Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஷிஷெக்: முரண் இயக்கத்தின் ஆன்மீகம்


என் முனைவர் பட்ட நெறியாளர் சமீபமாக வாங்கின நூலொன்றை பார்க்க தந்தார். ஸ்லெவொய் ஷிஷெக்கின் Agitating the Frame. எடுத்து புரட்டினேன். வசீகரமான தலைப்புகள் ஆர்வம் கொள்ள வைத்தன. எழுத்தாளர் யாரென Traces of a Virtual Event: On the Dark Knight Rises கட்டுரை படிக்கும் வரை கவனிக்கவில்லை. பாதியில் தான் ஷிஷெக் என கவனித்தேன். அதுவும் நல்லது தான். ஏனென்றால் முதலில் பார்த்திருந்தால் ரொம்ப ஹெவி டோஸ் என நினைத்து தள்ளி போட்டிருப்பேன். ஆனால் ஷிஷெக் நமக்கு பரிச்சமுள்ள கோட்பாட்டு எழுத்தாளர்களைப் போல் முதல் வரியை பாதி பக்கம் வரை நீட்டக்கூடியவர் அல்ல. மென்மையான வாசனையற்ற வோட்கா போல் எளிதான இதமான ஆனால் சூடான மொழி அவரது. அவர் ஒரு கலவை: லட்சியவாதி, அதேவேளை பிடிமானங்களை உதறும் ஒருவகை கலகவாதி, மார்க்ஸியவாதி அதேவேளை ஒரு ஆழமான ஜென் ஆன்மீகவாதமும் உள்ளோடுகிறது. ஒரு சிக்கலான விசயத்தை பேசும் போது சட்டென ஒரு அட்டகாசமான ஜோக்கை எடுத்து விடுவார். பிற கோட்பாட்டாளர்களைப் போல் அவர் சம சிந்தனையாளர்களுடன் பட்டம் விட்டு போட்டி போடுவதில்லை. எல்லாவிதமான எழுத்துக்களையும் வாசித்து மேற்கோள் காட்டுகிறார். பிளாகை கூட விடுவதில்லை. பேட்மேன் படம் பற்றி பேசுகையில் இந்தியாவில் இருந்து கார்த்திக் எனும் ஒருவரின் வெர்ட்பிரஸ் கட்டுரை ஒன்றைக் கூட மேற்கோள் காட்டுகிறார். 


அவரது பாணி சிக்ஸ் பேக் ஆய்வுக்கட்டுரைகளின் பாணி அல்ல. ஒரு கருத்தை உருவாக்கி அல்லது இன்னொரு கருத்துக்கு பதில் சொல்லி சட்டென நகர்ந்து செல்கிறார். ஒன்றை நிறுவி விளக்க தலைப்படுவதில்லை. இது பத்தியாளர்களின் பாணி. ஷிஷெக் ஒரு உயர்தர பத்தியாளர். அவர் ஒரு செலிபிரிட்டி தத்துவஞானி. அவரை கோட்பாட்டாளர்களின் எல்விஸ் பிரஸ்லி என்கிறார்கள். மூன்று முறை திருமணம் செய்திருக்கிறார். இரண்டாம் மனைவி ஒரு மாடல்.

சில பெண்கள் அடிக்கடி உதட்டை கடித்துக் கொண்டே பேசுவார்கள். நீங்கள் அவர்களை கவனிக்காமல் இருக்க முடியாது. ஷிஷெக் எந்த வாக்கியத்தையும் சின்ன அதிர்ச்சி ஏற்படும் படி கொஞ்சம் வளைத்து திருகி நகைமுரணுடன் சொல்கிறார். உதாரணமாய் வலதுசாரிகளின் சந்திப்பிடத்தில் வெடிகுண்டு வைக்க வேண்டும் என்று எழுதுவார். அடுத்த வரியில் இதை நான் நேரடியான அர்த்தத்தில் சொல்லவில்லை என உங்களுக்கு தெரியும் தானே என்பார். இந்த கட்டுரையில் காந்தி தான் ஹிட்லரை விட பயங்கரமான வன்முறையாளர் என்கிறார். ஆனால் இதை சும்மா ஒரு அதிர்ச்சிகரமான வரி என்றும் கூற முடியாது. இது ஒரு கவித்துவமான வாக்கியம். வன்முறை என்றால் அடிதடி, கொலை, ரத்தம் அல்ல என்கிறார் ஷிஷெக். வன்முறை ஒரு அமைப்பினுள் மறைமுகமாக சதா நிகழும் உருவமற்ற செயல். ஒரு வன்முறை நிகழும் போது அதற்கு எதிரான இன்னொரு வன்முறையையும் அமைப்பு உருவாக்கும். இரண்டும் மோதுகையில் உருவாகும் சமநிலையில் உலகம் இயங்குகிறது. இதைப் படிக்கையில் உங்களுக்கு இயங்கியல் (dialectics) நினைவு வரும். ஆம் ஹெகலின் தாக்கம் ஷிஷெக்கிடம் வலுவாக உள்ளது.

