சமீபத்தில்
“முதல்வன்” திரும்ப பார்த்தேன். இறுதிக் காட்சியில் குண்டடிபட்டு கிடக்கும் முன்னாள்
முதல்வர் ரகுவரன் சிரித்தபடி நாயகனை நோக்கி சொல்கிறார்: “அது ஒரு நல்ல பேட்டி”. இந்த
வசனம் மொத்த படத்தை திருப்பி போட்டு ரகுவரனின் பார்வையில் இருந்து பார்க்க வைக்கிறது.
சாகிற கணத்தில் அந்த டி.வி பேட்டி நினைவு வர அவர் யோசித்திருக்கலாம்: “எதற்கு தேவையில்லாமல்
ஒரு சவால் விட்டு என் வாழ்க்கையை இப்படி சீரழித்துக் கொண்டேன். பிறகு எல்லாமே ஒரு விளையாட்டு
போல் முடிந்து விட்டதே. நான் அந்த ஒரு வாக்கியத்தை சொல்லாமல் இருந்திருக்கலாமே!” என்று.
சின்ன விளையாட்டாய் ஆரம்பிக்கிற ஒன்று சீரியசாக அவர் அரசியல் வாழ்க்கையை மாற்றுகிறது
தான் அக்கதை, இன்னொரு கோணத்தில். ஒரு சின்ன வசனம் சட்டென்று நமக்கு ஒரு புது பார்வையை
கதை பற்றி கொடுக்கிறதென்றால் அது தான் ஆகச் சிறந்த வசனம்.
சுஜாதா இது போல் அவரது படங்களில்
பல இடங்களில் நம்மை நின்று நிதானமாய் யோசித்து ரசிக்க வைக்கிறார். “திருடா
திருடாவில்” சி.பி.ஐ அதிகாரியிடம் பேசும் உள்ளூர் போலீஸான மலேசியா வாசுதேவன் “சார்
தாட் மேடம் டூ தீவ்ஸ் ரேன் வித் மணி” என அதிகாரி “வேணாம் தமிழ்லயே சொல்லுங்க” என்பார்.
அதற்கு மலேசியா வாசுதேவர் “இல்ல சார் தமிழ்ல சொன்னா ரொம்ப டைம் எடுக்கும்” என்று விட்டு
தமிழிலேயே அதை சொல்ல நிஜமாகவே தமிழில் பேசுகையில் நீளமாகத் தான் உள்ளது என நமக்குத்
தோன்றும். இதை மொழிபெயர்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஐநூறு பக்க “குற்றமும்
தண்டனையும்” தமிழில் 900 பக்கம் வருகிறது. இதே போன்றது தான் “உயிரேயில்” “இது தான்
உலகிலேயே மிகச்சுருக்கமான காதல் கதை” எனும் வசனம். வசனம் என்றால் அவசியம் பளிச்சென்று
புத்திசாலித்தனமாக இருக்க வேண்டியதில்லை – அதற்குள் இன்னொரு கதை உறைந்திருக்க வேண்டும்.
சுஜாதாவின் வசனங்கள் கற்பிப்பது இதைத் தான்.
