முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சன்னி லியோனின் உடல்: கல்லைக் கண்டவர் …

Image result for sunny leone kerala visitImage result for sunny leone kerala visit

சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும் தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக் கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக் கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது:
தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன் வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள் என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?

 அவ்வாறாகின், அவருக்கு அருவருப்பு ஏற்பட்டிருக்குமா? தன்னை வெறிப்பவர்கள் மீதல்ல – தன் மீது?
சன்னி உண்மையில் என்ன உணர்ந்திருப்பார் என நமக்குத் தெரியாது. வெளியில் இருந்து அவரை அவதானிக்க முயலும் எனக்கு அவர் இதை இயல்பாக, சுலபாக, கடந்து போயிருப்பார் எனத் தோன்றுகிறது. எப்படி?
 பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள், ஊடக ஆளுமைகள், வெவ்வேறு பிரபலங்கள் இந்த சுய-முரணை ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். (சன்னி அவர்களை விட பலமடங்கு உக்கிரமாய், கொந்தளிப்பாய் இதை உணர்ந்திருப்பார் என்பதே வித்தியாசம்.) ஆனால் மெல்ல மெல்ல ரசிகர்களின் மிகை வெளிப்பாடுகளுக்கு பழகிப் போவார்கள். தாம் வேறு தம் பிம்பம் வேறு; தம் பிம்பமே தமக்கு புகழ்வெளிச்சம் தருகிறது என புரிந்து கொள்வார்கள். அப்போது தம் உடலோ அல்லது பிம்பமோ தம்மில் இருந்து பிறிதொரு பொருள் – ஒரு கருவி – என அவர்களுக்கு தோன்றும். தம் ரசிகர்களைப் போன்றே தம் உடலை அல்லது பிம்பத்தை பார்க்க, ரசிக்க, பாதுகாக்க, மேம்படுத்த அவர்கள் பிரக்ஞைபூர்வமாய் முயல்வார்கள். பிறகு மெல்ல மெல்ல தம்மில் இருந்து தம் பிம்பத்தையோ உடலையோ முழுக்க வேறுபடுத்திப் பார்க்க அவர்கள் பழகுவார்கள். தம் மீது மீடியாவின், வேடிக்கை பார்ப்பவர்களின், படக்கருவியின் கண்கள் பதியும் போது தாம் முற்றிலும் இன்னொருவராய் மாறுவதை உணர்வார்கள்.
 அவர்களுக்கு தமது வழிபாட்டுக்குரிய “பிரதியின்” மீது அருவருப்போ ஆச்சரியமோ குழப்பமோ இராது. தனக்கு கைவரப்பெற்ற ஒரு அற்புதமான வரம் என தமது பிரதிபிம்பத்தை காணத் துவங்குவார்கள்.
 ரஜினியும் சன்னி லியோனும் வைரமுத்துவும் இவ்விசயத்தில் ஒன்று தாம். வைரமுத்து தம் பிம்பத்தை எல்லா கட்டங்களிலும் இடங்களிலும் நிலைநிறுத்த பிரயத்தனிப்பவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது காரிலேயே புது வெள்ளை குர்தாவுக்கு மாறுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினி தனது பிம்பம் தன்னை விட்டு எப்படியும் தொலையாது என புரிந்து கொண்டவர். அதனாலே மேக் அப் இன்றி, விக் இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். மக்கள் அதையும் அவரது அன்றாடத்தின், எளிமையின், ஆன்மீகத்தின் பிம்பமாக மாற்றிக் கொண்டு கொண்டாடினார்கள். கூடவே விக் அணிந்து, மேக் அப் சூடிய இன்னொரு பிம்பத்தையும் அவர் தக்க வைத்தார்.
முன்பு படக்கருவி முன் மெழுகு பொம்மை போல் தோன்றிய சன்னியும், இப்போது திருமணமாகி, தன் கணவனுக்கும் மாமியாருக்கும் ராஜ்மா சாவல் சமைத்து விளம்பும் ஒரு இளம் பஞ்சாபி மனைவி போல் தோன்றும் இன்னொரு சன்னியும் வேறு வேறு எனும் தெளிவு அவருக்கு இருக்கலாம். இதுவே தன்னை அன்றாட வாழ்வில், பொதுவெளியில் தன்னை போர்னோ பிம்பமாய் பிறர் பார்க்கும் போது அதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள சன்னி லியோனுக்கு உதவுகிறது. (சில்க்கை போன்ற ஒருவருக்கு இது இயலவில்லை என்பதே வெறுமைக்கும் தற்கொலைக்கும் அவரை விரட்டி இருக்கலாம்.)
தன்னை தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிகிற சன்னி லியோனின் இந்த மனமுதிர்ச்சி மற்றும் துணிவு வணங்கத்தக்கது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஞானம் சொட்ட சொட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தும் பல ஆன்மீக குருக்களை விட அவர் மேலானவர். “ஆம்! நீங்கள் படுக்கையில் நடிகையுடன் பார்த்த ஆள் நான் தான், அதுவும் நானே இப்போது ஆன்மீக உரை நிகழ்த்தும் இதுவும் நானே” என சொல்ல நித்தியானந்தாவால் முடிந்ததா? அந்த நெஞ்சுரம் – ஓஷோவுக்கு இருந்த அந்த சுயபகடியும் சுயவிமர்சனமும் - நித்திக்கு இல்லை. அவர் தன் பாலியல் பிம்பத்தில் இருந்து தப்பித்து ஓடவல்லவா செய்தார்?
 ஆனால் ரசிகர்களால் சன்னியை அப்படி இரண்டாக பார்க்க முடியவில்லை என்பது அவருக்கு இன்னமும் கல்லா கட்ட உதவுகிறது. கல்லைக் கண்டவர் நாயைக் கண்டிலர். நாயைக் கண்டவர் கல்லைக் கண்டிலர்!


கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் உண்மை, எழுத்தாளர்களிலும் சிலருக்கு இந்த மனமுதிர்ச்சி உண்டு,
ஏன் சமூக வலைதள பதிவர்களில் கூட, பலர் நேரில் சந்திக்கும் பொழுது வேறு விதமாக இருப்பர்கள். .
வலை தளங்களில் வீர ஆவேசமாக எழுதும் பலரும் நேரில் உரையாடும் பொழுது அன்பாக மிருதுவாக உரையாடுகிறார்கள்
ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
சில்க் ஸ்மிதா இந்தக் காரணத்தால் மட்டுமே தற்கொலை செய்து ஆய்வுக்கு உரிய விஷயம்.
குஷ்பு, விந்தியா ஆகியோர் கூட பொது மேடைகளில், பொது இடங்களில் மனமுதிர்ச்சியுடன் பங்கு பெறுபவர்கள், நடந்து கொள்பவர்கள் தானே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...