Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சன்னி லியோனின் உடல்: கல்லைக் கண்டவர் …

Image result for sunny leone kerala visitImage result for sunny leone kerala visit

சமீபத்தில் கேரளாவில் ஒரு மொபைல் கடைத்திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வருகை தந்ததும், அப்போது ரசிகர்கள் கடல் எனத் திரண்டதும், உண்டான அதகளமும் உங்கள் அனைவருக்கும் தெரியும். விளம்பரப் பலகைகளின் மீதேறி அமர்ந்தும், மேடையின் ஒரு பக்கமுள்ள பேனரைக் கிழித்துக் கொண்டும் மலையாளித் தலைகள் சன்னி லியோனை இச்சையுடன் வெறிக்கும் படங்களைக் கண்டேன். கூடவே தன் விசிறிகளின் மட்டற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் சன்னி லியோன் மனமுருகி நன்றி தெரிவித்த அறிக்கையையும் படித்தேன். அப்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது:
தன்னை வெறித்துப் பார்க்கிறவர்கள் கண்ணுக்கு போர்னோ படங்களில் ஜொலித்த அவரது நிர்வாண உருவம் மட்டுமே தெரிகிறது, தான் தெரியவில்லை என சன்னி உணர்ந்திருப்பாரா? அன்று அழகாய் அலங்கரித்து நளினமாய் மேடையில் தோன்றும் தன்னைப் பார்க்க அல்ல, தன்னை பார்ப்பதன் வழி லைவ்வாக போர்னோ பிம்பங்களை நினைவில் நிகழ்த்திப் பார்க்கவே ரசிகர்கள் அலைபாய்கிறார்கள் என அவர் அறியாமலா இருந்திருப்பார்? தன்னை தானாக ஒரு போதும் மக்கள் பார்க்கப் போவதில்லை என்பது அவருக்குள் ஒரு பிளவு நிலையை ஏற்படுத்தி இருக்காதா?

