்லிமீட்டர் கணக்குப்படியான முடிவுகள் படு அநியாயமாக நமக்குத் தெரிகின்றன. அதாவது நமக்கு தெளிவாக தெரிகிற முடிவுகளைக் கூட ஹாக் ஐ மறுக்கக் கூடும்.

DRSக்கு இந்தியர்கள் மட்டுமே முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் தமக்குள் ஆடும் போது தாராளமாக இதை பயன்படுத்துகின்றன. சமீபமாக பாகிஸ்தானும் இங்கிலாந்தும் ஆடிய டெஸ்ட் தொடரில் பெரும்பாலான DRS முடிவுகள் இங்கிலாந்துக்கு எதிராக சென்றன. இம்முடிவுகள் சரியானவை அல்ல எனவும் இங்கிலாந்து ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இம்முடிவுகளை அதிகம் பயன்படுத்தின் பாகிஸ்தானின் அஜ்மல் 2011 இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் DRS முடிவுகள் தன் அணிக்கு எதிராக அநியாயமாக அமைந்ததாக குற்றம் சாட்டினார். DRSஐ பொறுத்தவரையில் வீரர்கள் தமக்கு சாதகமாக அமையாத போதெல்லாம் அதனை மறுக்கிறார்கள். அதாவது துல்லியமான அறிவியல் தொழில்நுட்பம் என நம்பி அதனை ஏற்ற ஒரு நாட்டின் வீரரே அதனை எதிர்க்கும் உதாரணத்தை இங்கு நாம் காண்கிறோம்.

கடந்த உலகக் கோப்பையில் இந்தியா கட்டாயமாக DRSஐ ஏற்க நேர்ந்தது. அப்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று DRS காரணமாக இந்தியாவுக்கு எதிராக ஆனது. அப்போது எல்.பி.டபிள்யோவுக்கு பந்து குச்சியில் இருந்து 2.5 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதன் காரணமாக முடிவு எடுக்கப்பட தோனி இதனை கண்டித்து பேசினார். பின்னர் அந்த விதி மாற்றப்பட்டது. இவ்வாறு இந்தியாவுக்கு சில எதிர்மறை அனுபவங்கள் இருப்பதால் தோனியின் அணி DRSஐ எதிர்ப்பதாக சொல்லப்படுகிறது. எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது.

DRSஐ ஆதரிப்பது என்பது அறிவியலின் கரார்த்தனத்தை ஆதரிப்பாகும். கிரிக்கெட் போன்ற ஒரு ஆட்டத்தில் தொடர்ச்சியாக அதிர்ஷ்டம் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். கிரிக்கெட் சந்தர்ப்பவசங்களின் ஆட்டம் எனவும் அறியப்படுகிறது. இந்தியர்களுக்கு இந்த ஆட்டம் பிரியமானதற்கு அது நமது மரபான விதிக்கோட்பாட்டுக்கு நெருக்கமாக இருப்பதும் காரணம்.

இந்தியர்கள் ஒரு துயரம் நிகழ்ந்ததென்றால் அது கண்காணாத ஒரு சக்தியின் விளையாட்டு என நம்ப தலைப்படுவார்கள். கிரிக்கெட்டில் இந்த சந்தர்பங்களின் கூட்டிணைவு ஒரு பெரும் நாடகமாக நம் முன் விரிகிறது. காரண காரிய கதையாடலாக அல்லாமல் காரணமே இன்றி எதிர்பாராமல் ஒரு பந்து அற்புதமாக அடிக்கப்படுவது, திடீரேன திரும்பும் ஒரு பந்து விக்கெட்டை வீழ்த்துவது, வெற்றி தோல்வி சாத்தியங்கள் தொடர்ச்சியாக தத்தளிப்பது நம் பாரம்பரிய மனதுக்கு பெரும் கிளர்ச்சியை தருகிறது. கிரிக்கெட்டை நாம் இந்திய வாழ்வின் பிரதிபலிப்பாகத் தான் காண்கிறோம். இங்கு எதுவுமோ எதிர்பார்த்தது போல் திட்டமிட்டது போல் நடப்பது இல்லை அல்லவா! இந்திய கிரிக்கெட் வீரர்களும் இதே போன்று ஒரு ஆட்டத்தில் அதிர்ஷ்டத்தின் பங்கை DRS பறித்து விடுவதாக அஞ்சுவதாய் ஊகிக்கிறேன். நாள் நன்றாக இருந்தால் இந்திய மட்டையாளன் அவுட் ஆனால் கூட நடுவர் கொடுக்க மாட்டார்; அதே போல் நடுவர் முடிவுகள் தவறாக அமைந்து இந்தியாவுக்கு சாதகமாக விக்கெட்டுகள் விழலாம். ஒரு கராறான அறிவியல் முடிவு கிரிக்கெட்டில் அதிர்ஷ்டத்துக்கான இடத்தை பெருமளவில் குறைத்து விடுகிறது. இது தோனியையும் அவரது வீரர்களையும் ஒரு ஐரோப்பிய மனநிலையில் ஆடத் வற்புறுத்துகிறது. என்ன நடந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது தான் வெற்றியை விட முக்கியம் என்பதே ஐரோப்பிய மனநிலை. ஆனால் ஒரு கிரிக்கெட் ஆட்டத்தின் வெற்றிக்காக பிரம்மாண்ட பூஜைகள் செய்யப்படும், சோதிடர்கள் மீடியாவில் ஆருடம் சொல்லும் ஒரு கலாச்சாரத்தில் அதிர்ஷ்டம் என்பது, சந்தர்ப்பவசம் என்பது தன்னம்பிக்கையை உத்வேகத்தை தரும் ஒன்றாகவும் தோல்வியை கேள்வியின்றி ஏற்பதற்கான சமாதானமாகவும் உள்ளது. இங்கு அதிர்ஷ்டத்தை மறுக்கும் காரியம் இந்திய வீரர்களை கொஞ்சம் பதற்றப்படுத்துகிறது என நினைக்கிறேன்.

