முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர் எச்.பீர் முஹம்மது



நண்பர் எச்.பீர் முஹம்மதை முதலில் நான் 15 வயதில் தக்கலையில் நண்பர் முஸ்தபாவின் புத்தகக் கடையில் வைத்து சந்தித்தேன். அவரைப் பற்றின முதல் நினைவே கையில் ஒரு ஆயிரம் பக்க ஆங்கில கட்டுரை நூலோடு அவர் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது தான். வெட்டி அரட்டையில் நேரம் வீணடிக்காமல் வாசிப்பில் தன்னை தொலைத்து விடுபவராக இருந்தார். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தில் பலருக்கும் அவர் மீது மிகுந்த வியப்பு இருந்தது. நிறைய படிப்பதானாலோ என்னவோ அன்று அவர் பேசும் போது புரிந்து கொள்ள சற்று குழப்பமாக இருக்கும் (ஆனால் இன்று அப்படி இல்லை). எங்கள் மன்றத்தில் அப்போது தமிழில் வெளிவருகிற கோட்பாட்டு நூல்களை, நவீன இலக்கியத்தை படிப்பவர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் கணிசமாய் ஆங்கிலம் வழி மேற்குலக அறிவியக்கங்களை அறிய முயல்பவராக பீர் மட்டுமே இருந்தார்.

 பீருக்கு அறிவு தான் முக்கியம். எங்கு கிடைத்தாலும் நாடி செல்வார். எப்போதும் போல் ஜெயமோகன் எங்கள் அமைப்புக்கு எதிர்முகாம் தான். ஜெயமோகனின் அரசியலுடன் முரண்பட்டாலும் பீர் ஜெயமோகனை சந்தித்து தத்துவம் பற்றி பேசுவார். புத்தகங்கள் வாங்கி வருவார். ஒருமுறை நண்பர் முஸ்தபாவுடன் அவர் பாலியல் ரகசியங்கள் பற்றி அறிவார்ந்த விவாதம் ஒன்று செய்து கொண்டிருப்பதை கவனித்தேன். எதையும் அனுபவ ரீதியாய் அல்லாமல் அறிவு மூலம் கண்டுபிடிக்கலாம் எனும் அபார தன்னம்பிக்கை அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் அண்ணன் வெளிநாட்டில் இருந்து அவர் படிப்புக்கு அனுப்பின பணத்தை பூராவும் ஆங்கில கோட்பாட்டு நூல்கள் வாங்க செலவழித்து விட்டார். ஊருக்கு வந்து மூட்டை மூட்டையாய் தம்பி வாங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்ததும் அவருக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. புத்தகங்களை காப்பாற்றுவதற்காய் அவர் மூட்டை கட்டி நண்பர் என்.டி. ராஜ்குமாரின் வீட்டை கொண்டு வைத்ததாய் அறிந்து கொண்டேன். (இது பற்றின குறிப்பு ஒன்று என் “ரசிகன்” நாவலில் வருகிறது) பிறகு அவருக்கு உடனடியாய் வேலையை அடைந்து தன்னை ஸ்திரப்படுத்தும் நெருக்கடி ஏற்பட்டது. நான் அப்போது ஒரு சின்ன நிறுவனத்தில் கணினி படித்து வந்தேன். பீர் என்னை அழைத்து அங்கே வேலை கிடைக்குமா என கேட்க சொல்வார். தினமும் போன் செய்வார். அவருக்கு என்னால் உதவ இயலவில்லை. எனக்கு அது குறித்து மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. பிறகு அவர் வெளிநாட்டிற்கு வேலை சென்றார். பொருளாதார ரீதியாய் நிலைப்பெற்றார். அதேவேளை தொடர்ந்து நிறைய எழுதவும் செய்தார். அவரது கட்டுரைகளை தொடர்ந்து படித்து வந்திருக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் ஜெயமோகனிடம் பேசும் போது அவர் ஒன்று சொன்னார் “பீரின் மொழி சற்று சிக்கலாய் உள்ளது. அதன் காரணம் அவர் தத்துவம் பற்றி எழுத முயல்பதே. தத்துவம் பற்றி எழுதுபவர்கள் அனைவருக்கும் ஆரம்பத்தில் நிறைய மொழிச்சிக்கல்கள் ஏற்படும். விரைவில் தெளிவான மொழியை பெற்று விடுவார்”. இன்று பீரின் மொழி வெகுவாய் மாறி விட்டது. ஊரில் கூச்ச சுபாவமான அறிவுஜீவியாய் இருந்தவர் இன்று சமூக வலைதளஙளில், மீடியாவில் எழுதுகிறவராய், டிவி விவாதங்களில் கலந்து கொள்கிறவராய் மாறி இருக்கிறார். தமிழகத்தில் அறிவுஜீவியாய் இருப்பது மரணக்கிணற்றில் பைக் ஓட்டுவது போன்ற காரியம். பீர் என்றுமே எனக்கு ஒரு ஊக்கமாய் இருந்திருக்கிறார். அவரது கட்டுரைத் தொகுப்பான ”நீண்ட சுவர்களின் வெளியே” வெளியாகும் இந்த வேளைகளை இந்நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது அந்த ஊக்கத்தை பலமடங்காக்கத் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...