முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ஆடையின் நாள்



ஒரு பிரத்யேகமான ஆடையை
அணிந்தேன் இன்று.
ஒரு அரசியல் தலைவரை
நினைவுபடுத்துவதாய் சொன்னாள்
மனைவி.

ஆர்வமாகி
பல்வேறு
கோணங்களில்
பாவனைகளில்
செல்போனில் படம் பிடித்துக் கொண்டேன்.


அவள் சொன்னாள்
நான் இப்போது இன்னும்
நெருங்கி வந்திருப்பதாக.

கிளம்பி வருகிற வழியில்
கார் ஜன்னல் ஊடே
அவரது
பல்வேறுபட்ட போஸ்டர்களை
கடந்து சென்றேன்.
கூட
வேறு சமூக பிரச்சனைகள் பற்றின
சேதிகளும்
நினைவுக்கு வந்தன.

நான் அவராக
இருந்தால்?

என்னுடைய கட்சி
2018இல் ஆட்சி அமைக்கும்
என அறிவிப்பேனா?
அதே கூட்டணியில்
பேசாமல்
தொடரலாமே?

என் கட்சி
எல்லா தரப்பட்ட மக்களுக்குமானது
என சமீபத்தில்
அறிவித்தது
சரிதான் என்றால்
மீனவர் பிரச்சனைகளை ஒட்டிய
போராட்டங்களில்
கலந்து கொள்ளலாமே?

ஆம்
ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்
இருப்பேன்.

அதனாலான அரசியல் பலன்?

அரசியலை
ஒரு உள்ளுணர்ச்சியுடன்
செய்து கொண்டே
இருக்க வேண்டும்.
அதிகமாய்
திட்டமிடுகையில் தான்
ஒருவரின் வீழ்ச்சி ஆரம்பிக்கிறது.

என்னுடன்
சதா பத்து தடியன்கள்
திரிகிறார்களே
படுக்கையறையில் கூட
தனியாய்
தூங்க விடுவதில்லை.
அப்படி
ஒரு பற்று
ஒரு நம்பிக்கை
என் மீது.
இருக்கட்டும்.
இவர்கள் தான்
என் மனம் சாயும் தூண்.
இவர்கள் சகிதமாய்
ஓரிடத்தில் நான் நுழையும் போது
ஒரு டைனோசர்
சிறுபிராணிகள் மத்தியில்
தன் நீண்ட கழுத்தையும் வாலையும் தூக்கியபடி
சட்டென தோன்றும் போது
ஏற்படுவது போல்
மக்கள் சிதறுகிறார்கள்
மனதளவில்.
இவர்களுடன்
நான்
பத்து உடல்களாக
இருக்கிறேன்
பத்து உடல்களும்
என்னை
தனதுடலாய் நினைக்கின்றன.

ஆனால் இவர்களை
கூட வைத்துக் கொண்டு
என் காதலியை
எப்படி
ரகசியமாய் சந்திப்பேன்?
எங்கு போனாலும்
எங்கள் நான்கு பாதங்களைச் சுற்றி
பத்து நிழல்கள் சுழல்கின்றன.
அந்தரங்கள் அற்ற
ஒரு போஸ்டராக இருக்கிறேன்.
என்னைத் தாங்கி நிற்கும்
நீண்ட சுற்றுச் சுவர் இவர்கள்.

எப்படி அவளை தனியாய் பார்ப்பது?
என்ன மாதிரியான தொனியில்
சொற்கள் கொண்டு
பேசுவது?
ஒருவேளை அவளும்
என்னை தன் மீது
ஒரு போஸ்டராக கொண்டு விட்டால்?

பயமாகியது.
அவள் யாராக இருப்பாள்?
எனக்கு
அவளைத்
தெரியவே தெரியாதே?

அலுவலகத்தில்
மேலதிகாரி
நான் வணங்கும் முன்
கால் நொடிக்கு முன்
என்னை வணங்கியதாய்
ஒரு உணர்வு.

நான் வந்த போது
நிறைய பேர்
திரும்பிப் பார்த்தார்கள்.
என்னிடம் நேரில் வந்து
பேசும் போது
அவர்கள்
கண்களில் ஒரு
குழப்பம்,
பதற்றம்,
இருள்.

சிலர் அவஸ்தையாய்
புன்னகைக்கிறார்கள்.
சிலருக்கு சொற்கள்
குழறுகின்றன.

கசப்பும் குழப்பமும்
திகைப்பும் களைப்பும்
மாறி மாறி
சூழ்கின்றன.

என் அறைக் கதவைத்
திறந்து
யார் யாரோ
வருகிறார்கள்.
போகிறார்கள்.
அவர்களைப் பார்த்து
பயமாகிறது.

என் மேஜைக்
கண்ணாடிக் கோப்பையை
நாட்காட்டியை
யாராவது லேசாய்
இடம் மாற்றி வைத்தால்
கவனமாய் நடுங்கும் விரல்களுடன்
மீண்டும் பழைய இடத்தில்
வைக்கிறேன்.

அலுவலகத்தில்
டிவியில் செய்திகள் பார்க்க
என் ரத்தம் கொதிக்கிறது.
எனக்குள் பேசிக் கொள்கிறேன்.
மனைவி அழைக்கிறாள்.
அவள் குரல்
பரிச்சயமானதாகவும்
அந்நியமாகவும்
ஒரே சமயம் தோன்றுகிறது.
கவனமாய்
தேர்ந்தெடுத்த சொற்களுடன்
அவளிடம் பேசுகிறேன்.

வீட்டுக்குத்
திரும்பினால்
யாரும் இல்லை.
உடை மாற்றினேன்.
சட்டென ஒரு நிர்வாணம்.

ஒரு மாந்திரகனின் பெட்டியின் கதவுகள் போல்
வீடு
தன் நான்கு சுவர்களையும்
திறந்து கொள்கிறது.
நான்
பாய்ந்து போய்
ஜன்னல் கதவுகளை

மூடுகிறேன்.

நன்றி: உயிர்மை, டிசம்பர் 2014

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...