Skip to main content

டி.எம் கிருஷ்ணா: சாதியும் இசையும்

Image result for கிருஷ்ணா மகசேசே விருது
டி,எம் கிருஷ்ணா

இம்மாத உயிர்மையில் ஷாஜி டி.எம் கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது வழங்கப்பட்டதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார். விருது டி.எம் கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தை அடித்தட்டினருக்கு கொண்டு சென்றதன் மூலம் சாதிய அடுக்குகளை கலைத்து சமத்துவத்தை நிலைநிறுத்த முயன்றதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. 1) அப்படி கர்நாடக இசையை சேரியில் பாடுவதன் மூலம் சாதியை அழிக்க முடியுமா? 2) கர்நாடக இசையை வெகுஜன இசையாக மாற்ற முடியுமா?

சாதி என்பது மனிதனின் அதிகார, அந்தஸ்து வேட்கையின் மற்றொரு வடிவம், அது உள்ளிருந்து குணமாக வேண்டிய வியாதி, அதை இசை மூலம் அழிக்க முடியாது என்கிறார் ஷாஜி. எனக்கு இக்கருத்துடன் முழுக்க உடன்பாடு உண்டு. பொதுவாக இசை மனிதனின் அகந்தையை கரைத்து அழுக்காறை அகல செய்யும் என்கிறார்கள். எனக்கு மனித மனம் அவ்வளவு எளிமையானது அல்ல என படுகிறது. ஒரு கொலைகாரன் கூட கொலைக்கு சற்று முன்பு இசையை ரசிக்க முடியும்.

டி.எம் கிருஷ்ணாவுக்கு சாதியம் குறித்த ஆய்வு நோக்கோ ஆழமான பார்வையோ இருப்பதாய் எனக்கு படவில்லை. அவரது கட்டுரைகளை ஹிந்து ஆங்கில நாளேட்டில் படித்திருக்கிறேன். ஒரு துடுக்குத்தனமான முற்போக்குவாதி. துணிச்சலாய் அரசியல் பேசும் ஒரு நட்சத்திரம் என்பதே எனக்கு அவர் குறித்துள்ள சித்திரம்.

 அவருக்கு சாதி அமைப்பின் உச்சத்தில் இருப்பது சம்மந்தமாய் ஒரு குற்றவுணர்வு இருக்கலாம். பொதுவாய் பல எலைட்டுகளுக்கும் இந்த குற்றவுணர்வு உண்டு. அவர்கள் தானதர்மம் செய்வார்கள், சமூகசேவை, தெருவில் திரியும் நாய் பூனைகளை காப்பாற்றுவது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது, மாடுகளை காப்பாற்றி கோசாலாக்களில் வைத்து பராமரிப்பது என செயலாற்றுவார்கள். இவையெல்லாம் பாராட்டத்தக்கவையே. ஆனால் இவர்களிடம் தாம் வேறு – பிறர் வேறு என பிரித்துப் பார்க்கும் ஒரு மனநிலை வலுவாக இருக்கும். தம்மை ஒரு மீட்பராக கருதுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோருடன் ஒன்றாய் உணர்ந்து அல்ல, அவர்களை தம்மில் இருந்து வேறுபடுத்தி உணர்ந்தே அவர்கள் செயலாற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர், வறியவர்கள் ஆகியோரை மற்றமையாக (other) காணும் பார்வையில் இருந்து தான் இவர்களின் கருணையும் தொண்டாற்றும் மனப்பான்மையும் தோன்றுகிறது. டி.எம் கிருஷ்ணாவுக்கும் இவர்களுக்குமான முக்கிய (பாராட்டத்தக்க) வித்தியாசம் அவர் இந்துத்துவாவை கடுமையாய் எதிர்க்கிறார் என்பது தான்.