அடுத்து DRS  ஒருநாள் போட்டிகளை விட டெஸ்டில் தான் அதிக முக்கியமாக தேவைப்படுகிறது. DRSஐ இந்தியா மறுத்த காலத்தில் இந்திய டெஸ்ட் வீரர்களில் பலரும் வயதானவர்களாக இருந்தார்கள். இக்காலகட்டத்தில் இந்திய வீரர்களில் பெரும்பாலும் பவுல்ட் அல்லது எல்.பி.டபிள்யோ முறையில் தான் வெளியேறினார்கள். ஏனென்றால் வயதாகும் போது பொதுவாக உடலின் மறிவினைத் திறன் (reflexes) குறைந்து போகிறது. கைகால்களின் இயக்கம் மந்தமாகிறது. பந்தின் நீளத்தை முன்கூட்டி கவனிக்கும் பார்வைத் திறனும் குறைகிறது. விளைவாக இந்திய மட்டையாளர்கள் பந்தை மட்டையால் சிலநொடிகள் தாமதாக சந்திக்கும் அல்லது முற்றிலும் சந்திக்கவே தவறும் சந்தர்ப்பங்கள் ஏராளமாக நிகழும். கடந்த இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் நாம் தோல்வியுற்றதற்கு நம் வயதான மட்டையாளர்கள் சரியான நேரத்தில் பந்தை சந்திக்க தவறியது காரணம். இத்தொடர்களில் நமது ஏராளமான விக்கெட்டுகள் போல்ட் மற்றும் எல்.பி.டபிள்யு முறையில் தான் வீழ்ந்தன. இந்தியாவில் நடக்கும் ஆட்டங்களில் மெத்தமான தாழ்வான ஆடுதளங்களிலும் எல்.பி.டபிள்யு வாய்ப்புகள் அதிகம். போல்ட் ஆகாத பட்சத்தில் பேடில் பந்து பட்டதென்றால் அதிர்ஷ்டம் உள்ள பட்சத்தில் நடுவர் அவுட் கொடுக்க மாட்டார். இந்த சின்ன வாய்ப்புகள் நமது மூத்த வீரர்களுக்கு நிச்சயம் தேவையாக இருந்தது. DRS இந்த சந்தர்ப்பவச தப்பிக்கும் வாய்ப்பை இந்திய மட்டையாளர்களுக்கு மறுக்கிறது. சுழலர்களுக்கு அதிகமாக எல்.பி.டபிள்யு ஆகும் சச்சின் டெண்டுல்கள் DRSஐ கடுமையாக் எதிர்த்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இலங்கையில் நடந்த டெஸ்டுகளில் அவர் பல முறை பேடில் பந்து பட்டு வெளியேறினார். பின்னர் இன்னும் வயதாகிய நிலையில் அவர் தற்போது தொடர்ந்து போல்ட் ஆகிய வெளியேறுகிறார். இப்போது DRS இன்மை கூட அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் DRSஐ போலன்றி அதிர்ஷ்டம் குருடானது அல்லவா! அது எப்போதும் சச்சினுக்கு ஆதரவாக திரும்பலாம்.

இப்படி ஆரம்பித்த DRS எதிர்ப்பு ஒரு கட்டத்தில் நமது கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை நிலைப்பாடாகவே மாறியது. ஆனால் தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தொடரில் பல நடுவர் முடிவுகள் இந்தியாவுக்கு எதிராக அமைந்தன. இதனால் தோனி மீடியா உரையாடலின் போது மறைமுகமாக நடுவர்களை கேலி செய்தார். தான் ஒரு டெஸ்டை வெல்ல 20க்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி வருகிறது என்றார். இந்தியாவின் DRS எதிர்ப்பு கண்மூடித்தனமாக மாறி வருவதாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் தோனி ஒரு மரபார்ந்த இந்தியர். அவர் கிரிக்கெட்டை அறிவியலாக பார்க்க போவதில்லை. இந்த இழுபறி இன்னும் கொஞ்ச நாள் தொடரத் தான் போகிறது.

Comments

DRS எதிர்ப்பு கண்மூடித்தனம் தான்... அவ்வப்போது பிரச்சனைகள் எழுவது சகஜமே...

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...