Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உலகமில்லாத உலகில் எழுதப்படும் கவிதைகள் – தமிழவன்


ஆர்.அபிலாஷ் சமீபத்திய தமிழ்க் கவிதையை எழுதுபவர். நான் மூன்று தலைமுறையைத் தாண்டி (ஒரு தலைமுறை பத்து ஆண்டுகள்) அவரைப் படிக்கிறேன். இவருக்கு முன்பு முப்பது வருடங்கள் தமிழ் மொழி எப்படி கவிதையை உருவாக்கியது, கவிதைத் தமிழ் மொழியை மாற்றியது, கருத்து புலப்பாட்டு முறையில் நடந்த விளைவுகள் என்ன என்றெல்லாம் நான் யோசித்தபடி வாழ்ந்து கொண்டிருப்பவன். புதுக்கவிதை உதித்த போது இளைஞனாக அக்கவிதையை உச்சரித்தபடி இருந்த தலைமுறை நான். எனக்கு இன்றைய – மிகவும் மாறிப் போன – தமிழ்மொழியைக் கவிதைமுறையில் தொடர்ந்து மாற்றி அமைக்கும் அபிலாஷ் என்ன மாதிரி தெரிகிறார்? இது பற்றி எழுத அவரது முதல் கவிதைத் தொகுப்பு “இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்” மீதான என் கருத்துக்கள் இவை.

முதலில் தொகுப்பின் 25 கவிதைகளையும் வாசித்த போது அவர் முன்னுரையில் எழுதியது ஞாபகம் வந்தது. இவற்றை எல்லாம் முதன்முதலில் வலைப்பக்கத்தில் பிரசுரித்திருக்கிறார். நான் என் வாழ்நாளில் இதுவரை வாசித்த 1000க்கும் அதிகமான புதுக்கவிதைகள் அச்சில் முதன்முதலில் எழுதப்பட்டவை. ஊடகம் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது என்கிற தத்துவத்தைச் சொன்ன மக்ளூகன் சரிதான் என்று அபிலாஷ் கவிதைகளை படிக்கையில் பட்டது.

அதாவது எல்லாம் புரியக் கூடிய கவிதைகள். புரியாமை இல்லை. ஆனால் ஒரு அழகியலின் லாவகம் இயல்பாய் கவிதைகளில் காணப்பட்டது. வாசிக்கிறவர்கள் முன்கூட்டிய கவிதை வாசிப்பு அனுபவம் ஏதும் இல்லாமல் இக்கவிதைகளுக்குள் பிரவேசிக்கலாம். கணினி கவிதைகளுக்கான முதல் இலக்கணம் இது. அபிலாஷ் கவிதை மையமிட்டு உருவாகும் பூமி இது. அதனால் 33 வயதாகும் அபிலாஷ் 63இல் கவிதையா நான் எழுதினேன் எனக் கேட்கும் நிலைமைக்கு போகலாம் அல்லது கவிதைகளில் புதுப்பாதைகளை திறந்தபடியே தொடர்ந்து பயணிக்கவும் செய்யலாம். எனக்கு தெரியவில்லை.

இவர் கவிதைகளை தொடர்ந்து படிக்கும் போது வீட்டுப்பிராணிகள் என் கண்ணில் தட்டுப்பட்டார்கள். பூனை, நாய் போன்றவை “வேட்டை நாயும் காவல் நாயும்” என்ற கவிதையில் வரும்.

“என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம்
காண்பித்தேன்...”
போன்ற உரைநடையை அதிகம் நம்பும் வரிகளே இவர் கவிதை முழுவதும் வருகின்றன. நாய் பற்றி சொல்லும் கவிதையில் நாய் பற்றி மட்டும் அவர் பேசுவதில்லை. டி.வி விவாதம் நடந்து கொண்டிருக்கிற காட்சிக்கிடையில் நாய் பற்றி அபிலாஷ் பேசுகிறார். நாய்க்கு டி.வி விவாதங்களில் ஒருவர் சற்று அதிகமாகக் குரலை உயர்த்திய விசயம் புரியவில்லை. இது அபிலாஷின் நாய். இதே கவிதையில் வேட்டை நாய்க்கும் காவல் நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு நாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் கூறுகிறார்: “இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய். அருகில் என்றால் காவல் நாய்”. பிராணிகள் இலக்கை வைத்து நிர்ணயிக்கப்படும் நுட்பமான விஷயம் ஆர்ப்பாட்டமில்லாமல் இவரது உரைநடை என்ற சாதாரணத்தை கவிதையாக்குகிறது. பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது. ஞானக்கூத்தனிடம் கடைசி காகத்தை பற்றிய கரிசனை போன்ற விசயம் இது. ஞானக்கூத்தன் அப்புறம் கவனிக்காமல் விட்ட விசயம் அபிலாஷிடம் அவரை அறியாமல் முக்கிய விசயமாகிறது. “வேட்டை நாயும்...” என்கிற கவிதையின் வரிகள் இவை.
“பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலாபக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது”

