முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்வியில் மதத்தின் இடம் என்ன? (1)


முகநூலில் ஷோபா சக்தி கல்வி நிலையங்களில் மதசார்பு இருக்கக் கூடாது என ஒரு பதிவு இட்டிருந்தார். அவரது பதிவின் பின்னணியுடன் தொடர்பின்றி எனக்கு வேறொரு கருத்து தோன்றியது. இந்திய சூழலில் மதத்தின் மெய்யியலுடன் சற்றும் தொடர்பற்ற ஒரு வறட்டுத்தனமான பகுத்தறிவு கல்வி இங்கே நம் பள்ளி கல்லூரிகளில் அளிக்கப்படுகிறது. அது இங்கே ஒருவித பண்பாட்டு வறுமையை ஏற்படுத்தி உள்ளது. இதைப் பற்றி நான் என் முகநூல் பக்கத்தில் எழுதினேன்.
// மத சார்பின்மை மாணவர்களை மழுங்கடித்து விடுகிறது என்பது என் எண்ணம். அறிவுடன் உணர்ச்சிகரமான கவித்துவமான பிடிப்பு ஏற்பட ஒரு மீபொருண்மை ஆர்வம் வேண்டும். அதை மதம் தரலாம். மத ஈடுபாடின்மை ஒரு வறட்டுத்தனமான தட்டையான தர்க்க கல்விக்கு மட்டுமே வழிவகுக்கும்.//

இதைத் தொடர்ந்து என் முகநூல் பக்கத்தில் எனக்கும் தேவா சத்யாவுக்கும் மற்றும் பூவண்ணன் கணபதிக்கும் நடந்த சிறு விவாதம் இது. இரு பகுதிகளாய் அதை உங்களுடன் பகிர்கிறேன்.

