Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

டி.எம் கிருஷ்ணா: சாதியும் இசையும்

Image result for கிருஷ்ணா மகசேசே விருது
டி,எம் கிருஷ்ணா

இம்மாத உயிர்மையில் ஷாஜி டி.எம் கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார். விருது டி.எம் கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை அடித்தட்டினருக்கு கொண்டு சென்றதன் மூலம் சாதிய அடுக்குகளை கலைத்து சமத்துவத்தை நிலைநிறுத்த முயன்றதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. 1) அப்படி கர்நாடக இசையை சேரியில் பாடுவதன் மூலம் சாதியை அழிக்க முடியுமா? 2) கர்நாடக இசையை வெகுஜன இசையாக மாற்ற முடியுமா?

சாதி என்பது மனிதனின் அதிகார, அந்தஸ்து வேட்கையின் மற்றொரு வடிவம், அது உள்ளிருந்து குணமாக வேண்டிய வியாதி, அதை இசை மூலம் அழிக்க முடியாது என்கிறார் ஷாஜி. எனக்கு இக்கருத்துடன் முழுக்க உடன்பாடு உண்டு. பொதுவாக இசை மனிதனின் அகந்தையை கரைத்து அழுக்காறை அகல செய்யும் என்கிறார்கள். எனக்கு மனித மனம் அவ்வளவு எளிமையானது அல்ல என படுகிறது. ஒரு கொலைகாரன் கூட கொலைக்கு சற்று முன்பு இசையை ரசிக்க முடியும்.

டி.எம் கிருஷ்ணாவுக்கு சாதியம் குறித்த ஆய்வு நோக்கோ ஆழமான பார்வையோ இருப்பதாய் எனக்கு படவில்லை. அவரது கட்டுரைகளை ஹிந்து ஆங்கில நாளேட்டில் படித்திருக்கிறேன். ஒரு துடுக்குத்தனமான முற்போக்குவாதி. துணிச்சலாய் அரசியல் பேசும் ஒரு நட்சத்திரம் என்பதே எனக்கு அவர் குறித்துள்ள சித்திரம்.

 அவருக்கு சாதி அமைப்பின் உச்சத்தில் இருப்பது சம்மந்தமாய் ஒரு குற்றவுணர்வு இருக்கலாம். பொதுவாய் பல எலைட்டுகளுக்கும் இந்த குற்றவுணர்வு உண்டு. அவர்கள் தானதர்மம் செய்வார்கள், சமூகசேவை, தெருவில் திரியும் நாய் பூனைகளை காப்பாற்றுவது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது, மாடுகளை காப்பாற்றி கோசாலாக்களில் வைத்து பராமரிப்பது என செயலாற்றுவார்கள். இவையெல்லாம் பாராட்டத்தக்கவையே. ஆனால் இவர்களிடம் தாம் வேறு – பிறர் வேறு என பிரித்துப் பார்க்கும் ஒரு மனநிலை வலுவாக இருக்கும். தம்மை ஒரு மீட்பராக கருதுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோருடன் ஒன்றாய் உணர்ந்து அல்ல, அவர்களை தம்மில் இருந்து வேறுபடுத்தி உணர்ந்தே அவர்கள் செயலாற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர், வறியவர்கள் ஆகியோரை மற்றமையாக (other) காணும் பார்வையில் இருந்து தான் இவர்களின் கருணையும் தொண்டாற்றும் மனப்பான்மையும் தோன்றுகிறது. டி.எம் கிருஷ்ணாவுக்கும் இவர்களுக்குமான முக்கிய (பாராட்டத்தக்க) வித்தியாசம் அவர் இந்துத்துவாவை கடுமையாய் எதிர்க்கிறார் என்பது தான்.

