இந்த மாத உயிர்மையில் வந்த எனது “இந்து, இஸ்லாம், கிறித்துவம்: குட்டையும் மட்டையும்” என்ற கட்டுரையை ஒட்டி பாலசுப்பிரமணியம் என்பவர் என்னை “மதங்களை வெறுப்பவன்” திட்டி கடிதம் எழுதியிருக்கிறார். அது குறித்து மூன்று விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒன்று, வெறுப்பு என்பது உக்கிரமான ஈடுபாட்டில் இருந்து வருவது. எனக்கு மதம் எனும் அமைப்பின் மீது அத்தகைய ஈடுபாடு இல்லை. ஆக காழ்ப்பும் இல்லை.
இரண்டு, மதம் இன்று நம்மை நவீன வாழ்வின் உரிமைகள், வாய்ப்புகள், முக்கியமாய் சுதந்திரம் ஆகியவற்றை அடைய விடாமல் தடுப்பதாய் நம்புகிறேன். ஒருவன் சமகாலத்திலும் மதத்திலும் ஒரேநேரத்தில் இருக்கவே முடியாது. ஆக, சிறுபான்மையினர், பெண்கள், ஊனமுற்றோர், ஜனநாயகவாதிகள் அனைவருக்கும் பெரும் தடைச்சுவர் மதம். நாம் மதத்தை எதிர்ப்பது கடவுளை பிடிக்காததனால் அல்ல.
மூன்று, மதம் நம்மை தர்க்கரீதியாய் சுயசார்போடு யோசிக்க விடாமல் எளிதில் தன்னல அமைப்புகள் அல்லது நிறுவனங்களுக்கு அடிமையாக்குகிறது. மதத்துக்காக கொல்லப்பட்ட கொல்லுகிற மக்களின் எண்ணிக்கை முடிவற்றது. இன்றும் இதை எழுதுகையிலும் யாரோ ஒருவர் மதத்துக்காக கொல்லப்படுகிறார், துப்பாக்கி ஏந்துகிறார். போர், அதிகாரம், வன்முறை இவற்றுக்கும் மதத்துக்கும் வலுவான தொடர்பு உள்ளது. அரசியல்ரீதியாய் மதம் ஒரு நவீன மனிதனுக்கு எதிரானது.
ஒரு மனிதன் தான் வாழ்கிற காலத்தில் வாழ வேண்டும். அதனுடன் எதிர்வினை செய்ய வேண்டும். அதற்கு மனவலு இல்லாதவர்கள் தான் மதத்தில் போய் ஒளிகிறார்கள்.
நான் நாத்திகவாதி அல்ல. என்னுடைய நோக்கம் கடவுள் இருப்பை மறுப்பது அல்ல. மதவாதிகள் நாகரிகமற்றவர்கள் என ஆத்மார்த்தமாக நம்புகிறேன். அவர்களை நவீன பண்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறேன். சுதந்திரமாக யோசிக்க கேட்கிறேன். எழுத்தாளனின் பணி அது. அது தப்பா?
Comments
//என்னுடைய நோக்கம் கடவுள் இருப்பை மறுப்பது அல்ல.// அந்த கட்டுரையின் நோக்கம் கடவுளைப் பற்றிப் பேசுவது இல்லை என்கிறீர்களா? அல்லது கடவுள் மறுப்பு என்பது என்றும் என் கொள்கை இல்லை என்கிறீர்களா எனப் புரிய வில்லை.
மதம் தடை செய்யும் சுதந்திர சிந்தனைகளையே கடவுள் கருத்துருவும் தடை செய்கிறது என நினைக்கிறேன்
மனிதனின் புற உலக வாழ்வியல் கூறுகளை மதம் கட்டுப்படுத்துகிறது அக உலகத்தை கடவுள் இருப்பு பற்றிய நம்பிக்கை பாதிக்கிறது இரண்டுமே சுதந்திரத்துக்கு எதிரானவைதானே ?