Skip to main content

வசவதா எனும் இளைய கங்குலியும் சச்சின் எனும் குட்டிப் பையனும்





26-01-13அன்று ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாள். சௌராஷ்டிரா vs மும்பை. மும்பை வழக்கம் போது இறுதிப்போட்டி எதிராளியை நாலாய் மடித்து வாயில் போட்டுக் கொண்டது. சௌராஷ்டிரா முதலில் மட்டையாடி நூற்று நாற்பத்து எட்டுக்கு ஆட்டமிழந்தது. இந்த நிலச்சரிவில் ஒரே ஒருவர் தனியாக நின்று சமநிலையுடன் ஆடினார். அவரது ஆட்டம் நிறைய கங்குலியையும் கொஞ்சம் முன்னாள் வங்கதேச அணித்தலைவர் ஹசனையும் கலந்தது போல இருந்தது. அவர் பெயர் வசவதா.


கண்ணாடி போட்டு இளமையான முகத்துடன் வீட்டுப்பாடம் செய்யும் ஒரு சிறுவனின் மனக்குவிப்புடன் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவருக்கான சரளத்துடன் ஆடினார். ஒவ்வொரு முறையும் அவர் தடுத்தாடும் போது கூட பந்தை மட்டையில் முழுவதுமாக பட்டு விழுவது பார்க்க பார்க்க இந்த ஆள் தனி ரகம் என்று தோன்றியது. தளர்வான நிலையமைதி, லகுவான காலாட்டம் என அவர் பலவகையில் கவர்ந்தார். முக்கியமாக கங்குலியைப் போன்றே தோன்றினார். கங்குலியைப் போன்று துல்லியமாக பந்தை களத்தடுப்பாளரிடையே தூரிகை இழுப்பது போல் விரட்டவில்லை என்றாலும் கவர் பகுதியை நோக்கிய ஷாட்கள் கங்குலியின் மாந்திரிகத்தை கொண்டிருந்தன.

இப்படியான டைமிங்கில் கில்லாடியான மட்டையாளர்களை பார்ப்பது இப்போது இந்திய உள்ளூர் அளவில் கூட அரிதாகி வருகிறது. இதே சௌராஷ்டிராவை சேர்ந்த புஜாராவோ தில்லியின் தவானோ கூட பந்தை வலுவாக அடிக்கத் தான் முனைகிறார்கள். ஒருநாள், டி20 பாதிப்பு டைமிங்கை காணாமல் அடித்து விட்டது.