காந்தியின் சத்தியாகிரக் போராட்டம் என்பது ஒரு கருத்தியல் மூர்க்கத்தனமும் பிடிவாதமும் கொண்டது. அதைக் கொண்டு ஒரு ரத்தமற்ற வன்முறையை சமூக ரீதியாக திரட்டி ஆங்கிலேய அரசு மீது செலுத்துகிறார். காலனிய அரசின் வன்முறையும் முழுக்க ஆயுதம் சார்ந்ததல்ல, அதுவும் அமைப்பின் வழி நுணுக்கமாய் நம் மீது பாய்வது தான். ஷிஷெக் இதைத் தான் வலுவான வன்முறை என்கிறார். அவர் ஹிட்ரலுடையதை பலவீனமான வன்முறை என்கிறார். ஏனென்றால் ஹிட்லர் தன்னுடைய தேசம் சந்தித்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு யூதர்களை போலி காரணமாய் சித்தரித்தார். அதன் மூலம் முதலாளித்துவ அமைப்புகள் மீது திரும்ப வேண்டிய சமூக கோபத்தை யூதர்கள் மீது திருப்பி விட்டார். இது கோழைத்தனமான, பலவீனமான வீரம். கோபத்தில் அடிப்பவன் கோழை என்பது ஒரு ஆன்மீக கருத்தும் தான். இதைத் தான் சீன தற்காப்பு கலைகளும் கூறுகின்றன. கோபப்படாத வன்முறை உன்னதமானது, படைப்பூக்கம் கொண்டது. காந்தி வன்முறையாளர் எனும் ஷிஷெக்கின் வரி அதனால் தான் சட்டென ஜென் தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. காந்தி சமூகம் எனும் அமைப்பினுள் எற்கனவே உள்ள ஒரு வன்முறைக்கு எதிர்-வன்முறையை அதே போல் நுட்பமாய் முன்னெடுக்கிறார். அதனால் வெல்கிறார்.

ஜோஸ் சரமாகொவின் Seeing எனும் கதையைப் பற்றி ஷிஷெக் கூறுகிறார். ஒரு ஊரில் தேர்தல் நடக்கிறது. 80 சதவீதம் வரை மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் வாக்காளர் பெட்டியை திறந்து பார்த்தால் இருபது சதவீதம் கூட ஓட்டு இல்லை. மக்கள் கூட்டம் கூட்டமாய் வாக்காளர் மையத்துக்கு சென்று ஓட்டளிக்காமல் ஒரு வன்முறை நிகழ்த்தி இருக்கிறார்கள். அனைத்து முக்கிய கட்சிகளும் பதறுகின்றன. எமர்ஜென்ஸி நடைமுறைப்படுத்தி, வாக்காளர்களை கைது செய்து விசாரிக்கிறார்கள். ஆனால் கைது, விசாரணையினூடே நகரம் மிக அமைதியாக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஷிஷெக்கை பொறுத்தவரை இது தான் உண்மையான உக்கிரமான மக்கள் புரட்சியின் வன்முறை. இது ஒரு அரசை உலுக்குவது போல் குண்டுவெடிப்புகள் செய்யாது. சொல்லப் போனால் குண்டு வெடிப்புகள் அரச அதிகாரத்தை இன்னும் வலுவாக்கும். ராணுவம் அதிக அதிகாரம் பெறும்.

