முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகமில்லாத உலகில் எழுதப்படும் கவிதைகள் – தமிழவன்


ஆர்.அபிலாஷ் சமீபத்திய தமிழ்க் கவிதையை எழுதுபவர். நான் மூன்று தலைமுறையைத் தாண்டி (ஒரு தலைமுறை பத்து ஆண்டுகள்) அவரைப் படிக்கிறேன். இவருக்கு முன்பு முப்பது வருடங்கள் தமிழ் மொழி எப்படி கவிதையை உருவாக்கியது, கவிதைத் தமிழ் மொழியை மாற்றியது, கருத்து புலப்பாட்டு முறையில் நடந்த விளைவுகள் என்ன என்றெல்லாம் நான் யோசித்தபடி வாழ்ந்து கொண்டிருப்பவன். புதுக்கவிதை உதித்த போது இளைஞனாக அக்கவிதையை உச்சரித்தபடி இருந்த தலைமுறை நான். எனக்கு இன்றைய – மிகவும் மாறிப் போன – தமிழ்மொழியைக் கவிதைமுறையில் தொடர்ந்து மாற்றி அமைக்கும் அபிலாஷ் என்ன மாதிரி தெரிகிறார்? இது பற்றி எழுத அவரது முதல் கவிதைத் தொகுப்பு “இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்” மீதான என் கருத்துக்கள் இவை.

முதலில் தொகுப்பின் 25 கவிதைகளையும் வாசித்த போது அவர் முன்னுரையில் எழுதியது ஞாபகம் வந்தது. இவற்றை எல்லாம் முதன்முதலில் வலைப்பக்கத்தில் பிரசுரித்திருக்கிறார். நான் என் வாழ்நாளில் இதுவரை வாசித்த 1000க்கும் அதிகமான புதுக்கவிதைகள் அச்சில் முதன்முதலில் எழுதப்பட்டவை. ஊடகம் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது என்கிற தத்துவத்தைச் சொன்ன மக்ளூகன் சரிதான் என்று அபிலாஷ் கவிதைகளை படிக்கையில் பட்டது.

அதாவது எல்லாம் புரியக் கூடிய கவிதைகள். புரியாமை இல்லை. ஆனால் ஒரு அழகியலின் லாவகம் இயல்பாய் கவிதைகளில் காணப்பட்டது. வாசிக்கிறவர்கள் முன்கூட்டிய கவிதை வாசிப்பு அனுபவம் ஏதும் இல்லாமல் இக்கவிதைகளுக்குள் பிரவேசிக்கலாம். கணினி கவிதைகளுக்கான முதல் இலக்கணம் இது. அபிலாஷ் கவிதை மையமிட்டு உருவாகும் பூமி இது. அதனால் 33 வயதாகும் அபிலாஷ் 63இல் கவிதையா நான் எழுதினேன் எனக் கேட்கும் நிலைமைக்கு போகலாம் அல்லது கவிதைகளில் புதுப்பாதைகளை திறந்தபடியே தொடர்ந்து பயணிக்கவும் செய்யலாம். எனக்கு தெரியவில்லை.

இவர் கவிதைகளை தொடர்ந்து படிக்கும் போது வீட்டுப்பிராணிகள் என் கண்ணில் தட்டுப்பட்டார்கள். பூனை, நாய் போன்றவை “வேட்டை நாயும் காவல் நாயும்” என்ற கவிதையில் வரும்.

“என் நாய் சரியாய்
தூங்குவதே இல்லை
என மருத்துவரிடம்
காண்பித்தேன்...”
போன்ற உரைநடையை அதிகம் நம்பும் வரிகளே இவர் கவிதை முழுவதும் வருகின்றன. நாய் பற்றி சொல்லும் கவிதையில் நாய் பற்றி மட்டும் அவர் பேசுவதில்லை. டி.வி விவாதம் நடந்து கொண்டிருக்கிற காட்சிக்கிடையில் நாய் பற்றி அபிலாஷ் பேசுகிறார். நாய்க்கு டி.வி விவாதங்களில் ஒருவர் சற்று அதிகமாகக் குரலை உயர்த்திய விசயம் புரியவில்லை. இது அபிலாஷின் நாய். இதே கவிதையில் வேட்டை நாய்க்கும் காவல் நாய்க்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு நாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் கூறுகிறார்: “இலக்கு தொலைவில் இருந்தால் வேட்டை நாய். அருகில் என்றால் காவல் நாய்”. பிராணிகள் இலக்கை வைத்து நிர்ணயிக்கப்படும் நுட்பமான விஷயம் ஆர்ப்பாட்டமில்லாமல் இவரது உரைநடை என்ற சாதாரணத்தை கவிதையாக்குகிறது. பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது. ஞானக்கூத்தனிடம் கடைசி காகத்தை பற்றிய கரிசனை போன்ற விசயம் இது. ஞானக்கூத்தன் அப்புறம் கவனிக்காமல் விட்ட விசயம் அபிலாஷிடம் அவரை அறியாமல் முக்கிய விசயமாகிறது. “வேட்டை நாயும்...” என்கிற கவிதையின் வரிகள் இவை.
“பிரச்சனை முக்கியமே அல்ல
பல சமயங்களில்
அது நாலாபக்கமும் ஓடிக் குரைக்கும் முன்
பிரச்சனை முடிந்தே போகிறது”

