முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லவர்கள் வாழ்க

இன்று காலையில் என்னுடைய ஸ்கூட்டரை சர்வீஸ் விடுவதற்காய் ஹோண்டா ஷோரூம் சென்றிருந்தேன். மதியம் ஒரு மணிக்கே தந்து விடுவதாய் சொன்னார்கள். இரண்டு மணியுடன் மூடி விடுவார்கள். இடையில் உள்ள இரண்டு மணிநேரங்களை என்ன பண்ண எனத் தெரியவில்லை. வீட்டுக்கு போகலாம் என்றால் ஆட்டோ கட்டணமே இருநூறு ரூபாய்க்கு மேல் தீட்டி விடுவார்கள். அது மட்டுமல்லாமல் மூன்று மாடிகள் இந்த வெக்கையில் ஏற வேண்டும்; இறங்க வேண்டும். பக்கத்திலே இருந்தது பீனிக்ஸ் மால். ஏஸியில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்து வண்டியை எடுக்கலாம் என யோசித்தேன். ஒரு ஆட்டோவை அழைத்து ஏறிக் கொண்டேன்.

 என் தற்போதைய வழக்கப்படி “உங்க ஏரியால யார் சார் ஜெயிப்பாங்க?” என்றேன். அவர் சொன்னாரே பாருங்கள் ஒரு பதில்: “எல்லாம் நல்லவங்க சார் தான் ஜெயிப்பாங்க”. எனக்கு பட்டென சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டு சீரியசாய் முகத்தை வைத்தபடி சொன்னேன் “நல்லவங்க எல்லாம் எந்த காலத்தில ஜெயிச்சாங்க?”. பிறகு அந்த “நல்லவரும்” இந்த “கெட்டவனும்” சிரித்தபடியே பரஸ்பரம் பார்த்து தலையாட்டிக் கொண்டோம்.
பொதுவாய் நல்லவர்களுக்கு பட்டென கோபம் வரும். பீனிக்ஸ் மால் வாசல் வரை ஆட்டோவை அனுமதிக்க மாட்டோம் என தடுத்தார்கள். உடனே ”நல்லவருக்கு” கோபம் பொத்துக் கொண்டு வர “அவரு முடியாதவரு. உள்ளே விட மாட்டேன்னா சொல்றீங்க?” என கத்தத் துவங்கினார். இதனிடையே நான் என் கைத்தடியை தூக்கி காவலாளியிடம் காட்டினேன். அவர் உடனே ”நீங்க உள்ளே வரைக்கும் போங்க சார்” என்றார். ஆட்டோக்காரர் இதையெல்லாம் கவனிக்காமல் தனக்குள் புலம்பியபடி ஆட்டோவை நகர்த்திக் கொண்டே போய்க் கொண்டிருந்தார். அவரை அமைதிப்படுத்தி மீண்டும் மாலுக்கு அழைத்து சென்றேன். ஒரு கிலோமீட்டர் தான் தொலைவிருக்கும். ஐம்பது ரூபாய் வாங்கினார். அவர் போன பின் இந்த நல்லவர்களே இப்படித் தான் சிறுபிள்ளைத்தனமாய் கோபப்பட்டு சுற்றி நடப்பதை கூட சரிவர கவனிக்க மாட்டார்கள் என நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
திரும்ப செல்வதற்கு அதே காவலாளியே ஸ்டண்டில் இருந்து ஒரு ஆட்டோ அழைத்துக் கொடுத்தார். இந்த ஆட்டோக்காரர் முறைத்துக் கொண்டே வந்தார். கல்நெஞ்சக்காரர் என்பது மீண்டும் ஷோரூம் போன பின் தான் தெரியும். “நூறு ரூபா எடுங்க” என்றார்.
”ஒரு கிலோமீட்டருக்கு நூறு ரூபாயா? போக ஐம்பது தானே கொடுத்தேன்”
அவர் சொன்னார் “ஸ்டாண்ட் ஆட்டோ சார். இது தான் சார்ஜ். காலைல ஒம்பது மணியில இருந்தே நிக்கிறேன். ஒரு சவாரி கூட வாய்க்கல. இப்போ நீங்க முத சவாரி. ஐம்பது ரூபாங்கிறீங்க. ஏன்யா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க?”
ஸ்டாண்டில் இருந்து வந்தாலும் அதே தொலைவு தானே என்றேன். மால் வாசல் வரை வந்து பிக் அப் பண்ணினேனே என்றார். அது ஒன்றும் பெரிய தொலைவு இல்லையே? அவருக்கு காலையில் இருந்து சவாரி வாய்க்காததற்கும் என்னிடம் இரட்டிப்பு கட்டணம் வாங்குவதற்கு என்ன சம்மந்தம் எனக் கேட்டேன். அவர் தன் வாழ்க்கையின் மொத்த கோபத்தையும் என் மீது கக்க துவங்கினார். விட்டால் போதும் என தப்பி வந்து விட்டேன். இவருக்கு அந்த ”நல்லவரே” பரவாயில்லை என்று அப்போது தான் தோன்றியது.

நல்லவர்கள் தம் மனசாட்சிக்காய், நம்பும் ஒரு விழுமியத்துக்காய் கொதிப்பார்கள். ஆனால் தனிப்பட்ட எரிச்சல்கள், கசப்புகளை அடுத்தவர்கள் மேல் கொட்ட மாட்டார்கள். தனக்கேற்பட்ட நஷ்டங்களை போக்க இன்னொருவர் பாக்கெட்டில் இருந்து திருடலாம் என நினைக்க மாட்டார்கள். சென்னை ஆட்டோக்காரர்களின் பெயரை கெடுப்பவர்கள் இந்த ஏமாற்று பேர்வழிகள் தான். நான் பல கருணை நெஞ்சங்களை ஆட்டோகாரர்களில் பார்த்திருக்கிறேன். என் பழைய வண்டி அடிக்கடி சாலையில் நின்று விடும். அப்போது அதை tow செய்து வொர்க்‌ஷாப் வரை எடுத்து சென்று சரி பண்ணித் தந்திருக்கிறார்கள். சிலர் இதற்கு பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். ஆனால் இந்த நல்ல நெஞ்சங்கள் நினைவில் நிற்பதில்லை. மோசமான அனுபவங்களே அழுத்தமாய் பதிகின்றன. ஏனென்றால் நாமும் எல்லாவற்றிலும் “கெட்டவர்களே வெல்வார்கள்” என நம்புகிறவர்களாய் இருக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...