முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குருதி சொரியும் ஒரு கையின் சுவை





ஒரு நீண்ட சுயமைதுனத்தின் முடிவு
ஒரு நீண்ட வெந்நீர் மழையில்
படிகத்துளிகளிடையே
ஆயிரமாயிரம் சிதறல்களாய் நகர்ந்து
ஒரு அரையிருள் கடற்கரையை வந்தடைவதைப்
போன்று உள்ளது.

அங்கு
தனியாக அலைகள் மோதும் சொதசொத மணலில்
நாய்கள் ஒரு ஆடைகிழிந்த பிணத்தை
கிழித்து தின்னுகின்றன
சேலைமேல் அழுக்கான சட்டையை அணிந்து
மூட்டைக்குள் தாயத்துகள் மற்றும் சுருட்டி பழைய ரூபாய் நோட்டுகளை
கொண்ட
வீடு திரும்பும் சோதிடக்காரி
என் கையைப் பற்றி அவசர அவசரமாய்
ரேகைகளை இடமாற்றி
தகவல்களை பரப்புகிறாள்.
தன் முன்மயிரை ஒதுக்கி
அதிலொன்றை பறித்து
மனதை சிடுக்கிடுகிறாள்.
பின் தன் குச்சியால் நாய்களைத் துரத்தி
ஒரு ஈரமான தாயத்தை கழற்றி
அணிவித்து காசு வாங்கிக் கொள்கிறாள்.
நாய்கள் திரும்பப் போய்
அலைநுரைகளை நக்கிக் கொள்கின்றன.

நான் ஆளரவமற்ற அந்த கடற்கரையில்
அந்த அழகிய கையை எடுத்து
மெல்ல மெல்ல மென்று உறிஞ்சியபடி
வியக்கிறேன்
ஒரு நீண்ட சுயமைதுனத்துக்குப் பின்
மனித தேகம் இவ்வளவு
இனிக்குமா என.

பிறகு
இதமான வெந்நீர் மழை
மெல்ல மெல்ல குளிரேறி
பனிக்கட்டி நகரமொன்றில்
என்னை நிறுத்துகிறது.
திறந்த வாய்க்கும்
உறைந்த கைகளுக்கும்
இடையே
அழகிய கையின்
குருதி மட்டும்
உறையாது சொட்ட,
வானம் முழுக்க குத்தீட்டிகளாய் தொங்கும்
உறைமழைக்கும்
எனக்கும் இடையே
இமைக்காத வெண்பரப்பில்
பனிக்கட்டித் துளி ஒன்று
விழுந்து உருளாது நிற்கும்
திறந்த ஒரே கண்.

நாடி துடிக்கும்,
பச்சைநரம்புகள் நெளியும்
அந்த அழகிய கையை
அருகில் கொணர முடியாது
மனம் தவிக்கையில்
தலைக்கு மேல்
தொங்கும் நீர் அம்புகள்
உலோக உரசலாய் கிலுகிலுத்து
காது நிரப்பும்.
பற்கள் கூச
எலும்புகள் விரிசலிட
மழையின் கூர்விளிம்புகள் பரஸ்பரம் மோதி
சரசரவென அதிர்ந்து அடங்கும்
இரவெல்லாம்.

விடிகாலையில்
விரல்கள் கொத்தாய் நிற்கும் முழங்கை எலும்பை
புதைத்து விட்டு
இந்த புயலில்
திரும்புகையில்
கடற்கரையில் இருந்து வீடுவரை
குப்பைகளும் பாலிதீன்பைகளும் கிழிந்து சாம்பலான துணிகளும்
ப்ளாஸ்டிக் பாட்டில்களும் பழைய காகிதங்களும்
ஆளுயரத்துக்கு எழுகின்றன
பாதைகளின் இரு பக்கமும்.
காற்றும் நீரும் ஆகாரமும்
தூசாய் தொண்டையில் சிக்கி
கசப்பாய் வயிற்றில் நிரம்புகின்றன
அப்போது
நினைத்துக் கொள்கிறேன்
அத்தனை உணவுகளிலும் பானங்களிலும்
உமிழ்நீரளவு சுவை
எதிலும் இல்லையென.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...