தேவா சத்யன்: மதச் சார்பும் மாணவர்களை சிந்திக்க விடுவதில்லை எனவும் யோசிக்கலாம் இல்லையா?
நான்: அது மிகுதியான உணவு வியாதியை வரவழைப்பது போல. அதற்காக நாம் பட்டினி கிடப்பதில்லையே
தேவா சத்யன்: லேசானதை சாப்பிடச் சொல்கிறீர்களா
நான்:  Deva Sathyan ஒரு சமநிலை, மையமான போக்கு நல்லது என்கிறேன்.
தேவா சத்யன்: அனைத்தையும் கடவுள் தந்த பரிசு என்றும், கடவுள் தந்த தண்டனை என்றும் நினைத்துக் கொண்டு வாழ்வதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது? அனைத்தும் இம்மண்ணில் இயற்கையாக நிகழ்வதுதானே?
நான்:  Deva Sathyan வாழ்வின் இருப்பு பற்றின கேள்விகளை பரிசீலிக்க கடவுள் ஒரு கதாபாத்திரமாக ஏனும், குறைந்தபட்சம் ஒரு சிந்தனைத் தரப்பாக வேண்டும். எந்த மதமும் இவ்வாழ்வை கடவுள் நேரடியாய் கட்டுப்படுத்துவதாய், தர்க்க நியாயத்துடன் வழிநடத்துவதாய் கூறவில்லை. பழைய ஏற்பாட்டில் ஜோப்பின் கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுள் அவனை ஏன் அப்படி நோகடிக்கிறார் என்பதற்கு விடையில்லை. உலகின் பல கொடூரமான துன்பங்களுக்கும் விடையில்லை. அறிவியலில் கூட. ஆக, அவற்றை பரிசீலிக்க இறையியலும் தத்துவமும் அவசியம்.
 கடவுள் நம்பிக்கை தேவை என நான் கூறவில்லை. மதம் இந்த மீபொருண்மை சிந்தனைக்கான ஒரு வலுவான தளத்தை நமக்குத் தருகிறது. உங்களுக்கு கீதாவையும், யோகாவையும், தியான முறைமைகளையும் இயல்பாகவே கற்றுத் தருகிறது. நம் பள்ளி, கல்லூரிகள் இந்த தரப்பை முழுக்க நிராகரிக்கின்றன. ஒரு மாணவனின் அப்பா காலமாகும் போது அவன் தத்தளிக்கிறான். அவனது தடுமாற்றத்திற்கு பள்ளி / கல்லூரி கல்வியில் எந்த தீர்வும் இல்லை. நாளை அவன் வளர்ந்து திருமணம் செய்து கொண்ட பின் அவன் மனைவி அவனை கைவிட்டு பிரிந்து செல்லும் போது, அல்லது அவனுக்கு மூளை வளர்ச்சியற்ற குழந்தை பிறக்கும் போது அவன் மனம் கலங்கி தவிக்கிறான். அப்போது அவனை தவிக்க செய்வது ஏன் எனக்கு இப்படி ஆகிறது? ஏன் இந்த துன்பம்? எனும் கேள்விகள் தாம்; அக்கேள்விகளுக்கு அவனால் விடை காண முடியாதது தான் அவனை பித்தாக்குகிறது. குடித்து சீரழிவதைத் தவிர அவனுக்கு அப்போது வேறு வழிகள் இராது; ஏனெனில் அப்பிரச்சனைகளை யோசிப்பதற்கான, எதிர்கொள்வதற்கான எளிய உபாயங்களை கூட நம் கல்வி அமைப்பு அவனுக்கு சொல்லித் தருவதில்லை. இதைப் பற்றி தான் நான் இந்த சந்தர்பத்தில் யோசிக்கிறேன்.
தேவா சத்யன்: மதத்தினால் மாத்திரம்தான் ஒரு மனநிலை சமநிலைத் தன்மையை அடையும் என்றால் அதிதீவிர மத பக்தியை கற்றுக் கொடுக்கும் ஒரு வழிபாட்டுத்தலத்தில் நின்றுகொண்டு நாம் சமநிலையை எவ்வாறு கற்க முடியும்? நாம் சூழ்நிலைக்கு தக்கபடி அந்தந்த பகுதியிலுள்ள மதவழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோம். சில இடங்களில் 24 மணிநேரமும் மதத்தையே கவனித்துக் கிடக்கிறார்கள். நல்லதோ கெட்டதோ அனைத்திற்கும் கடவுள்தான் காரணம். கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இப்போது மதம் மனிதனை விழுங்க அல்லவா செய்கிறது. சமநிலையுடன் ரசிப்பதற்கு மாத்திரம் இங்கு யாரும் மதத்தை பயன்படுத்தவில்லை.
நான்: Deva Sathyan எதையும் நாம் உள்வாங்கி பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. நான் கோயில் பூஜை புன்ஸ்காரங்களை குறிப்பிடவில்லை. மதநூல்களை நீங்கள் இன்றைய லௌகீகமான மொழியிலே கூட விவாதிக்கலாம்.
தேவா சத்யன்: மதத்திற்காக மாத்திரமே உதவும் சிலரை கண்டிருக்கிறேன் சார். ஒருவன் மரணம் சார்ந்த இழப்பில் இருக்கும்போதுகூட மதம் சார்ந்த சுயநலவாதிகளின் ஆறுதலைவிட பிற மதத்தைச் சார்ந்த நண்பனே போதுமானது
நான்: மிதமிஞ்சிய மத ஈடுபாடு ஒரு சமூகமாக்கல் செயல்பாடு தான். அது சாதிய ஈடுபாடு போன்றது.
அதேபோல பிராந்தியம் சார்ந்த பாசம் உள்ளது. சமூகத் தொண்டிலும் குருட்டுத்தனம் உள்ளது. நான் ஒரு நண்பரிடம் எனக்கு சக்கரநாற்காலி வாங்க உதவி கேட்டேன். அவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சொன்னார் “நாங்கள் இளைஞர்கள் கல்விக்கு மட்டுமே உதவி செய்வோம்.” இதுவும் ஒரு குறுகின நிலைப்பாடு என எனக்குத் தோன்றியது. மனிதன் தன்னை குறுக்கிக் கொள்ளாத இடமே இல்லை.
இது உண்மையில் மதத்தின் பிரச்சனை அல்ல. மதம் நம்மை குறுங்குழுவாதம் நோக்கி செலுத்துவதில்லை; மாறாக நாம் மதத்தை அவ்வாறு பயன்படுத்துகிறோம். கல்வித்துறை மதத்தை ஒரு அறிவியக்கமாக பார்ப்பது, நமது முக்கியமான மதப்பிரதிகளை மாணவர்களுக்கு ஆழமாய் கற்றுத் தருவதுப்பிரச்சனைக்கு தீர்வளிக்கும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...