நாயின் பிரச்சனை வேறுவிதமான பிரச்சனை. நாய் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறையும் வேறு. மனிதர்கள் அப்படியா? நாமோ எதையும் நம்மோடு நினைவில்லாமலே இணைத்துக் கொண்டே இருக்கிறோம். அதற்கு வாழ்க்கை என்ற பெயரும் கொடுக்கிறோம் இல்லையா? இப்படி நாம் இருப்பதனால் பிரச்சனையை நம்மைப் போல் பார்த்து மண்டையை உருட்டாத நாய் செய்யும் காரியத்தை ஒருவர் அறியும் போது அந்த அறிதல் கவிஞனுக்கு மட்டுமே அறிந்த “அறிவாகி” விடுகிறது. கவிஞன் தனக்கு மட்டுமே அறிந்த அறிவைக் கண்டுபிடிக்கிறவன். அபிலாஷ் அப்படிப்பட்ட கவிதைகளை கவிதைகளை எழுதும் திறம் படைத்தவர் என்பதற்கு இந்த தொகுப்பில் அனேகம் கவிதைகள் சாட்சியாகின்றன. அது போல் இன்னொரு கவிதையில்
“நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை” (இடைப்பட்ட வெளியில்)
என்கிறார். நான் உடனே கவிதையை வாசிப்பதை நிறுத்தி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன். கதவு அர்த்தம் உள்ளதா இல்லாததா என்ற கேள்வி தோன்றியது. வழக்கமான பொருள்களையும் நாம் அறிந்தவற்றையும் வழக்கமற்றதாயும் நாம் அறியாதவையாயும் மாற்றும் கவித்துவ செயல் நடைபெறுகிறது. கவிதையின் பிரதியல் தளம் மேலும் கீழுமாய் வாசிப்பின் போது ஏற்படும் அதிர்ச்சியால் இடமாற்றம் செய்கின்றது.

இவருடைய பூனை பற்றிய கவிதைகளை பற்றியும் ஓரிரு வரிகளாவது பேச வேண்டும். இந்த பூனை
“நடக்க அதிகம் பிரியமில்லாத
உயரங்களை வெறுக்கும்
தண்ணீரைக் கண்டு நடுங்கும்
பூனை” (பூனையின் முதல் பருவ காலம்)

இந்தப் பூனை என்னும் பிராணியும் அதீத அறிவின் (அல்லது கவிதையின்) வாரிசாகவே உள்ளது என்று என் மனம் சொல்லுகிறது. ஏனெனில் பூனைக்கு உயரங்களை வெறுக்கும் குணம் உண்டு என்று யாரும் இதுவரை கண்டுபிடித்ததில்லை. கவிதை எழுதுகிறவன் மட்டுமே கண்டுபிடிக்கும் சமாச்சாரம் இது.

இந்த கவிதையில் முடிவு வரிகள் இப்படி முடிகின்றன:
“பூனையும் நானும்
யோசிக்க ஆரம்பித்தோம்
வெயிலோ மழையோ காற்றோ
அடிக்காத ஒரு வேளையில்”

அதாவது வெயிலோ மழையோ காற்றோ அடிக்காத ஒரு வேளை என்று ஒன்றில்லை. எனவே இது இல்லாத ஒரு நேரத்தை பற்றி பேசுகிறது. அந்த இல்லாத நேரம் இல்லாத இடம் தான். காலமும் இடமும் இல்லாதது என்பது உலகமற்ற தன்மை. உலகமற்ற தன்மையை பூனை உணர்த்துகிறது. பூனை என்பது கவிதையைப் போல இல்லாததன் குறியீடோ இவர் கவிதைகளில் என்று எனக்கு கேட்க தோன்றுகிறது.

இவ்வளவு மட்டுமல்ல. நிறைய எழுதலாம். இக்கருத்துக்கள் எல்லா கவிதைகளுக்கும் பொருந்தும்.

அபிலாஷின் அடுத்த தொகுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இந்த கவிதைகளை பற்றி எனக்கு அவர் சொன்னதற்கு நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...