டி.எம். கிருஷ்ணா உண்மையில் சாதிய அமைப்பில் ஒரு குலைவை ஏற்படுத்த விரும்பினால் அவர் செய்ய வேண்டியது இசைக்கச்சேரி அல்ல. அவர் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்து அந்த ஜோடிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்க ஒரு அறக்கட்டளையை நிறுவலாம். இதை அவர் தம் சாதியில் இருந்து கூட துவங்கலாம். (மத்திய சாதிகளில் கை வைத்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும்) கலப்புத்திருமணத்தின் போது சாதி அழிவதில்லை. ஆனால் அதன் இறுக்கம் சற்றே தளர்கிறது. தலித்துகளுடன் நேரடியாய் கைகுலுக்குவதன் மூலம், பறையடித்து அவர்களுடன் மேடையில் ஆடுவதன் மூலம் சமத்துவத்தை கொண்டு வந்து விடலாம் என அவர் நம்புவது கொஞ்சம் குழந்தைத்தனமாய் இருக்கிறது. இதைத் தான் ஷாஜியும் சுட்டுகிறார்.

இசையை சமூக அளவில் பரவலாக்கும் டி.எம் கிருஷ்ணாவின் முயற்சியை ஷாஜி தான் வேலை பார்த்த மேக்னம் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் வணிக திட்டங்களுடன் ஒப்பிடுகிறார். இந்நிறுவனம் கர்நாடக இசைத்தட்டுகளை சரியாக விளம்பரப்படுத்தி சந்தைப்படுத்தி விற்று பெரும் லாபம் சம்பாதிக்க முடியும் என நம்பி களமிறங்கி தோற்கிறது. இதே விசயத்தை பின்னர் கிருஷ்ணா தனி ஆளாக சேரிகளில் சென்று நிகழ்த்தி காட்டுகிறார். அவர் இசையை விற்கவில்லை; பரவலாக்க முயல்கிறார். பிராமண பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சத்தை பிற சமூகங்களுக்கு கொண்டு சேர்க்க முயல்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருவேளை கர்நாடக சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டு அதை பின்பற்றினாலும் அதனால் சாதி ஒழியாது, பதிலாக சம்ஸ்கிருதமயமாக்கல் எனும் போலி சமூக மேல்நிலையாக்கம் நிகழும் என நினைக்கிறேன். அதாவது ஆர்.எஸ்.எஸ் விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் தலித்துகளை பெருமளவில் பங்கேற்க வைத்தது போன்ற மற்றொரு காரியமாக முடியும்.
வெகுஜன இசை ஆக எளிதானதாய், கேட்டவுடன் மனதில் ஒட்டுவதாய் இருக்க வேண்டும், கர்நாடக சங்கீதத்தை ஒருநாள் மக்கள் திரளிடம் முழுக்க கொண்டு சேர்க்க இயலாது என்கிறார் ஷாஜி. எனக்கும் இக்கருத்துடன் உடன்பாடே. உலகம் முழுக்க செவ்வியல் இசையின் நிலை இது தான். அதாவது சாதியே இல்லாத ஐரோப்பிய சமூகங்களில் கூட மக்கள் தினமும் பீத்தோவன் கேட்பதில்லை. அங்கு பாப், ராக் இசை தான் கோலோச்சுகிறது. ஏதோ இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையால் தாழ்த்தப்பட்டோருக்கு கர்நாடக இசையின் வரப்பிரசாதம் கைவரவில்லை என டி.எம் கிருஷ்ணா நம்புவது அவரது மேலோட்டமான பார்வையை தான் காட்டுகிறது.

உலகம் முழுக்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் தேவைகள் நெருக்கடிகள் வேறு. கர்நாடக சங்கீதம் அல்ல அவர்களின் விடுதலை மார்க்கம். பார்வையற்றோர் பள்ளியில் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரி நடத்துகிறார், அதை அக்குழந்தைகள் கேட்டு குதூலகமானார்கள் என்றால் மகிழ்ச்சி. ஆனால் இதன் மூலம் பார்வையற்றோரின் வேதனையை ரஹ்மான் நீக்கினார் என நாம் கோரினால் அது அபத்தம்.

Comments

Manimaran J said…
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது பாராட்டத் தேவையா என்று எனக்கு தோன்றவில்லை

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...