முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (1)

Image result for teenage crisis
பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவத்தில் எனக்கு இருந்த முக்கிய நெருக்கடி கூட்டத்தோடு கூட்டமாய் கலப்பது.
 என் நெருங்கின நண்பர்கள் கூட - ஆழமான நிலையில் - என்னில் இருந்து முழுக்க வேறொரு உலகில் இருப்பதாய் ஒரு உணர்வு என்னை உறுத்திக் கொண்டிருக்கும். இதனாலே எனது பல நண்பர்களை மெல்ல மெல்ல கைவிட்டிருக்கிறேன். நானாக முயற்சியெடுத்து அவர்களை தக்க வைத்ததில்லை. என்னைத் தவிர வேறு யாரும், வேறெதுவும் உண்மையில்லை எனும் பிரமையே இதற்கு காரணம் என இப்போது தோன்றுகிறது.

 என் குழந்தை மற்றும் பால்ய காலங்களின் நான் அனுபவித்த தனிமை இதற்கு மற்றொரு காரணம் எனலாம். மற்ற குழந்தைகளைப் போல நான் விளையாடியும் ஊர் சுற்றியும் வளரவில்லை. தனித்து என்னுடைய கற்பனை உலகில் மிதந்து அதில் ருசி கண்டு கொண்டேன். அதனாலே பள்ளிக் காலத்தில் இருந்தே புது நண்பர்களை சந்திக்கும் போது ஒரு புது பொம்மையைக் காணும் குழந்தையை போல் உற்சாகம் கொள்வேன். ஆனால் அவர்கள் அலுக்கத் துவங்கியதும் விலகி விடுவேன்.
எங்கள் பல்கலையில் Holistic Education எனும் ஆளுமை வளர்ச்சி சம்மந்தமான வகுப்பு ஒன்றை எடுக்கிறேன். அதில் மாணவர்கள் என்னிடம் உரையாடும் போது பதின்பருவத்தில் இருந்து முதிர்ச்சியை நோக்கி வளரும் போது ஏற்படும் சிக்கல்களை, தத்தளிப்புகளை, நெருக்கடியை குறிப்பிட்டார்கள். மனம் ஓரிடத்தில் நிலைப்படாது தவிக்கிறது. எது நான் என புரிய முடியாத பரிதவிப்பு அலைகழிக்கிறது. இந்த தவிப்பு இருபதுகளின் இறுதியில் அகன்று மனம் நிலைப்படுகிறது என ஒரு மாணவி சொன்னாள்.
 இந்த தத்தளிப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு: பதின்பருவத்தில் தான் நமது தனித்த ஆளுமை மலர்ந்து வெளியே வருகிறது. நம்மை பிறரில் இருந்து தனித்துக் காட்ட போராடுகிறோம். எதிர்பாலினத்தின் கவனம் பெற, வகுப்பில் பெயர் வாங்க, சக பாலினத்தோர் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க முட்டி மோதுகிறோம். சிலர் இசை, நடனம் பயில்வார்கள். ஜிம்முக்கு போய் உடலை பெருக்குவார்கள். நீளமாய் முடி வளர்ப்பார்கள். அதற்கு நிறமூட்டுவார்கள். உடம்பெல்லாம் டாட்டூ வரைவார்கள். விளையாட்டில் ஜொலிப்பார்கள். கவிதை எழுதுவார்கள். சிலர் வன்முறையில் ஈடுபடுவார்கள். ஆனால் ஐந்து அல்லது எட்டு வருடங்களில் (சிலருக்கு ஒன்றிரண்டு வருடங்களிலேயே) இந்த விருப்பங்கள் மறைந்து விடும். (மிக மிகச்சிலர் தான் இந்த ஆர்வங்களை தொடர்ந்து வளர்த்தெடுப்பார்கள்.) ஏனென்றால் கலை / விளையாட்டு ஆர்வம் அல்ல இவர்களை ஈடுபட வைப்பது; தம்மை தனித்து காட்ட வேண்டும், தாம் யாரென அறிய வேண்டும் எனும் விழைவே.
இருபதுகளின் துவக்கத்தில் சுயம் முழுக்க மலர்ந்து இதழ்கள் விரித்த நிலையில், (தோராயமாய்) 25 வயதில்  அது மெல்ல மெல்ல வாடி, மாலைவேளை சூரிய காந்தி போல் மூடத் துவங்கும். அவர்கள் நிதானமாகி வாழ்க்கையில் மகிழ்ச்சியை காணத் துவங்குவார்கள். மிகை ஆர்வமும் கிளர்ச்சியும் மட்டுப்படும். தனது சுயத்துக்கு சமூகத்தில் பெரிய இடம் ஒன்றுமில்லை; தன்னை அழுத்தமாய் முன்னிறுத்த தேவையில்லை; நிறுவனங்கள், அமைப்புகளின் நுண் விதிகளுக்கு வளைந்து கொடுத்தால் போதும்; சமூகமாக்கல் சடங்குகளில் (நண்பர்களுடன் குடிப்பது, அரட்டையடிப்பது, பயணிப்பது, கூட்டங்களுக்குப் போவது) பங்கேற்பது மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தரும் என அறிவார்கள். தன்னை மறக்கும் எத்தனிப்பு இந்த பருவத்தில் ஆரம்பிக்கும். வேலையில் ”தன்னை” இழப்பது, குடும்பத்துக்காக “தன்னை தியாகம்” செய்வது, அரசியல் விவாதங்களில் (“தனக்காக அன்றி”) கொள்கைக்காகவும் சமூக நலத்துக்காகவும் பேசுவது, குடியில், போதையில் ”தன்னை” கரைப்பது என “தானற்றுப்” போவார்கள்.
பதின்பருவம் குறித்த அழகிய நினைவுகள் நமக்குண்டு. ஆனாலும் அது ஆழமான வலியையும் உட்கொண்டது. ஒருவிதத்தில் பதின்மத்துக்கு அடுத்த இருபதாண்டுகளில் நாம் இந்த வலியின் நினைவுகளில் இருந்து தப்பித்து ஓடவே பிரயத்தனிக்கிறோம்.

(தொடரும்)

கருத்துகள்

Pandiaraj Jebarathinam இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை
shiva இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கட்டுரை அபிலாஷ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...