சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை
தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும்
தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக்
கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக்
கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி
நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது:
தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது
நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று
அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன்
வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள்
என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை
என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?
அவ்வாறாகின், அவருக்கு அருவருப்பு ஏற்பட்டிருக்குமா?
தன்னை வெறிப்பவர்கள் மீதல்ல – தன் மீது?
சன்னி உண்மையில் என்ன உணர்ந்திருப்பார் என நமக்குத் தெரியாது. வெளியில் இருந்து
அவரை அவதானிக்க முயலும் எனக்கு அவர் இதை இயல்பாக, சுலபாக, கடந்து போயிருப்பார் எனத்
தோன்றுகிறது. எப்படி?
பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள்,
ஊடக ஆளுமைகள், வெவ்வேறு பிரபலங்கள் இந்த சுய-முரணை ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர்கொண்டிருப்பார்கள்.
(சன்னி அவர்களை விட பலமடங்கு உக்கிரமாய், கொந்தளிப்பாய் இதை உணர்ந்திருப்பார் என்பதே
வித்தியாசம்.) ஆனால் மெல்ல மெல்ல ரசிகர்களின் மிகை வெளிப்பாடுகளுக்கு பழகிப் போவார்கள்.
தாம் வேறு தம் பிம்பம் வேறு; தம் பிம்பமே தமக்கு புகழ்வெளிச்சம் தருகிறது என புரிந்து
கொள்வார்கள். அப்போது தம் உடலோ அல்லது பிம்பமோ தம்மில் இருந்து பிறிதொரு பொருள் – ஒரு
கருவி – என அவர்களுக்கு தோன்றும். தம் ரசிகர்களைப் போன்றே தம் உடலை அல்லது பிம்பத்தை
பார்க்க, ரசிக்க, பாதுகாக்க, மேம்படுத்த அவர்கள் பிரக்ஞைபூர்வமாய் முயல்வார்கள். பிறகு
மெல்ல மெல்ல தம்மில் இருந்து தம் பிம்பத்தையோ உடலையோ முழுக்க வேறுபடுத்திப் பார்க்க
அவர்கள் பழகுவார்கள். தம் மீது மீடியாவின், வேடிக்கை பார்ப்பவர்களின், படக்கருவியின்
கண்கள் பதியும் போது தாம் முற்றிலும் இன்னொருவராய் மாறுவதை உணர்வார்கள்.
அவர்களுக்கு தமது வழிபாட்டுக்குரிய
“பிரதியின்” மீது அருவருப்போ ஆச்சரியமோ குழப்பமோ இராது. தனக்கு கைவரப்பெற்ற ஒரு அற்புதமான
வரம் என தமது பிரதிபிம்பத்தை காணத் துவங்குவார்கள்.
ரஜினியும் சன்னி லியோனும் வைரமுத்துவும்
இவ்விசயத்தில் ஒன்று தாம். வைரமுத்து தம் பிம்பத்தை எல்லா கட்டங்களிலும் இடங்களிலும்
நிலைநிறுத்த பிரயத்தனிப்பவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு
செல்லும் போது காரிலேயே புது வெள்ளை குர்தாவுக்கு மாறுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
ரஜினி தனது பிம்பம் தன்னை விட்டு எப்படியும் தொலையாது என புரிந்து கொண்டவர். அதனாலே
மேக் அப் இன்றி, விக் இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். மக்கள் அதையும் அவரது
அன்றாடத்தின், எளிமையின், ஆன்மீகத்தின் பிம்பமாக மாற்றிக் கொண்டு கொண்டாடினார்கள்.
கூடவே விக் அணிந்து, மேக் அப் சூடிய இன்னொரு பிம்பத்தையும் அவர் தக்க வைத்தார்.
முன்பு படக்கருவி முன் மெழுகு பொம்மை போல் தோன்றிய சன்னியும், இப்போது திருமணமாகி,
தன் கணவனுக்கும் மாமியாருக்கும் ராஜ்மா சாவல் சமைத்து விளம்பும் ஒரு இளம் பஞ்சாபி மனைவி போல்
தோன்றும் இன்னொரு சன்னியும் வேறு வேறு எனும் தெளிவு அவருக்கு இருக்கலாம். இதுவே தன்னை
அன்றாட வாழ்வில், பொதுவெளியில் தன்னை போர்னோ பிம்பமாய் பிறர் பார்க்கும் போது அதை சாதாரணமாய்
எடுத்துக் கொள்ள சன்னி லியோனுக்கு உதவுகிறது. (சில்க்கை போன்ற ஒருவருக்கு இது இயலவில்லை
என்பதே வெறுமைக்கும் தற்கொலைக்கும் அவரை விரட்டி இருக்கலாம்.)
தன்னை தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிகிற சன்னி லியோனின் இந்த மனமுதிர்ச்சி
மற்றும் துணிவு வணங்கத்தக்கது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஞானம் சொட்ட சொட்ட சொற்பொழிவுகள்
நிகழ்த்தும் பல ஆன்மீக குருக்களை விட அவர் மேலானவர். “ஆம்! நீங்கள் படுக்கையில் நடிகையுடன்
பார்த்த ஆள் நான் தான், அதுவும் நானே இப்போது ஆன்மீக உரை நிகழ்த்தும் இதுவும் நானே”
என சொல்ல நித்தியானந்தாவால் முடிந்ததா? அந்த நெஞ்சுரம் – ஓஷோவுக்கு இருந்த அந்த சுயபகடியும்
சுயவிமர்சனமும் - நித்திக்கு இல்லை. அவர் தன் பாலியல் பிம்பத்தில் இருந்து தப்பித்து
ஓடவல்லவா செய்தார்?
ஆனால் ரசிகர்களால் சன்னியை அப்படி இரண்டாக
பார்க்க முடியவில்லை என்பது அவருக்கு இன்னமும் கல்லா கட்ட உதவுகிறது. கல்லைக் கண்டவர்
நாயைக் கண்டிலர். நாயைக் கண்டவர் கல்லைக் கண்டிலர்!