டி.எம். கிருஷ்ணா உண்மையில் சாதிய அமைப்பில் ஒரு குலைவை ஏற்படுத்த விரும்பினால் அவர் செய்ய வேண்டியது இசைக்கச்சேரி அல்ல. அவர் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து அந்த ஜோடிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்க ஒரு அறக்கட்டளையை நிறுவலாம். இதை அவர் தம் சாதியில் இருந்து கூட துவங்கலாம். (மத்திய சாதிகளில் கை வைத்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும்) கலப்புத்திருமணத்தின் போது சாதி அழிவதில்லை. ஆனால் அதன் இறுக்கம் சற்றே தளர்கிறது. தலித்துகளுடன் நேரடியாய் கைகுலுக்குவதன் மூலம், பறையடித்து அவர்களுடன் மேடையில் ஆடுவதன் மூலம் சமத்துவத்தை கொண்டு வந்து விடலாம் என அவர் நம்புவது கொஞ்சம் குழந்தைத்தனமாய் இருக்கிறது. இதைத் தான் ஷாஜியும் சுட்டுகிறார்.

இசையை சமூக அளவில் பரவலாக்கும் டி.எம் கிருஷ்ணாவின் முயற்சியை ஷாஜி தான் வேலை பார்த்த மேக்னம் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் வணிக திட்டங்களுடன் ஒப்பிடுகிறார். இந்நிறுவனம் கர்நாடக இசைத்தட்டுகளை சரியாக விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்தி விற்று பெரும் லாபம் சம்பாதிக்க முடியும் என நம்பி களமிறங்கி தோற்கிறது. இதே விசயத்தை பின்னர் கிருஷ்ணா தனி ஆளாக சேரிகளில் சென்று நிகழ்த்தி காட்டுகிறார். அவர் இசையை விற்கவில்லை; பரவலாக்க முயல்கிறார். பிராமண பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சத்தை பிற சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க முயல்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருவேளை கர்நாடக சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டு அதை பின்பற்றினாலும் அதனால் சாதி ஒழியாது, பதிலாக சம்ஸ்கிருதமயமாக்கல் எனும் போலி சமூக மேல்நிலையாக்கம் நிகழும் என நினைக்கிறேன். அதாவது ஆர்.எஸ்.எஸ் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் தலித்துகளை பெருமளவில் பங்கேற்க வைத்தது போன்ற மற்றொரு காரியமாக முடியும்.
வெகுஜன இசை ஆக எளிதானதாய், கேட்டவுடன் மனதில் ஒட்டுவதாய் இருக்க வேண்டும், கர்நாடக சங்கீதத்தை ஒருநாள் மக்கள் திரளிடம் முழுக்க கொண்டு சேர்க்க இயலாது என்கிறார் ஷாஜி. எனக்கும் இக்கருத்துடன் உடன்பாடே. உலகம் முழுக்க செவ்வியல் இசையின் நிலை இது தான். அதாவது சாதியே இல்லாத ஐரோப்பிய சமூகங்களில் கூட மக்கள் தினமும் பீத்தோவன் கேட்பதில்லை. அங்கு பாப், ராக் இசை தான் கோலோச்சுகிறது. ஏதோ இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையால் தாழ்த்தப்பட்டோருக்கு கர்நாடக இசையின் வரப்பிரசாதம் கைவரவில்லை என டி.எம் கிருஷ்ணா நம்புவது அவரது மேலோட்டமான பார்வையை தான் காட்டுகிறது.

உலகம் முழுக்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் தேவைகள் நெருக்கடிகள் வேறு. கர்நாடக சங்கீதம் அல்ல அவர்களின் விடுதலை மார்க்கம். பார்வையற்றோர் பள்ளியில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி நடத்துகிறார், அதை அக்குழந்தைகள் கேட்டு குதூலகமானார்கள் என்றால் மகிழ்ச்சி. ஆனால் இதன் மூலம் பார்வையற்றோரின் வேதனையை ரஹ்மான் நீக்கினார் என நாம் கோரினால் அது அபத்தம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...