எந்த அன்பிலும் பாதிக்கு பாதி வன்முறை இருக்கும். மிக அதிகமாய் அன்பு கொண்டவன் தான் மிக அதிகமாய் வன்முறையை வெளிப்படுத்துகிறான். ஷிஷெக் கர்த்தரைப் பற்றி பேசுகிறார். “நீங்கள் என்னிடம் வர வேண்டும் என்றால் உங்கள் அப்பா அம்மா சகோதர சகோதரிகளை வெறுத்திடுங்கள்” என கர்த்தர் சொல்லுவதை மேற்கோள் காட்டுகிறார். எவ்வளவு கவித்துவமான வரி! இந்த சமூகத்தை மிக அதிகமாய் நேசிக்க நீங்கள் இச்சமூகத்தை மிக அதிகமாய் வெறுக்க வேண்டும். இச்சமூகத்தில் இருந்து எந்தளவு வெளியே இருக்கிறீர்கள் அந்தளவு அதன் உள்ளே நெருக்கமாய் இருப்பீர்கள். ஷிஷெக் படிக்கையில் நமக்கு சீன தத்துவத்தின் யின் யாங் கோட்பாடு நினைவு வருகிறது. அதன் படி மிக அதிகமாய் அடித்துக் கொள்ளும் ஜோடியினால் தான் மிக உக்கிரமாய் முத்தமிடவும் மிக அமைதியாய் நிலைத்து வாழவும் முடியும். அமைதி வலது கை என்றால், வன்முறை இடது கை. இரண்டும் சேராமல் போகையில் வாழ்க்கை நிம்மதி இழக்கிறது. வீட்டில் சண்டையே போடாத திருமண ஜோடிகளை பாருங்கள், அவர்கள் அன்பே இல்லாதவர்களாக இருப்பார்கள். அதே நேரம் ஒருவர் சண்டை போட்டவுடன் இன்னொருவர் பயந்து சரணடைந்தாலும் அந்த உறவு தோற்று விடும். அது பலவீனமான வன்முறை. மாறி மாறி மோதி ஒரு சமனம் உருவாகும்: அதுவே அன்பு; அதுவே அரசியலும் சமூக அமைதியும் கூட.

இக்கட்டுரை ஒரு அரசியல் கட்டுரை. சினிமா கட்டுரையும் தான். பேட்மேன் படம் பற்றி விரிவாக நுணுக்கமாக அலசுகிறார். அதேவேளை மிகவும் மன எழுச்சி தருகிற வரிகளும் உள்ளன. ஒரு ஞானி அரசியல் சமூகம் பற்றி எழுதினால் எப்படி இருக்குமோ அது போல் எழுதுகிறார். எனக்கு ஷிஷெக்கின் அடாவடித்தனமான தர்க்க செறிவுள்ள பாணியை பார்க்கையில் தமிழில் அவரோடு ஒப்பிடத்தக்கவராய் ராஜ் கௌதமன் படுகிறார். ஆனால் ராஜ் கௌதமனின் ஒரு முக்கிய குறையும் நமக்கு ஷிஷெக் படிக்கையில் புரிகிறது. ஷிஷெக்கிடம் உள்ள ஆன்மீக ஆழம் ராஜ் கௌதமனிடம் இல்லை. ராஜ் கௌதமன் ஒரு மறுப்புவாதி. தான் மறுக்கிற இடத்தில் அவர் இன்னொன்றை உருவாக்குவதில்லை. அவர் எந்தளவு அறிவுகூர்ந்தவராக உள்ளாரோ அந்தளவுக்கு கொஞ்சம் தட்டையாகவும் ஆகிறார். ஆனால் ஷிஷெக் ஒன்றை மறுக்கும் போதே உலகின் ஒவ்வொரு செயலின் பின்னும் முரண் சக்திகளின் மோதல் உள்ளது, இம்மோதல் உருவாக்கும் சமநிலை வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதை சுட்டுகிறார். இது அவருக்கு ஒரு ஆழத்தை அளிக்கிறது.

ஷிஷெக்கின் “Crisis what crisis என்னும் கட்டுரை ஒன்றும் படித்தேன். சுவாரஸ்யமான பொருளாதார அலசல் அது. அவரது வாசிப்பின் விரிவும், மாற்றுப்பார்வைகளும் பெரிய பலம். அவரது நல்ல பேட்டி ஒன்று இம்மாத “சிற்றேடு” பத்திரிகையில் ஆர்.சிவகுமாரால் மொழியாக்கப்பட்டு வந்துள்ளது. படித்து பாருங்கள். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...