முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (1)

Image result for teenage crisis
பள்ளி மற்றும் கல்லூரி மாணவப் பருவத்தில் எனக்கு இருந்த முக்கிய நெருக்கடி கூட்டத்தோடு கூட்டமாய் கலப்பது.
 என் நெருங்கின நண்பர்கள் கூட - ஆழமான நிலையில் - என்னில் இருந்து முழுக்க வேறொரு உலகில் இருப்பதாய் ஒரு உணர்வு என்னை உறுத்திக் கொண்டிருக்கும். இதனாலே எனது பல நண்பர்களை மெல்ல மெல்ல கைவிட்டிருக்கிறேன். நானாக முயற்சியெடுத்து அவர்களை தக்க வைத்ததில்லை. என்னைத் தவிர வேறு யாரும், வேறெதுவும் உண்மையில்லை எனும் பிரமையே இதற்கு காரணம் என இப்போது தோன்றுகிறது.

 என் குழந்தை மற்றும் பால்ய காலங்களின் நான் அனுபவித்த தனிமை இதற்கு மற்றொரு காரணம் எனலாம். மற்ற குழந்தைகளைப் போல நான் விளையாடியும் ஊர் சுற்றியும் வளரவில்லை. தனித்து என்னுடைய கற்பனை உலகில் மிதந்து அதில் ருசி கண்டு கொண்டேன். அதனாலே பள்ளிக் காலத்தில் இருந்தே புது நண்பர்களை சந்திக்கும் போது ஒரு புது பொம்மையைக் காணும் குழந்தையை போல் உற்சாகம் கொள்வேன். ஆனால் அவர்கள் அலுக்கத் துவங்கியதும் விலகி விடுவேன்.
எங்கள் பல்கலையில் Holistic Education எனும் ஆளுமை வளர்ச்சி சம்மந்தமான வகுப்பு ஒன்றை எடுக்கிறேன். அதில் மாணவர்கள் என்னிடம் உரையாடும் போது பதின்பருவத்தில் இருந்து முதிர்ச்சியை நோக்கி வளரும் போது ஏற்படும் சிக்கல்களை, தத்தளிப்புகளை, நெருக்கடியை குறிப்பிட்டார்கள். மனம் ஓரிடத்தில் நிலைப்படாது தவிக்கிறது. எது நான் என புரிய முடியாத பரிதவிப்பு அலைகழிக்கிறது. இந்த தவிப்பு இருபதுகளின் இறுதியில் அகன்று மனம் நிலைப்படுகிறது என ஒரு மாணவி சொன்னாள்.
 இந்த தத்தளிப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு: பதின்பருவத்தில் தான் நமது தனித்த ஆளுமை மலர்ந்து வெளியே வருகிறது. நம்மை பிறரில் இருந்து தனித்துக் காட்ட போராடுகிறோம். எதிர்பாலினத்தின் கவனம் பெற, வகுப்பில் பெயர் வாங்க, சக பாலினத்தோர் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க முட்டி மோதுகிறோம். சிலர் இசை, நடனம் பயில்வார்கள். ஜிம்முக்கு போய் உடலை பெருக்குவார்கள். நீளமாய் முடி வளர்ப்பார்கள். அதற்கு நிறமூட்டுவார்கள். உடம்பெல்லாம் டாட்டூ வரைவார்கள். விளையாட்டில் ஜொலிப்பார்கள். கவிதை எழுதுவார்கள். சிலர் வன்முறையில் ஈடுபடுவார்கள். ஆனால் ஐந்து அல்லது எட்டு வருடங்களில் (சிலருக்கு ஒன்றிரண்டு வருடங்களிலேயே) இந்த விருப்பங்கள் மறைந்து விடும். (மிக மிகச்சிலர் தான் இந்த ஆர்வங்களை தொடர்ந்து வளர்த்தெடுப்பார்கள்.) ஏனென்றால் கலை / விளையாட்டு ஆர்வம் அல்ல இவர்களை ஈடுபட வைப்பது; தம்மை தனித்து காட்ட வேண்டும், தாம் யாரென அறிய வேண்டும் எனும் விழைவே.
இருபதுகளின் துவக்கத்தில் சுயம் முழுக்க மலர்ந்து இதழ்கள் விரித்த நிலையில், (தோராயமாய்) 25 வயதில்  அது மெல்ல மெல்ல வாடி, மாலைவேளை சூரிய காந்தி போல் மூடத் துவங்கும். அவர்கள் நிதானமாகி வாழ்க்கையில் மகிழ்ச்சியை காணத் துவங்குவார்கள். மிகை ஆர்வமும் கிளர்ச்சியும் மட்டுப்படும். தனது சுயத்துக்கு சமூகத்தில் பெரிய இடம் ஒன்றுமில்லை; தன்னை அழுத்தமாய் முன்னிறுத்த தேவையில்லை; நிறுவனங்கள், அமைப்புகளின் நுண் விதிகளுக்கு வளைந்து கொடுத்தால் போதும்; சமூகமாக்கல் சடங்குகளில் (நண்பர்களுடன் குடிப்பது, அரட்டையடிப்பது, பயணிப்பது, கூட்டங்களுக்குப் போவது) பங்கேற்பது மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தரும் என அறிவார்கள். தன்னை மறக்கும் எத்தனிப்பு இந்த பருவத்தில் ஆரம்பிக்கும். வேலையில் ”தன்னை” இழப்பது, குடும்பத்துக்காக “தன்னை தியாகம்” செய்வது, அரசியல் விவாதங்களில் (“தனக்காக அன்றி”) கொள்கைக்காகவும் சமூக நலத்துக்காகவும் பேசுவது, குடியில், போதையில் ”தன்னை” கரைப்பது என “தானற்றுப்” போவார்கள்.
பதின்பருவம் குறித்த அழகிய நினைவுகள் நமக்குண்டு. ஆனாலும் அது ஆழமான வலியையும் உட்கொண்டது. ஒருவிதத்தில் பதின்மத்துக்கு அடுத்த இருபதாண்டுகளில் நாம் இந்த வலியின் நினைவுகளில் இருந்து தப்பித்து ஓடவே பிரயத்தனிக்கிறோம்.

(தொடரும்)

கருத்துகள்

Pandiaraj Jebarathinam இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை
shiva இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கட்டுரை அபிலாஷ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...