முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? (2)

 Image result for charu nivedita

இன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவரல்ல சாரு. அவருக்கு அன்பையும் ஈடுபாட்டையும் காட்டவே ஆர்வம்.
ஒருவரைப் பார்த்து “தென்னகத்துக்கு மார்க்வெஸ்” என சாரு சொன்னார் என்றால் “உண்மையிலேவா? மார்க்வெஸ் என்றால் யார் தெரியுமா? அவருடனா இவரை ஒப்பிடுவது?” என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். சாரு அந்த குறிப்பிட்ட இளம் எழுத்தாளர் மீதான மிதமிஞ்சிய பிரியத்தை காட்ட அப்படி சொல்கிறார் என புரிந்து கொள்வேன்.

மிகை, போலி, செயற்கை, பொய் போன்ற சொற்களுக்கு சாருவின் அகராதியில் இடமில்லை. எதையும் அவர் தன் உணர்வுகளைக் காட்டவே பயன்படுத்துவார். அவர் எந்த உண்மையையும் கூற முயல்வதில்லை என்பதால் அவர் பொய்யும் சொல்வதில்லை. அவர் எதையும் சொல்ல முயல்வதில்லை. அவர் காட்டவே செய்வார். அதற்கு அவர் தன் கருத்துக்களை, வாதத்திறனை, தான் கற்ற கோட்பாடுகளை எடுத்து வீசுவார்.
இதை நான் ஒரு குறை என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் சாரு ஒரு பின்நவீனத்துவ பிறவி. பிறர் பின்நவீனத்தும் உதிர்ப்பார்கள். சாரு பின்நவீனத்துவமாகவே வாழ்வார். அதாவது, தமிழில் பின்நவீனத்துவம் அறிமுகமாகுமுன்னரே சாரு பிறந்து விட்டார். பின்நவீனத்துவம் என்றால் என்ன என அறியுமுன்னரே சாரு பின்நவீனத்துவமாகத் தான் இருந்தார். பின்நவீனத்துவம் ஒரு வாழ்க்கை நிலையாக இருந்தால் எப்படி இருக்கும் என அறிய சாருவை பின்தொடர்ந்தாலே போதும்.
இந்த கோணத்தில் லுலுவை அவர் பாராட்டியதை புரிந்து கொண்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை.
சாருவின் வாசகர்கள் உண்மையிலேயே புத்தகம் எல்லாம் படிக்கிறார்களா என ஒரு நண்பர் என்னிடம் விசாரித்தார். நான் அறிந்த வரையில் படிக்கிறார்கள். ஆனால் சாருவை படித்திருப்பது அவர்களின் முழுமுதல் தகுதி அல்ல. (சாருவே அதை எதிர்பார்த்தாலும் கூட) சாருவும் அவர் எழுத்தும் வேறுவேறல்ல. அவரது எழுத்தின் அத்தனை சிறப்பியல்புகளும் அவரது ஆளுமையில் உள்ளது தான். அவரை நெருங்குகிறவர்களுக்கு உண்மையில் அவரை படிக்க அவசியமே இல்லாமல் ஆகிறது. சாருவின் முக்கிய ஈர்ப்பே இது தான் எனத் தோன்றுகிறது.
சாருவை ஒருவர் சொந்தம் கொண்டாட நினைப்பதும், அதனால் பொறாமை போட்டியுணர்வு ஏற்பட்டு கலவரச் சூழல் தோன்றுவதும் அவரே ஒரு புத்தகமாய் இருப்பதனால் தான். நீங்கள் ஒரு புத்தகத்தை வாசித்து அதை உங்கள் சொந்த பிரதியாக வைத்து ரசிக்கலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு பிரதி இல்லையே. ஒரு புத்தகத்தை ஆயிரம் பிரதி அச்சிட்டால் ஆயிரம் பேர் ஒரே சமயம் படிக்கலாம். ஆனால் ஆயிரம் பேர் ஒரே சமயம் சாருவுடன் பழக முடியாது. இதனால் இயல்பாகவே அவருடன் நேரம் செலவிடுவது சம்மந்தமாய் அவரது வாசகர்கள் இடையே போட்டியும் பொறாமையுடன் ஏற்படுகிறது.
சாருவுடன் பழகுவதன் முக்கிய பலன் இது: எப்படி கட்டற்று வாழ்க்கையை அணுகி கொண்டாடுவது, மகிழ்ச்சியையும் கோபத்தையும் துயரத்தையும் ஆற்றில் நீச்சலடிப்பது போல் கடப்பது எப்படி என அவர் உங்களுக்கு கற்றுத் தருவார். மிகையும் மீறலும் தான் அவரது ஆயுதங்கள். அந்த அஸ்திரங்களை உங்கள் கையில் கொடுத்து உலகை சுயமாய் சந்திக்க அனுப்பி விடுவார்.
புத்தக வாசிப்பு, சிந்தனைப் பயிற்சி, கோட்பாட்டு வாள்வீச்சு, தர்க்க ஒழுங்கு, அரசியல் போதம், சமூக சிந்தனை, போராட்டம், புரட்சி ஆகியவற்றை விட சாரு தரும் வாழ்க்கைப் பாடம் மேலானது என எனக்கு இப்போது தோன்றுகிறது.
ஏனென்றால் நாமெல்லாரும் மகிழ்ச்சிக்காகத் தான் உயிர் வாழ்கிறோம்? வேறு எவரையும் விட சாருவின் வாசகர்கள் அதிக மகிழ்ச்சியானவர்கள். ஆனால் இந்த மகிழ்ச்சிக்காக சண்டை சச்சரவு வரத் தான் செய்யும்.
என்னை திட்டுவதென்றால் வீட்டுக்குள் வைத்து திட்டுங்கள், பொதுவெளியில் அவமானப்படுத்தாதீர்கள் என தன் வாசகர்களிடம் சாரு சொல்வது படிக்க சற்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எந்த எழுத்தாளன் “என்னை தாராளமாக திட்டிக் கொள், அந்த உரிமை உனக்கு உண்டு” என வாசகனிடம் தன்னை ஒப்புக் கொடுப்பான் சொல்லுங்கள்?

(இதைப் படித்து விட்டு சாருவின் வாசகர்கள் சிலர் “சாரு உங்களை அபிலாஷ் நையாண்டி செய்திருக்கிறார் கவனித்தீர்களா? உங்களை அவர் பாராட்டவில்லை, ரொம்ப கேவலமாய் கேலி செய்திருக்கிறார்.” என்றெல்லாம் சொல்லி உருவேற்றுவார்கள். அரைமணி இந்த கேன்வாஸிங் நடந்தால் சாருவே பற்களை நறநறவென கடித்து கண்ணை உருட்டி “ஆமா ஆமா அவன் என்னை பகடி பண்ணியிருக்கிறான். எவ்வளவு கொழுப்பு?” என கொதித்துப் போவார். “நம்ம வந்த ஜோலி முடிஞ்சு போச்சு” என அவர்களும் கிளம்புவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்த விளையாட்டை நான் ரசிக்கிறேன் சாரு!)


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
என் எண்ணங்களின் சில பிரதிபலிப்புகளை இந்த பதிவில் காண்கிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
He is a role model and such an unique personality.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...