நாயின் பிரச்சனை வேறுவிதமான பிரச்சனை. நாய் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறையும் வேறு. மனிதர்கள் அப்படியா? நாமோ எதையும் நம்மோடு நினைவில்லாமலே இணைத்துக் கொண்டே இருக்கிறோம். அதற்கு வாழ்க்கை என்ற பெயரும் கொடுக்கிறோம் இல்லையா? இப்படி நாம் இருப்பதனால் பிரச்சனையை நம்மைப் போல் பார்த்து மண்டையை உருட்டாத நாய் செய்யும் காரியத்தை ஒருவர் அறியும் போது அந்த அறிதல் கவிஞனுக்கு மட்டுமே அறிந்த “அறிவாகி” விடுகிறது. கவிஞன் தனக்கு மட்டுமே அறிந்த அறிவைக் கண்டுபிடிக்கிறவன். அபிலாஷ் அப்படிப்பட்ட கவிதைகளை கவிதைகளை எழுதும் திறம் படைத்தவர் என்பதற்கு இந்த தொகுப்பில் அனேகம் கவிதைகள் சாட்சியாகின்றன. அது போல் இன்னொரு கவிதையில்
“நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை” (இடைப்பட்ட வெளியில்)
என்கிறார். நான் உடனே கவிதையை வாசிப்பதை நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். கதவு அர்த்தம் உள்ளதா இல்லாததா என்ற கேள்வி தோன்றியது. வழக்கமான பொருள்களையும் நாம் அறிந்தவற்றையும் வழக்கமற்றதாயும் நாம் அறியாதவையாயும் மாற்றும் கவித்துவ செயல் நடைபெறுகிறது. கவிதையின் பிரதியல் தளம் மேலும் கீழுமாய் வாசிப்பின் போது ஏற்படும் அதிர்ச்சியால் இடமாற்றம் செய்கின்றது.

இவருடைய பூனை பற்றிய கவிதைகளை பற்றியும் ஓரிரு வரிகளாவது பேச வேண்டும். இந்த பூனை
“நடக்க அதிகம் பிரியமில்லாத
உயரங்களை வெறுக்கும்
தண்ணீரைக் கண்டு நடுங்கும்
பூனை” (பூனையின் முதல் பருவ காலம்)

இந்தப் பூனை என்னும் பிராணியும் அதீத அறிவின் (அல்லது கவிதையின்) வாரிசாகவே உள்ளது என்று என் மனம் சொல்லுகிறது. ஏனெனில் பூனைக்கு உயரங்களை வெறுக்கும் குணம் உண்டு என்று யாரும் இதுவரை கண்டுபிடித்ததில்லை. கவிதை எழுதுகிறவன் மட்டுமே கண்டுபிடிக்கும் சமாச்சாரம் இது.

இந்த கவிதையில் முடிவு வரிகள் இப்படி முடிகின்றன:
“பூனையும் நானும்
யோசிக்க ஆரம்பித்தோம்
வெயிலோ மழையோ காற்றோ
அடிக்காத ஒரு வேளையில்”

அதாவது வெயிலோ மழையோ காற்றோ அடிக்காத ஒரு வேளை என்று ஒன்றில்லை. எனவே இது இல்லாத ஒரு நேரத்தை பற்றி பேசுகிறது. அந்த இல்லாத நேரம் இல்லாத இடம் தான். காலமும் இடமும் இல்லாதது என்பது உலகமற்ற தன்மை. உலகமற்ற தன்மையை பூனை உணர்த்துகிறது. பூனை என்பது கவிதையைப் போல இல்லாததன் குறியீடோ இவர் கவிதைகளில் என்று எனக்கு கேட்க தோன்றுகிறது.

இவ்வளவு மட்டுமல்ல. நிறைய எழுதலாம். இக்கருத்துக்கள் எல்லா கவிதைகளுக்கும் பொருந்தும்.

அபிலாஷின் அடுத்த தொகுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இந்த கவிதைகளை பற்றி எனக்கு அவர் சொன்னதற்கு நன்றி.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...