முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியரும் அப்பாவும்


என்னுடைய வகுப்பு மாணவர்கள் CIA எனும் உள்மதிப்பீட்டுக்காக கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். அவற்றை நான் கவனமாய் படித்து கஞ்சத்தனமாய் மதிப்பெண்கள் அளிப்பேன். புது கருத்துக்கள், சுயமான பார்வை, விரிவான அலசல், ஓரளவு தப்பில்லாத மொழி என அளவுகோல்கள் வைத்தே கராறாய் மதிப்பிடுவேன். பெரும்பாலான மாணவர்கள் 20க்கு 12 தாண்ட மாட்டார்கள். சமீபத்தில் எங்கள் பல்கலையில் அரைக்கல்வியாண்டின் இடையில் நடத்தும் mid-sem பரீட்சைகள் நடந்தன. அதன் விடைத்தாள்கள் என் மேஜைக்கு வந்தன. நான் பாடம் நடத்தாத வகுப்புகளின் விடைத்தாள்கள் (ஆனால் நான் நடத்தும் பாடங்கள்). நான் இந்த தாள்களை தாராள மனதுடன் மதிப்பிட்டு மதிப்பெண்களை அள்ளி வழங்கினேன். சிறு தவறுகள் கண்டாலும் குறித்து விட்டு மதிப்பெண்ணை அதிகம் குறைக்காமல் இருந்தேன். ஏன் இந்த மாணவர்களுக்கு – நான் நேரடியாய் அறியாத மாணவர்களுக்கு – இப்படி மதிப்பெண்களை தாராளமாய் அளிக்கத் தோன்றுகிறது? ஏன் இந்த மனப்பான்மை என் சொந்த மாணவர்களைப் பொறுத்து ஏற்படவில்லை? இக்கேள்வி என்னை குடைந்து கொண்டிருந்தது.


 இன்று காலை எனக்கு உண்மை துலங்கியது. எளிய உண்மை தான்.

நான் இம்மாணவர்களை என் சொந்த குழந்தைகளைப் போல பாவிக்கிறேன். ஆக, இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைக்கிறேன். அவர்களால் என்னை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாது. அவர்களின் சிறு பிழைகளும் எனக்கு பெரிதாய் தெரிகின்றன. என் அப்பாவும் என்னிடம் இப்படித் தான் இருந்தார். அவரால் என்னை சுலபத்தில் பாராட்டி கொண்டாட முடியவில்லை. நான் தடம் புரண்டு விடுவேனோ என அஞ்சினார். என்னிடம் கராறாய் இருக்க முயன்றார். இது ஒரு father complex என தோன்றுகிறது.
இன்று காலை ராஜீவ் எனும் சமூகவியல் பேராசிரியரிடம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: “ஆச்சரியம்! நானும் இன்று காலை இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி வளாகத்தில், வகுப்புக்கு வெளியே என் வகுப்பு மாணவர்கள் கும்பலாய் கூடி நின்று சிரித்து விளையாடுவதை காணும் போது நான் அதை ரசிக்கிறேன். ஆனால் இதையே வேறு மாணவர்கள் பண்ணும் போது எரிச்சலடைகிறேன். என்ன இது அபத்தமான, அற்பமான விளையாட்டு. இந்த மாணவர்களுக்கு அறிவே இல்லை எனத் தோன்றுகிறது. ஏன் இப்படி இருவிதங்களில் மாணவர்களைக் காண்கிறேன் என வியந்து கொண்டிருந்தேன். இதுவும் father complex தான். ஆனால் நாம் இருவருக்கும் ஒரு வித்தியாசம். நீ ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பாவைப் போல் இருக்கிறாய். நானோ இருபதாம் நூற்றாண்டு அப்பாவாய் நடந்து கொள்கிறேன்…”
”அதென்ன பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பா?”
“போன தலைமுறை அப்பாக்கள். தன்னால் முடியாததை தன் மகன் சாதிக்க வேண்டும் என ஏங்கிய அப்பாக்கள். தன் பிள்ளைகள் சுவடு பிழைப்பதை தாங்கிக் கொள்ள முடியாத அப்பாக்கள். எதிர்பார்ப்பின் கயிறுகளால் பிள்ளைகளை கட்டி வைத்த அப்பாக்கள். மிதமிஞ்சிய பிரியத்தால் பிள்ளைகளை நேசிக்க தவறிய அப்பாக்கள். ஆனால் இன்றைய அப்பாக்கள் பிள்ளைகள் வாழ்க்கையை பார்க்க கொண்டாடுவதை விரும்புகிறார்கள். அவர்களின் தவறுகளை சுலபத்தில் மன்னிக்கிறார்கள். பிள்ளைகள் என்ன குற்றம் செய்தாலும் அதை கண்ணை மூடி ஏற்கிறார்கள்.”
எனக்கு அவர் சொல்வது உண்மை எனத் தோன்றியது. ஜெயமோகனை சு.ரா மறுத்ததற்கும், வாக்னரை நீட்சே கடுமையாய் விமர்சித்ததற்கும், பிராயிடும் லகானும் மனதளவில் விலகி நின்றதற்கும் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு அப்பா-மகன் முரண்கள் தாம் காரணம். இருபதாம் நூற்றாண்டு அப்பா-மகன் உறவை எழுத்தாளர்கள் இடையே காண இயலுமா? சாருவுக்கும் அவரது சீடகோடிகளுக்குமான உறவு ஓரளவு அப்படியானது தான்.

பேராசிரிய நண்பர் இறுதியில் இப்படி சொன்னார்: “ஆனால் ரொம்ப சுவாரஸ்யமான விசயம் இதுவல்ல. இந்த மாணவர்களுக்கு நாம் பொருட்டே அல்ல. அவர்கள் பின்நவீனத்துவ பிறவிகள். தமது கற்பனைக்குள், தமது கனவுகளுக்குள் வாழும் காற்றுக்குமிழிகள் அவர்கள். அவர்களுக்கு சொந்த அப்பாவே பொருட்டில்லை. ஆசிரியர்கள் அவர்கள் உலகிலேயே இல்லை!”   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...