சௌராஷ்டிரா மும்பைக்கு தகுதியான அணியே அல்ல. ஆனால் இது தான் தற்போதைய ரஞ்சி அணிகளின் நிலை. ராஜஸ்தான், பரோடா, உத்தர்பிரதேஷ், சௌராஷ்டிரா போன்ற சின்ன சின்ன அணிகள் தற்போது உள்ளூர் சூழலை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டன. இதில் கவனிக்க வேண்டிய விசயம் இந்த அணிகள் ஒரு கோப்பையை வென்றவுடன் காணாமல் போய் விடுகின்றன என்பது. ராஜஸ்தானோ சௌராஷ்டிராவோ தொடர்ந்து தரத்தை தக்க வைக்கும் அளவுக்கு வலுவானவை அல்ல. தற்காலிகமாக அவர்கள் கூட்டாக ஆடி சில ஆட்டங்களில் பெரிய அணிகளை முறியடிக்கின்றன. பொதுவாக சராசரி வீரர்களுக்கு அணிக்காக ஒன்றிணைத்து உழைக்க வேண்டிய ஒரு தேவை ஏற்படுகிறது. அவர்கள் அவ்வாறு செய்து தான் வெற்றியை ஈட்ட முடியும். அவர்களுக்கு தம்மால் நட்சத்திரமாகவோ தேசிய அணி, ஐ.பி.எல் அணியில் நுழையவோ முடியாது என தெரியும். அதனால் அவர்களுக்கு பஞ்சாப், தில்லி, கர்நாடகா போன்ற அணி வீரர்களுக்கு உள்ள கவனச்சிதறல் ஈகோ சிக்கல்கள் கிடையாது.
இன்னொரு காரணம் இந்த அணிகள் கடந்த சில வருடங்களில் ராஜஸ்தான் பரோடா செய்தது போல பிற அணிகளின் மூத்த வீரர்களை freelance வீரர்களாக தம் அணியில் சேர்த்துக் கொண்டதும் தான். ஆகாஷ் சோப்ரா, முஜும்தர் போன்ற பலர் இவ்வாறு எளிய அணிகளுக்கு வலு சேர்க்கிறார்கள். கோப்பையை வென்ற பிறகு இவர்கள் விலகியதும் இந்த அணிகள் வீழ்ந்து விடும்.
மூன்றாவதும் ஆக முக்கியமானதுமான காரணம் தில்லி, மும்பை, கர்நாடகா போன்ற அணிகள் கடந்த பத்து வருடங்களில் மெல்ல மெல்ல மூத்த வீரர்களை இழந்து பலவீனமாகி விட்டது. கர்நாடகா அணியில் இருந்து தொண்ணூறுகளில் ஆறு ஏழு வீரர்கள் இந்திய அணியில் ஆடிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த அணி உருத்தெரியாமல் ஆகி விட்டது. வலுவான கட்டமைப்பு வசதி இருந்தாலும் இந்த அணிகளால் அனுபவஸ்தர்களின் ஓய்வை சமாளிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி சின்ன அணிகள் முன்னுக்கு வந்தன. அவர்களின் வெற்றிகள் ஒருவிதத்தில் இன்று உள்ளூர்ச் சூழலில் உள்ள தரமின்மையை தான் சுட்டுகின்றன. எளிய அணிகளுக்கு சவாலளிக்கும் நிலையில் பெரிய அணிகள் இல்லை.
தேர்வாளர்களும் இந்த சின்ன ரஞ்சி கோப்பை சாம்பியன்களை ஏதோ குடுகுவென ஓடி வந்து நாற்காலியில் அமர்ந்த எலிகளை போலத் தான் பார்க்கிறார்கள். விளக்கு போட்டதும் அவை பழைய படி பொந்துக்குள் ஓடி விடும் என அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ரஞ்சி ராம்பியன் அணிகளில் இருந்து யாரும் சுலபத்தில் இந்திய அணிக்கு தேர்வாவது இல்லை. அப்படியான தகுதியிலானவர்களும் இத்தகைய சாம்பியன் அணிகளில் குறைவு.
இன்று இந்திய அணியில் பல சின்ன அணிகளில் இருந்து வீரர்கள் இடம் பிடித்து ஆடுவது நமக்குத் தெரியும். ஆனால் இதன் பொருள் இவர்கள் ஆடின அணிகள் வளர்ந்து விட்டது என்பதல்ல. சௌராஷ்டிராவை எடுத்துக் கொள்ளுங்கள். புஜாரா தனி நபராகவே தனது அணியை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறார். இந்திய அணி கடந்த சில வருடங்களில் வீழ்ச்சி அடைந்து வருவதற்கும் இந்த உள்ளூர் சூழலின் சோனித்தன்மை ஒரு காரணம். பதில் வீரர்களை ஏற்றுமதி செய்வதற்கு ரஞ்சி அணிகளுக்கு சக்தி இல்லை. விளைவாக ரஞ்சி வெல்லாத சின்ன அணிகளில் இருந்து வீரர்கள் தேர்வாகிறார்கள். தோனி, ரெய்னா, புவனேஷ்வர் குமார், பிரவீன் குமார் ஆகியோர் நல்ல உதாரணம். உத்தர் பிரதேசமும், ஜார்கண்டும் இவர்கள் அணியில் நுழையும் போது கோப்பையை வெல்லாத அணிகளே.
