Skip to main content

சன்னி லியோனின் உடல்: கல்லைக் கண்டவர் …

Image result for sunny leone kerala visitImage result for sunny leone kerala visit

சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும் தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக் கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக் கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது:
தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன் வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள் என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?

 அவ்வாறாகின், அவருக்கு அருவருப்பு ஏற்பட்டிருக்குமா? தன்னை வெறிப்பவர்கள் மீதல்ல – தன் மீது?
சன்னி உண்மையில் என்ன உணர்ந்திருப்பார் என நமக்குத் தெரியாது. வெளியில் இருந்து அவரை அவதானிக்க முயலும் எனக்கு அவர் இதை இயல்பாக, சுலபாக, கடந்து போயிருப்பார் எனத் தோன்றுகிறது. எப்படி?
 பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள், ஊடக ஆளுமைகள், வெவ்வேறு பிரபலங்கள் இந்த சுய-முரணை ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். (சன்னி அவர்களை விட பலமடங்கு உக்கிரமாய், கொந்தளிப்பாய் இதை உணர்ந்திருப்பார் என்பதே வித்தியாசம்.) ஆனால் மெல்ல மெல்ல ரசிகர்களின் மிகை வெளிப்பாடுகளுக்கு பழகிப் போவார்கள். தாம் வேறு தம் பிம்பம் வேறு; தம் பிம்பமே தமக்கு புகழ்வெளிச்சம் தருகிறது என புரிந்து கொள்வார்கள். அப்போது தம் உடலோ அல்லது பிம்பமோ தம்மில் இருந்து பிறிதொரு பொருள் – ஒரு கருவி – என அவர்களுக்கு தோன்றும். தம் ரசிகர்களைப் போன்றே தம் உடலை அல்லது பிம்பத்தை பார்க்க, ரசிக்க, பாதுகாக்க, மேம்படுத்த அவர்கள் பிரக்ஞைபூர்வமாய் முயல்வார்கள். பிறகு மெல்ல மெல்ல தம்மில் இருந்து தம் பிம்பத்தையோ உடலையோ முழுக்க வேறுபடுத்திப் பார்க்க அவர்கள் பழகுவார்கள். தம் மீது மீடியாவின், வேடிக்கை பார்ப்பவர்களின், படக்கருவியின் கண்கள் பதியும் போது தாம் முற்றிலும் இன்னொருவராய் மாறுவதை உணர்வார்கள்.
 அவர்களுக்கு தமது வழிபாட்டுக்குரிய “பிரதியின்” மீது அருவருப்போ ஆச்சரியமோ குழப்பமோ இராது. தனக்கு கைவரப்பெற்ற ஒரு அற்புதமான வரம் என தமது பிரதிபிம்பத்தை காணத் துவங்குவார்கள்.
 ரஜினியும் சன்னி லியோனும் வைரமுத்துவும் இவ்விசயத்தில் ஒன்று தாம். வைரமுத்து தம் பிம்பத்தை எல்லா கட்டங்களிலும் இடங்களிலும் நிலைநிறுத்த பிரயத்தனிப்பவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது காரிலேயே புது வெள்ளை குர்தாவுக்கு மாறுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினி தனது பிம்பம் தன்னை விட்டு எப்படியும் தொலையாது என புரிந்து கொண்டவர். அதனாலே மேக் அப் இன்றி, விக் இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். மக்கள் அதையும் அவரது அன்றாடத்தின், எளிமையின், ஆன்மீகத்தின் பிம்பமாக மாற்றிக் கொண்டு கொண்டாடினார்கள். கூடவே விக் அணிந்து, மேக் அப் சூடிய இன்னொரு பிம்பத்தையும் அவர் தக்க வைத்தார்.
முன்பு படக்கருவி முன் மெழுகு பொம்மை போல் தோன்றிய சன்னியும், இப்போது திருமணமாகி, தன் கணவனுக்கும் மாமியாருக்கும் ராஜ்மா சாவல் சமைத்து விளம்பும் ஒரு இளம் பஞ்சாபி மனைவி போல் தோன்றும் இன்னொரு சன்னியும் வேறு வேறு எனும் தெளிவு அவருக்கு இருக்கலாம். இதுவே தன்னை அன்றாட வாழ்வில், பொதுவெளியில் தன்னை போர்னோ பிம்பமாய் பிறர் பார்க்கும் போது அதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள சன்னி லியோனுக்கு உதவுகிறது. (சில்க்கை போன்ற ஒருவருக்கு இது இயலவில்லை என்பதே வெறுமைக்கும் தற்கொலைக்கும் அவரை விரட்டி இருக்கலாம்.)
தன்னை தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிகிற சன்னி லியோனின் இந்த மனமுதிர்ச்சி மற்றும் துணிவு வணங்கத்தக்கது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஞானம் சொட்ட சொட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தும் பல ஆன்மீக குருக்களை விட அவர் மேலானவர். “ஆம்! நீங்கள் படுக்கையில் நடிகையுடன் பார்த்த ஆள் நான் தான், அதுவும் நானே இப்போது ஆன்மீக உரை நிகழ்த்தும் இதுவும் நானே” என சொல்ல நித்தியானந்தாவால் முடிந்ததா? அந்த நெஞ்சுரம் – ஓஷோவுக்கு இருந்த அந்த சுயபகடியும் சுயவிமர்சனமும் - நித்திக்கு இல்லை. அவர் தன் பாலியல் பிம்பத்தில் இருந்து தப்பித்து ஓடவல்லவா செய்தார்?
 ஆனால் ரசிகர்களால் சன்னியை அப்படி இரண்டாக பார்க்க முடியவில்லை என்பது அவருக்கு இன்னமும் கல்லா கட்ட உதவுகிறது. கல்லைக் கண்டவர் நாயைக் கண்டிலர். நாயைக் கண்டவர் கல்லைக் கண்டிலர்!


Comments

ஆம் உண்மை, எழுத்தாளர்களிலும் சிலருக்கு இந்த மனமுதிர்ச்சி உண்டு,
ஏன் சமூக வலைதள பதிவர்களில் கூட, பலர் நேரில் சந்திக்கும் பொழுது வேறு விதமாக இருப்பர்கள். .
வலை தளங்களில் வீர ஆவேசமாக எழுதும் பலரும் நேரில் உரையாடும் பொழுது அன்பாக மிருதுவாக உரையாடுகிறார்கள்
சில்க் ஸ்மிதா இந்தக் காரணத்தால் மட்டுமே தற்கொலை செய்து ஆய்வுக்கு உரிய விஷயம்.
குஷ்பு, விந்தியா ஆகியோர் கூட பொது மேடைகளில், பொது இடங்களில் மனமுதிர்ச்சியுடன் பங்கு பெறுபவர்கள், நடந்து கொள்பவர்கள் தானே

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...