 அவ்வாறாகின், அவருக்கு அருவருப்பு ஏற்பட்டிருக்குமா? தன்னை வெறிப்பவர்கள் மீதல்ல – தன் மீது?
சன்னி உண்மையில் என்ன உணர்ந்திருப்பார் என நமக்குத் தெரியாது. வெளியில் இருந்து அவரை அவதானிக்க முயலும் எனக்கு அவர் இதை இயல்பாக, சுலபாக, கடந்து போயிருப்பார் எனத் தோன்றுகிறது. எப்படி?
 பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள், ஊடக ஆளுமைகள், வெவ்வேறு பிரபலங்கள் இந்த சுய-முரணை ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். (சன்னி அவர்களை விட பலமடங்கு உக்கிரமாய், கொந்தளிப்பாய் இதை உணர்ந்திருப்பார் என்பதே வித்தியாசம்.) ஆனால் மெல்ல மெல்ல ரசிகர்களின் மிகை வெளிப்பாடுகளுக்கு பழகிப் போவார்கள். தாம் வேறு தம் பிம்பம் வேறு; தம் பிம்பமே தமக்கு புகழ்வெளிச்சம் தருகிறது என புரிந்து கொள்வார்கள். அப்போது தம் உடலோ அல்லது பிம்பமோ தம்மில் இருந்து பிறிதொரு பொருள் – ஒரு கருவி – என அவர்களுக்கு தோன்றும். தம் ரசிகர்களைப் போன்றே தம் உடலை அல்லது பிம்பத்தை பார்க்க, ரசிக்க, பாதுகாக்க, மேம்படுத்த அவர்கள் பிரக்ஞைபூர்வமாய் முயல்வார்கள். பிறகு மெல்ல மெல்ல தம்மில் இருந்து தம் பிம்பத்தையோ உடலையோ முழுக்க வேறுபடுத்திப் பார்க்க அவர்கள் பழகுவார்கள். தம் மீது மீடியாவின், வேடிக்கை பார்ப்பவர்களின், படக்கருவியின் கண்கள் பதியும் போது தாம் முற்றிலும் இன்னொருவராய் மாறுவதை உணர்வார்கள்.
 அவர்களுக்கு தமது வழிபாட்டுக்குரிய “பிரதியின்” மீது அருவருப்போ ஆச்சரியமோ குழப்பமோ இராது. தனக்கு கைவரப்பெற்ற ஒரு அற்புதமான வரம் என தமது பிரதிபிம்பத்தை காணத் துவங்குவார்கள்.
 ரஜினியும் சன்னி லியோனும் வைரமுத்துவும் இவ்விசயத்தில் ஒன்று தாம். வைரமுத்து தம் பிம்பத்தை எல்லா கட்டங்களிலும் இடங்களிலும் நிலைநிறுத்த பிரயத்தனிப்பவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது காரிலேயே புது வெள்ளை குர்தாவுக்கு மாறுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினி தனது பிம்பம் தன்னை விட்டு எப்படியும் தொலையாது என புரிந்து கொண்டவர். அதனாலே மேக் அப் இன்றி, விக் இன்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டார். மக்கள் அதையும் அவரது அன்றாடத்தின், எளிமையின், ஆன்மீகத்தின் பிம்பமாக மாற்றிக் கொண்டு கொண்டாடினார்கள். கூடவே விக் அணிந்து, மேக் அப் சூடிய இன்னொரு பிம்பத்தையும் அவர் தக்க வைத்தார்.
முன்பு படக்கருவி முன் மெழுகு பொம்மை போல் தோன்றிய சன்னியும், இப்போது திருமணமாகி, தன் கணவனுக்கும் மாமியாருக்கும் ராஜ்மா சாவல் சமைத்து விளம்பும் ஒரு இளம் பஞ்சாபி மனைவி போல் தோன்றும் இன்னொரு சன்னியும் வேறு வேறு எனும் தெளிவு அவருக்கு இருக்கலாம். இதுவே தன்னை அன்றாட வாழ்வில், பொதுவெளியில் தன்னை போர்னோ பிம்பமாய் பிறர் பார்க்கும் போது அதை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள சன்னி லியோனுக்கு உதவுகிறது. (சில்க்கை போன்ற ஒருவருக்கு இது இயலவில்லை என்பதே வெறுமைக்கும் தற்கொலைக்கும் அவரை விரட்டி இருக்கலாம்.)
தன்னை தன்னில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிகிற சன்னி லியோனின் இந்த மனமுதிர்ச்சி மற்றும் துணிவு வணங்கத்தக்கது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஞானம் சொட்ட சொட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தும் பல ஆன்மீக குருக்களை விட அவர் மேலானவர். “ஆம்! நீங்கள் படுக்கையில் நடிகையுடன் பார்த்த ஆள் நான் தான், அதுவும் நானே இப்போது ஆன்மீக உரை நிகழ்த்தும் இதுவும் நானே” என சொல்ல நித்தியானந்தாவால் முடிந்ததா? அந்த நெஞ்சுரம் – ஓஷோவுக்கு இருந்த அந்த சுயபகடியும் சுயவிமர்சனமும் - நித்திக்கு இல்லை. அவர் தன் பாலியல் பிம்பத்தில் இருந்து தப்பித்து ஓடவல்லவா செய்தார்?
 ஆனால் ரசிகர்களால் சன்னியை அப்படி இரண்டாக பார்க்க முடியவில்லை என்பது அவருக்கு இன்னமும் கல்லா கட்ட உதவுகிறது. கல்லைக் கண்டவர் நாயைக் கண்டிலர். நாயைக் கண்டவர் கல்லைக் கண்டிலர்!


Comments

ஆம் உண்மை, எழுத்தாளர்களிலும் சிலருக்கு இந்த மனமுதிர்ச்சி உண்டு,
ஏன் சமூக வலைதள பதிவர்களில் கூட, பலர் நேரில் சந்திக்கும் பொழுது வேறு விதமாக இருப்பர்கள். .
வலை தளங்களில் வீர ஆவேசமாக எழுதும் பலரும் நேரில் உரையாடும் பொழுது அன்பாக மிருதுவாக உரையாடுகிறார்கள்
சில்க் ஸ்மிதா இந்தக் காரணத்தால் மட்டுமே தற்கொலை செய்து ஆய்வுக்கு உரிய விஷயம்.
குஷ்பு, விந்தியா ஆகியோர் கூட பொது மேடைகளில், பொது இடங்களில் மனமுதிர்ச்சியுடன் பங்கு பெறுபவர்கள், நடந்து கொள்பவர்கள் தானே

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...