ஆனாலும் பலவீனமாகி விட்ட மும்பை அணி எப்படி கடந்த பத்து வருடங்களில் கூட நிமிர்ந்து நின்று போராடி வெல்கிறது என்பது வியப்பு தான். மும்பை அணி இது வரை 39 தடவை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. இந்த வரலாறு தரும் தன்னம்பிக்கையும் பொறுப்பும் கடப்பாடும் அபாரமானது. சொல்லப் போனால் ஒரு மும்பை அணி வீரருக்கு தன் அணி மீதுள்ள கடப்பாடு இந்திய அணி வீரர்களுக்கு உள்ளதை விட பலமடங்கு அதிகமானது. மும்பை தோற்பது என்பது ஒரு வீரருக்கு தன்னுடைய வீடு பற்றி எரிவதற்கு சமானமானது. 92இல் ஹரியானா 2 ஓட்ட வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த போது அப்போது மும்பைக்காக ஆடின வெங்சார்க்கர் எப்படி அரைமணிநேரம் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து அழுதார் என்று இன்றும் மும்பை ஆதரவாளர்கள் நினைவு கூர்கிறார்கள். சச்சின் ஒவ்வொரு முறையும் தன் அணி ரஞ்சி இறுதிப் போட்டிக்குள் நுழையும் போது எப்படியாவது நேரம் ஒதுக்கி சிரமம் பார்க்காமல் மும்பைக்காக ஆடி விடுவார். முன்னர் ஒருமுறை சச்சின் ஆடுவதற்காக தமிழ்நாடுனான மும்பையின் ரஞ்சி இறுதிப் போட்டியின் தேதியை கூட தள்ளி வைத்தார்கள். அன்றைய ஆட்டத்தில் சச்சின் சதம் அடித்து மும்பையை காப்பாற்றினார். அல்லாவிட்டால் தமிழ்நாடு முதன்முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றிருக்கும். இம்முறையும் நாற்பது வயதில் சச்சின் சிரமம் பாராமல் இறுதிப் போட்டியில் மும்பைக்காக ஆடுகிறார். அடிக்கடி மைதானத்தில் கூட்டம் போட்டு இளைய வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். எத்தனையோ சர்வதேச ஆட்டச்சூழல்களைப் பார்த்த சச்சினுக்கு இந்த ஆட்டம் வெறுமனேயான ஒரு உள்ளூர் ஆட்டம் அல்ல. அவருக்கு மும்பை அணி மீதுள்ள கடப்பாடு மிக ஆழமானது. சச்சின் மும்பைக்கு ஆடும் போது ஒரு குட்டிப் பையனைப் போல் உற்சாகம் கொள்கிறார். மாறாக சேவாகை பாருங்கள். ஒருநாள் அணியில் இருந்து விலக்கப்பட்ட பின் அவருக்கு வாய்ப்பிருந்தும் அவகாசமிருந்தும் அவர் தில்லி அணிக்காக ஒருமுறை கூட சமீபத்தில் ஆடவில்லை. ஒருமுறை அவர் கோபித்துக் கொண்டு தில்லி அணியில் இருந்து விலகப் போவதாக கூட மிரட்டினார். சேவாகின் அணி உணர்வு அணி தனக்காக ஆடுகிறதா என்பதைப் பொறுத்தது தான்.
ஐ.பி.எல், சேம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நீங்கள் காணும் மும்பை அணி இதுவே அல்ல. அசலான மும்பை அணி நட்சத்திரங்கள் இல்லாத அணி. அசலான மும்பை அணியை நீங்கள் தனது பாரம்பரிய அந்தஸ்தை பாதுகாக்க போராடும் இந்த போட்டிகளில் தான் காண முடியும். இந்திய அணி வீரர்கள் கூட இவ்வளவு ஆவேசமாக ஆடுவார்களா என நீங்கள் வியப்படைவீர்கள். இந்திய அணியிலும் கூடத் தான் சச்சின் இவ்வளவு ஈடுபாட்டுடன் பந்து வீச்சாளருக்கு பந்தைப் பொறுக்கிக் கொடுத்து அறிவுரை சொல்லி ஊக்கப்படுத்துவார். மிச்ச பேர் எல்லாம் எனக்கென்ன …வா போச்சு என பின்னால் தட்டிக் கொண்டு நகத்தைக் கடிப்பார்கள். ஒருவேளை இந்தியர்களால் என்றுமே பிராந்திய அடையாளத்தை கடந்து ஒருமித்து ஆட முடியாதோ? இந்த சின்னத்தனம் நம் ரத்தத்திலே இருக்கிறதோ?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...